திங்கள், 2 மார்ச், 2020

அந்தமானின் அழகு – பயணத் தொடர் - துவக்கம்…



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை புரிந்து கொள்ளப் போவதில்லை.  நீங்கள் இங்கு வாழ்வது உங்கள் வாழ்க்கையை வாழத்தானே தவிர ஒவ்வொருவரும் உங்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல!




நீலக்கடலின் ஓரத்தில்... 

அந்தமான் – அந்தமான் என்றவுடனேயே தமிழகத்தில் உள்ள எவருக்குமே நினைவுக்கு வருவது “அந்தமானைப் பாருங்கள் அழகு” என்ற சினிமா பாடலும், சுதந்திரப் போராட்டம் செய்தவர்களை அடைத்து வைத்திருந்த சிறைச் சாலையும் தான் – அதே வரிசையில்! அந்தமான் நிகோபார் தீவுகள் – இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான இந்தப் பகுதி பற்றியும், அதன் அழகான கடற்கரைகள் பற்றியும், அங்கே இருக்கும் பவளப் பாறைகள் பற்றியும் நிறைய படித்ததுண்டு. இந்தியாவிலுள்ள நிறைய மாநிலங்களைச் சுற்றி வந்திருந்தாலும் நீண்ட நாட்களாகவே அந்தமான் தீவுகளுக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசைப்பட்டுவிட்டால் மட்டும் போதாதே… என்னதான் பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமானது என்றாலும் தனியாக முதுகுச் சுமையோடு எல்லா இடங்களுக்கும் சென்று வந்து விடமுடிவதில்லை.  சரியான நட்பு வட்டம் பயணத்தில் உடன் இருந்தால் பயணம் இன்னும் இனிக்கும் என்பதை நன்கு உணர்ந்தவன் நான்.  தனியாகச் சென்று வந்து விட முடியும் என்றாலும் இந்த அந்தமான் பயணம் நட்புகளுடன் செல்வது தான் நல்லது என சரியான தருணத்திற்குக் காத்திருந்தேன்.


ஓய்வில்லாமல் கரையை நோக்கி ஓடி வரும் அலைமகள்... 

2018-ஆம் வருடம் எங்கள் பகுதி நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்ட போது, அந்தமானுக்கு பயணம் செல்ல வேண்டும் என்பதே எங்கள் அனைவருடைய ஆசையாக இருந்தது. கடந்த வருடம், அதாவது 2019 ஜூன் மாதத்திலேயே அந்தமான் பயணத்திற்காக திட்டமிடத் துவங்கியிருந்தோம்.   அந்தமான் சென்று வர வேண்டும் என்றதும் பயணத்திற்கு எத்தனை நாட்கள் தேவை, என்ன விதமான உடைகள் தேவை, விமானம் வழி செல்வதா இல்லை கடல்வழிப் பயணமா, தங்குவது எப்படி, நாமே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வதா இல்லை ஏதேனும் பயண ஏற்பாடு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்வதா என நிறைய பேசினோம். இதற்காகவே ஒரு நாள் மதியம் நண்பர் வீட்டில் கூடி அளவளாவியதோடு திட்டங்களும் தீர்மானிக்கப் பட்டன.  தில்லியிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் Bப்ளேயர் வரை விமானத்தில் பயணிப்பது என்றும் அங்கே சுற்றிப் பார்க்கவும், தங்குவதற்கும் ஏதேனும் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்து கொள்வது என்றும் முடிவு செய்தோம். மொத்தம் ஐந்து இரவு, ஆறு பகல், நவம்பர் மாதம் பயணம் செய்வது என முடிவு செய்தோம்.


சூரியனுக்கும் மேகங்களுக்கும் போட்டி - யார் பெரியவர் என்று!

