ஆகஸ்ட் – 15: இந்தியா சுதந்திர நாடாகி 63 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதம மந்திரி செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றி வைத்து ஆற்றுகின்ற உரை முக்கியமானது. பெரும்பாலான சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ”அப்பாடா ஒரு நாள் விடுமுறை கிடைத்தது” என்ற சந்தோஷம் தரக்கூடிய நாள்.
இப்படிக் கொண்டாடப்படும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நாம் எல்லோரும் நேரடியாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ பார்த்திருக்கிறோம். ஆனால் தில்லி மக்களுக்கு சுதந்திர தினம் என்றாலே உடன் நினைவுக்கு வருவது நீலவானில் பறக்கவிடும் பட்டங்கள் தான்.
பலவிதமான வண்ணங்களிலும், அளவுகளிலும் கலை நுணுக்கங்களோடு கூடிய பட்டங்களை சுதந்திர தினம் அன்று பறக்க விடுவது தில்லி மக்களுக்கு வாடிக்கை. ஐந்து ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டங்கள் [ஹிந்தி மொழியில் “பதங்”] கூட இங்கே கிடைக்கும்.
மாஞ்சா போட்ட நூல், அதை சுற்றி வைக்கும் “சக்ரி”, கை நிறைய பட்டங்கள் என தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கோ, பெரிய மைதானத்திற்கோ வந்து நாள் முழுவதும் பட்டம் விட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவார்கள். ”டீல் தே யார், டீல் தேதே…” [இன்னும் நூலை விடு], ”காட் லே” [அறுத்து விடு] போன்ற கூச்சல்களுடன், மற்றவரின் பட்டத்தை அறுத்து விடும்போது ஒரு வாக்கியம் சொல்லி தன்னுடைய சந்தோஷத்தினை தெரியப்படுத்துவார்கள்.
உடனே அது என்ன வாக்கியம்னு கேட்டா, நான் இப்ப சொல்ல மாட்டேன். கடைசில சொல்றேனே ----- ஏன்னா, என்னடா இது அசிங்கமா எழுதி இருக்கான்னு நீங்க நினைச்சுடக்கூடாது பாருங்க!
எப்பவுமே நம்ம மக்கள் கிட்ட ஒரு குணம் – நாம நல்லா இருக்கோமோ இல்லையோ, அடுத்தவனுக்கு ஏதாவது கெட்டது நடந்தா அப்படி ஒரு சந்தோஷம்! – அடுத்தவனோட பட்டம் அறுபட்ட உடனே அப்படி ஒரு சந்தோஷத்தோட குதிச்சு குதிச்சு, கத்திக்கிட்டே ஆடுவான். அடடா நீங்க அதைப் பார்க்கணுமே!
இப்படி இவங்க சந்தோஷமா குதிச்சு அடுத்தவங்க பட்டத்தை அறுக்கிறதுலயும் ஒரு சின்ன லாபம் இருக்கு – அப்படி கீழே வர பட்டங்களை, அது கூட வாங்க முடியாத ஏழைக் குழந்தைகள் எடுத்து வைச்சு, அறுந்த நூலை ஒண்ணா சேர்த்து பட்டம் விட ஏதுவாக இருக்குது இல்லையா!
தில்லி மக்களுக்கு எந்த ஒரு பண்டிகையுமே ஆர்பாட்டம் இல்லாம கொண்டாடத் தெரியாது – எல்லாத்துக்கும் ஒரு டண்டணக்கா பாட்டு வேணும். அதுமாதிரி பாட்டு போட்டு, இப்படி நாள் பூரா பட்டம் விட்டு, முடிவுல சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டுதான் சுதந்திர தினத்தை கொண்டாடுவாங்க.
சரி.. சரி… அடுத்தவங்க பட்டம் அறுந்துச்சுன்னா என்ன வார்த்தை சொல்லுவாங்கன்னு சொல்லலையேன்னுதானே கேட்கறீங்க? அடுத்தவங்க பட்டம் அறுந்த உடனே எல்லோருமா சேர்ந்து “ஆய் போ!” [AI BHO] அப்படின்னு சந்தோஷமா கத்துவாங்க!
டிஸ்கி: சுதந்திர தினம் அன்று போட்டிருக்க வேண்டிய பதிவு! தாமதமாக போடுவதற்கு நீங்கள் கொடுக்காமல் நானாகவே எடுத்துக் கொண்ட சுதந்திரமே காரணம். ஹீ....ஹீ...ஹீ!!!



