திங்கள், 16 மார்ச், 2020

அந்தமானின் அழகு – இரவு உணவும் நகர் வலமும்

அந்தமானின் அழகு – பகுதி 7



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு பயணம் பற்றிய சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

ஒவ்வொருவரின் பயணமும் ஒவ்வொரு பாதையைத் தேடி… உனக்கான பாதையை கால்களைக் கொண்டு உருவாக்காதே… உனக்கான கொள்கைகளைக் கொண்டு உருவாக்கு.




எங்கள் பயணத்தின் முதல் நாளில் கிடைத்த அனுபவங்களை சென்ற பகுதிகளில் சொல்லிச் சென்றது உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். முதல் நாள் தலைநகர் தில்லியிலிருந்து புறப்பட்டு, போர்ட் Bப்ளேயர் வந்து சேர்ந்த விவரங்கள், முதல் நாளில் பார்த்த காலாபானி சிறைச்சாலை மற்றும் கார்பின்’ஸ் கோவ் கடற்கரை அன அனைத்தும் பார்த்து விட்டோம். மாலை ஒலிஒளி காட்சி பார்த்த பிறகு தங்குமிடம் திரும்பினோம். சற்று நேர ஓய்விற்குப் பிறகு இரவு உணவுக்காக குழுவினர் அனைவருமாக தங்குமிடத்தில் அதற்காக இருந்த உணவகத்திற்குச் சென்றோம். நாங்கள் பயணத்தினை திட்டமிட்டபோதே  திரு சுமந்த் அவர்களிடம் காலை மற்றும் இரவு உணவும் பயண ஏற்பாடுகளில் சேர்த்து விடச் சொல்லி இருந்தோம். பொதுவாக இந்த மாதிரி பயண ஏற்பாட்டாளர்கள்/தங்குமிடங்களில் காலை உணவு மட்டுமே சேர்த்திருப்பார்கள். எங்களுக்கு காலை உணவு மட்டுமல்லாது இரவு உணவும் சேர்க்கச் சொல்லி இருந்தோம். அதனால் தங்குமிடமான கவிதா ரீஜெண்ட்-இன் உணவகத்தில் எடுத்தூண் (நன்றி வே. நடனசபாபதி ஐயா) அதாவது Buffet முறையில் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள்.



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித மெனு – சூப் (வடிசாறு!), அப்பளம், சலாட் (இதற்கு தமிழ் வார்த்தை என்னவோ?), சப்பாத்தி, தால், சப்ஜி (ஒவ்வொரு நாளும் வேறு வேறு காய்கறியில்), சாதம், ஊறுகாய் கடைசியில் இனிப்பு வகையில் ஏதோ ஒன்று! Simple and delicious! ரொம்ப அதிகமான வகைகள் இல்லாமல் இருந்தாலும் நன்றாகவே சமைத்திருந்தார்கள் தங்குமிடச் சிப்பந்திகள்.  எங்கள் குழுவினரே பதினெட்டு பேர் என்பதால் எங்கள் குழு சாப்பிடுவதற்கே நேரம் ஆனது. அது தவிர குழுவாக இருக்கும்போது நிறைய விஷங்களை பேசிக் கொண்டே உண்பதால் நேரம் அதிகமாகுமே. அதுவும் எங்கள் குழுவினர் அனைவருமே சில வருடங்களாக பழகியவர்கள் என்பதால் குழுவில் உள்ள அனைவருமே ஒரு குடும்பம் போலவே தான் இருந்தோம்.  ஒருவரையொருவர் கிண்டல் அடித்துக் கொள்வதும், அரட்டை அடிப்பதும் தொடர்ந்து நடக்கும் விஷயம். அதனால் நேரம் ஆவதே தெரியாமல் இருக்கும். தங்குமிடத்தில் இருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளும் வந்து சாப்பிட ஆரம்பிக்க எங்கள் குழுவினர் உண்டு முடித்து அங்கிருந்து அவரவர் அறைக்குத் திரும்பினோம். 



