சனி, 10 நவம்பர், 2018

அவரைக் காணோம்பா…. – இரவு முழுவதும் பூத உடலுடன்…





”அவரைக் காணோம்பா….. காலைல போனது, ராத்திரி ஒன்பதாச்சு இன்னும் வீட்டுக்கு வரல!”



கல்யாணம் ஆன சில மாதங்களில் என் மாமனார் தொலைபேசியில் அழைத்தபோது இல்லத்தரசி சொன்னது தான் இந்த “அவரைக் காணோம்பா...” பதில்! அப்போதெல்லாம் வீட்டில் இருப்பதே ரொம்பக் குறைவு. அலுவலகம் செல்வது போக மீதி நேரங்களில் பொது வேலைகள் – கோவில், பகுதி மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பது, கோவிலுக்கான கலெக்‌ஷன் வேலைகள், என வெளியிலே இருந்த நேரம் தான் அதிகம். சனி, ஞாயிறுகளில் வீட்டில் இருந்த நேரம் ரொம்பவே குறைவு. காலை ஐந்து மணிக்கு எங்கள் பகுதி பிள்ளையார் கோவிலுக்குப் போனால் பதினோறு மணிக்குத் திரும்பல், திரும்பவும் மாலை நான்கு மணிக்குப் போனால், இரவு திரும்ப பத்தரை! ஞாயிறும் அதே போல தான்! பல நாட்கள் இப்படியே தான் இருந்திருக்கிறேன் – நேர்ந்து விட்ட மாடு போல!

நம் ஊரில் மாடுகளை நேர்ந்து விடுவார் பார்த்ததுண்டா? கோவிலுக்கென நேர்ந்து விட்டுவிடுவார்கள். ஊர் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கும், வேளா வேளைக்கு சாப்பிடும் இடம் வேறாக இருக்கும் – எந்த வீட்டின் மாடோ, அந்த வீட்டுக்கு எப்போது வரும் என்பது அந்த மாட்டிற்குக் கூட தெரியாது! கிராமம் முழுக்கச் சுற்றி வந்து கொண்டே இருக்கும் – அதே போல, ஒரு நேர்ந்து விட்ட மாடாகவே சுற்றி வந்திருக்கிறேன்.  Undertakers – இந்த ஆங்கில வார்த்தையைக் கேட்டிருக்கலாம் நீங்கள் – Cambridge Dictionary படி “a person whose job is to prepare dead bodies that are going to be buried or cremated (= burned) and to organize funerals” என்ற அர்த்தம் அந்த வார்த்தைக்கு. – பல வீடுகளில் என்னையும் என் போன்ற சில நண்பர்களையும் இந்த வேலை செய்பவர்களாகவே நினைத்தார்கள்!

மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்ல விஷயம் என்றாலும், ஒரு அளவுக்கு மேலே சென்றால் அது நல்லதல்ல. அப்படி ஒரு நாளில் தான் மேலே சொன்ன சம்பாஷணை நடந்தது. அன்றைய நாள் நன்கு நினைவிலிருக்கிறது. எங்கள் பகுதியில் இருந்த ஒருவர் மாலை நேரத்தில் இறந்து போனார் – மனைவி மற்றும் எட்டு-பத்து வயதில் ஒரு மகன். தகவல் வந்ததும் நானும் சில நண்பர்களும் சென்று ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உறவினர்கள், வெளியூரிலிருந்து வர வேண்டும் என்பதால் அடுத்த நாள் தான் காரியங்கள். அப்போதெல்லாம் ஆஸ்பத்திரிகளில் வைத்திருக்கலாம் – வீடுகளில் Freezer Box கொண்டு வந்து வைக்கும் பழக்கம் வரவில்லை. அதனால் எப்போதுமே “Bபர்ஃப் கி சில்லி” என அழைக்கப்படும் பெரிய ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மீது இறந்தவரின் உடலை வைப்பார்கள்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிக்கும்போது இரவு ஒன்பது மணி – ஒவ்வொருவராக வந்து பார்ப்பதும் வீடு திரும்புவதுமாக இருந்தார்கள். கடைசியாக பார்த்தால் அங்கே யாருமே இல்லை – இறந்தவரின் மனைவியும் மகனுமாக மட்டும் இருக்கும்படி விட்டு வர எங்களுக்கு மனதில்லை. நானும் நண்பர் குமாரும் அங்கே இருப்பதாக முடிவானது. அப்பகுதியில் இருந்த வேறு ஒரு பெண்மணியும் வீட்டின் வேறு அறை உள்ளே இறந்தவரின் மனைவி, மகனுடன் உறங்க, நானும் நண்பர் குமாரும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த அறையிலேயே அமர்ந்திருந்தோம். அவ்வப்போது ஊதுவத்தி ஏற்றி வைப்பதும், வைத்திருந்த விளக்கில் எண்ணை இருக்கிறதா என்று பார்ப்பதும், எங்களுக்குள் பேசிக் கொள்வதுமாக இருந்தோம். நடுவில் ஐஸ்கட்டி உருகிவிடும்போல இருக்க, இரவு ஒன்றரை மணிக்கு வெளியே சென்று பக்கத்தில் இருந்த ஒரு ஐஸ் ஃபேக்டரியிலிருந்து ஐஸ் கட்டிகள் வாங்கிக் கொண்டு வந்து உடலை அதன் மீது மாற்றினோம்.

