செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கதம்பம் – காவேரி அக்கா – நட்பு – ஓவியம் – மிஷன் மங்கள்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தினை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றியே! 


காவேரி அக்கா - 13 ஆகஸ்ட் 2020: 


எப்போதும் இஸ்திரி செய்ய கொடுப்பது அல்ல என்றாலும் என்றேனும் பக்கத்து ரோடில் இஸ்திரி செய்பவரிடம் கொடுப்பேன். அப்படி அறிமுகமானவர் தான் இந்த அக்கா. என்றாவது என் கணவரை சாலையில் பார்த்துவிட்டால் துணி இருக்கா அக்கா! என்று வந்துவிடுவார் :) அக்காவுக்கு சைஸ்வாரியாக குழந்தைகள் உள்ளனர். அதனால் என்னுடைய உடைகளும், எங்கள் மகளின் உடைகளும் அவரின் ஏதோ ஒரு மகளுக்கு சரியாக இருக்கும் என்று கேட்டு வாங்கிக் கொள்வார். 

இந்த கொரோனா காலத்தில் வெளியில் கொடுக்காமல் நானே தான் செய்து கொள்கிறேன் என்பதால் ஒருநாள் என்னிடம் "யாருமே இப்போ இஸ்திரிக்கு துணி கொடுக்க மாட்டேங்கறாங்க" சாப்பாட்டுக்கு காசு இல்ல. கடைசிப் பையனுக்கு பால் வாங்கக் கூட முடியல என்று புலம்பிக் கொண்டிருந்தார். என்னால் முடிந்த பணத்தை அவரிடம் தந்தேன். 

நேற்று வீட்டுக்கு வந்த அக்கா ஒரு தட்டில் கல்யாண பத்திரிக்கை வைத்து தந்தார். "சார் கிட்டயும் சொல்லுங்க! இது கொரோனா சமயம் என்கிறதால ஊரில தான் கல்யாணம்! மாப்பிள்ளை, பொண்ணு அழைப்பு கூட இல்ல என்றார். உடன் ஒரு பெண்ணும் குட்டிப் பையனும் வந்திருந்தனர். 

இந்தப் பொண்ணுக்கா கல்யாணம்? என்றேன். இது இரண்டாவது பொண்ணு! சீர்வரிசை வேணாம்னு கல்யாணம் பண்ணிகிட்டாங்க. பொழுதன்னிக்கும் புருஷன்காரன் குடிச்சுட்டு வந்து அடிச்சுட்டு இருந்தான். இந்த பையன் பொறந்ததும் வந்தவ தான்! எங்க கூட தான் இருக்கா! மூத்த பொண்ணுக்குத் தான் இப்போ கல்யாணம். நாத்தனார் பையனுக்கு தான் கொடுக்கறோம் என்றார். 

இருவீட்டு அழைப்பு என்று கொடுத்த அந்தப் பத்திரிக்கையில் மணமகன், மணமகள் உள்பட சொந்தங்கள் அனைவருமே பட்டதாரிகள். M.A, B.Ed, B.B.A, M.Phil, Phd முடித்தவர்கள் கூட உள்ளார்கள். 

அளவில்லாத குழந்தைகளும், குடிப்பழக்கமும் தான் இவர்களின் நிலைக்கு காரணமோ? 

இணைந்த நட்பு – 14 ஆகஸ்ட் 2020: 



ஆடியின் கடைசி வெள்ளியான இன்றும் வழக்கம் போல் செம்மண் படிக்கோலமும், முளைக்கீரை மசியலுடன் சென்றது. வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்குவதும், கீரை சமைப்பதும் நல்லது என்பார்கள். 

இணைந்த நட்புவட்டம்! 

என்னம்மா சமைச்சிருக்க? ஒரு கிண்ணத்தில் போட்டுக் குடு! என்று அடுக்களைக்கே உரிமையுடன் வந்து கேட்கும் நண்பர். 

‘இன்னிக்கு எங்க வீட்டுல ராத்திரிக்கு பூரியும், சப்ஜியும். நீங்க சீக்கிரம் சாப்பிடுவீங்களேன்னு சுடச்சுட உங்க இரண்டு பேருக்கும் கொண்டு வந்திருக்கேன்’ என்று கீழ் வீட்டுத் தோழி எடுத்து வருவார். 