என்னதான் அன்றைக்கு முழுவதும் சுற்றி இருந்தாலும், இரவு உணவுக்குப் பிறகும், இம்மாதிரி பயணங்களில் தங்கும் நகரில் இரவு உணவுக்குப் பிறகு வெளியே சுற்றி வருவது எனது வழக்கங்களில் ஒன்று – காலாற, இலக்கற்ற ஒரு நடை. அப்படியே பல விஷயங்களைக் கவனிப்பது எனக்குப் பிடித்த விஷயம்.  போர்ட் Bப்ளேயர் நகரிலும் அன்றைய நாளில் நடந்த விஷயங்களைப் பற்றி யோசித்தபடியே நடக்க அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தேன். கூடவே குழுவில் இருந்த சில நண்பர்களும் வர நகர்வலம் வந்தோம்.  நகரம் என்னதான் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருந்தாலும், இங்கே பெரும்பாலும் சீக்கிரமாகவே கடைகளை அடைத்து விடுகிறார்கள். மக்கள் நடமாட்டமும் வெகுவாகக் குறைந்து விடுகிறது. பெரும்பாலான கடைகள் தமிழர்கள் நடத்துகிறார்கள். சின்னஞ்சிறு கடைகள் முதல், பெரிய கடைகள் வரை, நடைபாதைக் கடைகள் என அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.  போலவே நகரில் தமிழ் மக்கள் ஏற்படுத்திய கோவில்கள் நிறையவே உண்டு – ஐய்யனார் கோவில் கூட ஒன்று இங்கே உண்டு!  



நகர்வலத்தின் போது பார்த்த தமிழ் பதாகைகள், கடைகளில் எழுதி இருந்த தமிழ் பெயர்கள் என படித்துக் கொண்டே செல்கையில் சட்டென்று நின்று பார்க்க வைத்த ஒரு பெயர் – “கட்டபொம்மன்” – இந்தப் பெயரில் ஒரு சிறு உணவகம் இங்கே நடத்துகிறார்கள்.  இட்லி, தோசை, வடை, தேநீர் என சிற்றுண்டி வகைகள் இங்கே கிடைக்கின்றன.  இட்லி, வடை, தேநீர் என எது சாப்பிட்டாலும் பத்து ரூபாய் மட்டும் – ஒரு வடை பத்து ரூபாய், ஒரு இட்லி பத்து ரூபாய், தேநீர் பத்து ரூபாய்!  தேநீர், காஃபி என எதுவாக இருந்தாலும் கறந்த பாலில் கிடைக்காது – எல்லாம் பால் பொடி தான்! தீவிற்குள் மாடுகள் இருந்தாலும், அவர்களது வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே அந்தப் பால் பயன்படுத்துகிறார்கள். உணவகங்கள், டீக் கடைகளில் பயன்படுவது அனைத்தும் பொடி தான்!  பொடியாக இருந்தாலும், தாராளமாகச் சேர்ப்பதால் சுவை நன்றாகவே இருக்கிறது. அதனால் இன்னுமொரு உணவகங்களில் விஷயமும் கிடைப்பதில்லை – இங்கே சாதாரணமாக தயிர் கிடைப்பது இல்லை.



அதே போல போர்ட் Bப்ளேயர் நகரின் அபர்தீன் மார்க்கெட் பகுதியில் பெயர் பலகை பார்த்து நின்ற இடம் போலீஸ் டெம்பிள்!  காவல்துறை உங்கள் நண்பன் என்று பதாகை பார்த்திருக்கும் நாம் காவல்துறை கோவில் பார்த்ததுண்டா? அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட் Bப்ளேயரில் அப்படிப் பார்க்கலாம்!  போலீஸ் கோவில் மட்டுமல்ல, போலீஸ் குருத்வாரா, போலீஸ் மஸ்ஜீத் கூட இங்கே உண்டு.  காவல்துறை நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் வழி இம்மாதிரி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கி இருக்கிறார்கள். குழுவில் அனைத்து மதத்தினரும் உண்டு.  பெயரும் இப்படி போலீஸ் அடைமொழியோடு இருப்பதை வேறு எந்த நகரிலும் நான் பார்த்ததில்லை. அப்படி இருப்பதாகத் தெரியவும் இல்லை. இந்த மூன்று வழிபாட்டுத் தலங்களும் அடுத்தடுத்து இருப்பதும் நல்ல விஷயம்.  அவரவர் வழியில் அவரவர் சென்றால் எந்தத் தடங்கலும் இல்லை! ஒருவரை ஒருவர் மதிப்பதால் கிடைக்கும் மன நிம்மதி என்ன என்பதை புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ? 



