வியாழன், 19 மார்ச், 2020

சாப்பிட வாங்க – (dh)தூ(dh)தி கி சப்ஜி


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒவ்வொரு பறவை இனத்திற்கும் இறைவன் உணவை அளிக்கின்றார்; ஆனால், அந்த உணவை அவர் அப்பறவையின் கூட்டிற்குள் கொண்டு போய் வைப்பதில்லை – ஹாலண்ட் நாட்டின் பழமொழி.

****


(dh)தூ(dh)தி கி சப்ஜி



சாப்பிடலாம் வாங்க பதிவு எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது.  சமையல் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் புதிய சமையல் முறைகளைச் செய்வதில் சில மாதங்களாகவே சுணக்கம்.  வழமையான சமையல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன்.  ஆனால் நடுவே இந்த (dh)தூ(dh)தி கி சப்ஜி செய்திருந்தாலும் அதைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை.  (dh)தூ(dh)தி, (dh)தூ(dh)தி என்று சொல்கிறானே, அது என்ன (dh)தூ(dh)தி என நீங்கள் நினைக்கலாம்! லோகி, (dh)தூ(dh)தி,  Gகியா என்று பல பெயர்களில் இந்த ஊரில் அழைக்கப்படும் காய்கறிக்கு நம் ஊர் பெயர் சுரைக்காய்! அட சுரைக்காய் வைத்து ஒரு சமையல் – அதைப் பெரிதாக சொல்ல வந்து விட்டாயா என்று நினைத்து விட வேண்டாம்.  வடக்கே செய்வது போல நம் ஊரில் செய்வதில்லை.  அதனால் தான் வட இந்திய முறையில் சுரைக்காயில் செய்யப்படும் ஒரு சப்ஜி வகையை இன்றைக்குப் பார்க்கலாம்! சுரைக்காயில் இங்கே பல விதங்களில் சமையல் செய்கிறார்கள்.  அதில் ஒரு முறையை இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன். 

நம் ஊரில் பொதுவாக பலரும் இந்த சுரைக்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில்லை. ஒரு சிலர் சாம்பார் அல்லது கூட்டு செய்வதோடு சரி. சிலர் பொரியலாகவும் செய்திருக்கலாம்.  நீர் சத்து அதிகம் கொண்டதால், உடலுக்கு நல்லது இந்த சுரைக்காய். வடக்கில் இந்த சுரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.  சுரைக்காயில் விதம் விதமான சப்ஜி – சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சப்ஜிகள் செய்கிறார்கள் – Gகியா கி கோஃப்தா, Gகியா தால், Gகியா Bபர்த்தா என நிறைய வகைகளில் இங்கே சமைக்கிறார்கள்.  இன்றைக்கு நாம் பார்க்கப் போவது Gகியா Bபர்த்தா வகை.  இந்த சப்ஜி சமைக்க என்ன தேவை?

தேவையான பொருட்கள்:

Gகியா – 250 கிராம்.  தோல் சீவி, விதைகளை நீக்கி துருவிக் கொள்ளவும்.
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – சிறு துண்டு. பூண்டு தேவையெனில் சேர்த்துக் கொள்ளலாம்! இஞ்சி பூண்டு விழுதாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜீரா – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், Gகரம் மசாலா – 1 ஸ்பூன், மிளகாய்த் தூள் – ¾ ஸ்பூன், தனியா பொடி – ½ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.  எண்ணை – தேவையான அளவு.   தனியா இலைகள் – அலங்கரிக்க.

எப்படிச் செய்யணும் மாமு?



முதலில் Gகியா/லோகி/(dh)தூ(dh)தி  எனப்படும் சுரைக்காயை தண்ணீரில் சுத்தம் செய்து துடைத்துக் கொண்டு, தோலைச் சீவி விடவும்.  இளம் காயாக இருந்தால் விதைகளை எடுக்கத் தேவையில்லை. கொஞ்சம் முற்றியதாக இருந்தால் விதைகளை நீக்கி விடலாம்.  நன்கு துருவிக் கொள்ளவும்.  துருவிக் கொள்வதை ஹிந்தியில் (Kh)கத்(dh)தூகஸ் என்று சொல்வது வழக்கம்!  வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். விழுதாக இருந்தாலும் நல்லதே!

