சனி, 2 ஜூலை, 2022

காஃபி வித் கிட்டு - 157 - CHசாக் பீஸ் - முதுமை - பதிவர் சந்திப்பு - சப்த Bபத்ரியும் பஞ்ச ப்ரயாகையும் - குழந்தையின் சிரிப்பு - அறிவும் அனுபவமும் - வீடு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Teachers can change lives with just the right mix of chalk and challenges - Joyce Meyer.


******


இந்த வாரத்தின் தகவல் - CHசாக் பீஸ் தயாரிப்பு : 

 




திருவரங்கத்தில் இருந்த போது ஒரு புதுமனை புகுவிழா அழைப்பிதழ் வந்தது.  கொள்ளிடக்கரை ஓரமாக இருக்கும் சாலையில் மனை வாங்கி வீடு கட்டி இருக்கிறார்கள் - வில்லா மாடல்! கீழே ஹால், கிச்சன் மற்றும் ஒரு கழிவறை, ஹாலிலிருந்து மேலே செல்ல படிக்கட்டு. அங்கே இரண்டு பெட் ரூம், ஒரு attached பாத்ரூம், பால்கனி அதற்கும் மேலே சென்றால் மொட்டை மாடி - அங்கிருந்து பார்த்தால் வறண்டு கிடக்கும் கொள்ளிடம் ஆறு.  கரைதொட்டு நீர் இருந்தால் அங்கிருந்து பார்க்க ஆனந்தமாக இருக்கும்.  புதுமனை புகுவிழா நடந்த வீட்டின் அருகே நானும் மனைவியுமாக ஒரு உலா வந்தோம்.  அங்கே ஒரு சிறு இடத்தில் மூன்று நான்கு பேர் எதையோ செய்து காயவைத்து கொண்டிருந்தார்கள் - என்னவென்று கேட்க, CHசாக் பீஸ் என்றார்கள்.  அதற்கான அச்சுகளில் ஜிப்ஸம் மற்றும் சில பொருட்கள் கலந்து தயாரித்த கெட்டியான திரவத்தினை ஊற்றி அழகாக CHசாக் பீஸ் தயாரித்து, சற்று நேரத்திற்குப் பிறகு கைகளில் எடுத்து ஒரு மரத்தினால் ஆன TRAY-வில் வைத்து வெளியே வெய்யிலில் காய வைக்கிறார்கள்.  பிறகு பெட்டிகளில் பேக்கிங் நடக்கும்.  பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பரபரவென்று கைகள் இயங்க, நூற்றுக்கணக்கில் CHசாக் பீஸ் தயாராகி விடுகிறது.  


கைகளுக்கு உறைகள் இன்றி பரபரப்பாக இயங்கும் அந்தப் பெரியவருக்கு, காய வைக்கும் பெண்மணிகளுக்கு நன்றி சொல்லி, சில படங்களை எடுத்துக் கொண்ட பின் அங்கிருந்து புறப்பட்டோம்.  சின்னச் சின்னதாய் ஏதோ ஒரு தொழில் செய்து உழைக்கும் அந்த உழைப்பாளிகளுக்கு ஒரு சல்யூட்!  


******


இந்த வாரத்தின் எண்ணங்கள்: முதுமை


திருவரங்கத்தில் இருந்த போது வீட்டில் இருக்கும் மூன்று பெரியவர்களின் நடவடிக்கைகள் பார்த்தபோது, என் முதுமை குறித்த எண்ணங்களும் மனதில் ஓடியது - அவர்கள் செய்வது எதெல்லாம் பிடிக்கவில்லை என்று இப்போது எனக்குத் தோன்றுகிறதோ, அதே செயல்களை என் முதுமையில் செய்வேனோ, எப்படி என் முதுமையில் நடந்து கொள்வேன் என்றெல்லாம் யோசனைகளை வந்தது.  அப்பா காலையில் சீக்கிரமாகவே எழுந்து விடுவார்.  சில நாட்கள் காலை ஐந்தரை மணிக்கு நான் நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கிட்டே வந்து எழுப்பி, “நான் பல் தேச்சுக்கட்டுமா? காப்பி போடறயா?” என்று கேட்பார்.  அதே மாலை நேரத்தில் அவராகவே சமையலறை சென்று டிகாக்ஷன் இல்லை எனில் கூட, தானாகவே டிகாக்ஷன் போட்டு, பால் காய்த்து, காஃபி போட்டுக் கொள்வார்.  என்ன, கிச்சன் மேடையில் ஆங்காங்கே சர்க்கரை சிந்தியிருக்கும், ஒன்றிரண்டு இடங்களில் டிகாக்ஷன் சிந்தி இருக்கும்! அதை பிறகு நானோ, பிறரோ சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.  :) தூக்கத்தில் எழுப்பினால் யாராக இருந்தாலும் கோபம் வரும் - ஆனால் அவர் செய்யும் இது போன்ற பல விஷயங்கள் தெரிந்ததால் இப்போதெல்லாம் எனக்கு கோபம் வருவதில்லை - மாற்றாக என் முதுமையில் நான் என்ன செய்வேன் என்ற எண்ணங்கள் வந்து விடுகிறது. 


