வியாழன், 25 ஜூன், 2020

சாப்பிட வாங்க: ஓட்ஸ் Chசீலா


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை நல்லதொரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்….


உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தைகளில் மட்டும் எதையும் நினைப்பதில்லை…


*****

ஓட்ஸ் Chசீலா:


சாப்பிட வாங்க பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு! சரி இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற யோசனை ஒவ்வொருவருக்கும் வருவது.  பல வீடுகளில் “இன்னிக்கு என்ன சமைக்கலாம்?” என்ற கேள்வி கேட்காத பெண்கள் இல்லை! ஒரு ஆளுக்கு மட்டும் சமைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு, இந்தக் கேள்வி அதுவும் “கேள்வியும் நானே கேட்டு, பதிலையும் நானே சொல்லிக் கொள்ள வேண்டிய” அவசியம் இருக்கும்போது கேள்வி எழுப்புவதில் ஒரு பலனும் இல்லை!  அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதைச் சமைப்பது கொஞ்சம் சுலபம் என்றாலும், சமைத்த உணவை அந்த வேளையோடு தீர்ப்பது என்பது கடினம் – அதுவும் நீங்கள் ஒருவர் மட்டுமே வீட்டில் இருக்கையில்!  மீதமாகி விட்டால் அதனை சில வேளைகள் வரை வைப்பதோ, இல்லை பழேத்துப் பொட்டியில் வைத்து சில நாட்கள் வரை சாப்பிடுவதோ எனக்குப் பிடிப்பதில்லை.   எல்லா நாட்களிலும் இப்படி கொஞ்சமாக சமைப்பது கடினம் தான்.  அப்படி மீதம் வராத அளவு சமைக்க ஏதுவாக ஒரு ஃபடாஃபட் சமையல் குறிப்பினை இன்று பார்க்கலாம்.


சமீபத்தில் நண்பர் வீட்டிற்குச் சென்ற போது ”பெரிய தேன் பாட்டில் வாங்கினேன் – கூட இந்த ஓட்ஸ் பாக்கெட் இலவசமாகக் கொடுத்தார்கள். நான் ஓட்ஸ் பயன்படுத்துவதில்லை. நீ பயன்படுத்துவாயா?” என்று கேட்க, “சரி கொடுங்கள், பயன்படுத்திவிடலாம் – ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் உப்புமா” என நிறைய விஷயங்கள் செய்யலாம்! என்று வாங்கி வந்து விட்டேன்.  ஒரு நாள் உப்புமா செய்த பின்னரும் ஒரு கப் அளவு மீதி இருந்தது.  அதை வைத்து இன்று ஒரு சமையல்! காலை உணவாக….  வட இந்தியாவில் செய்யப்படும் ஒரு வகை உணவு Chசீலா. பொதுவாக பாசிப்பருப்பில் செய்வார்கள். சிலர் ஹிந்தி மொழியில் Bபேசன் எனப்படும் கடலை மாவில் செய்வார்கள்.  அந்த Chசீலாவை நாம் இன்று ஓட்ஸ் கொண்டு செய்யப் போகிறோம்.  வாருங்கள் ஓட்ஸ் Chசீலா செய்ய என்ன தேவை என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:

 

ஓட்ஸ் – ஒரு கப்

ரவை – இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்.

தயிர் – கால் கப்

மஞ்சள் பொடி – ¼ ஸ்பூன்

சீரகப் பொடி – ½ ஸ்பூன்.

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 3 (அ) 4

இஞ்சி விழுது – ½ ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

 

எப்படிச் செய்யணும் மாமு?