காலை ஆறு மணி வரை இப்படியே அமர்ந்திருந்தோம் – உறங்கவில்லை. அதன் பிறகு வேறு இரண்டு நண்பர்கள் வர, நானும் நண்பர் குமாரும் அவரவர் வீட்டிற்கு வந்து குளித்து விட்டு காஃபி அருந்தி மீண்டும் சென்று விட்டோம். மாலை நான்கு மணிக்கு தான் தகனமானது அவரின் உடல். இறந்தவர் புகையிலையும் குட்காவும் போடுபவர் என்பதால் அவரின் ஓட்டுனர் கடைசி நேரத்தில் எங்கிருந்தோ அவற்றை, பெரிய பாக்கெட்டுகளில் வாங்கிக் கொண்டு வந்து பூத உடலுடன் சிதையில் வைத்தார். வீடு திரும்பிய பிறகு குளித்து கொஞ்சம் சாப்பிட்ட பிறகு அப்படி ஒரு உறக்கம் வந்தது. முதல் நாள் இரவு முழுவதும் நாங்கள் அங்கே உறங்காமல் இருக்க, இங்கே வீட்டிலோ இல்லத்தரசி பயத்தில் தூங்காமல் இருந்திருக்கிறார்.

பாவம் அவர்… மகள் இப்படிச் சொன்னதைக் கேட்ட போது அப்பாவிற்கு எப்படி இருந்திருக்கும்! கல்யாணம் ஆன புதிதில் இப்படி நிறையவே படுத்தி இருக்கிறேன் இல்லத்தரசியை! இரவு உறக்கத்தில் இருக்க, ஏதாவது அழைப்பு வந்தால், அவரிடம் கூட சொல்லாமல், வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று வந்தது கூட உண்டு! திடீரென எழுந்து என்னைக் காணாமல் தேடுவாளே என்று கூட அப்போது சிந்தித்ததில்லை! ஒரு முறை அப்படி வீட்டிலிருந்து விமான நிலையம் வரை சென்று மூன்று மணி நேரம் கழித்து திரும்பி, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து தூங்கியது உண்டு. காலையில் தான் இப்படி சென்று வந்ததைச் சொன்னேன் – நல்ல வேளை இல்லத்தரசி நடுவில் விழிக்கவில்லை! இப்போது நினைத்தால் எத்தனை முட்டாள் தனமான வேலை செய்திருக்கிறேன் எனத் தோன்றுகிறது!   