உடம்பு சரியில்லையா! குழந்தைய நான் பாத்துக்கறேன்! ரெஸ்ட் எடு! 

இப்படி திருமணமாகி டெல்லி சென்ற நாள்முதலாக அறிமுகமான சில நெருங்கிய நட்புகள் சந்தர்ப்பம், சூழ்நிலை என ஆளுக்கொரு புறமாக பிரிந்து விட்டோம். 

உடன்பிறந்தவர்கள் போல ஒருவருக்கொருவர் தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், வாரஇறுதி நாட்களில் ஒன்றாக இணைந்து பூங்காக்களுக்கு சென்று அரட்டை அடிப்பதும், ஆளுக்கொரு உணவாக சமைத்து சாப்பிடுவதுமாக இனிமையாக சென்ற நாட்கள் அவை..மீண்டும் அந்நாட்கள் வரப் போவதில்லை என்றாலும் இன்றைய காலகட்டத்தில் வாட்ஸப் மூலம் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 

ரோஜா குல்கந்து! 



உடலுக்கு குளிர்ச்சி, வயிற்றுப்புண்களை ஆற்றும், கண்பார்வையை தெளிவடையச் செய்யும் என்று பல மருத்துவ குணங்களை கொண்டது ரோஜா குல்கந்து. இது பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை வீட்டிலேயும் தயாரிக்கலாம். பன்னீர் ரோஜா இதழ்களுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து அன்றாடம் கிளறி விட்டால் சில நாட்களில் தயாராகி விடும். 

சுதந்திர தினம் – ஓவியம் – ரோஷ்ணி கார்னர் – 15 ஆகஸ்ட் 2020: 



இந்த வருடம் சுதந்திர தினத்திற்காக மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு! 

பார்த்த திரைப்படம் - Mission Mangal – 16 ஆகஸ்ட் 2020: 



சென்ற ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியான இந்தத் திரைப்படம் ISROவில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் நடைமுறை வாழ்க்கையும், ஒரு செயற்கைகோள் உருவாக அவர்கள் செய்யும் தியாகத்தையும் எடுத்துச் சொல்லும் திரைப்படம். 

வித்யா பாலன், அக்ஷய் குமார், நித்யா மேனன் மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர். "மங்கள்யான்" உருவாக 17000 விஞ்ஞானிகளும், இஞ்சினியர்களும் பாடுபட்டுள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க ஒவ்வொருவரின் யுக்தியும் பயன்படுகிறது. 

பூரி பொரிக்கும் போது கேஸ் சிலிண்டர் தீர்ந்து போகப் போகிறது என்று தெரிய வருகிறது. அடுப்பை நிறுத்தி அந்த எண்ணெய் சூட்டிலேயே சில பூரிகளை பொரித்தெடுத்து, மீண்டும் சூடுபடுத்தி செய்ததில் அனைத்துமே பொரித்தெடுக்க முடிந்தது. பெண்களுக்கே உரித்தான இந்த சிக்கன நடவடிக்கையால் மங்கள்யானில் எரிபொருளை சேமிக்க யோசனை கிடைக்கிறது!! 

4 பில்லியன் தான் பட்ஜெட். அதற்குள் முடிக்க முடியுமா என்று மேலிடம் யோசிக்க, அசால்ட்டாக வித்யா பாலன் சந்த்ராயன் 2 பகுதிகளை இதில் உபயோகித்துக் கொள்ளலாமே சார்! என்று யோசனையைச் சொல்ல, அக்க்ஷய்குமார் " women sir " டின்னருக்கு செய்த மீதி உணவை காலை உணவுக்கு புதிதாக மாற்றித் தருபவர்கள் ஆச்சே! க்ரேட் என்று பாராட்டுகிறார்! 

இப்படி அந்த டீமில் உள்ள ஒவ்வொருவரும் பாடுபட்டு இறுதியில் மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் செல்கிறது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இந்தியில் இருந்தாலும் ஆங்கில சப் டைட்டிலுடன் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  

வாய்ப்புக் கிடைத்தால் Hotstar-இல் கண்டுகளிக்கலாம். 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


ஆதி வெங்கட்

32 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம்.


