ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

கதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – டிப்ஸ்




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல் - டெஸ்கார்ட்டெஸ்.

மனச் சோர்வு – 6 ஆகஸ்ட் 2019

ஒரே விதமான வேலைகளையே மீண்டும் மீண்டும் செய்யும் போது சிலநேரம் மனச்சோர்வு ஏற்படுகிறது. எவ்வளவு தான் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும் மிஞ்சிய நேரங்களில் மனதுக்குள் எழும் எண்ணங்கள். எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என கேட்கும் மனது!! இப்படி எல்லாமும் சேர்ந்து கொண்டு என்னை முகப்புத்தகத்திலிருந்து விலக்கி வைத்தது. எல்லாவற்றுக்கும் மனம் தானே காரணம்!!!

இந்த இடைப்பட்ட நாட்களில் வாசிக்கலாம் என புத்தகங்கள் வாங்கி வந்தேன். இணையத்தை பார்த்து சில ரெசிபிக்களை முயற்சி செய்தேன். நொடிகளில் பக்குவம் தப்பி விட்டது :) சிறுவயதில் பக்கத்து வீட்டு மல்லிகாம்மாவிடம் கற்றுக் கொண்ட வயர் கூடை பின்னலாம் என்று துவக்கியுள்ளேன் :)

மகளுடன் சினிமாவுக்கு சென்று வந்தேன். அதைப் பற்றி கீழே சொல்லி இருக்கிறேன்.

ஜோதிகாவின் ஜாக்பாட் – 6 ஆகஸ்ட் 2019


கடந்த வெள்ளியன்று வெளியான ஜோவின் ஜாக்பாட் படத்துக்குச் செல்ல வேண்டும் என்று மகள் சொல்லிக் கொண்டே இருந்தாள். எனக்கும் ஜோவின் 36 வயதினிலே, காற்றின் மொழி ஆகிய படங்கள் பிடிக்கும் என்பதால் ஞாயிறன்று சென்று வந்தோம்.

காமெடிக்கு பஞ்சமில்லாத பொழுதுபோக்குக்கு ஏற்ற படம். ஹீரோயினை வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. ஜோவின் ஸ்டண்ட் காட்சிகள் பிரமாதம்.பெரிதாக ஆயுதங்கள் இல்லையென்றாலும் தன்னைக் காத்துக் கொள்ள பெண்களால் முடியும் என்பது தெரிகிறது. பார்க்கும் போதே நமக்கும் அந்த தைரியம் தொற்றிக் கொள்ளும் :)

ரேவதி ஜோவுக்கு இணையாக நடிப்பில் கலக்குகிறார். இது போக மொட்ட ராஜேந்தர், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சச்சு, மனோபாலா, சமுத்திரக்கனி, யோகி பாபு என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.

"மாநகரக் காவல்" என்ற விஜயகாந்த் படத்தில் டெர்ரராக இருந்த ஆனந்த்ராஜ் இவர் தானா என்று தோன்றியது. சமீப காலங்களில் இவர் காமெடியனாக காட்சிப் படுத்தப்படுகிறார் என்றாலும் இங்கு மானஸ்தியாக ரசிக்க வைக்கிறார் :)

கதையைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை :) உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் தரும் பொழுதுபோக்குக்கு ஏற்ற படம். நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

ரோஷ்ணி கார்னர் – 7 ஆகஸ்ட் 2019:



மகளின் சமீபத்திய ஓவியம்!! இப்போதெல்லாம் அவளுக்கு நேரமே கிடைப்பதில்லை :) கிடைக்கும் நேரத்தில் விடாமல் தொடர்ந்து வரையச் சொல்லி வருகிறேன்.

Bottle reuse - Tips Tips! – 7 ஆகஸ்ட் 2019



என்னுடைய அடுக்களையில் ஏறக்குறைய பிளாஸ்டிக் இல்லாமல் செய்து விட்டேன். இனி எந்தப் பொருள் வாங்க நினைத்தாலும் இயற்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதற்கு மாற்றுப் பொருள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

இப்படி அடுக்களையை அடுக்கும் போது காலியான தேன் பாட்டில்களை உபயோகித்துக் கொள்ளலாமே என யோசனை செய்தேன். ஆனால் அதில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களை முழுமையாக நீக்க முடியவில்லை. அப்படி எடுத்தாலும் அந்தப் பசை நீங்கவில்லை.

இணையத்தில் தேடியதில் How to remove stickers in glass bottles என்று பத்து பேராவது பதிவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து செய்ததில் பளிச்சென்று மாறிவிட்டது. அந்த டிப்ஸ் இதோ. வெதுவெதுப்பான நீரில் கண்ணாடி பாட்டில்களை அரைமணி போட்டு வைத்து எடுத்து தேய்த்தால் ஸ்டிக்கர் போய்விடுகிறது. ஆனால் பசை!!!

