செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கதம்பம் – ஊரடங்கு – காலை உணவு – நோன்பு – சஹானா இணைய இதழ்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 




ஊரடங்கு – காலை உணவு - 30 ஜூலை 2020:

மகளுக்கு இந்த வாரம் முழுவதுமே கடும் விதிமுறைகளுடன் மிட்டெர்ம் தேர்வுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொருவரையும் ஆசிரியர்களும் கவனமுடன் கண்காணித்து வருகின்றனர். தேர்வு முடிந்ததும் விடைத்தாளில் பெற்றோரிடம் கையெழுத்து பெற்ற பின் Adobe scanner வழி ஃபோட்டோ எடுத்து PDF ஆக மாற்றி பாட ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும். மதிப்பெண்களை இம்முறை ஆசிரியரே வழங்குவாராம். பார்க்கலாம் எந்த அளவு நேர்மையாக நடந்திருக்கிறது என்று!!

விழிப்புணர்வாம்!!! 

இரண்டு நாட்களுக்கு முன் என்னிடம் ஒருவர், "ஏன் நீங்க மாஸ்க்கே போட்டுக்கல??" என்றவுடன் திடுக்கிட்டுப் போனேன்!! இந்த கொரோனா பரவத் தொடங்கிய நாள்முதலாய் என் பதிவுகளில் எல்லாம், விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் மாஸ்க்கே போட்டுக் கொள்வதில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் நானே போட்டுக் கொள்ளவில்லை என்று ஒருவர் சொன்னதும் குழம்பி விட்டேன்!! 

விஷயம் என்னவென்றால் நான் இருந்தது வீட்டில் :) சற்று சுதாரித்துக் கொண்டு, "வெளியில் செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் போட்டுக் கொண்டு தான் போவேன்" "இப்போ வீட்டில் தான் இருக்கேன்! நீங்க கவலைப்படாதீங்க! என்று அந்த நபரிடம் சொன்னேன்...:) 

நல்ல வார்த்தைகள்! 

இன்று காய்கறி வாங்கப் போன இடத்தில் ஊரடங்கு பற்றிய இருவரின் உரையாடலில் "flight லாம் போக பத்து வருஷம் ஆகும்!" என்று ஒருவர் சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தார். ஏனோ அதைக் கேட்டதிலிருந்து மனசு அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது! 

இதைப் பற்றி மகளிடமும், என்னவரிடமும் சொல்லும் போதே கண்கள் கலங்கி விட...

"ஹா..ஹா..ஹா.. லூஸாடி நீ! யார் எது சொன்னாலும் நம்பிடுவியா??" என்றார். 

மகள், "லூஸாம்மா நீ! யாரோ சொல்றதை எல்லாம் நம்பறம்மா! கண்ணை துடைச்சுக்கோ! என்றாள்.

யாரோ சொல்வதெல்லாம் உண்மை இல்லையென நிச்சயமாகத் தெரிந்தாலும் ஒருநிமிடம் மனசு குழம்பி பதறி விடுகிறது..:) 

யாராக இருந்தாலும் பேசும் வார்த்தைகளை யோசித்தும், நல்லவிதமாகவும் பேசினால் தான் என்ன!!!  

இந்த வாரம் செய்த காலை உணவுகள்!



குழம்புமாவு உப்புமா - அரிசிமாவில் மோர் கலந்து பிசைந்து தாளித்து செய்வது. சிலர் மோருக்கு பதில் புளித்தண்ணீர் கலந்தும் செய்வார்கள். என் பிறந்த வீட்டில் புளித்தண்ணீரும், புகுந்த வீட்டில் மோரும் சேர்ப்பார்கள் :) 



மோர்க்களி/மோர்க்கூழ் - இதுவும் அரிசிமாவில் செய்யப்படும் பாரம்பரிய உணவு தான். 

