புதன், 18 ஏப்ரல், 2012

வல்லவனுக்கு கேரட்டும் புல்லாங்குழல்….


நம்ம காய்கறி வாங்க மார்க்கெட் போனா பல காய்கறி வாங்கிட்டு வருவோம். வீட்டுக்கு வந்து அதை வைத்து சமையல் செய்வோம் இல்லைன்னா பச்சையா சாப்பிடுவோம். ஆனா இவங்களைப் பாருங்க காய்கறிகளை வைத்து அற்புதமான இசை தருகிறார்கள்.

The Vegetable Orchestra என்பது வியன்னாவில் இருக்கும் ஒரு இசைக்குழு. 1998 – ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு இதுவரை மூன்று இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

திரு ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பூவில் இந்தக் குழுவினரின் ஒரு காணொளி பார்த்தவுடன் இணையத்தில் இவர்களைப் பற்றிய விவரங்களைத் தேடினேன். இவர்களைப் போலவே நிறைய குழுவினர் இப்போது காய்கறிகளை வைத்து இசை விருந்து தருகிறார்கள். நான் பார்த்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இப்பகிர்வு.

இந்த வித்தியாசமான இசையைக் கேட்டு இன்புறுங்கள்.


மற்றுமொரு காணொளி உங்கள் பார்வைக்கு!


என்ன நண்பர்களே வித்தியாசமான இசையை ரசித்தீர்களா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்



அறுசுவையும் கலந்த மாங்காய் பச்சடி எடுத்துக்கொள்ளுங்கள்......




அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நந்தன வருடம் நல்லவற்றை அள்ளி அள்ளித் தரட்டும்.


நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்

புது தில்லி


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

வித்தியாசமான ஒரு ஆட்டோ


சென்னையோ, தில்லியோ எந்த ஊராக இருந்தாலும் சரி, நிறைய ஆட்டோக்களை நாம் இப்போது பார்க்கிறோம். சிறிய தூரங்களைக் கடக்க அதனை பயன்படுத்தவும் செய்கிறோம். பெரும்பாலும் இந்த ஆட்டோ பயணங்களில் நமக்குக் கிடைப்பது கசப்பான அனுபவங்களே. ஆனால் மும்பையில் தனக்குக் கிடைத்த சுகமான அனுபவத்தினைப் பற்றி முகப்புத்தகத்தில் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். அதன் தமிழாக்கம் கீழே.


ஒரு ஞாயிறு அன்று நானும், எனது மனைவி மற்றும் மகனுடன் அந்தேரியிலிருந்து பாந்த்ரா செல்ல ஒரு ஆட்டோவினை நிறுத்தினோம், இது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கப் போகிறது என்பதை அறியாமலே.
நிறுத்திய ஆட்டோவில் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் எதிரே ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டி. அதில் தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது. நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டோம். பக்கத்தில் ஒரு முதலுதவிப் பெட்டி. பஞ்சு, டெட்டால் மற்றும் சில மாத்திரைகளும். நிச்சயம் இது வித்தியாசாமான ஒரு ஆட்டோ எனப் புரிந்தது.


சுற்று முற்றிலும் பார்த்தேன். மேலும் இருந்தவை: ரேடியோ, தீயணைப்பு சாதனங்கள், நேரம் காட்டி, நாள்காட்டி, எல்லா மதக்கடவுள்களின் படங்கள். இவை மட்டுமா, பம்பாய் ஹீரோக்கள், காம்தே, சாலாஸ்கர், கர்கரே மற்றும் உன்னிகிருஷ்ணன் அவர்களுடைய புகைப்படங்களும் இருந்தன.

ஆட்டோ மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுனரும் வித்தியாசமானவராகத் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகம் மூடியபின் கடந்த 8-9 வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்.

பள்ளி செல்லும் இரு குழந்தைகளுக்குத் தகப்பன் இவர். காலை 8 முதல் இரவு 10 மணி வரை ஆட்டோவையும் தனது வாழ்க்கையையும் திறம்பட ஓட்டும் இவர் சொன்னது, “சார், வீட்டுல உட்கார்ந்து டி.வி. பார்ப்பதால் என்னைப் போன்றவர்களுக்கு பெரிதாக என்ன பயன் வந்துடப் போவுது? நாலு காசு சம்பாதித்தா எதிர்காலத்துக்குப் பயன்படுமே!" உண்மைதானே!

இது மட்டுமில்லாமல், தன்னிடம் எப்போதெல்லாம் சற்று அதிகமாக பணம் சேர்கிறதோ, அப்போதெல்லாம், அந்தேரியில் இருக்கும், வயதான பெண்களுக்கான ஒரு இல்லத்தில் இருக்கும் பெண்களுக்கு, பல் துலக்கி, பற்பசை, சோப், எண்ணெய் என தேவைப்படும் பொருட்களை வாங்கித் தருகிறாராம். ஆட்டோவில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடியும், பார்வை இல்லாத நபர்களுக்கு 50 ரூபாய் வரையான தொலைவெனில் இலவசமாகவும் அழைத்துச் செல்வாராம்.

இப்படி ஒவ்வொன்றும் தெரிந்துகொண்ட நானும், எனது மனைவியும் 45 நிமிட பயணம் முடிந்தபோது ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.


நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நபர்தான் சந்தீப் பச்சே என்ற இந்த ஆட்டோ ஓட்டுனர். மும்பையில் அவர் ஓட்டும் ஆட்டோ எண். MH-02-Z-8508. 