  • ஓட்ஸை வாசனை வரும் வரை கடாயில் வறுத்து, அது சூடு ஆறிய பிறகு,  மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து, கொடுத்திருக்கும் ரவை, தயிர், ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.  அடை வார்க்கும் பதத்திற்கு மாவு இருந்தால் நலம்.
  • பிறகு அதில் மஞ்சள் பொடி, ஜீரகப் பொடி, இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.  உங்களுக்குப் பிடித்தால் வெங்காயம் தக்காளிக்கு பதிலாகவோ, அல்லது கூடுதலாகவோ குடைமிளகாய்/துருவிய கேரட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்!
  • சூடான தோசைக் கல்லில் ஒன்றரை கரண்டி மாவு விட்டு பரத்திக் கொள்ளுங்கள்.  மேலே எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி விடுங்கள்.
  • ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போடுங்கள். தோசைக்கரண்டியால் மெதுவாக அழுத்தி வேக விடுங்கள்.
  • சூடாக எடுத்து, பச்சைச் சட்னியுடன்! (இப்பல்லாம் பச்சை சட்னி, வெள்ளைச் சட்னி, சிவப்புச் சட்னி என்று தானே குழந்தைகள் சொல்கிறார்கள்!) – அதாவது கொத்தமல்லி/புதினா சட்னியுடன் சாப்பிடுங்கள் – மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்! தப்பில்லை!

என்ன நண்பர்களே, இன்றைக்குச் சொன்ன இந்த குறிப்புகள் உங்களுக்கும் பிடித்திருந்ததா?  நீங்களும் சமைத்து ருசித்துப் பாருங்கள், உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்கள்.

நாளை வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


30 கருத்துகள்:

  1. நல்ல வாசகம். டிஷ் புதுசாக இருக்கிறது. செய்து பார்க்கலாம். எங்கள் வீட்டிலும் ஓட்ஸ் சும்மாவே கிடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      டிஷ் - செய்து பாருங்கள் ஸ்ரீராம். செய்வதும் சுலபம் தான்.

      நீக்கு
  2. தனிச் சமையல், தனி யோசனை, படிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தனிச் சமையல், தனி யோசனை// இதுவும் கடந்து போகும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. காலை வணக்கம் கஸ்தூரி ரெங்கன்.

      //நல்ல ரெசிப்பி// நன்றி!

      நீக்கு
  4. வாசகம் அருமை ஜி உலகப் பொதுமறையானது எல்லா மொழியினருக்கும் சாரும்.

    ஓட்ஸ் பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      ஓட்ஸ் - பார்த்தாலே போதும் எனச் சொல்கிறீர்களா? ஹாஹா.....

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. நரம்பில்லா நாக்கு எதை வேண்டுமானாலும் பேசும். ஆனால் சுவையை மட்டும் சுலபமாக கண்டு கொள்ளும். ரசித்தேன்.

    ஓட்ஸ் தோசை செய்முறை அருமை. விளக்கமாக சொல்லியுள்ளீர்கள். இங்கு முன்பெல்லாம் ஓட்ஸ வாங்கிக் கொண்டிருந்தோம். இப்போது கொஞ்ச நாட்களாக வாங்குவதில்லை. இனி வாங்கினால் இப்படிச் செய்து பார்க்கிறேன். படமும் பார்க்கும் போதே கண்கள் (அதன் மூலமாக நாவும்) சுவையை தெரிந்து கொள்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ஓட்ஸ் சீலா - செய்து பாருங்கள். உங்களுக்கும் பிடித்ததா என்பதைச் சொல்லுங்கள்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. வாசகம் செம. மிகவும் ரசித்தேன்!

    ச்சீலா செய்திருக்கேன்..கடலைமாவு, பாசிப்பருப்பு பயன்படுத்தி....ஓட்ஸ் ச்சீலா செய்ததில்லை. செய்ததில்லை. சூப்பரா இருக்கு ஜி.

    ஓட்ஸ் இதே பொருட்கள் போட்டு கஞ்சியாகச் செய்து குடிக்கும் பக்குவத்திலோ அல்லது பாரிட்ஜ் போலவோ செய்ய்யறேன். காலை உணவாகச் செய்வதுண்டு. ஓட்ஸ் தோசை போலவும் செய்வதுண்டு. அடை இப்படி எல்லாம்

    இது போல செய்யலை. செய்துவிடுகிறேன். அதுவும் ஹோல் ஓட்ஸ் இருக்கு. செய்துவிட்டுப் படம் எடுத்துப் போடுகிறேன் பதிவிலோ அல்லது எபி திங்க பதிவிலோ..

    மிக்க நன்றி வெங்கட்ஜி இந்த ரெசிப்பிக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      ச்சீலா - பொதுவாக வட இந்தியாவில் செய்யும் முறையில் நானும் செய்வதுண்டு. ஓட்ஸில் இது தான் முதல் முறை.