வரலக்ஷ்மி நோன்பு – 31 ஜூலை 2020: 



எங்கள் எதிர்வீட்டு வரலஷ்மி நோன்பு இது! மிகவும் அழகாக பூஜை செய்தார்கள். இந்த வருடம் எங்களுக்கு பண்டிகை இல்லாததால் நம்ம வீட்டு வரலஷ்மியை பூஜையில்லாமல் விட முடியுமா? அதனால் அவர்கள் வீட்டு பூஜையில் வைத்துக் கொள்ள கேட்டிருந்தேன். இதோ நோன்புச் சரடும் கட்டிக் கொண்டு, தாம்பூலமும் வாங்கிக் கொண்டாச்சு. 



எல்லோரையும் நல்லபடியாக வைத்திருக்க பிரார்த்தித்து வந்தேன்! நல்லதே நடக்கும்! 

சஹானா இணைய இதழ் – 3 ஆகஸ்ட் 2020: 

இணைய இதழில் பிரசுரம்! 




பத்து வருடங்களாக இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்! ஆமாம் 2010 ஆம் ஆண்டு இந்த மாதத்தில் தான் என் வலைப்பூவை (blog) துவக்கி எழுதத் துவங்கியிருந்தேன். அந்த எழுத்து கடந்த ஐந்து வருடங்களாக முகநூலோடு முடங்கி விட்டது :) முகநூலில் பகிர்வதையெல்லாம் ஒரு சேமிப்புக்காக வாரம் ஒருநாள் என்னவர் தன் வலைப்பூவில் பகிர்ந்து வருகிறார். 

பெரிதாக ஒன்றும் விஷயங்கள் இல்லாததால் என் எழுத்துக்கள் ஓரிரு முறை தான் பத்திரிக்கையில் வந்துள்ளன. தலைநகரில் "தினமணி நாளிதழ்" துவங்கிய போது தில்லி பதிவர்களின் அறிமுகத்தில் என் வலைப்பூவும் இடம்பெற்றது. பின்பு "தங்கமங்கை" இதழில் கணவன் மனைவியிடையே உள்ள புரிதல் பற்றிய கருத்துக்களத்தில் என் கருத்துக்களும் முதல்முறையாக என் புகைப்படத்துடன் பிரசுரமானது! 

வலைப்பூ நாட்களிலிருந்தே அப்பாவி தங்கமணியாக அறிமுகமான தோழி Bhuvana Govind துவங்கியுள்ள சஹானா இணைய இதழ் நேற்று தன் முதல் பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு இணைய இதழ். கதை, கட்டுரை, ஆன்மீகம், பயணம், என்று பல்வேறு தலைப்புகளில் விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் என் சமையல் குறிப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. வெளியிட்ட தோழி புவனாவிற்கு என் நன்றிகள். இதழ் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


ஆதி வெங்கட்

34 கருத்துகள்:

  1. விமான சேவை எல்லாம் பத்து வருசங்களுக்குப் பிறகா!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை துரை செல்வராஜூ ஐயா. புரளி கிளப்பிவிடுபவர்களுக்கு இங்கே பஞ்சமே இல்லை. தற்போதே கூட விமான சேவைகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இணையத்தில் பாடம், மதிப்பெண்...   இந்தப் புதிய முறைகள் எந்த அளவு முழு சாத்தியமாகிறது என்று பார்க்கவேண்டும்.

    கலங்க வேண்டாம்.  உள்நாட்டில் இருப்பதால் விமானம் என்றில்லை எந்த வழியிலும் பயணிக்கலாம்.  


    மோர்க்களி, அரிசி மாவு உப்புமா இரண்டும் எங்கள் பேவரைட்டும் கூட.வரலகஷ்மி நோன்பு எங்கள் வீட்டிலும் கொண்டாடப்பட்டது.

    புவனா கோவிந்த் (அப்பாவி தங்கமணி) க்கும் உங்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையவழி கல்வி - சின்னச் சின்னதாக பிரச்சனைகள் உண்டு. விரைவில் சரியாகும் என நம்பிக்கை.

      உள்நாட்டு விமானப் பயணம் தற்போது சாத்தியம். விரைவில் இரயில் சேவையும் தொடங்க வாய்ப்புண்டு ஸ்ரீராம்.

