சனி, 9 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – பங்களா ஸ்வீட்ஸ் – மீட்டா பான் – இருமல் பாட்டி



காஃபி வித் கிட்டு – பகுதி – 23


ராஜா காது கழுதைக் காது – மகளிர் தினம் ஸ்பெஷல்

நேற்று இரவு ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். சமைப்பதற்கு ஏனோ சோம்பேறித்தனம். அதன் கூடவே வரிசையாக அலைபேசியில் அழைப்புகள். வயிறு வேறு என்னை உடனே கவனி என்று சொல்லிக் கொண்டிருந்தது. சமையல் செய்து சாப்பிட வேண்டும் என்றால் குறைந்தது முக்கால் மணி நேரமாவது ஆகும். அதற்கெல்லாம் பொறுமை இல்லை என்று வயிறு கூவியது. சரி இன்றைக்கு வெளியே சாப்பிடலாம் என வீட்டின் அருகே இருக்கும் பங்க்ளா ஸ்வீட்ஸ் சென்றேன். ஸ்பெஷல் மீல்ஸ் சொல்லி சில நிமிடங்கள் காத்திருக்க அடுத்த டேபிளில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் – நண்பர்களாக இருக்க வேண்டும் – அவர்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது கூடுதல் தகவல்! தலைநகரில் இருக்கும்போது “யாருக்குப் புரியப் போகுது?” என தமிழில் சப்தமாகப் பேசுவது பல தமிழர்களின் பழக்கம். அவர்களும் அப்படியே!

ராஜ் கச்சோடி, தஹி Bபல்லே என உள்ளே தள்ளிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென அந்தப் பெண்களுக்கு நினைவு வந்து விட்டது – மகளிர் தினம் என்பது! உடனே அந்த ஆணிடம் “நீ தான் எங்களுக்கு இன்றைக்கு ட்ரீட் தர வேண்டும்!” அதற்கு அந்த ஆண் – “இது உங்களுக்கான தினம்… அதனால நீங்க தான் ட்ரீட் தரணும்!” இப்படியே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க, பணம் கொடுக்க வேண்டிய நேரம் வந்தது – அந்த ஆண் 205 ரூபாய் வந்த பில்லிற்கு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுக்க, சில்லறையாக இல்லையா? என்று சிப்பந்தி கேட்ட போது இது தான் இருக்கிறது என்று சொல்லி விட்டார். வேறு வழியில்லை என்று அந்தப் பெண்களில் ஒருவர் தான் சரியாக 205 ரூபாய் கொடுத்து வெளியேறினார்! – நோ டிப்ஸ்!  

நான் எனது உணவைச் சாப்பிட்டு அப்படியே பொடி நடையாக நடந்து வீட்டிற்கு வந்தேன் – வரும் வழியில் ஒரு மீட்டா பானும் உள்ளே போனது! சில வருடங்களுக்குப் பிறகு மீட்டா பான் – மிகப் பெரிதாக வாயைத் திறந்து உள்ளே அனுப்ப வேண்டியிருந்தது! மாடு அசை போடுவது போல அசை போட்ட படியே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்! ஏனோ சாப்பிட்ட திருப்தி இல்லை! நாமே சமைத்து சாப்பிடுவதில் இருக்கும் திருப்தி இந்த ஹோட்டல் உணவில் இல்லை! இன்னும் சில மாதங்களுக்கு எப்படியும் இந்த அனுபவம் ஒரு தடுப்பாக இருக்கும்!  

படித்ததில் பிடித்தது:

"டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க" படபடப்புடன் ஃபோன் செய்தான், கௌதம்.

"ஏன்? என்னாச்சு?" என்று கேள்வி கேட்ட டாக்டரிடம், "தெரியல டாக்டர்.
திடீர்னு மயக்கமாயிட்டாங்க" என்று படபடப்புடன் சொன்னான்.

"சரி. நான் ஆம்புலன்ஸ அனுப்பறேன். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் டாக்டர்.

இவன் கலக்கத்துடனும், படபடப்புடனும் மயங்கிக் கிடந்த மனைவி ப்ரியாவையும், பக்கத்தில் கிடந்த மொபைலையும் பார்த்தான். வேக வேகமாக அதை எடுத்து ஒளித்து வைத்து விட்டான்.

ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்தது.

அது வந்தவுடன்தான், பக்கத்து வீட்டிற்கெல்லாம் தெரியவந்தது.

எல்லோரும் என்னவென்று கேட்க, அனைவரிடமும், "தெரியவில்லை" என்றே சொன்னான்.

"ப்ரியாவின் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டீங்களா, கௌதம்" பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.

"இல்லை. .... சொல்ல வேண்டாம்" என்று அவசர அவசரமாகச் சொல்லி விட்டு, ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

சந்தேகம் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், ப்ரியாவின் பெற்றோருக்குத் தகவல் சொன்னார்.

சந்தேகம் கொண்ட பெற்றோர், இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் சொந்தக்காரரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்கள்.

டாக்டரிடம் என்ன என்று கேட்டார்கள்.

"ரொம்ப மிஸ்ட்ரியா இருக்கு. என்ன ஏதுன்னு கேட்டா, தெரியல, தெரியலனே சொல்லிட்டு இருக்கார், உங்க மாப்பிள்ளை."

பெற்றோர் இன்ஸ்பெக்டரைப் பார்த்தனர். அர்த்தம் புரிந்து கொண்ட இனஸ்பெக்டர், கௌதமின் தோளில் கை போட்டபடி "கேண்டீன் போலாமா?" என்று கேட்டபடி கௌதமைத் தள்ளிக் கொண்டு போனார்.

ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து, அவனுக்கு ஒன்று கொடுத்து நிலைமையை சகஜமாக்கினார்.

"என்ன ஆச்சு, கௌதம்"

மெல்ல தன் பாக்கெட்டில் இருந்து ப்ரியாவுடைய மொபைலை எடுத்துக் கொடுத்தான்.

கேலரியைத் திறந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்.

"நான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன் சார்...... மேக்கப் போடாம செல்ஃபி எடுத்துப் பார்க்காதேன்னு.... கேட்டாளா... எடுத்துப் பார்த்தா. மயங்கிட்டா.."

இப்ப close up வேற virala போகுது...

இருமல் பாட்டி – பேருந்துப் பயணத்தில்:

சமீபத்திய தமிழகப் பயணத்தில் நெய்வேலி நோக்கி, பேருந்தில் பயணித்த போது, முன் பக்க படிக்கட்டுகளை ஒட்டி இருந்த இருக்கையில் ஒரு மூதாட்டி ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தார். அதற்கு அடுத்த பின் சீட் என்னுடையது. காலை நேரம் என்பதால் சில்லென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. மூதாட்டி அவ்வப்போது இருமலில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தாலும் அந்த இடத்தினை விட்டு அகலாமல் சில்லென்ற காற்றை அனுபவித்துக் கொண்டு வந்தார். ரொம்பவே இருமல் தொல்லை தர, கொஞ்சம் தண்ணீர் குடித்தார். “காத்து அடிக்குதே, வேணும்னா மாற்றி உட்கார்ந்துக்கோங்க, சீட்டு தான் காலியாக இருக்கே?” என்று நான் கேட்க, “இப்படி ஜில்லுன்னு காத்து வாங்கிட்டே போறது தான் எனக்குப் பிடிக்கும்! இருமல் பாட்டுக்கு இருமல்!” என்று சொல்லி அங்கே இருந்து அகலாமல் இருந்தார். பெரம்பலூர் பேருந்தி நிலையத்தில் பேருந்து நின்ற போது, பேருந்தினை விட்டு இறங்காமலே, அங்கே இருந்த கடையிலிருந்து வடை, சமோசா, காஃபி என உள்ளே தள்ளினார்! பேருந்து மீண்டும் புறப்பட, அவரது இருமலும் தொடர்ந்தது!

இந்த வாரத்தின் நிழற்படம்:



சமீபத்தில் எடுத்த ஒரு படம். இந்த நிழற்படம் பற்றிய உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்களேன்.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட்ஜி!

