திங்கள், 30 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் - ராஜவாழ்க்கை



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மாளிகை - தற்போது நட்சத்திர ஹோட்டலாக...




லேக் பேலஸ், உதய்பூர்....



சிட்டி பேலஸ் நுழைவாயில், உதய்பூர் ....

சாஜன்கட் மாளிகை [அ] மழைக்கால மாளிகை பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் மேவார் மன்னர்களில் முக்கிய இடத்தினைப் பிடித்த, உதய்பூர் நகர் உருவாகக் காரணமாக இருந்த, மஹாராணா உதய் சிங் அவர்கள் உருவாக்கிய அவருடைய மாளிகை நோக்கி தான். பிச்சோலா ஏரியின் கரையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட அரண்மனை மற்றும் பல மாளிகைகளைக் கொண்ட இடம் தான்.  சிட்டி பேலஸ் – பெயரே உங்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பினை உருவாக்கும் விதத்தில் இருக்கிறது அல்லவா? ஆரவல்லி மலைத்தொடர் பின் புறத்தில் இருக்க, பிச்சோலா ஏரிக்கரையிலிருந்து குளிர்ந்த காற்று வர, மாளிகைகள் – நதிக்குள் கூட ஒரு மாளிகை உண்டு அது ஜக் மந்திர் மாளிகை [அ] லேக் பேலஸ், ஜகதீஷ் மந்திர், நீமச் மாதா மந்திர் எனப் பிரம்மாண்டமான இடம்.


உள்ளே வந்தே குத்திடுவேன் - பிரம்மாண்ட கதவுகள்!
சிட்டி பேலஸ் உதய்பூர்....




மாளிகையின் ஒரு பகுதி...
சிட்டி பேலஸ், உதய்பூர்....


காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் இந்த மாளிகைப் பகுதிகள் இருக்கும் இடத்திற்கு உள்ளே சென்று பார்க்க கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 30/- சிறியவர்களுக்கு 15/-. அட பரவாயில்லையே, இவ்வளவு பெரிய இடத்தில் அமைந்திருக்கும் மாளிகைகளைப் பார்க்க ரொம்பவே குறைந்த கட்டணம் தானா என்ற ஆச்சர்யம் உங்களுக்கு வருகிறதா…. அங்கே தான் இருக்கிறது இவர்களின் தந்திரம். அப்படியே வெளியே பராக்கு பார்த்து விட்டு வரலாம் – அதிலும் குறிப்பிட்ட சில இடங்கள் மட்டும்! உள்ளே மாளிகைக்குள் அமைந்திருக்கும் அருங்காட்சியகம், பிச்சோலா ஏரியில் செல்லும் படகுகளில் சவாரி, புகைப்படம் எடுக்க, என அனைத்திற்கும் தனித்தனியாக கட்டணம் உண்டு – அதுவும் மிக அதிகமான கட்டணம்! எவ்வளவு என்று கேட்கிறீர்களா? சொல்லுகிறேன்!







கல்லிலே கலைவண்ணம்....
சிட்டி பேலஸ், உதய்பூர்....


அருங்காட்சியகம் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 வரை தான் திறந்திருக்கும். அருங்காட்சியகத்திற்குள் சென்று அங்கே இருக்கும் கலைப்பொருட்களையும் மாளிகையின் பகுதிகளையும் பார்க்க வேண்டுமென்றால் தனியாக கட்டணம் வசூலிப்பார்கள். 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கட்டணம் ரூபாய் 250/- 5 முதல் 18 வயது வரை கட்டணம் ரூபாய் 100/- கேமராவிற்கான கட்டணம் ரூபாய் 250/- இந்தக் கட்டணங்களை எங்கள் குழுவினருக்கும் உதய்பூர் நண்பர்களுக்கும் சேர்த்து மொத்தமாக பதினைந்து பேருக்கும் கொடுத்து நுழைவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டோம். மொத்த மாளிகையையும், அருங்காட்சியகத்தினையும் பார்க்க கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகலாம். அருங்காட்சியகத்திற்குள் வசதி இருக்குமோ இல்லையோ என நுழைவாயில் அருகே இருக்கும் Wash Room சென்று பிறகு அருங்காட்சியகம் செல்ல நினைத்தோம்.