மொத்தம் 18 பேர் கொண்ட குழு! ஆறு குடும்பங்கள் கூடவே கரடியாக நானும்! மகளும் மனைவியும் கலந்து கொள்ள முடியாத சூழல்! முதலில் விமானத்திற்கான சீட்டுகளை அவரவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என முடிவானது. தில்லியிலிருந்து போர்ட் Bப்ளேயர் வரை செல்ல மூன்று வழிகள் – விசாகப்பட்டினம் வழி, சென்னை வழி, அல்லது கொல்கத்தா வழி! புவனேஷ்வர் வழியும் உண்டு என்றாலு எங்களால் அப்படி பயணிக்க இயலாது! நாங்கள் தேர்ந்தெடுத்தது விசாகப்பட்டினம் வழி. அனைவருமே அரசு ஊழியர்கள் என்பதாலும், அரசு தரும் Leave Travel Concession பயன்படுத்தப் போவதாலும் Air India விமானத்தில் தான் பயணிக்க முடியும். தில்லி-விசாகப்பட்டினம்-போர்ட் Bப்ளேயர் – ஒரே விமானத்தில் – நடுவே சில நிமிடங்கள் விசாகப்பட்டினம் – விமானத்திலிருந்து இறங்க வேண்டியதில்லை! பிறகு மீண்டும் அதே வழி  தில்லி திரும்ப வேண்டும்.  முதலில் ஐந்து இரவு ஆறு பகல் என முடிவு செய்திருந்தாலும் பயணச் சீட்டு பதிவு செய்யும் போது ஆறு இரவு ஏழு பகல் என மாறிவிட்டது – அந்தமான் தீவுகள் அனைத்தையும் மொத்தமாக பார்க்க இந்த நாட்கள் கூட குறைவு என்றாலும் எங்களால் அவ்வளவு மட்டுமே விடுமுறை எடுக்க முடியும்.  பார்க்க முடிந்த பகுதிகளில் சில பகுதிகளை மட்டும் இப்போதைக்கு பார்க்கலாம்! விடுபட்ட பகுதிகளை பிறிதொரு சமயத்தில் பார்க்கலாமே!


கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிய கடல்!

நவம்பர்-டிசம்பர் அங்கே சுற்றுலா சீசன் என்பதால் முன் கூட்டியே பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்வது நல்லது. போலவே முன்னரே திட்டமிட்டால் நல்ல தங்குமிடங்களும் கிடைக்கும். டிசம்பர் மாதத்தில் அங்கே நிறைய சுற்றுலா கும்பல் வந்து விடும். அதனால் நவம்பர் மாதம் சென்று வருவது சாலச் சிறந்தது. முன்கூட்டியே பதிவு செய்தால் சென்று வர ஆள் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் வரை ஆகலாம். இந்தக் கட்டணம் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் வரையரையிட்டுச் சொல்ல முடியாது.  நாங்கள் ஜூலை மாதத்திலேயே (2019) நவம்பர் (2019) மாதத்தில் செல்ல பயணச் சீட்டு பதிவு செய்தோம் – சென்று வர ஒரு ஆளுக்கு ரூபாய் 17000/- ஆனது – ஏர் இந்தியாவில்! மற்ற விமான நிறுவனங்களின் கட்டணம் குறைவாகவும் இருக்கலாம். இந்தக் கட்டணம் மட்டும் LTC எடுப்பதால் அரசாங்கம் தந்து விடும்.  மற்ற செலவுகள் அனைத்தும் நம் சொந்த செலவு தான்! குழுவில் உள்ள அனைவரும் பயணச் சீட்டுகளை ஒரே நாளில் முன்பதிவு செய்து கொண்ட பிறகு மற்ற ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம்.  நிறைய நிறுவனங்களுடன் மின்னஞ்சல் வழியேயும், அலைபேசி வழியேயும் தொடர்புகொண்டு பேசினோம் – அந்த வேலை நண்பர் மணிக்கும் எனக்குமானது! – 99 சதவீதம் அவரும் 1% நானும்! :)


தூரத்தே ஒரு கப்பல் - எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தது!

சுமந்த் எனும் நபரின் நிறுவனம் (Journey Andaman) மூலம் ஏற்கனவே அந்தமான் சென்று வந்த நண்பர்கள் அவர்களது நிறுவனம் பற்றி நல்லவிதமாகச் சொல்ல திரு சுமந்த் அவர்களைத் தொடர்பு கொண்டு எங்கள் திட்டத்தினைச் சொன்னோம் – நவம்பர் ஏழாம் தேதி அதிகாலை தில்லியிலிருந்து புறப்பட்டு, பதிமூன்றாம் தேதி காலை போர்ட் Bப்ளேயரிலிருந்து தில்லி திரும்புவது எங்கள் திட்டம்.  இந்த ஏழு நாட்களில் (ஆறு இரவு ஏழு பகல்) பார்க்க முடிந்த அத்தனை இடங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்வது – பேருந்து, தங்குமிடம், காலை மாலை உணவு, கடல் வழி மற்றும் சாலை வழிப் போக்குவரத்து, சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் உட்பட அனைத்துமே சுமந்த் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டோம்.  அவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்து சின்னச் சின்ன மாற்றங்களையும் சொல்லி ஒரு வழியாக பயணத் திட்டம் முடிவானது. பயணத்திற்கு முன் கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு அவருக்குத் தர வேண்டிய கட்டணங்களையும் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தினோம். முடிவு செய்த திட்டத்தில் சில மாற்றங்கள் வந்தால் அதற்குத் தகுந்த மாதிரி கட்டணமும் மாறுமே!  


சூரிய உதயத்தினைப் பார்க்கச் சென்ற ஒரு காலையில்...