அப்படியே இன்னும் நடக்க, அபர்தீன் மார்க்கெட் பகுதியில் இருக்கும் இன்னுமொரு புராதன விஷயம் அங்கே இருக்கும் மணிக்கூண்டு. முதலாவது உலகப் போரில் அந்தமான் தீவுகளை காப்பாற்ற போரில் ஈடுபட்ட போர்வீரர்களின் நினைவாக இங்கே அமைக்கப்பட்டது தான் இந்த மணிக்கூண்டு.  மணிக்கூண்டின் நான்கு பக்கங்களிலும் ஒவ்வொரு கடிகாரம் என மொத்தம் நான்கு கடிகாரங்கள்.  நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்ட இந்த மணிக்கூண்டின் கடிகாரங்கள் பழுதடைந்து போக HMT நிறுவனத்தினர் கடிகாரங்களைச் சரி செய்து தந்தார்களாம்.  இப்போது அந்த நிறுவனமும் இல்லை, கடிகாரங்களும் ஓடவில்லை. சரி செய்வதற்கு எந்த முயற்சிகளும் எடுப்பதில்லை என்பது நிறைய நகரவாசிகளின் குரலாக ஒலிக்கிறது. காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை – நிற்பதும் இல்லை என்று சொன்னாலும் இங்கே காலம் காத்திருக்கிறது – சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு.  இப்படி பல காட்சிகளைக் கண்டபடியே ஒரு நடை நடந்து வரும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் ஸ்வாரஸ்யமானவை. 

நடைப்பயணம் முடித்து தங்குமிடம் திரும்பிய பின் அன்றைய தினத்தின் அனுபவங்களை அசை போட்ட படி படுத்திருந்தேன். உறக்கம் கண்களை இழுக்க, தங்குமிடத்தின் சொகுசு மெத்தையில் நல்ல உறக்கம்.  அடுத்த நாள் எங்கள் திட்டம் என்னவாக இருந்தது? திட்டமிட்டபடியே நடந்ததா என்பதை எல்லாம் வரும் பதிவில் சொல்கிறேன். இந்தப் பயணத்தின் முதல் நாள் பற்றிய தகவல்கள் இப்பதிவுடன் முடிவடைந்தது! நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி 

38 கருத்துகள்:

  1. போலீஸ் டெம்பிள் உம்மையிலேயே நல்ல விசயம் ஜி
    நடக்கும்போது கவனித்த விசயங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி உங்களுக்கும் சில விஷயங்களைச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  2. போலீஸ் டெம்பிள்! கேடகவே மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது.

    //அவரவர் வழியில் அவரவர் சென்றால் எந்தத் தடங்கலும் இல்லை! ஒருவரை ஒருவர் மதிப்பதால் கிடைக்கும் மன நிம்மதி //

    ஆமாம், அந்த நாள் விரைவில் வரும் என்பதை நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாள் விரைவில் வரும் என நம்புவோம் - அதே தான் கோமதிம்மா...

      நீக்கு
  3. அறியாத பல தகவல்களை அழகாக தொகுத்து தருவதில் உங்களுக்கு இணை யாரும் இல்லை அதோடு மனம் மகிழ அருமையான தோசையுடன் கூடிய சட்னியும் என்னை கவர்ந்து இழுத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. பல விசயங்கள் அறியாதவைகளாக மட்டுமல்ல சுவாரஸ்யமாகவும் உள்ளது...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி உங்களுக்கும் சில விஷயங்களைச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      நீக்கு
  5. // மூன்று வழிபாட்டுத் தலங்களும் அடுத்தடுத்து இருப்பதும் நல்ல விஷயம். அவரவர் வழியில் அவரவர் சென்றால் எந்தத் தடங்கலும் இல்லை! ஒருவரை ஒருவர் மதிப்பதால் கிடைக்கும் மன நிம்மதி என்ன என்பதை புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ? //

    சிறந்த சிந்தனைகள்...

