செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஏழு நாட்கள் ஏழு புத்தகங்கள்…



வலையுலகின் தொடர் பதிவு போல, முகப்புத்தகத்திலும் அவ்வப்போது ஏதாவது வந்து கொண்டிருக்கிறது – பத்து வருடத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீர்கள் என புகைப்படம் பகிரும் பலரை இப்போது பார்க்க முடிகிறது. அப்படி ஒரு தொடர் தான் இந்த ஏழு நாட்கள் ஏழு புத்தகங்கள்.   

நாள் -1; புத்தகம்-1:

இப்பொதெல்லாம் முகப்புத்தகத்தில் எழுதுவதே இல்லை. என்னுடைய வலைப்பதிவின் சுட்டியைத் தந்து விட்டு ஒரே ஓட்டம்! நேரம் இல்லை என்பது மட்டுமல்லாது, முகப்புத்தகம் அலுத்து விட்டது.
 
இன்றைக்கு இங்கே எழுதி வேண்டியே ஆக வேண்டிய கட்டாயம்! ஒரு வாரத்திற்கு, ஒவ்வொரு நாளும் பிடித்த/படித்த புத்தகத்தின் அட்டைப்படம் போட்டு, நட்புக்களில் ஒருவரை Tag செய்ய வேண்டும். படம் போட்டால் போதும். விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை....

Tag செய்வது எனக்கு ஏனோ மற்றவர்களை மாட்டி விடுவது போலத் தோன்றுகிறது. அதனால் யாரையும் Tag செய்யப் போவதில்லை. தினமும் ஒரு படித்த/பிடித்த புத்தகத்தின் அட்டைப்படத்தினை போடுவதோடு சரி. பிடித்தவர்கள் தொடரலாம்!

அது சரி உங்களை யார் Tag செய்தார்கள் என நீங்கள் கேட்கா விட்டாலும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்! இல்லத்தரசி!

இதோ முதல் அட்டைப் படம்.... கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு....



நாள்-2; புத்தகம்-2:

நெய்வேலியில் இருந்த வரை மிகப் பெரிய நூலகம் வீட்டின் அருகிலேயே இருந்தும், படித்த புத்தகங்கள் சிறு வயதுக்கானவை – இரும்புக்கை மாயாவி போன்ற சித்திரக் கதைகளும், அம்புலிமாமா கதைகளும் தான். பிறகு கல்கி, குமுதம், விகடன், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி போன்றவை. நாவல்கள் வாங்கிப் படிக்கும் அளவுக்கு வசதி இல்லை. நூலகத்திற்கு தாத்தாவை அழைத்துச் செல்லும்போது படித்ததெல்லாம் சிறுவர்களுக்கானது மட்டுமே!

இரண்டாம் நாள் புத்தகமாக நான் படித்து ரசித்த ஒரு கதைத் தொகுப்பு – ஜெயகாந்தன் சிறுகதைகள்… நான் படித்த புத்தகத்தின் அதே அட்டைப்படம் அல்ல. இந்தப் படம் இணையத்திலிருந்து….



நாள்-3; புத்தகம்-3:

கல்லூரியிலும் நூலகம் இருந்தது என்றாலும் பெரும்பாலும் நூலகத்தில் எடுத்த புத்தகங்கள் படிப்பு சம்பந்தமானவை மட்டுமே. ஏனோ படிப்பில் அத்தனை நாட்டம் இருந்ததில்லை. ஏதோ எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்று தான் கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறேன். ஒரு சில ஆங்கில நாவல்கள் அறிமுகம் ஆன நாட்கள் அவை – அதுவும் கல்லூரி நூலகத்தில் தான். புத்தகங்களைப் படிக்கும் ஆவல் அவ்வளவாக இல்லாமலே போனதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன்.

மூன்றாம் நாள் புத்தகமாக…. தி.ஜா. அவர்களின் மோகமுள். இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமும் இணையத்திலிருந்து தான். நான் நூலகத்திலிருந்து எடுத்து படித்தது வேறொரு பதிப்பு.



நாள்-4; புத்தகம்-4:

வேலை கிடைத்து தலைநகரம் வந்த பிறகு நிறைய நேரம் கிடைத்தது. முதல் ஒன்றரை வருடங்கள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை. பிறகு பாலாஜி என்ற வங்கி அதிகாரி ஒருவருடன் தங்கிய போது, அவர் தான் எனக்கு படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டினார். நிறைய புத்தகங்கள் அவரிடம் இருந்தன. ஆங்கிலம், தமிழ் என மாற்றி மாற்றி நிறைய படிக்கக் கிடைத்தது. தினம் ஒரு புத்தகம் என்ற வீதத்தில் நானும் அவரும் இரவு வெகு நேரம் விழித்திருந்து படித்த நாட்கள் அவை. சுஜாதா, பாலகுமாரன், தி.ஜா., அகிலன், பாக்கியம் ராமசாமி, Ayn Rand, Somerset Maugham என பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்த நாட்கள் அவை.
படித்து அது பற்றிய கருத்துரையாடல்களும் நடத்துவோம்! இனிமையான நாட்கள் அவை.  