ஆள் ஒருவருக்கு எத்தனை கட்டணம் இதற்கு மட்டுமே ஆனது என்பதை பிறகு உங்களுக்குச் சொல்கிறேன் – நிறுவனத்தினை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள், தங்குமிடங்கள் பற்றிய விவரங்கள், பார்க்க வேண்டிய, விடுபட்ட இடங்கள் என அனைத்தும் இத் தொடரின் வரும் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி விடுகிறேன். இப்போதைக்கு, திட்டமிட்ட விஷயங்களையும், பயணம் எப்படி ஆரம்பித்தது என்பதையும் சொல்லி விட்டேன். காத்திருந்த நாட்களில் பயணத்திற்கான சொந்த ஏற்பாடுகள் – உடைகள் வாங்குவது, தேவையான பொருட்களை தயார் செய்வது என அனைவருமே பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள் – அதுவும் குழுவாக! பெண்கள் ஒரு பக்கம் ஷாப்பிங் செல்ல, ஆண்கள் தங்களுக்கான ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள்.  அதை வைத்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதும், பார்க்கும் போதெல்லாம் பயணம் பற்றி பேசுவதும் என ரொம்பவே ஜாலியான நாட்கள் அவை.


இதோ வந்துட்டே இருக்கேன்... கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொன்ன சூரியன்!

எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு, பயணம் செய்ய வேண்டிய நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது! அதற்காகத் தானே எங்கள் குழுவில் உள்ள அனைவருமே ஆவலுடன் காத்திருந்தோம். காத்திருந்த நாட்கள் மட்டுமல்ல பயணமும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அந்தமான் எங்களுக்காக உற்சாகத்துடன் காத்திருந்தது! நீலக் கடல் காண நாங்கள் தயார்… நீங்களும் தயார் தானே! பயணம் பற்றி படித்த கவிதை இங்கே பொறுத்தமாக இருக்குமென்பதால் கீழே – கவிதை எழுதியவருக்கு நன்றியுடன்!

நீலவானம் தொட்டிடும் நீலக்கடல்
நீந்திடும் பாய்மரமோ பாற்கடலில்
படகில் பயணம் பரவசம் தந்திடும்
பாடிடும் மனமும் இசையுடன் பாடல்
இதயம் குளிர்ந்திடும் இன்பமுடன்
இடரில்லா தென்றலும் தொட்டிடும்
சூழலும் நம் நெஞ்சை வீழ்த்திடும்
சுழன்றிடும் உள்ளமும் மயங்கிடும்
மோதிடும் அலைகள் பேசிடும் நம்மிடும்
பேரின்பம் பெறலாம் இவ்விடம்

நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.

    நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டுடன் எனக்கு அந்தமான் என்றதும் 90களில் என்னுடன் பணிபுரிந்த ஒருவர் நினைவும் வரும்.அவ அந்தமானில்தான் வசிக்கிறார்.  ஆனால் பல வருடங்களாக அவருடன் தொடர்பே இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      சிலர் தொடர்பு இப்படித்தான் விடுபட்டுப் போய்விடும். பிறகு நினைத்தாலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை - எனக்கும் இப்படியான சில இழப்புகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுவாரஸ்யமான விவரங்களுடன் பயணக்கட்டுரை தொடங்கி இருக்கிறது.  படங்களையும் ரசித்தபடி தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக்கட்டுரையின் துவக்கம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். சிலருக்காவது இந்தத் தொடர்கள் பயன்படும் என்ற நம்பிக்கையிலேயே இங்கே எழுதுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பயண ஏற்பாடு விவரங்களுடன், ஆரம்பம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. அந்தமான் சென்று வர ஆசைதான்...
    பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. சிலருக்காவது பயன்படும் என்ற நோக்கத்திலேயே எனது பயணக் கட்டுரைகள் இன்னும் தொடர்கின்றன துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அந்தமான்... தொடருங்கள்.
    சென்று வர ஆசைதான் அண்ணா... பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் பரிவை சே. குமார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பயணப் பல்லவி பிரமாதம்...அனுபல்லவி சரணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லவியும் அனுபல்லவியும் - மகிழ்ச்சி ரமணி ஜி. பயனுள்ள விதத்தில் இருக்கும் என்றே நம்புகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமை... அப்பாடலாலோ இல்லைப் படத்தாலோ தெரியவில்லை அந்தமான் என்றதும் ஒரு பாசம் விருப்பம் வந்துவிடுகிறது அந்தமானில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் மீது உங்களுக்கும் விருப்பம் - மகிழ்ச்சி அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வாசகம் அருமை.
    அந்தமான் விவரங்கள் அருமை. அந்தாமனை பாருங்கள் பாடலும் காதில் ஒலிக்கிறது.

