திங்கள், 4 மார்ச், 2019

வழுக்கி விழுந்த கதை – சுதா த்வாரகநாதன்




இது நான் அல்ல! 
படம்: இணையத்திலிருந்து.... 


காலை நேர பரபரப்பு – கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்லும் வீடுகளில் காலை நேரம் ரொம்பவே பரபரப்பானது. குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி, வேலைக்கும் செல்ல வேண்டும் என்றால் ரொம்பவே பரபரப்பாக இருக்கும் வீடு. தினம் தினம் வீட்டு வேலைகள் மற்றும் சமையலை முடித்து, அலுவலகம் செல்வது கொஞ்சம் சிரமமான வேலை தானே. அப்படி ஒரு பரபரப்பான காலை – உணவுப் பை, அலுவலகத்திற்கான பை எல்லாம் ரெடி. இந்தச் சமயம் குளிர் வேறு என்பதால் குளிர்கால உடைகளை அணிந்து கொண்டு, கால்களில் சாக்ஸ், ஷூ மாட்டிக்கொண்டு, குளிருக்கு இதமான ஷாலை மேலே போர்த்திக் கொண்டு இரண்டு கைகளிலும் பைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு படிகளில் இறங்க ஆரம்பித்தேன். கணவர் அவரது உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு பின்னால் இறங்குவார். இது நித்தமும் நடக்கும் விஷயம் தான்.

அன்றைக்கும் அப்படியே நானும் மெதுவாய் படிகளில் இறங்க ஆரம்பித்தேன். எங்கள் வீடு இருப்பது இரண்டாவது மாடி. ஒரு மாடி இறங்கி விட்டேன். இரண்டாவதிலும் ஒரு சில படிகள் இறங்கி ஒரு திருப்பம். கடைசி சில படிகள் இறங்க வேண்டும். இரண்டு படிகள் இறங்கி இருப்பேன். முன்றாவதில் கால் வழுக்க, கண் இமைக்கும் நேரத்தில் படிகளில் உருண்டு “அம்மா” என்ற அலறலுடன் உருண்டு உருண்டு கீழே வந்து மண்டை தரையில் முட்ட விழுந்தேன். எத்தனை வயதானாலும், எதாவது பிரச்சனை என்றால் அம்மாவை தானே அழைப்பது இயல்பு! எங்கெங்கே அடிபட்டது எனத் தெரியாமல் தோள், முழங்கை, முழங்கால் என எல்லா இடத்திலும் வலி. என் சப்தம் கேட்டு கணவர் “சுதா, சுதா” என சப்தமாக அழைக்க, என்னிடமிருந்து முனகல் சப்தம் மட்டுமே!

மீண்டும் அழைத்தபடியே அவர் படிகளில் மின்னல் வேகத்தில் வந்து எழுப்பி, படிகளில் உட்கார வைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “எங்கே அடிபட்டது, எங்கே வலிக்கிறது” என்று கேட்ட போது, நான் தலையைக் காண்பித்தேன். அக்கறையுடன் தலையைத் தொட்டுத் தொட்டு, தடவிக் கொடுத்து மொத்தமாக தலையைக் கலைத்து விட்டார்! மயக்கம் வருகிறதா, வாந்தி வருகிறதா என்றெல்லாம் தொடர்ந்து கேள்விகள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனச் சொன்ன பிறகும் சரி வா, மாடிக்குச் சென்று வீட்டில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு அலுவலகம் செல்லலாம் எனக் கூற, திரும்பவும் இரண்டு மாடி ஏற எனக்குத் தெம்பில்லை! எங்கே அடி எங்கே வலி என்பதும் கூட முழுதாகத் தெரியாத நிலை. சரி மேலே படிகளில் ஏறிச் செல்வதை விட, கொஞ்சம் நடந்து காரில் ஏறிக் கொண்டு அலுவலகம் சென்று விடலாம் என சென்று விட்டேன்.

பத்து நிமிடங்களில் அலுவலகம் சென்று சேர்ந்து கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு எங்கெங்கே அடிபட்டிருக்கிறது எனப் பார்க்க ஆரம்பித்தேன். முழங்கையில் எரிச்சல் – ஸ்வெட்டரை விலக்கிப் பார்த்ததில் தோல் சிராய்த்திருந்தது. தலையில் அடிபட்ட இடத்தில் தடவிக் கொடுத்த பிறகும் புடைத்துக் கொண்டிருந்தது.  என் கோலத்தினைப் பார்த்து அலுவலகத்தில் விசாரிக்க விழுந்த கதையைச் சொன்னேன். அவரவர்களும் தங்களுக்குத் தெரிந்த வழுக்கி விழுந்த கதைகளைச் சொல்லி பயமுறுத்தினார்கள் – “நம்ம ஆஃபிஸரோட மனைவி கூட இரண்டு நாள் முன்னால வழுக்கி விழுந்துட்டார். படிகளில் உருண்டு விழுந்ததில் மூன்று இடத்தில் எலும்பு முறிவு, குதிகால் பகுதியில் எலும்பு வெளியே வந்து விட்டது” என்று ஒருவர் சொல்ல மற்றொருவர் அவருக்குத் தெரிந்த கதையைச் சொன்னார். எனக்கும் இப்படி சிலர் விழுந்து எழுந்த கதை நினைவுக்கு வந்தது.