ஒரு நல்ல மனிதரைப் பற்றித் தெரிய வந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஞாழல் மலர் – காதலியுடன் நீண்ட பயணம்


[பட உதவி: கூகிள்]

பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும் என என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். அதுவே அந்த பயணம் மனதுக்குகந்த காதலியுடன் என்றால் இன்னும் ரம்யமாய் இருக்கும் அல்லவா! அந்த அனுபவம் நிச்சயம் சுகமாய்த் தான் இருக்கும்!

பத்துப்பாட்டு எனச் சொல்லப்படும் பாடல்களில் குறிஞ்சிப் பாட்டு என்ற ஒன்றும் உண்டு. இந்த குறிஞ்சிப் பாட்டு பற்றி திரு என். சொக்கன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து சில வரிகளை உங்களுக்குத் தருகிறேன்.
குறிஞ்சிப் பாட்டு 'காதலன், காதலியின் நீண்ட பயணம் ஒன்றைச் சொல்வது. எழுதியவர் கபிலர். இதில் 61 - வது வரியில் தொடங்கி, 95 - வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது:
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,வடவனம், வாகை, வான்பூங்குடகம்,எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,பயினி, வானி, பல்இனர்க் குரவம்,பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,தில்லை, பாலை, கல்இவர் முல்லை,குல்லை, பிடவம், சிறுமாரோடம்,வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,தாழை, தளவம், முள்தாட் தாமரை,ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,சேடல், செம்மல், சிறுசெங்குழலி,கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,நந்தி, நறவம், நறும் புன்னாகம்,பாரம், பீரம், பைங்குருங்கத்தி,ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....

இத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி. கபிலரின் இந்தப் பாட்டைப் படித்துவிட்டு, இத்தனை பூக்களையும் எனக்குப் பறித்துத் தந்தால்தான் ஆச்சு என்று அந்தக் காலத்துக் காதலியர், தங்கள் காதலர்களைப் பாடாகப் படுத்தியிருப்பார்களோ, என்னவோ! பாவம்!

காதலிகள் காதலர்களைப் பாடாய் படுத்துவார்களா என்ன? அப்படிப் படுத்தினாலும் அதை ரசிப்பார்களே காதலர்கள்! ”என்ன அனுபவமா?” என்று கேட்டு விடாதீர்கள்! எனக்கு அந்த ராசி இல்லை! அதற்காகத் தான் கல்யாணம் ஆன பிறகு காதலிக்கத் தொடங்கினேன் – [யாருப்பா அதுக்குள்ள போட்டுக் கொடுக்கப் பார்க்கிறது?] நான் காதலிக்கத் தொடங்கினேன் எனச் சொன்னது என் மனைவியைத் தான்!

சரி விஷயத்துக்கு வருகிறேன், வலைச்சரத்தில் ஆசிரியர் பணி தொடங்கி இன்றோடு ஏழு நாள் முடிகிறது. இன்றைய எனது பதிவாக, வலைச்சரத்தில் ”ஞாழல் பூ –அனுபவச் சரம்” தொடுத்திருக்கிறேன். அனைவரும் வலைச்சரத்திற்கும் வந்து படித்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.

இந்த வாரம் முழுவதும் எனது பக்கத்திற்கும், வலைச்சரத்திற்கும் வந்து நான் தொடுத்த மலர்ச் சரங்களைப் படித்து எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நாளை முதல் வழக்கம் போல, அவ்வப்போது சில பதிவுகள் எனது வலைப்பக்கத்தில் வெளிவரும்.

மீண்டும் நன்றிகூறி நட்புடன் விடைபெறுவது….

வெங்கட்
புது தில்லி.

சனி, 7 ஏப்ரல், 2012

காந்தள் மலர் விரலுக்குச் சொந்தக்காரி!



காந்தள் மலரின் சில சிறப்புகள் கீழே.

காந்தள் மலர் – இது தமிழகத்தின் தேசிய மலர்.

காந்தள் மலர் – குறிஞ்சி நில தெய்வமான முருகப்பெருமானுக்கு உகந்த மலர் இது. ஆறுமுகனுக்கு உகந்த இந்த மலருக்கும் ஆறு இதழ்கள்!

ஒரு இனிமையான நளவெண்பா பாடல்:

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாள்; அக் கைம்மலரைக் காந்தெளனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!

ஒரு பூந்தோட்டத்தில் அழகிய பெண்ணொருத்தி, பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். “பூக்களைப் பறிக்காதீர்கள்” என்று அந்தக் காலத்தில் எழுதி வைக்கவில்லை போலும். அப்படிப் பறித்துக் கொண்டு இருக்கும் அழகியின் முகம் செந்தாமரை மலர் போல இருக்கிறதே என்றெண்ணி அவளது வதனத்தை மொய்த்ததாம் வண்டுகள். உடனே அவள், தனது சந்திர பிம்ப வதனத்தினை வண்டுகள் கடித்து விடப் போகிறதே என தனது செந்நிறமான கையால் தடுக்க, அந்த கை விரல்களைப் பார்த்ததும், காந்தள் மலர் போல இருக்கிறதே என்றெண்ணி விரல்களை மொய்க்க ஆரம்பித்து விட்டதாம்! என்னே ஒரு கற்பனை!

என்ன நண்பர்களே காந்தள் மலர் பற்றிய குறிப்பினைப் படித்து ரசித்தீர்களா! இந்த இனிய காந்தள் மலர் போலவே இன்றைய வலைச்சரத்தில் சில சுவையான பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறேன். இன்றைய பகிர்வுகள் விழிப்புணர்வினைச் சொல்லும் பகிர்வுகள்.

வலைச்சரத்திற்கு வந்து இன்றைய மலரான காந்தள் மலரின் அழகினை ரசிக்கலாமே!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.