வியாழன், 20 ஜூன், 2024

வாசிப்பனுபவம் - உனக்கென மனக்கோயில் - வித்யா சுப்ரமணியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கங்கைக்கரை படகோட்டிகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



உனக்கென மனக்கோயில்!




சமீபத்தில் நான் கிண்டிலில் வாசித்த புத்தகம் தான் 'உனக்கென மனக்கோயில்'. நம்ம வித்யா சுப்ரமணியம் மேம் அவர்களின் அழுத்தமான எழுத்தில் நல்லதொரு குடும்பக் கதையாக இருந்தது! 


கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அரிதாக இன்னும் ஒரு சில குடும்பங்களில் கூட்டுக் குடும்ப அமைப்பு உயிர்ப்போடும் இருக்கின்றன! பொதுவாக குடும்பம் என்னும் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவது அன்பு, பாசம், அனுசரித்தல், விட்டுக் கொடுத்தல், தியாகங்கள் என்று சொல்லிச் செல்லலாம்!


அப்படிப்பட்ட ஒரு கூட்டுக் குடும்பமும் அதில் உலா வருகின்ற கதாப்பாத்திரங்களும் அவர்களின் உணர்வுகளும் தான் இங்கு கதை வாயிலாக விவரிக்கப்பட்டுள்ளது! அந்தக் குடும்பத்தின் அமைப்பை சிதைந்து விடாமல் காப்பாற்றத் துடிக்கும் நாயகியாக விசாலி இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளாள்! அவளின் தியாகத்துக்கும் இங்கு பரீட்சைகள் வைக்கப்படுகின்றன!


எல்லாமே இன்பமாக இருந்து விட்டால் திகட்டிப் போய்விடும் என்று சுவையைக் கூட்ட ஒரு சில கதாப்பாத்திரங்கள்! அவர்களின் எண்ணங்கள் எதிர்மறையாக பிரதிபலித்தாலும் அது நம்மை பதற வைத்தாலும் ஒரு கட்டத்தில் வாய்மையே வெல்லும் என்பது போல அவர்கள் மாற்றிக் கொள்ளவும் தான் நமக்கும் நிம்மதி கிடைக்கின்றது!


கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் சிறப்பம்சங்களைப் பற்றி என் சிறுவயதில் அத்தை வீட்டில் பார்த்திருக்கிறேன்! பந்தி பந்தியாக பரிமாறப்படும் உணவும், எந்தவொரு வித்தியாசமும் பார்க்காமல் அங்கு வளர்க்கப்படும் பிள்ளைகளும் அவர்களின் மனப்பாங்கும் என பார்த்து வியந்திருக்கிறேன்!


அன்பு தான் எல்லோரையும் எந்த காலத்திலும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும் என்பதும் இறைவனுக்கு முன்னால் எல்லோரும் சமம் என்பதும் இந்தக் கதையின் சாராம்சம்! எல்லோருக்கும் ஈடு கொடுத்து புன்னகை ஏந்திய முகத்துடன் வலம் வரும் விசாலி கதாப்பாத்திரம் மனதில் 'பச்சக்' என்று பதிந்து விட்டாள்!  


நல்லதொரு கதை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி! பாராட்டுகள் மேம்! 


இந்த நூலை நீங்கள் கிண்டில் மூலம் வாசிக்க விரும்பினால் கீழே உள்ள தளத்தின் வழி வாசிக்கலாம். 


Unakkena Manakoyil (Tamil Edition) eBook : Vidya Subramaniam: Amazon.in: Kindle Store


அமேசான் தளம் தவிர புஸ்தகா தளத்திலிருந்தும் இந்த மின்னூலை நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான சுட்டி கீழே!


Unakkena Manakoyil | Tamil | eBooks online | Vidya Subramaniam (pustaka.co.in)


*******


இன்றைய வாசிப்பனுபவம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

20 ஜூன் 24


10 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு.  கூட்டுக்குடும்ப வாழ்வு என்பதை போகப்போக நாம் வரலாற்றுப் பாடத்தில்தான் படித்து தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை வரலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களே சேர்ந்து வாழ நேரமும் காலமும் ஒத்து வராத நிலையில் கூட்டுக் குடும்பம் என்பது பாடத்தில் தான் படிக்க வேண்டியும் வரலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. எல்லாமே இன்பமாக இருந்து விட்டால் திகட்டிப் போய்விடும் என்று சுவையைக் கூட்ட ஒரு சில கதாப்பாத்திரங்கள்! //

    வாசித்ததை நன்றாக அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்.

    கூட்டுக் குடும்பத்தின் சிறப்பைச் சொன்னதும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடும் பள்ளங்களும் கொண்டது தானே வாழ்க்கை! எல்லோருமே பாசிட்டிவான மனிதர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  3. நானும் பெரிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள். இந்தக் கதை எப்படி இருக்கிறது என்று அறிய ஆவல். கூட்டுக் குடும்பத்தில் நன்மைகளும் உண்டு எதிர்மறைகளும் உண்டு. என் அனுபவத்தில் கண்டதால். கூட்டுக் குடும்பம் அதில் இளையவர்களைத் தூக்கி விடும் நிகழ்வுகளும் உண்டு ஆனால் அதே சமயம் அவர்களின் தனித்தன்மைகளும் திறமைகளும் மங்கிப் போவதும் நடக்கும். சகிப்புத் தன்மை மிக மிக முக்கியம். என்றாலும் நல்லதொரு ஜாலியான, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஊக்கப்படுத்தும் கூட்டுக் குடும்பம் கிடைக்கப்பெற்றால் சொர்கம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு!

    feeling old is optional - ஹாஹாஹா அதானே!!! நமக்கு வயசாகிடுச்சு??!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! சகிப்புத்தன்மை நிச்சயம் தேவை கூட்டுக் குடும்பத்தில்..! நல்லதும் உண்டு! கெட்டதும் உண்டு!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி!

      நீக்கு
  4. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கதை விமர்சனம் நன்றாக உள்ளது. கதாசிரியருக்கு வாழ்த்துகள் விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிக்க வேண்டிய நூல் தான்! சில கதாப்பாத்திரங்கள் தாக்கத்தையும் ஏற்படுத்தும்! வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....