கதைகள் சொல்லிக் கொண்டே சில குறிப்புகளும் சொல்ல ஆரம்பித்தனர்.  இந்த சீசனில் பசு மஞ்சள் காய்கறிக் கடைகளில் கிடைக்கும். அதை நசுக்கி பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, கொஞ்சம் ஆறியபின்னர், இளஞ்சூட்டில் ஒரு வாரம் சாப்பிட, உள் காயங்கள் ஏதும் இருந்தால் ஆறி விடும் என்ற குறிப்பும் ஒன்று! சின்னச் சின்ன காயங்கள் தவிர வேறு ஒன்றும் ஆகவில்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். காத்திருந்த வேலைகள் என்னைக் கவனியேன் என்று சொல்ல, அதில் மூழ்கினேன்.  மாலை நேரம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. வீடு திரும்பி, இரவு ஏகாந்த சேவைக்காக வழக்கம் போல வீட்டின் அருகே இருக்கும் TTD பாலாஜி மந்திர் சென்று அங்கே வந்திருந்த நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். தினம் தினம் இந்த கோவிலுக்குச் செல்வதும், நண்பர்களுடன் பேசி வீடு திரும்புவதும் வழக்கம்.

அன்று சென்றபோது வழுக்கி விழுந்த கதையைச் சொல்ல, மீண்டும் வழுக்கி விழுந்த கதைகள் சொல்ல ஆரம்பித்தார்கள்! இந்த மாதிரி யாரோ விழுந்து எலும்பு முறிவானது, உயிர் போனது, சித்தம் கலங்கியது என பலவித பாதிப்புகளை ஒவ்வொன்றாய் எடுத்து விட, நான் “எனக்கு எலும்பு முறிந்தாலோ, உயிர் போனோலோ கூட கவலை இல்லை. ஆனால் சித்தம் கலங்கினால் மட்டும் தாங்காது – அது மட்டும் ஆகாமல் இருக்க வேண்டும் எனச் சொல்ல” ஒரு புது விஷயம் கிடைக்க என்னை அனைவரும் கலாய்க்க ஆரம்பித்தார்கள். ஒருத்தர் மாட்டினால் போதும் இப்படி கலாய்ப்பது வழக்கம் தானே! எங்கள் குழுவிலும் இப்படி அடிக்கடி நடக்கும். ஒரு நண்பர், “இன்னைக்கு இவள் சற்று அதிகமாகவே சிரிக்கிறாள், எதற்கும் கொஞ்சம் ஒரு ஸ்கேன் பண்ணிடுங்க சார்” என்று சொல்ல ஒவ்வொருவராக, “எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க சார், நீங்க பாவம் சார்” என அவரைப் பார்த்து பரிதாப்பட்டார்கள்! விழுந்தது நான் என்றாலும் பரிதாபப் பட்டது அவரைப் பார்த்து!

இன்னும் ஒருவரோ, சுதா தலையில களிமண் நிறைய போல, அதனால் தான் நல்லவேளையா தப்பிச்சா என்று சொல்ல அனைவரும் – என்னையும் சேர்த்து தான் - சிரித்தோம். படிகள் இறங்கும்போது வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் எதற்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து விடுவது நல்லது என்றும் பேசிக் கொண்டே வீடு திரும்பினோம்.  இந்த வழுக்கி விழுந்த நிகழ்வினை படித்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் – தயவு செய்து படிகளில் இறங்கும்போது கவனமாக இருங்கள். கண்டிப்பாக மொபைல் பார்த்தபடியே படிகளில் இறங்காதீர்கள். யாருக்கும் அடிபடாமல் இருக்கட்டும். குழந்தைகள் யாராவது இப்படி விழுந்துவிட்டால் பசுமஞ்சள் அல்லது மஞ்சள் பொடி சேர்த்த பாலை இரவில் உறங்கும் முன்னர் கட்டாயம் பருக வைக்கவும். விழுந்த பின்னர் ஏற்பட்ட உள்காயங்களைப் போக்க இது உதவும். தேவையானால் மருத்துவரையும் கலந்து ஆலோசிப்பது நல்லது!

விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

சுதா த்வாரகநாதன்
புது தில்லி.