ஓவியங்கள்.
சிட்டி பேலஸ், உதய்பூர்....

அங்கே சென்ற பிறகு ஏண்டா அங்கே போனோம் என்று ஆனது – ஆண்களுக்கான பகுதியில் ஒரு பெண்மணி உள்ளே இருக்க, தப்பாக வந்தோமா என நினைத்தால் இல்லை – அவரது மகனுக்கு உதவியாக உள்ளே வந்திருக்கிறார். அந்த மகன் டாய்லட் உள்ளே செல்லாமல் வெளியிலேயே உடையைக் கழற்றி மலம் கழிக்க, இந்த அம்மா உள்ளே வருபவர்களை வெளியே விரட்டுகிறார்! வாட்ட சாட்டமாக நின்று கொண்டு அப்படி ஒரு சப்தம்! ஒரு பெரியவர், “ஏம்மா உன் புருஷனை அனுப்ப வேண்டியது தானே, நீ இப்படி நின்னுக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றியே?” எனக் கேட்க, பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்! போலீஸ்ல உங்க பேர்ல கம்ப்ளைண்ட் கொடுப்பேன் பார்த்துக்கோ என்று மிரட்டல் வேறு!


லேக் பேலஸ், உதய்பூர், பறவைப் பார்வையில்... 


அந்தக் கால போர் கவசம்....


அரண்மனையிலிருந்து நகரம்.....
சிட்டி பேலஸ், உதய்பூர்

ஒரு வழியாக அம்மணி போன பிற்கு உள்ளே சென்றால் வழியிலேயே மூன்று நான்கு இடத்தில் கக்கா அப்படியே இருக்கிறது! சுத்தம் செய்யாமல் அந்த அம்மணி சென்றுவிட, யக்க்க்க்….. நிறைய காசு வாங்கும் அரண்மனை, இதையும் கொஞ்சம் கவனிக்கலாம்! பார்க்க டீஜண்டாக உடை அணிந்து வாய் மை, கை மை, நாத்த மருந்து எல்லாம் அடித்துக் கொண்டு வெளியே, “யேய்… This place is so dirty, you know, bloody people, country broots!” என நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு போகும் அந்த யுவதியை பின்னாலேயே சென்று ஒரு அப்பு அப்பலாம் என கோபம் வந்தது! கொஞ்சம் முறைத்து, அவரைக் கடந்தேன்! ஒரு அப்பு அப்பலாம் என்ற ஆசையும் கோபமும் இருந்தாலும் வேறு வழியில்லை! செய்ய முடியாது! மனதுக்குள் அவளை அடித்த மாதிரி திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான்!  


எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு - 
மார்பிள் கற்களில் ஜன்னல்...
சிட்டி பேலஸ், உதய்பூர்



குளியலறை.... ஹலோ யாருங்க எட்டிப் பார்க்கறது!
சிட்டி பேலஸ், உதய்பூர்


அடச் சே… அருங்காட்சியகத்தினைப் பற்றி சொல்வதை விட்டு வேறு எதையோ சொல்லிக் கொண்டு போகிறேன் பாருங்கள்! ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை! நுழைவுச் சீட்டினைக் காண்பித்து உள்ளே நுழைந்தோம். பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை அங்கே தான் பார்க்க முடியும். 400 வருடங்களாக மேவார் பகுதியை ஆண்ட மஹாராணா மன்னர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரண்மனையில் பல மாளிகைகளைக் கட்டி இருக்கிறார்கள். சித்தோட்கட்[ர்] பகுதியிலிருந்து அரண்மனையை மாற்றி இங்கே உதய்பூரில் அமைத்தவர் மஹாராணா உதய் சிங் எனப் பார்த்தோம். அதன் பிறகு வந்த மேவார் மன்னர்களும் தங்களது பங்கை ஆற்றி இருக்கிறார்கள்.