      ஓட்ஸ் கஞ்சி எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

      செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் கீதாஜி. எபி திங்க பதிவில் - :) மகிழ்ச்சி.

      நீக்கு
  8. தனியாக ஒரு ஆளுக்குச் செய்வது சிரமம் தான் ஜி. இங்கு இருவருக்குமே கூடப் பார்த்து பார்த்துதான் செய்ய வேண்டியிருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றிரண்டு பேருக்குச் சமையல் எனும்போது கொஞ்சம் கடினம் தான் கீதாஜி. பழகிவிட்டது என்றாலும்!

      நீக்கு
  9. மகனும் ச்சீலா செய்வான். அவனுக்கும் இதை அனுப்பிவிட்டேன் ஜி. ஈசியாக இருப்பதால் அவனும் ஒருவாகத்தானே செய்து கொள்கிறான். அத்னால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனுக்கும் அனுப்பி வைத்ததில் மகிழ்ச்சி. தனியாக இருப்பவர்களுக்கு உடனடியாக செய்து கொள்ள முடியும் என்பதும் ஒரு வசதி தான்.

      நன்றி கீதாஜி.

      நீக்கு
  10. செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். அது போன்று பயணப்பதிவு இல்லாத பொது இருக்கவே இருக்கிறது சமையல் பதிவு. பேசாமல் பேச்சிலர் சமையல் என்று தொடர் பதிவு துவக்கவும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேச்சிலர் சமையல் என்று தொடர் பதிவு துவக்கவும் - ஹாஹா.... முன்பும் சமைஅய்ல் பதிவுகள் எழுதியதுண்டு ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  11. ஓட்ஸ் Chசீலா - முதல்முறையாக கேள்வியே படாத ஒரு சமையல் குறிப்பு...

    வாழ்வில் கண்டு மகிழாத உங்களின் பயணம் போலவே இருக்கே ஜி... இருந்தாலும் செய்து பார்த்து விடுவோம்... ஏனெனில் தேவையான பொருட்கள் எல்லாம் (இப்போதைக்கு) இருக்கு... அதனால் நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கு - ஆஹா... சமைத்துச் சுவைத்துப் பார்த்துச் சொல்லுங்கள் தனபாலன்.

      நீக்கு
  12. கமலா சொன்னது போல் ஓட்ஸ் நம்ம ஊர் சீதோஷ்ணத்துக்கு ஒத்துக்காது எனப் பலரும் சொன்னதால் நிறுத்திட்டோம். ஆனால் ஓட்ஸில் இட்லி, தோசை, ஊத்தப்பம் எனச் செய்திருக்கேன். ச்சீலா செய்ததில்லை. இங்கே போணி ஆகுமானு தெரியலை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்ஸ் நம் ஊர் சீதோஷ்ணத்துக்கு ஒத்துக்காது - இருக்கலாம்! எப்போதாவது சாப்பிடலாம்... தொடர்ந்து நானும் பயன்படுத்துவதில்லை.

      //இங்கே போணி ஆகுமானு தெரியலை! ஹாஹா....

      நன்றி கீதாம்மா....

      நீக்கு
  13. Vasakam nice. I don't like oats with milk. I decided to do Oats chilla once a week. One more variety. Thanks for sharing.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி ஜி.

      பாலுடன் ஓட்ஸ் - எனக்கும் பிடிப்பதில்லை. சில சமயம் ஓட்ஸ் உப்புமா கூட செய்து பார்த்தேன் - அதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஓட்ஸ் சீலா பிடித்திருந்தது எனக்கு.

      நீக்கு
  14. வாசகம் அருமை.
    ஓட்ஸ் சீலா செய்து விடுகிறேன். ஓட்ஸ் கொஞ்சம் இருக்கிறது.
    முன்பு பயன்படுத்தினோம் அப்புறம் நமக்கு வேண்டாம் ஓட்ஸ் என்று எல்லோரும் சொல்லவே பயன்படுத்தவில்லை.
    படம் பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      ஓட்ஸ் சீலா - செய்து பார்த்துச் சொல்லுங்கள் அம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....