செவ்வாய், 21 ஜூன், 2022

தெய்வம் தந்த பூவே! - சிறுகதை - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


HAPPINESS ISN’T ABOUT GETTING WHAT YOU WANT ALL THE TIME. IT’S ABOUT LOVING WHAT YOU HAVE AND BEING GRATEFUL FOR IT.


******


டொக்…டொக்…டொக்…!


டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!


டட்..டட்..டட்..டட்..!


வைதேகி உன் பிள்ளைய சித்த பாரேண்டி! 


சத்தம் போட்டுண்டே இருக்கான்! 


சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் கட்டய சாய்க்கலாம்னா முடியறதா இந்தாத்துல!! இவனோட ஒரே ரோதனையா போச்சு!


வைதேகியின் மாமியார் தான் புலம்பிக் கொண்டிருந்தார்.


இருங்கோம்மா! பார்க்கறேன்!


கிருஷ்ணா! அம்மாட்ட சித்த வாடா கண்ணா! அங்க என்ன பண்ணிண்டு இருக்க!


அம்மா…இந்த டப்பாவ ஒவ்வொரு இடத்துலயும் வெச்சு தட்டிப் பார்த்தேம்மா! சத்தம் வந்ததா ரொம்ப ஜாலியா இருந்தது..! 


உனக்கும் காட்டட்டுமா! டுர்..டுர்..டுர்..


நன்னா இருக்குடா கண்ணா! இப்ப போறும்! என்ன! பாட்டி தாச்சிண்டு தூங்கறா பாரு! 


நாம யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு அம்மா நோக்கு சொல்லியிருக்கனா??


ஆமாம்மா!


குட் பாய்! இப்ப நாமளும் கொஞ்சம் தாச்சிப்போமா? அம்மாக்கு காலெல்லாம் ரொம்ப  வலிக்கறதுடா!

 

அச்சச்சோ!! லிட்டில் கிருஷ்ணா! அம்மாக்கு காலெல்லாம் வலிக்கிறதாம்! இப்ப என்ன பண்ணலாம்?? என்ன பண்ணலாம்!!

 

கடவுளின் குழந்தையான இந்த கிருஷ்ணா லிட்டில் கிருஷ்ணாவிடம் யோசனை கேட்கிறான். வயது 10 ஆகிறது! 

 

வைதேகிக்கு இரு குழந்தைகள். முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் மகாலட்சுமியே பிறந்ததாக நினைத்து அந்த மொத்த குடும்பமும் கொண்டாடி அவளுக்கு ஸ்ரீப்ரியா என்று பேர் சூட்டி மகிழ்ந்தார்கள். அவளைக்  கொண்டாடினார்கள். அவள் வளர்ந்து இப்போது இறுதியாண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

ஸ்ரீப்ரியா பிறந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையில் வைதேகிக்கு ஒருமுறை  நாட்கள் தள்ளிப் போக,  'ஒருவேள நின்னு போயிடுத்து' போலருக்கு! என்று அலட்சியமாக இருந்து விட்டாள். 

 

கருவாக உருவானது. அதை  கலைப்பதற்கு ஏதேதோ மாத்திரைகளை வாங்கி விழுங்கினாள்! எதுவும் பலனளிக்க வில்லை! 

 

அழகு விக்கிரகமாக கிருஷ்ணாவும் பிறந்தான். அவன் வளர வளர தான் அவன் 'கடவுளின் குழந்தை' என்பது மெல்லப் புரிந்தது. கடந்து விட்டன பத்து வருடங்கள்.

அம்மா! லிட்டில் கிருஷ்ணா ஒண்ணும் சொல்லவே மாட்டேங்கிறாரே…!

 

நினைவுகளிலிருந்து விடுபட்ட வைதேகி  மகனிடம் பதில் சொன்னாள்.

 

லிட்டில் கிருஷ்ணா அம்மா காதில வந்து சொன்னாரே!

 

ஏன் என் காதில வந்து சொல்லல…!! என்று சத்தம் போட்டான்.

 

வைதேகி மகனை சமாதானப்படுத்தினாள். 

 

அவனும் விடாமல் 'என்ன தான் சொன்னார் லிட்டில் கிருஷ்ணா??' என்றான்.

 

இந்த கிருஷ்ணா இப்ப அம்மாட்ட வந்து தாச்சுண்டு தூங்கினான்னா அம்மா கால் வலியெல்லாம் காக்கா உஷ்னு காணாம போயிடுமாம். என்றாள்.

 

அப்படியா! நிஜம்மா!

 

அப்படித்தான் லிட்டில் கிருஷ்ணா என்கிட்ட சொன்னார்.

 

சரி! அப்ப நான் சமத்தா  தாச்சுக்கறேன்!

 

எங்க கிருஷ்ணா எப்பவுமே குட் பாய் தான் இல்லையா!

 

ஆமா! ஆமா!

 

தூங்கி எழுந்தா உனக்கு ரொம்ப பிடிக்குமே ஸ்வீட் பொங்கல் உம்மாச்சி கோவில் பிரசாதம் தரேன்

 

சரியா!

 

அம்மா பிரசாதம்னா என்னம்மா?

 

நீ தாண்டா கண்ணா!

 

நானா பிரசாதம்??

 

தெரியாதா நோக்கு!

 

ம்ம்ம்ஹூம்ம்ம்!

 

லிட்டில் கிருஷ்ணா எனக்கு குடுத்த பிரசாதம்!!

 

பெருமிதத்துடன் அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கினான் இந்த கிருஷ்ணா.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

13 கருத்துகள்:

  1. தலைப்புக்கேற்ற கதை நெகிழ்வா இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குழந்தையின் கேள்விகளும், அன்பு தாயின் பதிலுமாக அழகான அருமையான கதை . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்ச்சியான குருங்கதை.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் தளத்திற்கெல்லாம் வர இயல வில்லை.. வலது கையில் திடீரென வலி.. வேறு ஏதும் நினைக்க வேண்டாம்.. நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. ஆதி! கதை அருமை. மனதை நெகிழ்த்தியது. இப்படியான குழந்தைகளில் பல வகைகளையும் பார்த்து பழகி, Handle செய்த அனுபவம் கொஞ்சம் உண்டு. தலைப்பைப் பார்த்ததும் புரிந்துவிட்டது. நானும் இவர்களை விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரங்கள் என்றுதான் சொல்வேன். Star kids! எங்கள் குடும்பத்தில் உண்டு.

    பாராட்டுகள், வாழ்த்துகள் ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கலைப்பதற்குச் சாப்பிடும் மருந்துகளினால் கூட இப்படி ஆக வாய்ப்பு உண்டு. எங்க வீட்டிலேயே என் கடைசி மைத்துனரின் நோய் அதனால் தான் என மருத்துவர்கள் சொன்னார்கள். எங்க பெண்ணிற்கெல்லாம் முதல் குழந்தை பிறந்து 10 வருடங்கள் கழித்தே இரண்டாவது குழந்தை! நம்ம ஊர் மாதிரி அம்பேரிக்காவிலே இதை எல்லாம் வரவேற்கும் போக்குத் தான் என்பதால் பிரச்னை ஏதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கருத்துக் கொடுத்ததுமே காணாமல் போய் விட்டதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....