ராஜா வந்து காதலைச் சொல்வாரா மாட்டாரா....
சிட்டி பேலஸ், உதய்பூர்



சூர்ய சௌபாட் எனும் அரச சபையில்..
சிட்டி பேலஸ், உதய்பூர்



நான் மார்பிள் மயிலுங்கோவ்....
சிட்டி பேலஸ், உதய்பூர்


ஃபதே பிரகாஷ் பேலஸ், ஷிவ் நிவாஸ் பேலஸ், பிச்சோலா நதிக்குள் இருக்கும் ஜக் நிவாஸ் எனப்படும் நதிக்குள் இருக்கும் பேலஸ் என பலதும் இப்போது நட்சத்திர ஹோட்டல்களாக மாற்றப்பட்டு விட்டன. அருங்காட்சியகம் இருக்கும் பகுதிகள் மற்றும் சில இடங்கள் மட்டுமே இந்த 250 ரூபாய் நுழைவுக்கட்டணத்தில் பார்க்க முடியும்.  ஜனானா மஹல் எனப்படும் அரச குடும்பப் பெண்களுக்கான மாளிகை, ஆண்களுக்கான மாளிகை, மற்றும் அரண்மனை அருங்காட்சியகத்தில் இருக்கும் பொருட்கள், ஓவியங்கள், கருவிகள், ஆயுதங்கள், யானைத் தந்தந்தங்களால் ஆன கதவுகள், வெள்ளி, தங்கத்தினால் ஆன பொருட்கள், இசைக்கருவிகள் என அனைத்துமே வெகு அழகு.  உள்ளே இருப்பவை பற்றி என்ன சொல்ல, எப்படிச் சொல்ல – அத்தனை அழகானவை. உதய்பூர் அருங்காட்சியகம் பற்றி ஒரு சில காணொளிகள் Youtube-ல் உண்டு. விருப்பமிருந்தால் பார்க்கலாம்!


கல்லிலே கலைவண்ணம்...
சிட்டி பேலஸ், உதய்பூர்



கும்பிட்டுக்கலாம் வாங்க....
சிட்டி பேலஸ், உதய்பூர்



அரண்மனை வாயிலில் வரவேற்கும் யானை...
சிட்டி பேலஸ், உதய்பூர்


ஒரே பகுதியில் இங்கிருக்கும் விஷயங்கள் அனைத்தையும் சொல்லி விடுவது ஆகாத கார்யம். அதனால் அடுத்த பகுதியிலும் இந்த அரண்மனை அருங்காட்சியகம் பற்றிய விஷயங்களைப் பார்க்கலாம். இந்தப் பகுதியிலும் அடுத்த பகுதியிலும் அருங்காட்சியகத்தில் எடுத்த படங்கள் வரும். இங்கே கொடுக்க முடியாத படங்களையும் சேர்த்து ஒரு ஆல்பமாக கூகிள் ஃபோட்டோஸ்-ல் இணைத்து அடுத்த பகுதியில் அதற்கான சுட்டி தருகிறேன். தொடர்ந்து அரண்மனையை, அருங்காட்சியகத்தினைப் பார்க்கலாம் வாங்க…

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். நேற்றிரவு ஒரு இடைக்காலப் பதிவு வந்ததும், ஏதோ அவசர வேலை போலும்... காலை பதிவு இருக்காதோ என்று சந்தேகப்பட்டேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நேற்றிரவு ஒரு பதிவு - அடுத்த கதம்பம் வரை காத்திருக்க வேண்டாம் என்று நேற்றே வெளியிட்டேன் - தனிப்பதிவாக....