    பங்களா ஸ்வீட்ஸ் என்றதும் ஏதோ புதி ரெசிப்பி என்று நினைத்தால் உணவகம். //தலைநகரில் இருக்கும்போது “யாருக்குப் புரியப் போகுது?” என தமிழில் சப்தமாகப் பேசுவது பல தமிழர்களின் பழக்கம். //

    இதுதான் வினையே! ஹா ஹா ஹா ஹ

    //ஏனோ சாப்பிட்ட திருப்தி இல்லை! நாமே சமைத்து சாப்பிடுவதில் இருக்கும் திருப்தி இந்த ஹோட்டல் உணவில் இல்லை! //

    ஆமாம்....ஜி...அதுவும் இப்போதெல்லாம் வெளியில் உணவு அத்தனை திருப்தியாகவும் இல்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      நாங்கள் கூட பல சமயம் இப்படி சத்தமாகப் பேசி மாட்டிக் கொண்டிருக்கிறோம் - தில்லி வந்த புதிதில்!

      வெளியே சாப்பிடும் உணவு திருப்தி தருவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. படித்ததில் பிடித்தது...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... சிரிச்சு முடில..வெங்கட்ஜி! ரசித்தேன்

    நிழற்படம் ரொம்ப நல்லாருக்கு ...டக்கென்று பார்க்க.அகோரி போலவும் இருக்கே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பிடித்ததால் தான் இங்கே பகிர்ந்து கொண்டேன். இரண்டு நாட்கள் முன்னர் பாலாஜி கோவில் சென்ற போது அங்கே ஒரு பெண் பல முக சேஷ்டைகளோடு படம் எடுத்துக் கொண்டிருந்தார். “பார்த்தும்மா, மூஞ்சி சுளுக்கிக்கப் போகுது!” என்று சொல்லலாம் என வாய் வரைக்கும் வந்த சொற்களை கடிவாளம் போட்டு இழுத்து நிறுத்தினேன்! ஹாஹா....

      நிழற்படம் - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. மகளிர் தினம் என்றால் மகளிர்தான் பார்ட்டி கொடுக்கவேண்டும் என்றால் ?

    முதியோர் தினத்துக்கு யார் பா(ர்)ட்டி வைப்பது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதியோர் தினத்திற்கு யார் பா(ர்)ட்டி வைப்பது? ஹாஹா... நல்ல கேள்வி! எதற்கெடுத்தாலும் பார்ட்டி தான் இங்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங் கிட்டு!

    பெரிய நோட்டை வைத்துக்கொண்டு தப்பிப்பது சில பேருக்கு வாடிக்கை. சில இடங்களில் செல்லுபடியாகாது! ஆம், வீட்டில் சாப்பிடுவது போலாகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய நோட்டு - என் நண்பர்களில் சிலர் வேண்டுமென்றே பெரிய நோட்டை எடுத்து, மற்றவர்களை செலவழிக்க வைப்பவர்கள்! :) ஹாஹா....

      வீட்டில் சாப்பிடுவது போல ஆகாது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படித்ததில் பிடித்தது - ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அவள் பெற்றோருக்கு புதுமையாக அறிவிக்கிறார் என்று எதிர்பார்த்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரியா கர்ப்பம்! :) இப்படியும் யூகிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நெய்வேலிப்பாட்டி - வாழ்க்கை வாழ்வதற்கே! ரசனையான பாட்டி.

    நிழற்படம் - "பொய்முகங்கள்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய்முகங்கள்

      இதை வாபஸ் வாங்கி "மறைமுகம்" என்று மாற்றிக்கொள்கிறேன்!

      நீக்கு
    2. ரசனையான பாட்டி! உண்மை. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சிந்தனை இருந்து விட்டால் போதும் - எல்லாம் நன்மையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. பொய்முகங்கள், மறைமுகம் - இரண்டுமே நன்றாகத் தான் இருக்கிறது!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. செல்பி கதை ரசிக்கவும் மற்றும் சிந்திக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நானும் பெயரை பார்த்ததும் ஏதோ புது வகை இனிப்பு என்றுதான் நினைத்தேன். பங்களா உணவகம் பெயருக்கு ஏற்றபடி சிறப்பான உணவை தரவில்லை போலும்.! என்ன இருந்தாலும் வீட்டு சாப்பாட்டின் ருசி வராது.

    உணவக உரையாடல் சுவாரஸ்யம் என்றால்,
    படித்ததில் பிடித்தது கடைசி வரை சுவாரஸ்யம். ஹா. ஹா. வாய் விட்டு சிரித்தேன்.

    வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையுடன் இருமல் பாட்டி போல் நிறைய பேர் உள்ளார்கள். (நாமும் சில சமயம் அதற்கு விதி விலக்கல்ல..)

    எங்கும் இருக்கும் இயல்பான முகம் தவிர்த்து வேறு முகங்கள் ரசிக்க தகுந்தவையாக இருக்கிறது. நிழல்படத்தை நானும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுச் சாப்பாட்டின் ருசியில் அன்பும் கலந்து இருக்கிறதே! [நானே சமைத்து சாப்பிடுவதாக இருந்தாலும்!]

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. இந்த மாதிரி எதாவது நடக்கும்ன்னுதான் நான் செல்ப்பியையே எடுக்குறதில்லை..

    அந்த தமிழ் இளைஞர் திட்டமிட்டேதான் 2000ரூபாய் தாளை கொடுத்தாரோ என்னமோ!!

    மீட்டா பான்.. வாய்க்கொள்ளாமல் பீடாவை போட்டு பொது இடத்தில் சங்கடப்பட்டிருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீட்டா பான் - இங்கே கிடைப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் - நம் ஊரில் கிடைப்பதை விட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  11. மேக்கப் போடாம செல்ஃபி ஹா... ஹா...

    மேக்கப் போட்ட வெள்ளை முகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இரண்டக்குமான தொடர்பு.... தானாக அமைந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. உண்மைதான். ஓட்டல் சாப்பாடு என்பதன் பொருளே தனி. சமைத்துச் சாப்பிட்டால் இருக்கும் ருசி அளவிடற்கரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமைத்துச் சாப்பிட்டால் இருக்கும் ருசி.... ஹோட்டல் உணவில் எங்கே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. வீட்டில் ஒரு தயிர் சாதம்,மாவடு ஊறுகாய், அல்லது நார்த்தங்காய் ஊறுகாயுடன் முடித்து இருக்கலாம் என்று சில நேஅர்ம் தோன்றும் தான். எங்களுக்கே இப்படி அனுப்பு என்றால் உங்களுக்கு வெயிலில் சமைத்து சாப்பிட்டு என்று அலுப்பு வரும்தான்.

    படித்ததில் பிடித்தது நன்றாக இருக்கிறது.

    //சந்தேகம் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், ப்ரியாவின் பெற்றோருக்குத் தகவல் சொன்னார்.//

    நேற்று நடந்த நிலவரம் பயத்தை ஏற்படுத்துகிறது. யாரை நம்புவது என்று இருக்கிறது.
    இறந்த பெண் தினம் உணவளிக்கும் நாயும் அவள் கொடுத்த உப்புமா சாப்பிட்டு துடிதுடித்து மரணம் ஆகிவிட்டது.

    வேஷதாரிகள் அலையும் உலகம் என்று சொல்லும் முகம் கடைசி படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர் சாதம் மாவடு - ஆல் டைம் ஃபெவரைட்....

      உப்புமா.... கொடுமை!

      வேஷதாரிகள் அலையும் உலகம்! முகமூடிகள் அணிந்தே அலைகிறார்கள் பலரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. எனக்கு நிறைய தடவை, வெறும் தயிர்சாதமோ இல்லை மோர் சாதமோ பண்ணிச் சாப்பிட்டாலே போதும்னு தோணும். ஹோட்டல்னா ஸ்டாண்டார்டு உணவு. அது சரி... என்ன சாப்பிட்டீர்கள் என்று சொல்லலையே... பங்களா ஸ்வீட்ஸ்ஜுக்கு 4 பிராஞ்ச் இருக்கு. நீங்க எந்த இடத்துல இருக்கீங்கன்னு இன்னும் ஆராய்ச்சி பண்ணணும்..ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பங்க்ளா ஸ்வீட்ஸ் - இந்தப் பொதுப் பெயரில் நிறைய இடங்களில் கடைகள் உண்டு - ஒன்றுக்கொன்று பெரிதாக சம்பந்தம் இல்லை! எல்லாமே ஃப்ரான்சைஸ் தான். பெயரைப் பயன்படுத்திக் கொள்ள ரைட்ஸ் அவ்வளவு தான்.

      நான் சாப்பிட்டது கோல் மார்க்கெட் பகுதியில்.

