முஸ்கி: தொடர்ந்து பயணத்தில் இருப்பதால் கடந்த பத்து நாட்களுக்கு
மேலாக பதிவுலகம் பக்கமே வர இயலவில்லை. திருவனந்தபுரம், சபரிமலை, சென்னை, மஹாபலிபுரம்,
நேமம் [திருக்காட்டுப்பள்ளி] என தொடர் பயணங்கள். [அடடா இத்தனைக்கும் பயணப் பதிவுகள்
வரப் போகுதா! நான் வரலை இந்த விளையாட்டுக்கு! என பயந்து ஓட வேண்டாம். இன்னும் சில நாட்களுக்கு
நான் பதிவுலகம் பக்கம் வருவது கடினம்! அதனால் பயப்பட வேண்டியதில்லை!]
இந்தப் பயணத்தின்
போது சந்தித்த சில உழைப்பாளிகள் பற்றிய விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.
முதலில் ஒரு 52 வயது உழைப்பாளியைப் பார்க்கலாம்.
முகேஷ் குமார் - வயது 52, பீஹாரின் சமஸ்திபூர் ஜில்லாவைச் சேர்ந்தவர்.
தொழில் – ராஜ்தானி விரைவு வண்டியில் படுக்கை விரிப்புகள் தருவது. மாதத்தில் இருபது
நாட்கள் ரயிலேயே ஓடி விடும் இவரது மாத வருமானம் ஏறக்குறைய 6000 மட்டுமே [ஒரு முறை பயணம்
செய்ய 300 ரூபாய், 20 பயணங்கள் செய்தால் 6000 ரூபாய்]. இதுவும் முழுதாய் கிடைப்பது
பயணிகள் கையில் – எப்படி என்கிறீர்களா? பயணிகளுக்குக் கொடுக்கும் படுக்கை விரிப்புகளோ,
கைத் துண்டுகளோ அவர்கள் கையோடு கொண்டு போய்விட்டால், இவரது சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள்!
தவிர, வரும் பயணிகளிடம்
பயணத்தில் முடிவில் டிப்ஸ் கேட்டு கிடைக்கும் பணம் சில சமயங்களில் மாதத்திற்கு இரண்டாயிரம்
முதல் நாலாயிரம் வரை. ”ராஜ்தானி வண்டியில்
அவர்கள் கொடுத்த பணத்திற்கு உணவு தரும் சிப்பந்திகளுக்கு நிறைய டிப்ஸ் கொடுக்கும் பயணிகள்,
நான் அவர்களுக்கு படுக்கை விரிப்புகள் தருவது மட்டுமல்லாது, பயணம் முழுவதும் காவல்
காப்பது, ரயில் பெட்டியைச் சுத்தம் செய்ய வைப்பது, AC சரியாக வேலை செய்யவில்லையெனில்,
அதற்கான பணியாளை அழைத்து வந்து சரி செய்ய வைப்பது என பல விஷயங்களைச் செய்தாலும் எனக்கு
டிப்ஸ் கொடுப்பதற்கு இஷ்டப் படுவதில்லை”, என ஆதங்கப் படுகிறார்.
ஒப்பந்த ஊதியம்
பெறும் இவர் தனது சம்பாத்தியத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறார். பீஹாரிகளிடம் “கௌன் ஜில்லா?”
என அவர்களது மொழியில் அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கேட்டால் அவ்வளவு சந்தோஷம்!
முகேஷ் குமார் சமஸ்திபூர் ஜில்லாவைச் சேர்ந்தவர். நான்கு குழந்தைகள் – மூன்று பெண்கள்
ஒரு மகன். இரண்டு பெண்களையும் பட்டப் படிப்பு வரை படிக்க வைத்து, வேலையும் செய்கிறார்கள்,
கல்யாணமும் செய்து கொடுத்து விட்டார். இன்னும்
ஒரு பெண்ணும், பையனும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நல்ல படிப்பும்
வேலையும் கிடைத்துவிட்டால், தான் வேலை செய்து அவதிப் படாது, மகனின் நிழலில் இருந்துவிடுவேன்
எனச் சொல்கிறார்.
ஒவ்வொரு பயணத்தின்
போதும் வண்டி ஓடும்போது உணவுக்குப் பிரச்சனையில்லை – எப்படியும் மீதமிருக்கும் உணவு
உண்டு பொழுதினைக் கழித்து விடலாம். வண்டி ஒரு பயணம் முடித்து, அடுத்த பயணம் தொடங்கும்
வரை ரயில் நிலையத்தில் இருக்கும்போது உணவு வெளியில் வாங்கித்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது
– நாளொன்றுக்கு வெறும் ரொட்டியும் – [Dha]தாலும் சாப்பிட்டால் கூட ஐம்பது முதல் அறுபது
ரூபாய் வரை செலவாகிறது.
தொடர்ந்து பயணத்தில்
இருப்பதால் குடும்பத்துடன் இருக்க முடிவதில்லை.
மாதத்தின் பெரும்பகுதி ஓட்டத்திலேயே போய்விட, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ,
வருடத்திற்கு ஒரு முறையோ தான் பீஹார் சென்று மனைவி மக்களுடன் இருக்க முடிகிறது. மற்ற
சமயங்களில் ரயில் தான் மனைவி, பயணிகள் தான் மக்கள் என ஓடுகிறது வாழ்க்கை இவருக்கு.
ஒவ்வொரு பயணத்திலும்
சில நல்ல மனிதர்கள் வந்து தன்னை மதித்துப் பேசி, பயணம் முடியும்போது பத்து முதல் ஐம்பது
ரூபாய் கொடுத்தாலும், தன்னை அவமதிக்கும் மனிதர்களையே அதிகம் சந்திப்பதாகச் சொல்லி வருத்தப்
படுகிறார் முகேஷ். பயணத்தின் முடிவில் எல்லோரிடம் டிப்ஸ் கேட்டு வர பலர் அவரை பிச்சைக்காரரை
துரத்துவது போல துரத்துவதைக் கண்ட போது அவரின் வருத்தம் புரிந்தது.
தற்போது +2 படித்து
வரும் மகனையும் பட்டப் படிப்பு படிக்க வைத்து ஒரு வேலையிலும் அமர்த்தி விட்டால், “அக்கடாவென”
பீஹாரில் சென்று விழுந்து விடுவேன் எனச் சொல்லும் முகேஷ் குமார் அந்த நன்னாளை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறார். விரைவில் அவருக்கு அந்த
நன்னாள் அமையட்டும் என மனதில் பிரார்த்தித்தேன்.
பயணத்தின் நடுவில்
சில மணித்துளிகளை அவருடன் பேசிக் கழித்ததில் எனக்கும் பொழுது போயிற்று. உங்களுடன் பகிர்ந்து
கொள்ள ஒரு விஷயமும் கிடைத்தது.
வேறொரு உழைப்பாளி
பற்றி பார்க்கும் வரை……
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..