நான்காம் நாள் புத்தகமாக…. பாலகுமாரன் அவர்களின் அகல்யா. இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமும் இணையத்திலிருந்து தான். என்னிடம் இருக்கும் புத்தகம் வேறு பதிப்பகத்திலிருந்து.



நாள்-5; புத்தகம்-5:

படிப்பதில் மீண்டும் சுணக்கம். சில வருடங்கள் எதுவும் படிக்காமலேயே இருந்திருகிறேன். அவ்வப்போது இந்தக் கிறுக்குத்தனம் உண்டு – எந்த விஷயத்திலும் ஈடுபட்டால் அதிலேயே பழியாகக் கிடப்பேன் – இல்லையெனில் அந்தப் பக்கமே போக மாட்டேன் – “வச்சா குடுமி, சரைச்சா மொட்டை!” கதை தான். ஆனாலும் உள்ளுக்குள் எங்கோ படிக்கும் ஆர்வம் புதைந்து கிடக்கிறது என்பது அவ்வப்போது படிக்கத் தூண்டும்போது புரியும்.

ஐந்தாம் நாள் புத்தகமாக…. சுஜாதா அவர்களின் தூண்டில் கதைகள். இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமும் இணையத்திலிருந்து தான்.



நாள்-6; புத்தகம்-6:

நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படித்த நாட்களுக்குப் பிறகு நானே நிறைய புத்தகங்களை வாங்கிச் சேர்க்க ஆரம்பித்தேன் – எப்போது தமிழகம் வந்தாலும் புதிய புத்தகங்கள் என்னோடு வர ஆரம்பித்தன. புத்தகங்களுக்காகவே நிறைய செலவு செய்த காலம் அது. தலைநகரிலும் வருடத்திற்கு இரண்டு முறை [இப்போது வருடா வருடம்] வரும் புத்தகத் திருவிழாவிற்குச் சென்று அங்கேயும் புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன். நிறைய புத்தகங்களைச் சேர்த்திருக்கிறேன் – அவற்றை இரவல் கொடுத்து இழந்திருக்கிறேன்! இப்போது தில்லியிலும், தமிழகத்திலும் புத்தகங்கள் இருக்கின்றன. பராமரிப்பது கஷ்டமான விஷயமாக இருக்கிறது என்பதால் புத்தகங்கள் வாங்குவதைக் குறைத்து விட்டேன்.

ஆறாம் நாள் புத்தகமாக…. சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம். புத்தகத்தின் அட்டைப்படமும் இணையத்திலிருந்து.


நாள்-7; புத்தகம்-7:

பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கியோ அல்லது நூலகத்திலிருந்து எடுத்தோ படிக்கும் காலங்கள் கழிந்து, இப்போதெல்லாம் இணையத்திலேயே மின்னூல்கள் படிக்கும் காலம் வந்திருக்கிறது. வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கும் பலரும் புத்தகங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். அடியேனுடைய பயணக் கட்டுரைகள் சிலவும் மின்னூல்களாக வெளிவந்திருக்கிறது. www.freetamilebooks.com, www.pustaka.co.in மற்றும் www.amazon.in தளங்களில் என்னுடைய சில புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன.

ஏழாம் நாள் புத்தகமாக…. கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம். புத்தகத்தின் அட்டைப்படம் இணையத்திலிருந்து.



ஏழு நாட்களில் ஏழு புத்தகம் வாயிலாக என்னுடைய சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. முகப்புத்தகத்தில் எழுதியவற்றைத் தொகுத்து இங்கேயும் ஒரு சேமிப்பாக பகிர்ந்து கொண்டேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

27 கருத்துகள்:

  1. Good Morning Venkat... எனக்கும் இதே அனுபவங்கள். என்னை tag செய்து விட்டதும் உங்கள் திருமதிதான்! என் பங்குக்கு நான் 7 பேர்களை மாட்டி விட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #என்னை tag செய்து விட்டதும் உங்கள் திருமதிதான்! என் பங்குக்கு நான் 7 பேர்களை மாட்டி விட்டேன்!#

      ஹா..ஹா..ஹா.தொடரை தொடர்ந்து நிறைவு செய்ததற்கு நன்றி ஸ்ரீராம் சார். நான் கோர்த்து விட்டதில் கலா ஸ்ரீராம் ( புதுகைத் தென்றல் ) தான் இன்னும் எழுதலை..