******


பழைய நினைப்புடா பேராண்டி : திருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா…


2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - “திருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா…” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


சுஜாதா அவர்களை நேரில் பார்த்து பேச ஆசையிருந்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.  அவரது சகோதரரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தவுடன் நாங்கள் பேசுவதை விட அவர் சுஜாதா பற்றிய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதை கேட்பது நல்லது என அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே வந்தோம். மேற்கு சித்திரை வீதியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பேசிக்கொண்டே வந்தார். 


சில கதைகளை அவருடன் சேர்ந்து தானும் எழுதியது, சிறுவயதில் தங்கியிருந்த பாட்டி வீட்டினை திரும்ப வாங்க யோசித்தது, சுஜாதா அவர்கள் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆனாலும், அவரது எழுத்துகளுக்கு இருக்கும் ஈர்ப்பு என்றும் மறையாது, புதிது புதிதாய் வாசகர்கள் படிப்பது, என பலப் பல விஷயங்களை அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில் நிறைய விஷயங்கள் எங்களுக்குப் புதியவை. 

 

நிறைவாக, “நீங்க எதாவது எழுதறீங்களா?”ன்னு கேட்க, ரிஷபன் சார், நான், ஆதி ஆகிய மூவருமே வலைப்பூவில் எழுதுவது பற்றி சொன்னதோடு, ரிஷபன் சார் சிறுகதைகள் நிறைய புத்தகங்களில் வெளிவந்து கொண்டிருப்பதைப் பற்றியும் தெரிவித்தோம். ”நிறைய படிங்க, படிக்கப் படிக்கத்தான் எழுத்து கைகூடும்” என்று சொன்னதோடு, எங்களது வலைப்பூ முகவரிகளையும் கேட்டுக் கொண்டார். 

 

அவருடன் பேசியது ஏனோ வாத்தியார் சுஜாதா அவர்களிடம் பேசியது போலவே இருந்தது எனக்கு.  அவரது நடைப்பயிற்சியை அவர் தொடர, இந்த இனிய நினைவுகளோடு அவரிடம் விடைபெற்று வீடு  திரும்பும்போது நான் திரும்பிப் பார்க்க, பொறுமையாக அவர் நடந்து போனது, சுஜாதா அவர்களே நடந்து போவது மாதிரி தோன்றியது எனக்கு.

 

இனிமையான நினைவுகள்…  முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - நவீனம் :



முகநூலில் தொடரும் நண்பர் மோகன் அவர்கள் எழுதி வெளியிட்டிருந்த கவிதையும் அதற்கான படமும் மனதைத் தொட்டது. அந்தக் கவிதை இங்கே உங்கள் வாசிப்பிற்கு - அவருக்கு நன்றியுடன்…

 

நவீனம்


ராணியைப் பாம்பு 

கடித்து கடைவாயில் 

நுரை தள்ளியது.

அந்தப் பாம்பின் நீளத்தை

தன் கைகளால் 

பாவம் போட்டுக்

காட்டினார் தாத்தா.

கதை கேட்டுக்

கொண்டிருந்த

குழந்தைகளின் கண்களில்

பெரும் அச்சம் மூண்டதை

மங்கலான தெருவிளக்கின்

வெளிச்சத்திலும் 

காணமுடிந்தது.

அன்றைய இரவில், 

அநேகக் குழந்தைகளின் 

கனவில் பாம்பு வந்தது. 

சட்டையுரித்தது.

ஆனால், 

குழந்தைகள் தாத்தாவிடம் 

கதை கேட்ட காலத்தை 

சட்டையுரித்துவிட்டது நவீனம்.


  • மோகன்.


******


இந்த வாரத்தின் பயண ஆசை - சப்த Bபத்ரி மற்றும் பன்ச் ப்ரயாக்:


உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் சப்த Bபத்ரி (விஷால் Bபத்ரி எனப்படும் Bபத்ரிநாத், ஆதி Bபத்ரி, வ்ருதா Bபத்ரி, த்யான் Bபத்ரி, அர்த Bபத்ரி, Bபவிஷ்ய Bபத்ரி மற்றும் யோகத்யான் Bபத்ரி) மற்றும் பஞ்ச் ப்ரயாக் (தேவ ப்ரயாக், கர்ண ப்ரயாக், நந்த் பிரயாக், ருத்ர ப்ரயாக் மற்றும் விஷ்ணு ப்ரயாக்) செல்ல வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு.  சரியான பயணத் துணை மட்டும் அமைந்தால் அங்கே எல்லாம் சென்று வர வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கூட பஞ்ச் ப்ரயாக் செல்ல திட்டமிட்டாலும் கடைசி நேரத்தில் உடன் வருவதாக சொல்லி இருந்தவர்கள் வர இயலாமல் போக, எனது திட்டத்தினை கைவிட வேண்டிய நிர்பந்தம்.   


