செவ்வாய், 8 நவம்பர், 2016

மீண்டும் ஜகத்சிங்கட் -சேலா பாஸ் - மோமோஸ்….

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 65

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


ஜஸ்வந்த்கட் நினைவுச் சின்னம்...

நூராநங்க் அருவியும் தவாங்க் நதி பாயும் அழகையும் கண்டு ரசித்து, அந்தத் தனிமையையும், இயற்கை எழிலையும் விட்டு விலக மனமே இல்லாது அங்கிருந்து புறப்பட்டோம்.  புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஜஸ்வந்த்கட் நினைவுச்சின்னம் இருக்கும் இடத்திற்கு வந்து குளிருக்கு இதமாக ராணுவ வீரர்கள் அளித்த இலவசத் தேநீரை அருந்தி அவ்விடத்தில் சில நிமிடங்கள் இருந்து எங்கள் பயணத்தினைத் தொடங்கினோம்.  தவாங்க் செல்லும்போதே பார்த்த இடம் தான் என்றாலும் அங்கே நின்று சில நிமிடங்கள் இருந்த பிறகே நகர்ந்தோம். போகும்போது பார்த்த தெலுங்கு ராணுவ வீரரைப் பார்க்க முடியவில்லை.


சேலாபாஸ் அருகே நண்பர்களோடு...

தொடர்ந்து பயணித்து மீண்டும் சேலாபாஸ்.  இம்முறையும் சில நிமிடங்கள் அங்கே நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். குறிப்பாக சேலா பாஸ் அருகே இருக்கும் நுழைவாயில் பக்கத்தில் நின்று ஒரு புகைப்படம் நினைவுக்காக எடுத்துக் கொண்டோம். இனிய நினைவுகள் அல்லவா – வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமாவது இங்கே பயணிக்க முடிந்ததே – மீண்டும் மீண்டும் வருவது சாத்தியமில்லையே – என்ற எண்ணங்களோடு அந்தப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.


இரும்புப்பாலம்...

ராணுவ வீரர்களின் அயராத உழைப்பு – மலைப்பகுதிகளில் சாலைகள், இரும்புப் பாலங்கள் அமைப்பது என தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அதிலும் இந்தப் பாதைகள் நீண்ட நாட்கள் இருக்காது, இயற்கைச் சீற்றத்தினைத் தாங்கும் வலிமைக்கு இப்பாதைகளை அமைக்க முடியாத நிலை தெரிந்தும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.  இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு வலிமையான பாதைகள் அமைப்பது கடினம் என்பதையும் இங்கே சொல்லத் தான் வேண்டும். எங்கும் கமிஷன் என்பது நாம் எல்லோரும் அறிந்தது தானே.....


கரடு முரடான பாதை...

இப்படியாக காலையிலிருந்து சென்ற பாதையிலேயே மீண்டும் பயணித்து கரடு முரடான மலைப்பாதைகளில் சென்று கொண்டிருந்தால் பசி நிச்சயம் எடுக்கும் – அதுவும் சாப்பிட ஒன்றும் கிடைக்காது எனத் தெரிந்திருக்கும் போது பசி அதிகமாகத்தானே எடுக்கும்.  எங்களுக்கு அன்றும் பசி எடுத்தது.  செல்லும்போது சாப்பிட்ட அதே உணவகத்தின் அருகே வண்டியை நிறுத்தி மீண்டும் மோமோஸ் சாப்பிட்டோம். அந்தப் பயணத்திற்குப் பிறகு இது வரை மோமோஸ் சாப்பிடவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது – வேறு வழியில்லாமல் தான் மோமோஸ் சாப்பிட்டேன் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்!




வளைந்து நெளிந்து போகும் பாதை...

கரடு முரடான சாலை – அதுவும் மலைப்பகுதிகளில் இப்படி சாலைகள் அமைத்து இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. ஒரு இடத்தில் நின்று வளைந்து நெளிந்த சாலைகளை படம் எடுத்துக் கொண்ட்டோம்....  எத்தனை உழைப்பு... அதுவும் கடினமான உழைப்பு.... 


கடைக்கு முன் குழந்தைகள்...

அந்த மலைப்பகுதியில் இருக்கும் கடைகளின் வாயிலில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அதில் ஒரு சகோதர-சகோதரி கவனம் ஈர்த்தவர்கள்.  சகோதரன் தனது சகோதரியோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட அவர்களை எனது காமிராவில் புகைப்படம் எடுத்து, அவர்களுக்கும் காண்பிக்க, அவர்கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி.  படம் எடுத்தபோது சீரியஸாக இருந்த சிறுவன், படத்தினை காண்பித்தபோது சிரியஸாக இருந்தான்! அத்தனை மகிழ்ச்சி அவன் முகத்தில்....  அதை யாரும் புகைப்படமாக எடுக்கவில்லையே என்று தோன்றுகிறது இப்போது!  எல்லாவற்றையும் புகைப்படம் எடுக்க முடிந்தால் தானே!