    படங்கள் அழகு.வந்துவிட்டேன் என்று காத்திருக்க சொல்லும் சூரியன் அழகு.
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நிச்சியம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம்...

    இது போன்ற இடங்களுக்கு நண்பர்களுடன் சென்றால் தான் இனிக்கும்.....

    பயணிக்கும் நாட்கள் விக விரைவிலேயே முடிந்து விடும் ஆனால் இந்த திட்டமிடல் நாட்கள்...வெகு பரபரப்பாக வித்தியாச அனுபவத்திலேயே என்றும் இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  11. பல வருடங்களுக்கு முன் சென்னை வானொலி நிலையத்தில் ஒரு தீபாவளித் திருநாளன்று இரவு தீபாவளி ஸ்பெஷலாக எனது நாடகம் ஒன்று ஒலிபரப்பப்பட்டது. பின்னொரு நாள் அதே நாடகம் Bபிளேயர் வானொலி நிலையத்தில் மறு ஒலிபரப்படும் என்று தகவல் வந்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. Bபிளேயர் வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிபரப்புகளுக்கு இவ்வளவு ஆர்வம் அந்நாட்களில் இருக்கும் என்பது நான் எதிர்பாராதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர்ட் Bப்ளேயர் மட்டுமல்லாது அந்தமான் தீவுகளில் பலவற்றில் தமிழர்கள் நிறையவே இருக்கிறார்கள் ஜீவி ஐயா. அங்கே சென்ற பிறகு தான் இத்தனை எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது எனக்கும் தெரிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. எனக்கும் அந்தமான் சுற்றுலா போக வேண்டும் என்று இப்பொழுது தோன்றுவதால் உங்கள் பதிவை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

    சுற்றுலா திட்டமிடல் பற்றி உங்களிடம், நண்பர் மணியிடம் தெரிந்து கொள்ள ஏகப்பட்ட தகவல்கல் இருப்பதாகத் தெரிகிறது. கூர்ந்து வாசிக்கிறேன்.

    //99 சதவீதம் அவரும் 1% நானும்! :) //

    ஹஹ்ஹஹ்ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலா பற்றிய விவரங்கள் தேவைப்படும்போது சொல்லுங்கள் ஜீவி ஐயா. நிறைய இடங்கள் உண்டு. நிச்சயம் நீங்கள் சென்று வரலாம் - உங்களுக்கு முடிந்தபோது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமை. உங்களோடு இணைந்து நாங்களும் அந்தமான் பயணிக்கக் காத்திருக்கிறோம். நமக்கும் ஓர் பயண வழிகாட்டியாக அமையட்டும்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது அந்தமானின் அழகு – பயணத் தொடர் – துவக்கம்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் பயணத்தொடர் ஒரு சிலருக்காவது பயன்படும் என்ற நோக்கத்திலேயே இங்கே எழுதுகிறேன் சிகரம் பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. விபரங்கள் விவரித்த விதம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. அந்தமான் பயணம் மிக நன்றாக இருக்கிறது. முன்னேற்பாடுகளைப் பற்றி விவரித்து கூறியது மிகவும் ரசனையாக உள்ளது. பயனுள்ள தகவல்கள்.படங்கள், அதனை விளக்கும் வாசகங்கள் சிறப்பாக இருக்கின்றன. நானும் உங்களுடன் பயணத்தின் பதிவோடு தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பயணம் ஆவலை தூண்டுகிறது தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆவலைத் தூண்டும் இத்தொடரினை நீங்களும் தொடர்வதில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. பயணத் தொடரின் முதல் பகுதியை படித்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீமலையப்பன்.

      நீக்கு
  18. நமக்கின்னும் வேளை வரலை. இப்போது உங்கள் பதிவின் வழியே பார்த்துக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் விரைவில் வாய்ப்பு அமையட்டும் துளசி டீச்சர்.

      உங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது.

      நீக்கு
  19. அருமை
    உங்களின் அடுத்தடுத்த பதிவுகளின் லிங்க் அனுப்பவும்.
    அந்தமான் குடும்பத்தடன் செல்ல தேவையான ஆவணங்கள் எத்தனை என்று குறிப்பிடவும்.
    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் நண்பரே! பதிவுகளின் லிங்க் - எனது அந்தமானின் அழகு இப்போது மின்னூலாகவும் கிடைக்கிறது - ஒரே இடத்தில் அனைத்து பதிவுகளையும் படிக்க முடியும். மின்னூலுக்கான சுட்டி - https://www.amazon.in/dp/B08DH98BK4.

      பயணிக்கும் அனைவருக்கும் ஆதார் கார்டு/அடையாள அட்டை நிச்சயம் தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....