******


இந்த வாரத்தின் காணொளி - குழந்தையின் சிரிப்பு:


குழந்தைகளின் சிரிப்பு என்றைக்குமே ரசிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று.  இன்று ரசித்த காணொளியாக பகிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காணொளியில் குழந்தையின் சிரிப்பை நீங்களும் ரசிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம்- அறிவும் அனுபவமும் :




சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு நிழற்படம் - மூன்று படங்களை இணைத்து யாரோ உருவாக்கிய நிழற்படம்! நீங்களும் பாருங்களேன்.  


******


இந்த வாரத்தின் ரசித்த வாட்ஸப் நிலைத்தகவல் - வீடு :



சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு வாட்ஸப் நிலைத்தகவல். நீங்களும் பாருங்களேன். 


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…. 

10 கருத்துகள்:

  1. சுண்ணாம்புச் சூட்டில் காய்ந்து உழைக்கும் உழைப்பாளிகளுக்கு ஒரு சல்யூட்.

    முதுமை வரும்போது நான் எப்படி மாறுவேன் என்கிற இந்த எண்ணம் எனக்கும் வரும்!

    சுஜாதா சகோதரரோடு பேசியது இனிமை.  சந்திப்பு பற்றி நீங்கள் முழுவதும் சொலல்விளை என்று நான் அங்கு குறைப்பட்டிருக்கிறேன்!!
    அக்கவிதை ரசித்தேன்.  குழந்தை சிரிப்பு பார்த்திருக்கிறேன்.

    நிழற்படமும் நிலைத்தகவலையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. பஞ்ச ப்ரயாக் ஊர் பெயர்களை என் பிரயாணத்தில் படித்தேன். பஞ்ச பத்ரி... மீதி நான்கு எப்போதோ?

    பதிலளிநீக்கு
  3. எளிய மனிதர்கள் மனதை நெகிழ்விக்கிறார்கள். எப்படி சாக்பீஸ் செய்கிறார்கள் என்பதையே எழுதியிருக்கலாம். கால மாற்றம் தொழில்களை அழிக்கிறது

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே சுவாரஸ்யமான செய்திகள் ஜி

    பதிலளிநீக்கு
  5. வாட்ஸ்அப் தகவல் அருமை.

    முதுமை சிலரை காணும் போது எனக்கும் இந்த எண்ணம் வருவதுண்டு.

    கவிதை நிஜம். குழந்தையின் சிரிப்பு ஆகா!

    பயணங்கள் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
  6. சாக்பீஸ் - சிறு தொழில்கள் வளர வேண்டும் ஜி. இது வரை இத்தொழில் அழியாமல் இருப்பதே மகிழ்ச்சி. ஏனென்றால், தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால்...அத்தொழிலாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கூடவே வணக்கங்களும்.

    உங்கள் பயணங்கள் விரைவில் அமையவும் தொடரவும் வாழ்த்துகள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. முதுமை - பற்றி நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. என்னதான் நாம் முதுமையில் எப்படி இருக்க வேண்டும் என்று நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டாலும், அந்த நேரத்தில் நம் மனம்/மூளை எப்படி இயங்குகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஒரு சிலர் மிகப் பக்குவமாகக் கையாள்கிறார்கள். ஒரு சிலருக்கு மூளையின் இயக்கம் வேறு மாதிரி ஆகிறது...அவர்கள் அதுவரை மிகவும் பக்குவமாக இருந்திருந்தாலும்....நிறைய இருக்கு இதில் சிந்திக்கவும் பேசவும். என்றாலும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது என்றே தோன்றும்.

    குழந்தையின் சிரிப்பு மிகவும் ரசித்தேன் அதற்கு ஏற்றபடி செல்லம் விளையாட்டும் காட்டுகிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கவிதை ரசித்தேன். நிலைத்தகவல் - ரசித்தேன். House - Home என்று ஆங்கிலத்தில் சொல்வது போல -நான்கு சுவராக இருப்பது வீடு அதை அன்பு இல்லமாக - Home ஆக என்று சொல்வதுண்டு.

    பழைய நினைப்புடா - ஆஹா சுஜாதா அவர்களின் சகோதரரா. அப்பதிவை வாசிக்கிறேன் எனக்கும் சுஜாதா அவர்களைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தும் நிறைவேற்றிக் கொள்ளவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஜி, பழைய பதிவு ரசனை. சுஜாதா அவர்களின் சகோதரர் என்ன சொன்னார் என்பதையும் சொல்லியிருக்கலாமோ?

    இப்போதும் கூட அது நினைவில் இருந்தால் அதன் தொடர்ச்சியாகச் சொல்வது போலச் சொல்லலாமே. நேரம் இருந்தால்...

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....