ஃப்ரையிங் பேன் அல்லது சிறு குக்கரில் எண்ணை விட்டு, காய்ந்ததும் அதில் ஜீரகத்தினைச் சேர்க்கவும். வெடித்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தினைச் சேர்த்து அடுப்பினை சிம்மில் வைக்கவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இஞ்சி விழுதையும் சேர்த்து வதக்கவும்.  பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் (நான் தக்காளியை அரைத்து சேர்த்தேன்) சேர்த்து அனைத்தும் நன்கு சேர்ந்து வரும்படி வதக்கிக் கொள்ளவும். 

பிறகு துருவி வைத்திருக்கும் சுரைக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு Gகரம் மசாலா – 1 ஸ்பூன், மிளகாய்த் தூள் – ¾ ஸ்பூன், தனியா பொடி – ½ ஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து, சுரைக்காய்க்குத் தேவையான அளவு உப்பு (ஏற்கனவே கொஞ்சம் உப்பு சேர்த்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள்!) சேர்த்து நன்கு வதக்கவும்.  சுரைக்காயில் தண்ணீர் சக்தி அதிகம் என்பதால் அதிக அளவு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும் அல்லது குக்கரில் செய்தால் குக்கர் மூடியைப் போட்டு மூடி இரண்டு விசில் விட்டு அடுப்பை அணைத்து விடலாம். மூடியைத் திறக்க வரும் நேரம் திறந்து பார்த்து அதிக அளவு தண்ணீர் இருந்தால் மீண்டும் கொஞ்சம் நேரம் அடுப்பில் (மூடி இல்லாமல்) சிம்மில் வைத்து வதக்கினால் போதும்.  ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு நறுக்கி வைத்திருக்கும் தனியா இலைகளால் அலங்கரிக்கலாம்!

இந்த (dh)தூ(dh)தி கி சப்ஜி, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் நல்ல காம்பினேஷன்.  நம் ஊரில் சப்பாத்திக்கு இப்படி (dh)தூ(dh)தி சப்ஜி செய்து சுவைத்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் மீண்டும் செய்து சாப்பிடலாம்! உடலுக்கும் நல்லது இந்த சுரைக்காய்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. பசித்திருப்பவருக்கு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் வாசகத்தை நினைவு படுத்துகிறது இன்றைய வாசகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் - நல்ல வாசகம். மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுரைக்காய் சமைப்பதே இல்லை.  வாழ்வில் ஒரு ஒரு முறை சாப்பிட்டிருப்பேன், அவ்வளவுதான்!  நீங்கள் சொல்லி இருக்கும் முறை சுவாரஸ்யமாக இருக்கிறது.  நேரமும், பொறுமையும் இருக்கும் ஒரு நாளில், சுரைக்காயும் கிடைக்கும் நாளில் செய்து பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சுரைக்காய் பலர் வீடுகளில் சமைப்பதில்லை ஸ்ரீராம். ஒரே ஒரு முறை - தமிழகத்தில் இருந்தவரை நானும் சாப்பிட்டதில்லை. வடக்கே வந்த பிறகு பல உணவகங்களில் சுரைக்காயும், பூசணியும் நிறையவே சமைப்பதால் சாப்பிட ஆரம்பித்தேன்.

      முடிந்த போது சமைத்து, ருசித்துப் பாருங்கள்.

      நீக்கு
  3. பொன்மொழி அருமை ஜி

    நீங்கள் சொல்வதுபோல் சுரைக்காயை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      சுரைக்காய் பலரும் விரும்புவதில்லை தான் கில்லர்ஜி.

      நீக்கு
  4. சீக்கிரம் செய்துவிட்டு சொல்கிறேன் சார்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சுரைக்காய் சப்ஜி பார்க்கவே நன்றாக உள்ளது. செய்முறைகளும் அருமை. இந்த சுரைக்காய் கொடிக் குடும்பத்தை சேர்ந்ததாயினும், பரங்கி, தடியங்காய் (வெண்பூசணி) புடலை மாதிரி இதை சமையலில் ஏனோ பயன்படுத்தியே இல்லை. இதிலும் நிறைய சக்திகள் இருக்கிறதாய் படித்தேன். ஆனாலும் ஒரு தடவை கூட சமைத்து பார்த்ததில்லை. சுரைக்காய் ஆகாது என வீட்டில் சொல்லியதால், இதை தவற விட்டு விட்டோம் எனத் தோன்றுகிறது. தங்கள் செய்முறை செய்யத் தோன்றுகிறது. இது கொஞ்சம் வெள்ளரிக்காய்யின் ருசியோடு இருக்குமோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      முதலில் வாசகம் அருமை. எந்த உயிருக்கும் இறைவன் படியக்காமல் இருக்க மாட்டார். இறைவன் எதையும் அளிப்பதை நாமும் உணர்ந்து பெற வேண்டும் என்று உணர்த்தும் வாசகம் அருமை. அதை குறிப்பிட மறந்து விட்டேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. தடியங்காய் - ஆஹா... உங்களுக்கு கோவையோ? அங்கே தான் தடியங்காய் என்று சொல்வார்கள் கமலா ஹரிஹரன் ஜி.