      நீக்கு
    2. ஹாஹா... அவங்க உங்களையும் மாட்டி விட்டாங்களா! :) நான் என் பங்குக்கு ஒருவரை மட்டுமே - அதுவும் அவரே வாண்டட்-ஆ வந்து வண்டில ஏறிக்கொண்டார்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. புதுகைத் தென்றல் சுற்றுலாவில் இருக்காங்க போல....

      நீக்கு
  2. காலை வணக்கம் ஸ்ரீராம். நான் மாட்டி விட்டது ஒருவரை மட்டுமே - அவரே கேட்டதற்கு இணங்க.....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இரசிக்க வைத்த தொகுப்புதான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. பிரபலங்கள் என்று பெயர் பெற்றவர்களின் நூல்கள் மட்டும் இடம் பெறுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபலங்கள் என்றெல்லாம் கணக்கில்லை. ஏழு நாள் ஏழு புத்தகம் அவ்வளவு தான் - அது யாருடைய புத்தகமாகவும் இருக்கலாம் - பதிவர்களின் புத்தகங்கள் உட்பட...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்ப்.பி. ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. ஓ முகநூலிலும் இப்படியா...ஆஹா!!!

    உங்கள் பல வரிகள் எனக்கும் பொருந்தும்...புத்தகம் வாங்குவது என்பதைத் தவிர...புத்தகம் வாங்குவதில்லை....பல காரணங்களால்...இப்போது இணையத்தில் கிடைப்பவற்றை வாசிக்கிறேன் என்றாலும் புத்தகம் வாசிப்பது போல் வருவதில்லைதான்.

    வீட்டில் ரிலிஜியஸ், சப்ஜெக்ட் புத்தகங்கள் நிறைய சேர்க்கப்பட்டு இருக்கிறது. என் மகனின் சப்ஜெக்ட் புத்தகங்கள், அவனுக்கு நான் நடைபாதைக்கடைகளில் வாங்கிக் கொடுத்த கதைப்புத்தகங்கள் என்று நிறைய சேர்ந்து பராமரிப்பதும் ரொம்பக் கடினமாகத்தான் இருக்கிறது.

    உங்கள் சாய்ஸ் நல்ல புத்தகங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராமரிப்பில் இருக்கும் கடினமே புத்தகம் வாங்கத் தடையாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. நல்ல காலம் நான் சிக்கவில்லை என்று நினைக்கிறேன்...நான் இத்தனை நாள் ஆக்டிவாக இல்லாததும் ஒருவகையில் நல்லதுதான் போலும்.

    நானும் வாசிப்பு என்பது கேரளா சென்ற பிறகு குறைந்து இல்லாமலே ஆகிவிட்டது. இப்போது வலைத்தளத்தில் வரும் கதைகளை மட்டுமே வாசிக்கிறேன். எங்கள் பிளாக் போடும் கேட்டுவாங்கிப் போடும் கதைகள் போன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை ஆக்டிவாக இல்லை! தொடர் எனும்போது கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  8. இந்த சங்கிலியில் நானும் சேர்ந்து இன்றுவரை நான்கு நூல்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். நம் மக்களைப் படிக்கவைக்க இதுவும் ஒரு உத்திதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  10. அர்த்தமுள்ள இந்துமதம் இன்னும் படிச்சு முடிச்ச பாடில்லை. ஜெயகாந்தன் கதையும், அகல்யா கதையும் இன்னும் படிக்கல. பார்த்தீபன் கதை எத்தனை தரம் படிச்சாலும் சலிக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  11. அருமையான பகிர்தல்.

    முன்பு போல் படிக்க முடிவது இல்லை, புத்தகங்களை தேடி தேடி படித்த காலம் உண்டு.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. என்னையும் ஶ்ரீராம் மாட்டி! (ஹிஹிஹி) விட்டிருந்தார். இன்னும் எதுவும் போடவில்லை. போடமுடியுமானும் தெரியலை! பார்ப்போம். இப்போல்லாம் புத்தகங்கள் கிடைப்பதே அரிதாக இருப்பதால் படிப்பது என்பது இணையம் மூலமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. புத்தகங்களைப் பார்த்தேன். நல்ல செலக்ஷன்.

    வச்சா குடுமி, சரைச்சா மொட்டை!” - ஆஹா நம்மைப் போலவும் ஆட்கள் இருக்காங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....