சனி, 8 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – புன்னகை – தேர்தல் – ஜுகல்பந்தி – ராஜாராணி - சுஸ்கி

காஃபி வித் கிட்டு – பகுதி 53


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள் – யோகோ ஓனோ.  


யோகோ ஓனோ – ஜப்பானிய பாடகர். அவரது சில பாடல்கள் கேட்டதுண்டு. யூவில் நிறைய இருக்கிறது. கேட்டுப் பாருங்களேன்!

இந்த வாரத்தின் செய்தி – தலைநகரில் தேர்தல்:

இதோ இந்தப் பதிவினை எழுதி வெளியிடும் நேரத்தில் தலைநகர் தில்லியில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் சமயங்களில் நமது தமிழகம் போல இங்கே பெரிதாக தேர்தல் பிரச்சாரங்கள் பார்க்க முடிந்ததில்லை – ஆனால் இந்த முறை நிறைய பிரச்சாரம் – குறிப்பாக ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி பார்ட்டி நிறையவே பிரச்சாரம் செய்தது. அடுத்ததாக இந்தியாவினை ஆளும் பாரதிய ஜனதா பார்ட்டி. காங்கிரஸ் கட்சியினர் ஏனோ பிரச்சாரம் அதிக அளவில் செய்யவே இல்லை – ரொம்பவே குறைவு – தேர்தலுக்கு முன்னரே தோல்வியைத் தழுவுவோம் என்று முடிவு செய்துவிட்டார்களோ என்று தோன்றியது எனக்கு – தமிழகத்தில் தான் அதிக அளவு இலவசம் என்று சொல்வதுண்டு. இந்த முறை இங்கேயும் நிறைய இலவசமாகத் தருவோம் என்ற வாக்குறுதிகள்! இந்த வாரம் அலுவலத்திலிருந்து வீடு திரும்பிய போது வீட்டுக் கதவில் ஒரு கவர் – உள்ளே சில பிரச்சாரக் காகிதங்கள் – கூடவே ஒரு சாவிக் கொத்து! பாவம் அதிக பணம் இல்லை போலும் அந்த வேட்பாளரிடம்! அதனால் இலவசமாக ஒரு சாவிக் கொத்து!

மின்சாரம், தண்ணீர், பெண்களுக்குப் பேருந்துப் பயணம் என பலவும் இலவசம் – 600 யூனிட் வரை மின்சாரத்திற்குக் கட்டணம் இல்லை என்று அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  யார் வரப் போகிறார்கள் என்பதை இங்கே பலராலும் யூகிக்க முடிகிறது – பார்க்கலாம் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை! சரி அது ஒரு புறம் இருக்கட்டும் பத்துப் பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு எனக்கும் தேர்தல் பணி! அதுவும் தேர்தல் நேரத்தில் அல்ல! தேர்தல் அன்று மாலையிலிருந்து இரவு வரை – இதோ மூன்று மணிக்குப் புறப்பட்டு, தேர்தல் பணியாற்றச் செல்ல வேண்டும் – தேர்தல் முடிந்து தேர்தல் பணியாளர்கள் கொண்டுவரும் இயந்திரங்களையும் மற்ற விஷயங்களையும் சேகரித்து பாதுகாப்பு அறையில் சேர்க்கும் பணி! இது மாலையிலிருந்து ஆரம்பித்து எல்லாத் தொகுதிகளிலிருந்தும், எல்லா வாக்குச் சாவடிகளிலிருந்தும் பெட்டி வரும் வரை தொடரும்! அதனால் இன்றைக்கு இரவு தூக்கம் கேள்விக் குறி தான்! ஒரே ஒரு நல்ல விஷயம் – எனக்கான தேர்தல் பணியிடம் வீட்டின் அருகிலேயே – நடந்து செல்லும் தொலைவு தான் – அதனால் பணி முடிந்து விரைந்து வீடு திரும்பலாம்! வெகு தொலைவிலிருந்து வரும் நபர்களுக்கு இரவில் வீடு திரும்புவது கடினம்! இதுவும் கடந்து போகும் என்ற நிலையோடு தேர்தல் பணியாற்ற புறப்படுகிறேன். கிடைத்த அனுபவங்களை பின்னர் எழுதுகிறேன்!