      உணவு - உங்கள் வீட்டு கொண்டாட்டங்கள் அறிந்து மகிழ்ச்சி.

      வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குழம்புமா உப்புமா -அரிசி மாவை குழம்பில் போடுவதால் அந்தப் பெயரா?

    எதற்காக விமானப் பயணம் பற்றிக் கலங்கினீர்கள் என்பது சட் என்று புரியவில்லை. நான் கணிணி படித்துக்கொண்டிருந்த காலத்தில், என் அத்யந்த நண்பணுடன் தி நகர் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். நமக்கு என்ன மாதிரியான வேலை கிடைக்கும், வாழ்க்கை எப்படிப் போகும், இப்படியே இன்ஸ்ட்டிடியூட்டில் சூப்பர்வைசராக இருந்துடுமோ என கொஞ்சம் சத்தமாகவே புலம்பிக்கொண்டு வந்தேன் போலிருக்கு. சட் என்று ஒரு பெரியவர் வேகமாக எங்களை நோக்கி வந்தார். எதற்கும் கவலைப்பட வேண்டாம். எதிர்காலம் உங்களுக்கு சிறப்பா இருக்கும். நல்ல நிலைமைக்கு வருவீங்க என்றார். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. உண்மையில் நெகடிவ் ஆகப் பேசுபவர்கள் பிறரைவிட தனக்குத் தானே அதிகம் கெடுதல் விளைவித்துக்கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ தெரியலை நெல்லை என் புகுந்த வீட்டிலும் இதைக் குழம்புமா என்றுதான் சொல்கிறார்கள். எனக்கு வந்த புதிதில் புதுசா இருந்தது. நான் புளி உப்புமா, மோர்க்கூழ்/ களி/ கூழுப்புமா என்றே சொல்லுவது.

      கீதா

      நீக்கு
    2. குழம்பில் போடுவதால் அந்தப் பெயரா? தெரியாது! குழமா உப்புமா என்றும் சொல்வதுண்டு நெல்லைத் தமிழன்.

      நெகட்டிவ் மனிதர்களுக்குக் குறைவே இல்லை இங்கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. எங்கள் வீட்டிலும் குழமா உப்புமா தான் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. யாரோ சொல்வதென்றாலும் சில சமயங்களில் இதுபோன்ற உரையாடல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாக்கம் ஏற்படுத்திவிடும் - உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் வழமைபோல் இனிமை.

    சிலர் எதையாவது பேசவேண்டும் என்பதற்காக பேசுவதுதான் இந்த விமானசேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் கில்லர்ஜி.

      புரளி பேசுபவர்களுக்கு இந்த மாதிரி பேசுவதே வேலை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. விமான சேவை உட்பட பலவற்றும் எப்போது தொடங்குமோ தெரியவில்லை... தீநுண்மி சேவை ஒழிய வேண்டும்...

    சஹானா இணைய இதழில் பதிவு வந்தமைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமான சேவை - இப்போதே இயங்குகிறது தனபாலன். தீதுண்மி விரைவில் ஒழிய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமும்.

      சஹானா இணைய இதழ் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆதி வெங்கட் மேடம், நான் ரமா ஸ்ரீனிவாசன். எங்கள் பிளாக் வழியாக அறிமுகம் ஆனவர். உங்கள் மோர்கூழும் வரலஷ்மி விரதம் படங்களும் அபாரம். சமையல் குறிப்பு பிரசூரத்திறகு ஒரு பலத்த கைத்தட்டல். முதல் படியில் நிற்கும் எனக்கு நீங்கள் யாவரும் பெரும் உந்துதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ஸ்ரீனிவாசன் மேடம்.

      நீக்கு
  8. ஹை ஆதி நோ வொர்ரிஸ். அயல்நாட்டு ஃப்ளைட்டே கொஞ்சம் கொஞ்சமாகப் பறக்கத் தொடங்கிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு ஃப்ளைட்டும் இருக்கிறதே. பயம் எல்லாம் வேண்டாம் ஆதி. எல்லாம் நல்லபடியாகத் தீரும். இதுவும் கடந்து போகும்.