24 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். கீழே விழுந்து அடிப்பட்டதையும்.

    கூடவே ஒரு குறிப்பும் பால், மஞ்சள் உள்காயம் ஆறும் என்பது.

    நாம கீழ விழுந்தது சொன்னா ஆமா நிறைய பேர் ஒவ்வொரு கதை சொல்லும் போதும் கூடவே பயமும் அப்பிக் கொள்ளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயம் அப்பிக் கொள்ளும்! அதே அதே..... அடுத்தவர்கள் கதை சொல்லிச் சொல்லியே நம்மை பயமுறுத்தி விடுவார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. >>> படிகளில் இறங்கும்போது வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..<<<

    அதைப் போலவே படிகளில் ஏறும்போதும் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

    எல்லாருக்கும் இனிய பொழுதுகளே அமையட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். படிகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் ஜாக்கிரதையாகவே இருப்போம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    வழுக்கி விழுந்த கதை சிரிக்க வைத்தது. கூடவே மைக்கேல் மதனகாமரான்ஜ வசனமும் நினைவுக்கு வந்தது...

    "சோரி கேட்டேளா... நீங்கள் உங்கள் கஷ்டத்தைச் சொல்றேள்... நான் சிரிக்கறேன்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      சோரி கேட்டேளா! ஹாஹா.... மைக்கேல் மதன காமராஜன் வசனம் - குறிப்பாக காமேஸ்வரன் வசனங்கள் மறக்க முடியாதவை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இந்த மாதிரி சமயத்தில் பல மருத்துவர்களை கண்டு கொள்ளலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல மருத்துவர்கள் உதித்து விடுகிறார்கள்.... உண்மை தான். சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எனக்கும் கிடைத்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. கீசாக்கா கும்மோனத்தில் வழுக்கி விழுந்த கதைக்கு பதிலடியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கீசாக்காவைப்போல ஆரும் விழமாட்டினம்:).. அது ஸ்பெஷல் விழுகை எல்லோ:)..

      நீக்கு
    2. ஹாஹா.... அது வேறு இது வேறு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    3. அது ஸ்பெஷல்.... ஹாஹா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    4. அதிரடி உசுப்பேத்தி விடவே இங்கே வந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நேத்திக்கு ஒரு நாள் வர முடியலைன்னா இப்படியாப் போட்டு வாங்கறது? நானெல்லாம் விழாமல் இருந்தால் தான் பதிவுலகுக்கு ஆச்சரியம். விழுந்து விழுந்து எழுந்திருக்கிறவங்களோட எல்லாம் போட்டி போட முடியாது! :))))))))

      நீக்கு
    5. ஜேகே அண்ணா சொல்லி இருப்பது தப்பு, தவளை! கும்பகோணத்தில் வழுக்கி எல்லாம் விழலை. படி மிகவும் உயரமாக இருக்கவே மேலே காலை வைக்கும்போது சமாளிக்க முடியாமல் அப்படியே குடை சாய்ந்து விட்டேன். பின்னால் தள்ளி விட்டது. படி தாழ்வாக இருந்து ஈரமாகவும் இருந்திருந்தால் கூட கவனமாகப் போயிருப்பேன்.

      நீக்கு
    6. //விழுந்து விழுந்து எழுந்திருக்கிறவங்களோட எல்லாம் போட்டி போட முடியாது// ஹாஹா... அதானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    7. உயரமான படி - கொஞ்சம் கஷ்டம் தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. வழுக்கி விழுந்த கதை படிச்சு சிரிச்சதில் வழுக்கி விழுந்திட்டேன்ன்ன் இப்போ இன்சூரன்ஸ் கிளைம் பண்ணப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ளைம் கிடைத்தால் பாதி எனக்கு அனுப்பி வைக்கவும். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  8. குதிரை மேலே இருந்து கயிலையிலேயே விழுந்து எழுந்தவங்க நாங்க! எங்களோட போட்டி போடமுடியுமா என்ன? :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயிலையிலேயே விழுந்து எழுந்தவங்க.... ஹாஹா... உங்களது அந்த அனுபவத்தினை படித்தது நினைவில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. நானும் அடிக்கடி வீட்டுக்குள் வழுக்கி விழுந்து எழுவேன்.
    அதிராவும் எனக்கு சொன்னார் மஞ்சள் பால குடிக்கச் சொல்லி.
    கீழே விழுந்த போது கால பிரண்டு கொண்டதில் வலி , குத்தல் இருக்கிறது.
    மஞ்சள் பால குடிக்க வேண்டும் .
    உங்களின் குறிப்புகள் எல்லோருக்கும் அவசியம், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி வீட்டுக்குள் விழுவது! அடடா.... கவனமாக இருங்கள் கோமதிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....