இந்த வாரத்தின் இசை – ஜுகல்பந்தி:

ராஜஸ்தானி கலைஞர்களின் ஜூகல்பந்தி சமீபத்தில் கேட்கக் கிடைத்தது – டோலக், கட்தால், மோர்சிங், நகாடா என நான்கு கருவிகளை வைத்துக் கொண்டு ஒரு அருமையான ஜூகல்பந்தி.  கேட்க ரொம்பவே நன்றாக இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன் – சுமார் எட்டு நிமிட காணொளி! ஆனால் ரசிக்கலாம்!



தலைநகரக் காட்சி…

தலைநகரின் பேருந்து நிலையம் ஒன்று – அங்கே காத்திருந்த பெரியவர் ஒருவர் அவர் செல்ல வேண்டிய பேருந்து வந்ததும் அதீத பதட்டத்தில் எழுந்து ஓட ஏதோ தடுக்கி தலை குப்புற விழ, மூக்கிலோ, புருவத்திலோ அடி – உடனேயே ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. பேருந்துக்கு அருகிலேயே விழுந்து விட்டார். நல்ல வேளையாக பேருந்து நின்று கொண்டிருந்ததால் அதிக ஆபத்து இல்லை – அவருக்காகக் காத்திருக்காமல் பேருந்து புறப்பட விழுந்த பெரியவரை பேருந்து நிறுத்ததில் நின்றவர்கள் சேர்ந்து கைத்தாங்கலாக அழைத்து வந்து உட்கார வைத்தோம் – கைக்குட்டையை ஒருவர் தர, தண்ணீர் கொண்டு அவரது காயத்தினை ஒருவர் சுத்தம் செய்ய, பெரியவர் ஒரு வழியாக ஆஸ்வாஸப் படுத்திக் கொண்டார்.  ஒரு நொடியில் நிகழ்ந்து விடும் இந்த நிகழ்வுகளை எப்படித் தடுப்பது?  சமீபத்தில் ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த வாசகம் படித்தது நினைவுக்கு வந்தது – One small mistake – Its over! என்பது தான் அந்த வாசகம்!

இந்த வாரத்தின் விளம்பரம் – For the love of Chuski!

மிகச் சமீபத்தில் பார்த்து ரசித்த விளம்பரம் – Chuski பற்றிச் சொல்லப் போகிறார் என்று பார்த்தால் அது வேறொரு பொருளுக்கான விளம்பரம் –  இதே மாதிரி இன்னும் சிலவற்றையும் பயன்படுத்தி விளம்பரம் எடுத்திருக்கிறார்கள் – அவற்றில் நம் ரசமும் உண்டு! பாருங்களேன்!



இந்த வாரத்தின் கேள்வி:

குழந்தைகளின் குறும்பு ரசிக்கத் தக்கது தானே! பல சமயங்களில் அவர்களது குறும்பான பதில்களை நானும் ரசித்ததுண்டு. அப்படி ஒரு குறும்பான பதில் தான் இந்த வாரத்தின் கேள்வி பதிலாக! தமிழ் கோராவில் இருந்து…

குழந்தைகளின் அறிவு கூர்மையுள்ளக் குறும்பாக நீங்கள் கருதுவது எது?

நான் கே.ஜி வகுப்பு ஆசிரியை.

How are you னு கேட்டா நம்மளயும் அதே கேப்பாங்க.

If i ask "how are you?" You have to tell i am fine thank you…ok? னு சொன்னா ok miss னு சொல்வாங்க.

very good dears. Ok how are you? னு திரும்பி கேட்டா how are you? னு திரும்பவும் அதே தா சொல்வாங்க. எந்த கேள்விகேட்டாலும் இப்டி தான்.

அடுத்து அவங்கள அமைதியா வைக்க statue release விளையாட்டு சொல்லிக்குடுத்தேன். நமக்கு அம்புட்டு அறிவு.

Statue சொன்னா அசையகூடாதுல்ல. நான் அவங்கள statue சொல்லிட்டு போர்டுல எழுத போனேன். அய்யோ மிஸ் statue னா நகர கூடாது. மிஸ் அவுட்டு மிஸ் அவுட்டுனு கத்துன கத்துல பக்கத்து கிளாஸ் மிஸ்ட்ட மாட்டி என்ன திட்டு வாங்க விட்டாங்க. – அனீஷ் பானு.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

மனச்சுரங்கத்திலிருந்து என்ற தலைப்பில் எனது நெய்வேலி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். 2011-ஆம் ஆண்டு இதே நாளில் எழுதிய ஒரு பதிவு ராஜா ராணி! இதுவரை படித்திராதவர்கள் படிக்கலாமே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. காஃபி வித் கிட்டு - நல்லாத்தான் இருக்கு. பிளாக் வித்தியாசமா ஓபன் ஆகுது. எப்போதும்போல இல்லை. என்னான்னு பார்க்கணும்.