      ஆமாம் - சுரைக்காய் பொதுவாக சமைப்பதில்லை. முடிந்த போது செய்து பாருங்கள். வெள்ளரிக்காயின் ருசி கொஞ்சம் கொஞ்சம் உண்டு.

      நீக்கு
    3. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
    4. /தடியங்காய் - ஆஹா... உங்களுக்கு கோவையோ? அங்கே தான் தடியங்காய் என்று சொல்வார்கள்/

      இல்லை... நான் நெல்லைவாசி. அங்கும் வெண்பூசணிக்கு இந்த சொல்வழக்கு உண்டு. சிகப்பு பூசணிக்கு "பறங்கி" என்பதை நான் சென்னை வந்ததும் அறிந்து கொண்டேன்.

      நீக்கு
    5. ஓ... நெல்லையிலும் தடியங்காய் என்று தான் சொல்வீர்களா? மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
    6. கமலா ஹரிஹரன் மேடம் - சுரைக்காய் கூட்டு, பெங்களூர் கத்தரிக்காய் (செளசெள) கூட்டு மாதிரித்தான் இருக்கும். செளசெளவை எப்படி எப்படி கூட்டு பண்ணலாமோ (புளிக்கூட்டு, பாசிப்பருப்பு கூட்டு, தேங்கா/சீரகக் கூட்டு) அதேபோல சுரைக்காயிலும் செய்யலாம். அதே சுவை. ஆனால் என்னவோ நான் இருமுறை பஹ்ரைனில் வாங்கியும் வீட்டில் செய்ததில்லை. சுரைக்காய் கொஞ்சம் குளிர்ச்சி ஜாஸ்தி என்பார்கள்.

      நீக்கு
    7. ஆமாம் நெல்லைத் தமிழன். சுரைக்காயில் சௌசௌ கூட்டு மாதிரியே செய்யலாம். நீங்கள் சொல்வது போல, சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் பலரும் அதை சாப்பிடுவது இல்லை. குளிர்ச்சியும் உண்டு.

      நீக்கு
    8. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      சுரைக்காய் கூட்டு பற்றி விரிவாக கூறியதில் இந்த காய் கூட்டு முறைகள் பற்றி புரிந்து கொண்டேன்.. ஆனால் என்னவோ இதுவரை இந்தக் காயை சமைத்ததேயில்லை. இனி சமயம் வாய்த்தால் செய்யலாம். சுரைக்காய் குளிர்ச்சியென என் நாத்தனாரும் அடிக்கடிக் கூறுவார்கள். அவர்கள் ஹைதராபாத்தில் இருக்கும் போது பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிடுவார்கள். தங்கள் அன்பான கருத்துகளுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    9. உண்மை தான் கமலா ஹரிஹரன் ஜி. சுரைக்காயை பலரும் சமைப்பதில்லை. நீர்ச்சத்து அதிகம் என்பதால் அடிக்கடி கழிவறை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும், அதனால் சாப்பிடுவதில்லை என்றும் சொல்வதுண்டு.

      நீக்கு
  6. சுரக்காய் அதிகம் பயன்படுத்துவதில்லை..இது கொஞ்சம் ஆர்வமூட்டுவதாலும் செய்முறை எளிதாய் இருப்பதாலும் செய்து பார்க்க உள்ளோம்
    பகிர்வுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரைக்காய் பயன்பாடு குறைவு தான். முடிந்த போது செய்து பாருங்கள் ரமணி ஜி.

      நீக்கு
  7. செய்முறை எளிதாக இருக்கிறது...

    செய்து பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிதான செய்முறை தான் தனபாலன். முடிந்த போது செய்து பாருங்கள்.

