வியாழன், 12 அக்டோபர், 2023

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கனவுகள் சொல்ல வருவதென்ன? பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை; பொறாமை ஒரு போதும் ஜெயிப்பது இல்லை.

 

******




அழும் குழந்தைகளை தன் தோளிலும், இடுப்பிலும் தூக்கி வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடி பாட்டுப் பாடி மகிழ்வித்த என் ஆங்கிலோ இந்தியன் எல்.கே.ஜி ஆசிரியை!

 

எல்லோரிடமும் டெர்ரராக இருந்தாலும் தாய்மை உணர்வோடு பசியோடு இருந்த என்னை தனியே அழைத்து பிஸ்கட்டும் பாலும் வாங்கித் தந்த என் யூ.கே.ஜி ஆசிரியை!

 

காதின் ஓரத்தில் ரோஜாவும் முகத்தில் புன்னகையும் தவழ மரத்தடியில் வகுப்பெடுத்து என் சிந்தனைகளை சிறகடிக்கச் செய்த  மணிமேகலை டீச்சர்!

 

இன்று டீச்சர் இந்த நிறப் புடவை உடுத்தியிருப்பதால் எல்லோருக்கும் உதை கிடைப்பது  நிச்சயம் என்று மாணவர்களை கணிக்க வைத்த ஜூலி மிஸ்!

 

நீங்க ரெண்டு பேரும் உங்க லீடர் போஸ்ட்ட ரிசைன் பண்ணினா நானும் என் டீச்சர் போஸ்ட்ட ரிசைன் பண்ணப் போறேன்! என்று குழந்தை போல் எங்களுக்கு இணையாக சண்டையிட்ட தனலஷ்மி மிஸ்!

 

வகுப்பில் நாங்கள் உரையாடும் போது தப்பித் தவறி ஆங்கில வார்த்தையை உபயோகித்தால், 'பிடி என் பரிசை! இதை ஆயிரம் முறை எழுதி வா!' என்று தண்டனையை பரிசாகத் தந்த புலவர் இலட்சுமணன் ஐயா!

 

பெஞ்சின் மீது நிற்க வைத்து பிரம்பால் அடித்து எங்கள் தவறுகளை திருத்திய செல்வி மிஸ், சாந்த சுந்தரி மிஸ், விஜயலஷ்மி மிஸ், சரஸ்வதி மிஸ்…!

 

தன் முன் அமர்ந்திருக்கும் மாணவி தன்னைத் தான் வரைந்து கொண்டிருக்கிறாள் என்பது கூட அறியாமல் சின்சியராக machine management பாடத்தை எடுத்த என் கல்லூரிப் பேராசிரியர்! 

 

இயந்திரங்களைக் குறித்தான பாடங்களை சொல்லித் தந்தும், பணிபுரிய வைத்தும் புதியதொரு உலகைக் காட்டிய கல்லூரிப் பேராசிரியர்கள்! கணினி மூலமும் இயந்திரங்களின் உதிரி பாகங்களை  வடிவமைக்கச் செய்த ஆசிரியர்கள்! 

 

இப்படி என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத் தந்து என்னை செதுக்கிய ஆசிரியர்கள்!

 

களிமண்ணைப் பிசைந்து அழகிய பானையாக உருவாக்குவதைப் போல ஒவ்வொரு மாணவனையும் செதுக்கி சமுதாயத்தில் சிறந்த மனிதனாக உருவாக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள்! வாழ்த்துகள்!

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

பின் குறிப்பு:  கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி அன்று ஆசிரியர் தினம் அன்று எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

 

12 கருத்துகள்:

  1. நம்மை செதுக்கிய சிற்பிகள் ஆசிரியர்கள். அவர்களை மறக்க முடியுமா? எனக்கும் என் ஆசிரியர்கள் நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். நிச்சயமாக மறக்க முடியாது! மறக்கவும் கூடாது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. எத்தனையோ ஆசிரியர்கள் நம் வாழ்க்கைப் பாதையில் வந்திருந்தாலும் சிலரைத்தான் நம் மனது நினைத்து உருகுகிறது.

    இப்போதைய காலத்தில் ஆசிரியராக இருப்பதே மிகுந்த கடினமான பணி எனப் பலரும் சொல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் இரண்டு கருத்துகளும் சரியே. நம்மிடம் அன்பாக இருந்தவர்களும், கண்டிப்புடன் நடந்து கொண்டவர்களும் என சிலரைத் தான் நம் மனம் அசை போடும்.

      இன்றைய காலகட்டத்தில் ஆசிரியராக இருப்பதும் கடினம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. நல்ல பதிவு ஆதி. நாங்களும் டீச்சர் உடுத்தி வந்தா ஸாரியை பாராட்டிப் பேசியதுண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போலவே, அவங்க உடுத்தி வர ஸாரி வைச்சே அன்றைய தினம் இப்படித்தான் போகும் என்று பேசியதும் எல்லாம் நினைவுக்கு வந்தது.
    நம்மை வழிநடத்திய ஆசிரியர்களை மறக்க முடியுமா? உண்மையாகவே எனக்குக் கிடைத்த ஆசிரியர்களைப் போன்று என் மகனுக்குக் கிடைத்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்பேன். ஒரு personal bond என்பது இருக்கவில்லை. என் மகனுக்கு இருந்த குறைபாடுதான் பேசப்பட்டதே தவிர, ஆசிரியர்கள் அவனை அழைத்து தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனை என்று பேசியதில்லை, அறிந்ததில்லை, எங்களை அழைத்துப் பேசியதும் இல்லை. நாங்கள் வீட்டில் கொடுத்த ஆதரவினாலும் அவனைப் புரிந்து கொண்டதினாலும்தான் அவன் அவனது கல்வியை நல்லவிதமாகக் கொண்டு செல்ல முடிந்தது.

    ஆனால் என் வருடங்களை நினைத்துப் பார்த்தேன். என் மதிப்பெண் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். காரணம் கண்டிப்பாக என் மூளைத்திறன் என்று சொல்ல மாட்டேன். என் சூழல். ஆசிரியர்கள் என் திறமைகள் பார்த்து என்னைத் தனிப்பட்ட முறையில் நிறைய ஊக்கம் கொடுத்து என் பிரச்சனைகள் என்ன என்று அறிந்து எவ்வளவு பேசியிருக்காங்க. என் குறைகளை அவர்களிடம் எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக பள்ளியில் மேரி லீலா டீச்சர், ஸ்டெல்லா மேரி டீச்சர், கல்லூரியில் உஷா தாமஸ் அவர்கள்....இவங்க என்னோடு கடிதம் மூலம் தொடர்பில் இருந்தாங்க. என் திருமணம் ஆன பிறகும். ஆனால் ஆதன் பின் என் சூழல் காரணமாகத் தொடர்பு விட்டுப் போச்சு.

    இவர்களை நான் நினைக்காத நாளில்லை என்றே சொல்வேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். நம்மிடம் அன்பு செலுத்துபவர்களைத் தான் நாமும் நினைவில் வைத்திருப்போம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. மிகவும் அருமையான பதிவு. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  5. ஆசிரியர்களை மறக்க முடியாது... அதிலும் குருவாக இருந்தவர்களை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. ஆசிரியர்களை நினைவு கூர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....