    தில்லில 55 ஆ இல்லை 65க்கு மேலயா ஆம் ஆத்மி என்பதுதான் டிஸ்கஷனாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 55-ஆ இல்லை 65-க்கு மேலேயே - இரண்டு நாளில் தெரிந்து விடும்! :) பார்க்கலாம் என்ன ஆகிறது என.

      இரண்டு மூன்று நாட்களாக Blogger-ல் ஏதோ மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். ஒரு பதிவை க்ளிக் செய்தால், முதலில் ஒரு விண்டோ ஓபன் ஆகிறது. பிறகு மீண்டும் பதிவின் சுட்டி க்ளிக் செய்ய வேண்டியிருக்கிறது - நல்ல மாற்றமாக இருந்தால் சரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. தேர்தல் பணிகளை நல்ல விதமாக செய்து வெற்றிக்கனியை வெற்றி பெற்றவர்கள் பெற வழி செய்யுங்கள் ஜி.

    மேலும் அனுபவங்களை பெற்று எழுதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தல் பணிகள் இனிதே நிறைவடைந்தன! இரவு வீடு திரும்பும் போது மணி நள்ளிரவு 01.45! காலையில் கண்களில் எரிச்சலோடு எழுந்திருந்தபோது மணி 07.00!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி..

      நீக்கு
  3. ரசித்த வாசகம் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
    ஜுகல்பந்தியை ரசித்தேன். என் கணவரும் ' நன்றாக இருக்கிறது ' என்று சேர்ந்து ரசித்தார்கள். மனச்சுரங்கத்தினுள் ஒளிந்து கொண்டிருக்கும் ராஜா ராணி கதையையும் படித்தேன். நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்த வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      ஜுகல்பந்தி உங்களுக்கும், உங்களவருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இப்படி சில ராஜஸ்தானி ஜுகல்பந்தி நிகழ்ச்சிகளை சில நாட்களாக யூவில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. //டோலக், கட்தால், மோர்சிங், நகாடா என நான்கு கருவிகளை வைத்துக் கொண்டு ஒரு அருமையான ஜூகல்பந்தி. கேட்க ரொம்பவே நன்றாக இருந்தது.//

    கேட்டு மகிழ்ந்தேன், நீங்கள் சொன்னது உண்மை.

    ஐஸ்கட்டியை தேங்காய் பூ போல துருவி அதில் பாட்டிலில் இருக்கும் வண்ணக்கலவையை ஸ்பேரே செய்து தருவார்கள்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜுகல்பந்தி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      ஆமாம் சுஸ்கி ரொம்பவே இங்கே பிரபலம்! சில முறை ருசித்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நேற்று என் அதிகாரி "ஏன் ஸ்ரீராம் ரொம்ப சீரியஸாகவே இருக்கிறீர்கள்?"என்று கேட்டார்.  புன்னகையை மறந்திருந்தேன் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புன்னகையை மறந்திருந்தேன் போலும்!” சில சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது ஸ்ரீராம். பெரும்பாலும் டென்ஷன் ஆகாமல் இருந்தாலும் சில சமயங்களில் பொறுமை இழக்க வைத்து விடுகிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தலைநகரில் யார் ஜெயிப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது என்று சொல்லி நிறுத்தி விட்டீர்களே? யார் ஜெயிப்பார்கள்?!!    தேர்தல் பணி அலுவல்களைஅப்புறம் பகிருங்கள் - சொல்ல முடிபவை மட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் ஜெயிப்பார்கள் - இரண்டு நாட்களில் விவரங்கள் வந்து விடும்! :)