      தயிர் சாதம் வித் ஊறுகாய் அல்லது மாவடு! அமிர்தம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. பங்களா ஸ்வீட்ஸ்னு சொன்னதும் நாக்கைத் தீட்டிக் கொண்டு ஸ்வீட்டாக எதிர்பார்த்தேன். போகட்டும் போங்க! அந்தக் குழுவில் 2000 ரூபாயை அந்தப் பெண் வாங்கிக் கொண்டு சில்லறையைப் பின்னர் உணவு பரிமாறியவரிடம் கொடுத்திருக்கணும். நானாக இருந்தால் அந்த 2000 ரூபாயைக் கொடுனு கேட்டு வாங்கிட்டு உணவுக்குப் பணம் அளித்ததும் மிச்சத்தைக் கொடுத்திருப்பேன். நான் தான் அங்கே இல்லையே! ஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... ஸ்வீட்ஸ் தானே கொடுத்தால் போயிற்று!

      2000 ரூபாயை வாங்கிக் கொண்டு சில்லறை பிறகு கொடுத்திருக்கலாம்! அதானே... அந்தப் பெண் உங்களைப் போல அனுபவம் இல்லாதவள் அல்லவா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. மிக்க நன்றி கீசா மேடம்... உங்களுடன் ஹோட்டலுக்கு வரும்போது இதனை நான் முயற்சித்துப் பார்க்கமாட்டேன். (ஒருவேளை, இப்போ எங்கிட்ட 2000க்கு சில்லறை இல்லை.. வீட்டுக்குப் போய்த் தர்றேன்னு சொல்லி, என்னோட 2000ஐத் திரும்ப வாங்க நிறைய தடவை என்னை நடக்கவைத்துவிடுவீர்கள் என்று சந்தேகம் வந்துவிட்டது. அதுக்கு சாப்பிட்டதுக்கு பில்லையே கொடுத்துவிடலாம்.

      நீக்கு
    3. ஹாஹா.... எதுக்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான்!

      தங்களது மீள் வருகைக்குப் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    4. ஹாஹா, நெல்லை, அந்த பயம் இருக்கட்டும். ஆனால் அந்த 2000 ரூபாயை நான் வாங்கிக் கொண்டு பில்லுக்கான பணம் போக மிச்சத்தை உங்களிடம் கொடுத்திருப்பேன், அந்த இடத்திலேயே! போகட்டும், அந்தப் பெண் தமிழ் தானே, இதைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளட்டும்! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    5. அந்த பயம் இருக்கட்டும்.... ஹாஹா... ஏற்கனவே பயம் தான்! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா!

      நீக்கு
  16. எனக்கும் அந்த நெய்வேலிப்பாட்டி மாதிரி பேருந்துப் பயணங்களில் ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டு காற்றை அனுபவித்துக் கொண்டே, "ஜில்லென்று காற்று வந்ததோ! நில்லென்று கேட்டுக் கொண்டதோ!" என்று பாடிக்கொண்டே (மனசுக்குள் தான். அப்புறமா மத்தவங்க பயந்துக்குவாங்க இல்ல!) போகத் தான் பிடிக்கும். அப்படித் தான் பல பயணங்களும் செய்திருக்கேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜன்னலோரப் பயணம் என்றைக்கும் இனிமையானது தான். எனக்கும் ஜன்னலோரப் பயணம் பிடிக்கும்.

      மத்தவங்க பயந்துடுவாங்க! :)))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. நிழல் படம் சிவராத்திரிக்கு நடைப்பயணம் செல்லும் "போல் பம்!" "பம் போல்" சந்நியாசி மாதிரி இல்லைனா சூரிய கிரஹணத்தன்று பாம்பை எடுத்துக் கொண்டு "அலேக் நிரஞ்சன்" என வீட்டு வாசலில் வந்து பிக்ஷை கேட்டு வாங்கிச் செல்லும் சந்நியாசி மாதிரி என நினைத்தேன். இவரும் கொஞ்சம் கொஞ்சம் அந்த சந்நியாசிகள் போலத் தான் இருக்கார்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பம் போல் சந்நியாசி - இந்த மனிதர படம் எடுக்கப் பட்ட இடம் ப்ராய்க்ராஜ் என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இலாஹாபாத் - இந்த வருட கும்ப மேளாவிற்குப் போன போது எடுத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....