    காவேரி அக்காவை பேஸ்புக்கிலேயே படித்தேன்.

    ரோஷ்ணியின் ஓவியம் அருமை.  பாராட்டுகள்.

    என் அப்பாப்பாவின் நண்பர் ஒருவர் இருந்தார்.  கவிஞர் மா வரதராஜன் என்று பெயர்.  அவர் அடிக்கடி தன் நிறுவனத்தில் செய்த ரோஜா குல்கந்து கொண்டுவந்து கொடுத்தது நினைவுக்கு வருகிறது.

    படம்...   நன்றாயிருக்கும் என்று தெரிகிறது.  நேரம் கிடைத்தால் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      முகநூலில் வாசித்ததே இங்கேயும்.

      ஓவியம் - பாராட்டியமைக்கு நன்றி.

      குல்கந்து நினைவுகள் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இஸ்திரி அக்காவின் குடும்பம் மகிழ்ச்ஙியாக வாழட்டும்.

    ஓவியம் அருமை.

    திரைப்பட விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஸ்திரி அக்காவின் குடும்பம் - நல்லதே நடக்கட்டும் கில்லர்ஜி.

      ஓவியம் - நன்றி.

      திரைப்படம் - முடிந்த போது பாருங்கள். நானும் பார்க்க நினைத்திருக்கிறேன் - ஹிந்தியில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குல்கந்து செய்ய அடுப்பில் கிளற வேண்டாமா? அப்படிச் செய்துதான் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை குல்கந்து அடுப்பில் வைத்துக் கிளற மாட்டாங்க. வெயிலில் வைத்து வைத்து எடுப்பாங்க. என் மாமியார் செய்வாங்க அவங்ககிட்ட நான் கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட நார்த்தங்கா ஊறுகாய் போடறாப்ல ப்ராசஸ் ஆனா இது தேன் ப்ளஸ் கல்கண்டு/சர்க்கரை.

      கீதா

      நீக்கு
    2. அப்படியா கீதா ரங்கன்? என் நினைவில் பிசகிருக்கலாம். எங்க வீட்டில் என் அம்மா செய்திருக்கிறார் (நான் 5ம் வகுப்பு படிக்கும்போது... வேற ஒண்ணும் இல்லை. எங்க அப்பாவுக்கு ஸ்கூல்ல ரோஜா மாலை-ரொம்பப் பெரியது போட்டிருந்தாங்க ஹாஹா) அப்போல்லாம் ரோஸ் நிற ரோஜாக்கள். இப்போல்லாம் இந்த ஊர்ல வித வித ரோஜா மாதிரி இருக்கும் ரோஜாப்பூக்களைப் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. குல்கந்து - கீதாஜி சொன்னா சரியா இருக்கும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை மேடம்.
    இஸ்திரி அக்கா மகிழ்ச்சியாக வாழட்டும் என வாழ்த்துகிறோம்.
    திரைப்படத்தை விரைவில் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      இஸ்திரி அக்கா குடும்பம் - நல்லது நடந்தால் நன்று.

      திரைப்படம் - முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. குடிகாரர்கள் தானாக திருந்த வேண்டும்... ஆனால், வீட்டுப்பெண்கள் - தாய், மனைவி, சகோதரிகள் யாரேனும் ஆரம்பத்திலேயே திருத்த முயற்சித்திருந்தால், திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு...

    இன்றைய சூழலில் வாட்ஸப் தான், உறவுகளிடம் பரிமாற்றம்...

    ஓவியம் அருமை... மற்ற பகுதிகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிகாரர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு. வீட்டுப் பெண்கள் என்னதான் சொன்னாலும் கேட்காத சிலர் உண்டு!

      சூழல் - சரியாக வேண்டும்.

      ஓவியமும் மற்ற பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகம் மிக அருமை.

    காவேரி அக்காவைப் போன்ற பல பெண்களைப் பார்க்கிறேன் ஆதி. எபியில் இன்றைய கதை கூட குடியினால் கஷ்டப்படும் குடும்பம் பற்றியது. இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். பெண்களைப் படிக்க வைப்பது என்பது இப்படியான குடும்பங்களில் அரிதும் கூட.