      சில விஷயங்களை சொல்ல முடிவதில்லை - கட்டுப்பாடு! ஆனாலும் சொல்ல முடிந்தவற்றை சொல்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சமீபத்தில் நிறுத்தத்திலிருந்து தள்ளிச் சென்று நின்ற பேருந்தைப் பிடிக்க ஓடிய நானும் சாலையின் விளிம்பில் கால் வைத்து விழுந்திருப்பேன்.  சுதாரித்து விட்டேன்!  பின்னால் வந்த முகம் தெரியாத பெண்மணி என்னை அன்புடன் கடிந்து கொண்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பேருந்தில் ஓடி ஏறுவதை எல்லாம் நிறுத்தி விட்டேன்! கொஞ்சம் சுதாரிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது இல்லையா ஸ்ரீராம். நல்ல வேளை நீங்களும் சுதாரித்துக் கொண்டீர்கள். கடிந்து கொண்ட அன்பான பெண்மணி - நல்ல விஷயம்! இன்னும் சில நல்லவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. குழந்தைகள் குறும்பு- சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளின் குறும்பு எப்போதும் ஸ்வாரஸ்யம் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. குழந்தைகள் குறும்பு அருமை. இந்த மாதிரித் தான் குஞ்சுலுவும் சொல்லும் சில சமயங்கள்! ஆனால் இப்போப் ப்ளே ஸ்கூலில் வேறே மாதிரிச் சொல்லிக் கொடுத்து பதில் சொல்ல வைக்கிறார்கள்.குஞ்சுலுவுக்கு இப்போத் தன் பெயர் சொல்லவும், துர்கா தான் தான் எனவும் சொல்லத் தெரிந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான குறும்புகள் என்றைக்குமே ரசிக்கத் தகுந்தவை தான். உங்கள் பேத்தி துர்காவின் குறும்புகளை நீங்களும் ரசித்து மகிழ்ச்சியில்! நாங்களும் மகிழ்ச்சியில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. குழந்தைகள் குறும்பை நினைத்துக்கொண்டால் காலையில் தானாகவே சிரிப்பே வந்துடும். ஜுகல் பந்தியும் இன்னொரு காணொளியும் மத்தியானமாப் பார்க்கிறேன். தில்லி தேர்தலில் யார் வருவாங்க என்பது தெரிந்த/அறிந்த விஷயம் தானே! இலவசமே ஜெயிக்கும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் முடிந்த போது பாருங்கள் கீதாம்மா... தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களில்! பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பழைய பதிவிலே சொல்லி இருக்கும் விஷயம் மனதை வேதனை அடைய வைத்தது. உங்க பதிவு இப்போச் சுறுசுறுப்பாத் திறந்து கொள்கிறது! அப்பாடானு இருக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவு - சில விஷயங்கள் மனதை விட்டு அகலுவதில்லை கீதாம்மா... அப்படி ஒன்று தான் இந்த நிகழ்வு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நானும்பலமுறை இந்தப் பணியைப் பார்த்திருப்பதால் நீங்கள் எளிதாகச் சொன்னாலும் அதன் சிரமத்தை புரிந்து கொள்ள முடிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிரமமான வேலை தான் - குழப்பமான சூழலும் கூட இல்லையா ரமணி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ரசித்த வாசகமும் ஆட்டோ வாசகமும் அருமை...

    ஜூகல்பந்தி ஆகா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகங்கள், ஜுகல்பந்தி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. ஜுகல் பந்தி சூப்பர்.
    கண்ணாடி பார்த்து சிரிப்பது நல்ல யோசனை.
    பலன் தரும் என்று நினைக்கிறேன் நன்றி வெங்கட்.

    விழுந்தபெரியவரை நினைத்து வேதனை. நீங்கள் எல்லோரும் உதவியது நெகிழ்ச்சி.
    @ ஸ்ரீராம். ஜாக்கிரதையாக இருங்கள்.
    வேகம் வேண்டாம்.
    தேர்தல் நேரம் கவனம் தேவை. அதுபற்றி மீண்டும் எழுதுங்கள்.
    குழந்தைகளின் குறும்பு ரசிக்கும்படிதான் இருக்கு.
    நல்ல புத்திசாலிக் குழந்தைகள் இப்போது வளர்ந்து வருகிறார்கள்.

    நல்ல நாளுக்கான வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணாடி பார்த்து சிரிப்பது நல்ல பலன் தரலாம்!

      தேர்தல் - நல்லபடியே முடிந்தது வல்லிம்மா. இரவு 01.45 மணிக்கு தான் வீடு திரும்ப முடிந்தது. மாலை 03.00 மணிக்குச் சென்றேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. நம் புன்னகை நம் மனதை இலேசாக்கும்.

    திறம்பட ஆற்றக் கூடியவர்களையே வந்தடைகிறது பொறுப்பான தேர்தல் பணி. அது குறித்த அனுபவப் பகிர்வுக்குக் காத்திருக்கிறோம்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தல் பணி - எழுத முடிந்தவற்றை எழுதுகிறேன் ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....