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. :)))

      அலுவலக கணினியில் நுழைந்து முயற்சித்துப் பார்த்தேன். இன்ட்ராவிலிருந்து இன்டர் ஆக்கியதால் சோதித்துப் பார்த்தேன். மற்ற தளங்களைத் திறந்தால் சும்மா இருந்த கணினி்உங்கள் தளத்தைத் திறந்தால் மட்டும் விஸ்டா ஆட் ஆன் போடவா, சரி சொல்லு... சரி சொல்லு என்றது. வேறெதுவும் செய்ய முடியாததால் மூடி விட்டேன். இப்போது மொபைல். வழியாகத்தான் வந்திருக்கிறேன்.

      நீக்கு
    2. ஹாஹா.... அலுவலக கணினியில் Firewalls இருக்கலாம் என்பதால் சில தளங்கள் திறப்பதில்லை ஸ்ரீராம்.

      மொபைல் வழி வருகை - மகிழ்ச்சி.

      நீக்கு
  7. மூன்று வழிபாட்டுத்தளங்கள் அடுத்தடுத்து இருப்பது இன்றைய நாளில் வியப்பிற்குரிய செய்தி ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இப்படி இருப்பது நல்லதே கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தில்லியிலும் இப்படி ஒரு இடம் உண்டு - சர்ச் ஒன்றும், கோவில் ஒன்றும் அடுத்தடுத்து இருக்கிறது.

      நீக்கு
  8. உணவு பற்றிய தகவல்களும், இரவு நடையில் ஊர் சுற்றிய விவரங்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் ஸ்வாரஸ்யம் - மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. இரவு உணவையும் முன்கூட்டியே ஹோட்டலில் சேர்த்துவிடச் சொன்னது நல்ல விஷயம். புதிய இடத்தில் உணவுப் பிரச்சனை வராமல் தவிர்த்துவிட்டீர்கள். ஏதேனும் வித்தியாசம் வேண்டுமெனில் மதியம் வெளியில் கிடைப்பதை சாப்பிட்டுக்கொள்ளலாம்.

    ஊர் சுற்றிய அனுபவம் நன்று. நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் இரவில் காலாற நடக்க அங்கு பயமில்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதியம் வெளியே எங்கே போகிறோமோ அங்கே சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. நாள் முழுவதும் சுற்றி விட்டு, இரவு உணவுக்காக மீண்டும் வெளியே செல்வதில பலருக்கும் பிரச்சனை உண்டு என்பதால் தான் இப்படி.

      இரவில் காலாற நடப்பதில் அங்கே பயமே இல்லை நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. அந்தமான் ஒரு சொர்க்கம் போலத்தோன்றுகிறது வெங்கட். நல்ல படியாகத் திட்டம் இட்டு,
    உணவு முறைகளும் ஒத்து வந்தால் நன்மையே.
    எனக்குக் கூட இரவு நேர உலா பிடிக்கும். சின்னத்தம்பியும் நானும் பேசியபடியே காரைக்குடியில் பல்கலக் கழக வளாகங்களைச் சுற்றி வரும். அந்தக் காலத்து சினிபாட்டு, மன்னிக்க வேண்டுகிறேன் ஹாஸ்டல் அறைகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
    உங்கள் பதிவு சொல்லும் மூன்று கோவில்கள் உள்ளே போக முடிந்ததா. எத்தனை அருமையான விஷயம். தொடருகிறேன் மா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் நல்ல இடம் தான் வல்லிம்மா...

      காலாற நடப்பதில் ஒரு சுகம் உண்டு. எந்த ஊருக்குச் சென்றாலும் இப்படி நடந்து வருவது உண்டு வல்லிம்மா....