      நீக்கு
  8. அட ஆண்டவா... நான் ஹிந்தி எக்ஸ்பர்ட் என்று நானே நினைத்துக்கொண்டு, பாலில் செய்த சப்ஜியா என்றே காலையில் நினைத்தேன்... சுரைக்காயிலா? நல்லாவா இருந்தது? (எனக்கு சுரைக்காய் கூட்டு தவிர-நம்ம ஊர் பாணியில் செய்தது) பிறவற்றை கற்பனைகூடச் செய்ய முடியலை. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி எக்ஸ்பர்ட் - ஹாஹா... பகுதிக்குப் பகுதி வார்த்தைகள் வேறுபடும் நெல்லைத் தமிழன். பொதுவாக ஹிந்தியில் லோகி என்றும் Gகியா என்றுமே அழைக்கிறார்கள். பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் இதை (dh)தூ(dh)தி என அழைக்கிறார்கள்.

      நம் ஊர் கூட்டு பாணி தவிர வேறு விதத்திலும் முயற்சி செய்யலாம்!

      நீக்கு
  9. சுரைக்காய் செய்வதுண்டு... இதுபோல் செய்ததில்லை.
    செய்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  10. சுரைக்காயினை அடிக்கடி சமையலில் சேர்த்துக்கும் பழக்கமுண்டு. உங்கள் செய்முறைப்படி செய்து பார்த்து எப்படி இருக்குன்னு பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது இந்த முறையிலும் செய்து பாருங்கள் ராஜி.

      நீக்கு
  11. //ஒவ்வொரு பறவை இனத்திற்கும் இறைவன் உணவை அளிக்கின்றார்; ஆனால், அந்த உணவை அவர் அப்பறவையின் கூட்டிற்குள் கொண்டு போய் வைப்பதில்லை//

    சூப்பர்

    சுரைக்காய் உடம்புக்கு மிக நல்லதே, ஆனா இதில் குளிர்க்குணம் அதிகம் என்பதால் சிலருக்கு உடல் நடுங்கி காய்ச்சல் போல வரலாம், என்பதால பார்த்துச் சாப்பிடோணும், எல்லா நேரமும் சாப்பிடக்கூடாது.

    ரெசிப்பி நன்று,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா. குளிர் நாட்களில் இதை சாப்பிடுவது இல்லை.

      நீக்கு
  12. வாசகம் அருமை. தேடி உணவை சாப்பிடுவது நல்லது.
    தடியங்காய் என்று எங்கள் பக்கம்(நெல்லை) சொல்வார்கள் வெண்பூசணியை வெங்கட் .
    சுரைக்காய் உடலுக்கு நல்லது ஆனால் சாப்பிட மாட்டார்கள் சிலர்.
    நான் சமைப்பேன். சுரைக்காய் அடை, சுரைக்காய் பஜ்ஜி கூட்டு எல்லாம் செய்வேன் நன்றாக இருக்கும்.

    நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தடியங்காய் - கோவை, நெல்லை என இரு பகுதிகளிலும் அழைப்பது அறிந்தேன் மா.

      சுரைக்காய் அடை - புதிய விஷயம். இங்கே சுரைக்காயில் கோஃப்தாவும் செய்வதுண்டு.

      நீக்கு
    2. சுரைக்காய், சிங்கத்துக்கு மிகப் பிடிக்கும். எல்லாம் நீர்ச்சத்து கொண்ட காய்கள் என்பதால் கோடையில் நல்ல செலவாகும்.

      உங்கள் தலைப்பு வாசகம் மிகப் பிடித்திருந்தது.
      இங்கும் நிறைய நீர்க்காய்கள் மெக்சிகோவிலிருந்து வருகின்றன.
      நீங்கள் ஸ்ன்ன முறையி செய்து பார்க்கிறேன். மிக நன்றி வெங்கட்.

      நீக்கு
    3. ஆமாம் வல்லிம்மா, கோடைக்காலத்தில் நிச்சயம் பயன்படுத்தலாம்.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      செய்து பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தினைச் சொல்லுங்கள்.

      நீக்கு
  13. சுரக்காய் சமையல்கள் செய்வேன். துருவி செய்ததில்லை இம்முறையில் செய்து பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி துருவி செய்து பாருங்கள் மாதேவி. நன்றாகவே இருந்தது.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....