உழைப்பாளிகள்...

அந்த மலைப்பகுதிகளில் இருக்கு வெகு சில குடும்பத்தினரும் கடுமையான உழைப்பாளிகள்.  பாதையில் வரும் போது மூன்று பெண்களை அதிகமான முதுகுச் சுமையோடு பார்க்க முடிந்தது. வீட்டுக்கு எரிபொருளாக மரங்களை வெட்டி விறகு சுமந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பெண்ணின் முதுகிலும் குறைந்தது 50 கிலோ விறகாவது இருக்கும். இதைச் சுமப்பது எத்தனை கடினமான விஷயம் – அதுவும் மலைப்பகுதிகளில் இப்படிச் சுமந்து மேடு பள்ளங்களில் நடப்பது என்பது இன்னும் கடினமான விஷயம். சுமையில்லாது நடக்கும்போதே மூச்சு வாங்குகிறது பலருக்கும்... இதில் இப்படிச் சுமையோடு நடப்பது எத்தனை கஷ்டம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இப்படத்தினை பதிவில் இணைத்துள்ளேன்.




மலைகளுக்கிடையே வர்ண ஜாலம் காட்டும் மாலைச் சூரியன்...

தொடர்ந்து பயணித்து மாலையில் வழியில் இருக்கும் Singchung அரசுத் துறையின் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  முன்னர் ஏற்பாடு செய்திருந்தது போகும் போது மட்டும் தான். ஆனால் ஹெலிகாப்டர் பயணம் தடைப்பட்ட உடனேயே இங்கே அலைபேசி மூலம் தகவல் தந்து வரும்போதும் எங்களுக்கு தங்குமிட வசதி வேண்டும் என்பதைச் சொல்லி விட்டோம்.  நல்ல வேளை இடம் இருந்தது. பயணக் களைப்பினைப் போக்க சுடுநீரில் ஒரு குளியல் போட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கப் போனோம்....  மற்ற நண்பர்கள் லவ்பானி, ரெக்ஸி/பிட்ஸி சுவைக்கத் துவங்கி இருந்தார்கள்......  அடுத்த நாள் காலையிலேயே புறப்பட வேண்டும் என்பதால் உறக்கத்தின் பிடியில் வீழ்ந்தோம். 

அடுத்த நாள் பயணம் அடுத்த பதிவில்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

26 கருத்துகள்:

  1. அழகிய படங்கள். சுவாரஸ்யமான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வளைந்து வளைந்து செல்லும் பாதையில் ஓர் பயணம்
    நிச்சயமாக மறக்க இயலாப் பயணம்தான் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. அவர்களின் வாழ்வு நிலையை நினைத்தாலே மனம் கனக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  5. வடமாநில யாத்திரையின் போது பெண்கள் முதுகில் அதிகபாரத்தை சுமந்து செல்வதை கண்டு வியப்பும், வருத்தமும் ஏற்பட்டது எனக்கும்.
    படங்களும், செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  6. //படத்தினை காண்பித்தபோது சிரியஸாக இருந்தான்! அத்தனை மகிழ்ச்சி அவன் முகத்தில்.... அதை யாரும் புகைப்படமாக எடுக்கவில்லையே என்று தோன்றுகிறது இப்போது! // கவிதை!! ரசித்தேன், புகைப்படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  7. வழக்கம்போல அருமையான புகைப்படங்களுடனான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.....

      நீக்கு
  8. சுவாரசியம் தான் பயணங்களும் அனுபவங்களும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....

      நீக்கு
  9. #மலைப்பகுதிகளில் சாலைகள், இரும்புப் பாலங்கள் அமைப்பது என தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.#
    நானும் ஒருமுறை நாதுலபாத் சென்ற போது இது போன்ற இராணுவ வீரர்களின் பணியைக் கண்டு அசந்து போனேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. தமிழில் எழுதும் பதிவர்களில் தனித்துவம் கொண்டவர் நீங்கள் என்பதை மீண்டும் உணர்ந்த பதிவு..

    தொடருங்கள் தோழர்..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  12. படங்கள் அருமை என்றால் அருமை. தகவல்களும்..வளைந்து நெளிந்து போகும் பாதை!!! என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. ராணுவவீரர்களுக்கு சல்யூட்!! அவர்களின் உழைப்பு பிரமிப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....