    என் நட்பு வட்டமும் கொஞ்சம் பெரிதுதான். இப்போது எல்லாமே வாட்சப் தான் இணைக்கும் பாலமாகியிருக்கிறது.

    ரோஷினிக்கு வாழ்த்துகள். பாராட்டுகள். ஓவியம் நன்றாக இருக்கிறது.

    ஹை குல்கந்து! நான் என் மாமியாரிடம் கற்றுக் கொண்டேன் இது செய்வது பற்றி. செய்ததுண்டு.

    எல்லாமே அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      காவேரி அக்கா போல பலர் - உண்மை தான். எத்தனை எத்தனை குடும்பங்கள் பாழாய்ப்போன குடியால் பாழாய்ப் போகிறது!

      நட்பு வட்டம் - பெரியதாக இருப்பது நல்லதே - ஒன்றிரண்டு வருத்தங்கள் இருந்தாலும்.

      ஓவியம் - பாராட்டியதற்கு நன்றி கீதாஜி.

      குல்கந்து - ஆஹா மகிழ்ச்சி.

      பதிவின் பகுதிகள் அனைத்தும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதிவு பல ரசனைகளுடன் கூட் கீப் இட் அப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான தொகுப்பு!
    ஓவியம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      ஓவியம் - நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு ஆதி,
    அழகான பதிவு. முக நூல் பக்கம் அதிகம் போவதில்லை.
    அதனால் உங்கள் பதிவுகளையும் பார்க்கவில்லை.
    நல்ல வேளையாக இங்கே பார்க்க முடிந்தது.

    இஸ்திரி பெண்ணின் நிலைமை
    எல்லா ஊர்களிலும் இருக்கிறது.
    முதல் பெண்ணுக்குப் படித்த மாப்பிள்ளை அமைந்திருப்பது
    அருமை.
    இரண்டாவது மகளுக்கும் ஏதாவது வழி பிறக்கட்டும்.

    தில்லி நட்புகள் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியாக
    இருக்கிறது. நல்ல நட்புகளே மனதுக்கு மருந்து.
    ரோஷ்ணியின் ஓவியம் வெகு கச்சிதம்,.
    அருமையாக வரைந்திருக்கிறாள்.
    அன்பு ஆசிகள் மா.
    ரோஜா குல்கந்து என் தோழி செய்வாள்.
    எனக்கும் கொண்டுவந்து தருவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் வெளியிடுவது - அங்கே இல்லாதவர்களுக்காகவும், ஒரு சேமிப்பாகவும் இங்கேயும்! அதுவும் நல்லதே என்பது புரிகிறது.

      இஸ்திரி பெண் - பலருக்கும் இப்படியான சூழல் என்பது உண்மை வல்லிம்மா..

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. உங்கள் மகளின் ஓவியம் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

    எல்லாமே அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி துளசிதரன் ஜி.

      குடி குடியைக் கெடுக்கும் - உண்மை. பலமுறை கேட்டும் திருந்தாத பலர்! கொடுமை தான்.

      பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. படித்திருந்தும், போதையில் தள்ளாடும் குடும்பம் வேதனையே
    தங்கள் மகளின் ஓவியம் அருமை
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்திருந்தும் போதையில் தள்ளாடும் குடும்பம் - வேதனை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      ஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஓவியம் அருமை.
    நல்ல படம் பார்க்க எண்ணியிருந்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஐயா.

      படம் - முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ரோஷ்ணி ஓவியம் அருமை வாழ்த்துகள். இப்பொழுது படம் எப்பொழுதாவது பார்முப்பதாண்டு. குடும்ப கடமைகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

      படம் - முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. ரோஷ்னியின் ஓவியம் நாளுக்கேற்றதாகவும் அழகாகவும் இருக்கிறது.
    ஆதி மேடம், இங்கு சென்னையிலும் அம்மாதிரி நட்புக்களை நான் அதிர்ஷ்ட வசமாக கண்டு பிடித்து அவற்றில் திளைத்துக் கொண்டிருக்கின்றேன். அவைதான் நம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமா ஸ்ரீனிவாசன் மேடம்.

      நட்பு - நல்லது! எனக்கும் நிறைய நண்பர்கள் உண்டு. அவை எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....