      கோவில்களுக்குச் செல்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் வெளியிலிருந்தே தரிசித்தோம். ஹனுமன் கோவிலுக்கு மட்டும் காலை நேரங்களில் சென்று வந்தேன் - போர்ட் Bப்ளேயரில் இருந்த நாட்களில்.

      தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      நீக்கு
  11. போலீஸ் கோவில் மட்டுமல்ல, போலீஸ் குருத்வாரா, போலீஸ் மஸ்ஜீத் கூட இங்கே உண்டு...

    ஓ வித்தியாசம்





    பதிலளிநீக்கு
  12. அந்தத் தோசையும் கறியும் தான் அதிகம் என்னைக் கவருது..

    இடையில விட்டுவிட்டேன், அந்தமான் தொடர் படிக்கோணும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையில் விட்ட பதிவுகளை முடிந்த போது படியுங்கள் அதிரா.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அந்தமான் தொடர் பயணம் நன்றாக போகிறது. நல்ல விவரணையாகச் சொல்லிச் செல்கிறீர்கள். போலீஸ் டெம்பிள் விபரங்கள் ஆச்சரியமளிக்கிறது. அங்குள்ள உணவும் நன்றாக உள்ளது. எதையெடுத்தாலும் பத்து ரூபா என்று இங்குள்ள பொருட்கள் மாதிரி அங்கு உணவுக்கும் விலையை நிர்ணயம் செய்கிறார்கள் போலும். அந்தமான் பயணத்தில் நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய உணவகங்களில் விலை சற்றே அதிகம் தான். ஆனாலும் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். போலீஸ் டெம்பிள் நல்ல விஷயம் தான் கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  14. அந்தமானின் அழக்குத்தொடரை முதலில் இருந்து படித்து கருத்திட ஈஉர்க்கிறேன்.எடுத்தூண் சொல்லை பயன்படுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகளை முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. //உணவகத்தில் எடுத்தூண் (நன்றி வே. நடனசபாபதி ஐயா) //

    ஆஹா.. சரியான இடம் பார்த்து எடுத்தூணை எடுத்தாண்டு விட்டீர்கள்.. :}

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான இடத்தில் பயன்படுத்திய வார்த்தை - இந்த வாரத்தில் படித்தததால் உடனே பயன்படுத்திக் கொண்டேன் ஜீவி ஐயா.

      நீக்கு
  16. ஏதோ இரவு நடைபயிற்சி மாதிரி கூட்டிக் கொண்டு போய் என்னவெலாம் காட்டி விட்டீர்கள்!..

    போலீஸ் டெம்பிள் மறக்க முடியாது என்றால், கட்டபொம்மன் சிற்றுண்டியகம், அபர்தீன் மார்க்
    மணிக்கூண்டு-- அதன் ஓடாத கடியாரம், எச்.எம்.டி. பற்றி நினைவு கொள்ளல, தமிழ் பதாகைகள்,
    கடைகளில் எழுதியிருந்த தமிழ் எழுத்துக்கள் என்று இன்று செம விருந்து தான்.. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடைப்பயிற்சி மாதிரி கூட்டிக் கொண்டு போய் என்னவெல்லாம் காட்டி விட்டீர்கள். ஹாஹா... பதிவு வழி உங்களுக்கும் சில விஷயங்களை பகிர முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஜீவி ஐயா.

      நீக்கு
  17. அட! போலீஸ் கோவில், குருத்வாரா, மஸ்ஜித் !!!! நல்லா இருக்கே!

    உங்க அந்தமானை அப்பப்ப எட்டிப் பார்த்தாலும் இப்பதான் முழுசும் வாசிக்க நேரம் கிடைச்சதுன்னு ... ஒருமுறை போய் வரவேண்டிய இடம்தான் போல.... பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலீஸ் கோவில், குருத்வாரா, மஸ்ஜீத் - ஆமாம் டீச்சர் எல்லாம் ஒரே பெயரில் என்பது நல்ல விஷயம்.

      முடிந்த போது ஒரு முறை சென்று வாருங்கள் டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....