    எனக்கும் யாரும் நெகட்டிவாகப் பேசினால் சுத்தாமாகப் பிடிக்காது நான் ஒதுங்கிவிடுவேன்.

    காலை உணவுகள் எல்லாமே சூப்பர்.

    ஓ அப்பாவி தங்கமணி இணைய இதழ் ஆரம்பிச்சுருக்காங்களா! அவங்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் சமையல் குறிப்பு வெளியானதற்கும் வாழ்த்துகள் ஆதி.

    ஆன்லைன் பரீட்சை வெளிநாடுகளில் பிராபல்யம். இங்கு பள்ளியில் தொடங்கியிருப்பது ஆச்சரியம் நல்ல விஷயமும் கூட. இங்கு கல்லூரியில் இன்னும் தொடங்கவில்லை. காரணம் சிலர் ரொம்ப தள்ளி கிராமத்தில் இருப்பதால் இணையவசதி சரியாக இல்லாததால் பரீட்சை நடத்துவதில் சிரமம் இருப்பதாகச் சொல்லி வருகின்றனர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Flightபற்றி பேசுவது எல்லாம் அறியாமையினால்தான். விமானப் போக்குவரத்தும் ஒரு industry. அமெரிக்காவில் விமான சேவை (இண்டர்நேஷனல்) துவங்கியாகவேண்டும். அதனால் விரைவில் விமானப் போக்குவரத்தும் இரயில் போக்குவரத்தும், குறைந்தபட்சம் பணக்காரர்களுக்காவது துவங்கிவிடும். இரயில் போக்குவரத்தில் ஏசி இல்லாமல், ஒரு சீட்டின் விலை 2 சீட்டுகளுக்கானதாக விலையேற்றம் பெற்றுத் துவங்கும் என்று நினைக்கிறேன். இதில் பெருத்த அடி வாங்குவது உணவு தயாரிப்பவர், இரயில் நிலையங்களில் ஸ்டால் வைத்திருப்பவர்கள், பழங்கள் விற்பவர்கள் போன்ற ஏழை ஜனங்களாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    2. விமான சேவை - இப்போதே இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. புரளி பேசுபவர்களுக்கு இங்கே குறைவில்லை கீதாஜி.

      காலை உணவுகள் - நன்றி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. இரயில் போக்குவரத்தும் அடுத்த மாதம் தொடங்கலாம் என்று தெரிகிறது. விமான சேவை தற்போதே இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. விமானங்கள் பயணிக்க பத்து வருடங்கள் ஆகலாம் - இதுதான் வெட்டி பேச்சு என்பதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டிப் பேச்சே தான் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. //யாரோ சொல்வதெல்லாம் உண்மை இல்லையென நிச்சயமாகத் தெரிந்தாலும் ஒருநிமிடம் மனசு குழம்பி பதறி விடுகிறது..:) //

    மனம் இப்படித்தான் சில நேரம் பதறிவிடும். அப்பாவும், மகளும் ஒரே மாதிரி கேட்டாலும் ஆறுதல் தரும் வார்த்தைகள்.

    சிலருக்கு பயத்தை ஏற்படுத்துவது போலவே பேசுவார்கள் நாம் நல்லதையே நினைப்போம் நிலைமை விரைவில் சரியாகும் என்று நம்புவோம். இறைவனிடம் பிரார்த்தனையை செய்து கொண்டே மனதைரியத்தோடு இருப்போம் ஆதி.

    உங்களுக்கும் இணைய இதழுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைரியம் அவசியம் - அனைவருக்குமே! குறிப்பாக இந்த தீதுண்மி காலத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. அன்பு ஆதி, உவகளுக்கும் ஸஹானா இதழுக்கும் இனிய வாழத்துகள். மற்றவர்கள் வம்பு பேச்சை நம்பாதீர்கள்.எல்லாம் நல்லதுக்கே.
    ரோஷ்ணி தேர்வுகள் எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் வாங்குவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வம்பை நம்பாதே! அதே தான் வல்லிம்மா.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....