      இது முன்பே Schedule செய்த பதிவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. டாய்லெட் அலப்பரைகள் அங்கேயும் உண்டா? ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... எங்கும் இந்த பிரச்சனை உண்டு - அது அரண்மனையாகவே இருந்தாலும் என்று புரிந்த நாள் அந்த நாள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நாகரீக, ஆங்கிலம் பேசும் "யுவதி"யா அப்படிச் செய்தார்? அய்யய்யே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இங்கே வந்தால் நவ நாகரீகமும் பறந்து விடும் போல! கொடுமை தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பிரம்மாண்டம் என்பதால்தான் அவ்வளவு காசு வாங்குகிறார்கள் போலும். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மாண்டம் - உண்மை தான். நிறையவே காசு வாங்கினாலும் இங்கே வரும் கூட்டம் - Foot falls, இந்தியாவில் இருக்கும் அருங்காட்சியகங்களிலேயே அதிகமானது என்கிறது ஒரு தகவல்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்களும் பகிர்வும் அருமை
    பிரமாண்டம்
    லேக் பேலஸ் மனதை கொள்ளை கொள்ளுகிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேக் பேலஸ் - ஆமாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ஒரு அழகு இல்லையா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. சுத்திப் பார்க்க மெதுவா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாருங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. கட்டண விபரங்கள் மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. //ராஜா வந்து காதலைச் சொல்வாரா மாட்டாரா....
    சிட்டி பேலஸ்,//
    ஓவியத்தில் ராணி குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கிறார். போர்களில் காலம் கழிக்கும் ராஜாவின் வரவுக்கு குழந்தையும் ராணிம் காத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. //நிறைய காசு வாங்கும் அரண்மனை, இதையும் கொஞ்சம் கவனிக்கலாம்!//

    சுற்றுலா சென்றால் நம் நாட்டில் இதுதான் மிக கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. உங்கள் பதிவுகளுடன் பயணம் செய்வது சந்தோஷம் அண்ணா,
    படங்கள் அழகாக எடுத்துள்ளீங்க,அருமை அருமை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  12. மிக பிரமாண்டங்கள்...மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  13. அடுத்த வாரிசு படத்துல வரும் இடம்தானே?! படம்லாம் சூப்பர்ண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இடம் தானா என எனக்குத் தெரியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. இந்த ராஜாக்களின் பிரம்மாண்டத்துக்குப்பின்னால் எத்தனை ஏழை உழைப்பாளிகளின் பங்குஇருக்கும் என்றே நினைக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரின் உழைப்பும் உண்டு என்பது தான் எனக்கும் தோன்றியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. பதிவாலேயும் போட்டோவாலேயும் எங்களை நிறைய இடங்களுக்கு கூட்டிட்டுப் போடறீங்க தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணாஜி.

      நீக்கு
  16. ஓவியங்களும் கட்டிடங்களும் சிற்பங்களும் மிக அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  17. துளசி: மாளிகையே அழகாக இருக்கிறது இப்போது நட்சத்திர ஓட்டல் இல்லையா...ஏரியும் மலையும் எல்லாம் மிக மிக அழகாக இருக்கிறது. பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது.

    டாய்லெட் கேரளத்தை விட்டு வெளியில் போனால் கொஞ்சம் கஷ்டம்தான் என்று எங்கள் அனுபவம். ஒரு சில இடங்களில் மட்டுமே டாய்லெட் சுத்தமாக இருக்கிறது.

    அழகான இடம் தொடர்கிறோம்..

    கீதா: அக்கருத்துடன்....ரொம்ப அழகா இருக்கு ஜி. யூட்யூபிலும், ஃபோட்டோக்களிலும் பார்த்து இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. அந்தக்காலத்தில் மன்னர்கள் இதிலிருந்து செமையா எஞ்சாய் பண்ணியிருப்பாங்க சுற்றிலும் நீர், மலை, என்று குளு குளுதான்....ஓவியங்கள் எல்லாமே அழகா இருக்கிறது.

    டாய்லெட் ஹக்!! அந்த பெண்மணி ஏன் இப்படி....பீட்டர் வேற விட்டுட்டு...அந்த வரிகள் எனக்கும் ஹையே இப்படியா இருப்பாங்கனு தோன்றினாலும் உங்கள் வர்ணனையை சிரித்து ரசித்தேன் ஜி. கைவிரல் மை, உதட்டுல மை..ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாளிகைகள் நட்சத்திர விடுதிகளாக மாறி விட்டன.

      பல இடங்களில் டாய்லெட் கஷ்டம் தான். இன்னும் மாற வேண்டும் - மனிதர்களும்!

      மன்னர்கள் - அவர்கள் வாரிசுகள அனைவருமே வாழ்க்கையை அனுபவித்து இருக்கிறார்கள் - அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....