தில்லி வாழ்க்கையின் பல நாட்கள் இப்படியாக – வாழ்க்கைப் புத்தகத்தின் பல பக்கங்களைத் திரும்பிப் பார்க்கையில் இப்படி எல்லாம் இருந்திருக்கிறோமே என நினைக்கிறேன். நினைவலைகள் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. நினைவலைகள் நல்லதே அது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. நினைவலைகள் "இப்படியா" என்று வியக்க வைக்கிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... சில நினைவலைகள் வியக்க வைப்பவை தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. திகில் பட நாயகனாகி இருக்கின்றீர்கள் போலவே? உங்கள் வீட்டம்மாவின் மன நிலையை கேட்டு அதையும் பகிருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அவர்களிடம் எழுதி அனுப்பச் சொல்லி இருக்கிறேன். வந்ததும் தனிப் பகிர்வாக பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  4. அளவுக்கு மீறிய பொது சேவை குடும்பத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும் உண்மை. அப்போது அதைப் பற்றி கவலைப் படாமல் அதனையே தொடர்ந்து செய்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பது பின்னர் தான் தெரியவருகிறது. இது போன்று என் துறை சார்ந்த பொது பணிகளுக்காக பல ஆண்டுகளை வீணடித்த அனுபவம் எனக்கும் உண்டு. அதன் விளைவுகள் இன்றும் தொடர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது பணீகளுக்காக பல ஆண்டுகளை வீணடித்த அனுபவம் - ம்ம்ம்... உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  5. வெங்கட்ஜி உங்கள் செயல்கள் நல்லதே என்றாலும் ஆதிக்கு அப்ப மனசு திக் திக்கென்று இருந்திருக்கும். இப்படி எல்லாம் செய்தது நீங்கள் சொல்லியிருப்பது போல பின்னாளில் நினைத்துப் பார்க்கும் போது இப்படி எல்லாம் இருந்திருக்கோமேனு தோனும்தான்.

    எங்கள் வீட்டிலும் இப்போதும் சிலர் சொல்லாமல் வெளியில் சென்று வரும் வழக்கம் உண்டு....

    நீங்கள் சொல்லியிருப்பது போல் உதவுவது நல்லது என்றாலும் ஓரளவுக்கு மேல் கடினம்தான்...ஆதி இதைப் பற்றி அவரது கோணத்தில் எண்ணங்களை...பதிவு போட்டிருக்காரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இரவு வரை அவருக்குச் சொல்லவே இல்லை. இப்போது நினைத்தால் கஷ்டமாக இருந்தாலும், அன்றைக்கு தோன்றவே இல்லை....

      அவரது கோணத்தினை எழுதச் சொல்லி இருக்கிறேன். எழுதிய பிறகு தனிப் பதிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. பலருக்கும் காலம் கடந்த ஞானோதயம் தான்! இன்னும் சிலர் குடும்பத்துக்காக உழைப்பதில் கூடத்தன் மனைவி, குழந்தைகளும் அந்தக் குடும்பத்தில் சேர்த்தி என எண்ணமாட்டார்கள். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் கடந்த ஞானோதயம் - உண்மை. ஆனால் சில வருடங்களுக்கு முன்னதாகவே உணர்ந்துவிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. உங்கள் பொது சேவை பாராட்டபட வேண்டியதுதான், ஆனால் மனைவியை பயபடுத்தும் அளவு இருக்க கூடாது. பாவம் ஆதி மிகவும் பயந்து போய் இருப்பார். இப்போது போல் என்றால் மணிக்கு ஒரு தரம் அலை பேசியில் பேசலாம், செய்தி அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பயந்து தான் போய்விட்டார். கொஞ்சம் நாளில் பழகி விட்டது என்றாலும் இது சரியல்ல....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  8. கதை என்று நினைத்தேன், நிஜமா? சுவைபட ஏழுதியிருகிறீகள். உங்கள் மனைவிக்கு இப்போது பழகி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... பின்னர் பழகிவிட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி ஜி...

      நீக்கு
  9. நாம் செய்யும் பிற செயல்கள் நம் குடும்பத்தாருக்கே சிரமம் தருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே பல வருடங்களாகிறது. இதனை ஒத்துக்கொள்ளும் உங்களுடைய மனது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் செயல்கள் நம் குடும்பத்தாருக்கு சிரமம் தருகின்ற போது மாற்றிக் கொள்வது தான் நல்லது இல்லையா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. Venkat ji you are great. I know social work is important, but not at the cost of your own family !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....