அதற்கும் வழி இருக்கிறது. பேக்கிங் சோடா என்கிற சமையல் சோடா சிறிதளவு எடுத்து அதனுடன் சமையல் எண்ணெய் சிறிதளவு கலந்து பாட்டிலின் மீது தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்தால் பளிச் பளிச் தான் ஃப்ரெண்ட்ஸ் :)

இப்படி பாட்டிலை வீணாக குப்பையில் போடுவதாலும், அப்படியே உபயோகித்தாலும் ஸ்டிக்கர்கள் சரியாக நீக்கப்படாமல் இருந்தால் நன்றாக இருக்காது அல்லவா!! இந்த டிப்ஸ் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2010-ஆம் ஆண்டு இதே வாரத்தில் [அதாவது 10 ஆகஸ்ட்!] அன்று தான் கோவை2தில்லி வலைப்பூவில் பதிவுகள் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்! 291 பதிவுகள் எழுதி 2017 ஜனவரியுடன் கோவை2தில்லி தளத்தில் எழுதுவது நின்று விட்டது. முகநூலில் அவ்வபோது எழுதுவதோடு சரி. அப்படி எழுதுவதன் தொகுப்பு இங்கே என்னவரின் வலைப்பூவில் சேமிப்பாக மட்டும்! வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்தது ஒரு கனாக் காலம்!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

24 கருத்துகள்:

  1. முகநூலிலும் பார்த்து ரசித்தேன். இங்கேயும் பார்த்தேன். பழைய பதிவுக்கும் சென்று பார்க்கிறேன். இன்னிக்கு என்னமோ எல்லாப் பதிவுகளும் திறக்க நேரம் எடுக்கிறது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.

      முகநூலில் வந்தவை இங்கேயும் ஒரு சேமிப்பாக...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆமாம் கீதாம்மா... இன்னிக்கு நீங்க தான் ஃபர்ஸ்ட்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. எப்போதும் காலையில் வந்து விடும் கீதாஜி இன்றைக்கு மிஸ்ஸிங்! பிசி போல.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஆமாம் டென்ஷன் அதோடு தீர்ந்து விடும். பொன்மொழி சூப்பர். காலை வணக்கம் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ரோஷ்ணிக்கு பாராட்டுகள். பேஸ்புக்கிலும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் வந்ததை தானே இங்கேயும் சேமிப்பாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கதம்பம் அருமை சகோ

    //இனி எந்தப் பொருள் வாங்க நினைத்தாலும் இயற்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதற்கு மாற்றுப் பொருள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்//

    ஸூப்பர் வாசகம் இதை எல்லோரும் உணரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கைக்கு பாதிப்பில்லாத வகையில் - உணர்ந்து கொண்டால் நல்லது தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஜி!

      நலம் - நாடுவதும் அதுவே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இந்த எண்ணெயுடன் Baking Soda பழைய தொழில் நுட்பமாயிற்றே...

    எப்படியோ பாட்டில் சுத்தமாயிற்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய தொழில்நுட்பம் - இருக்கலாம். அவருக்குப் புதிது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. முகநூலில் படித்தேன், இங்கும் படித்தேன்.
    ஆதியின் யோசனைகள், ரோஷ்ணியின் ஓவியம் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.
    ரசித்த வாசகம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. வாசகம், ஓவியம், டிப்ஸ் என அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. இனிய மாலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் ஆதி.

    எவ்வளவு தான் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும் மிஞ்சிய நேரங்களில் மனதுக்குள் எழும் எண்ணங்கள். எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என கேட்கும் மனது!!//

    இந்த வரியை வாசித்ததுமே இது ஆதியின் பதிவுனு தெரிந்துவிட்டது. எனக்கும் தோன்றியதுண்டு. சிலவருடங்களுக்கு முன். ஆனால் யதார்த்தம் வேறு என்றாகிப் போனதால் அப்படியே விட்டுவிட்டேன்.

    ரோஷ்ணி குட்டிக்கு வாழ்த்துகள். அவளை நீங்கள் ஊக்கப்படுத்துவது மிக நன்று.

    ஜோ படம் நன்றாக இருக்கிறதா? நோட்டட்.

    நானும் கண்ணாடி பாட்டில்கள் வீட்டில் இருப்பவற்றை இப்படித்தான் பயன்படுத்துவது. நெருங்கிய உறவினர்கள் யாரேனும் பாட்டில்கள், ஜாடிகள் பயன்படுத்தாமல் வைத்திருந்தான் அவர்களிடம் இருந்து வாங்கி வந்துவிடுவேன். சில பாட்டில்கள் ப்ளாஸ்டிக் மூடியுடன் - ஹார்லிக்ஸ் போன்றவை. பரவாயில்லை என்று வைத்துள்ளேன். நீங்கள் சொல்லியிருக்கும் அதே முறையில் தான் பசையை எடுத்தது. மற்றொருமுறை நான் செய்தது பசை இருக்கும் இடத்தில் சபீனா/பீதாம்பரி போட்டு அப்படியே திக்காக ஒட்டி ஊற வைத்து அப்புறம் ஸ்டீல் ஸ்கரப்பரால் தேய்த்து விடுவேன்.

    இன்னும் லேபல் கூட எடுக்காமல் இருக்கும் பாட்டில்களும் இருக்கின்றன. மெதுவாக எடுத்துக் கொண்டு விடலாம் என்று வைத்துவிட்டேன்.

    கதம்பம் சூப்பர். பழைய பதிவு வாசிக்க வேண்டும். வெங்கட்ஜி கொடுத்த பழைய லிங்க் கூட இன்னும் வாசிக்க வில்லை...நிறைய ப்ண்டிங்க் இருக்கிறது.

    நெட் வந்தாலும் கூகுள் பேஜஸ் வராமல் இவ்வளவு நேரம் படுத்த சரி செய்து இதோ வந்தாச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதாஜி.

      நெட் படுத்தல் - எனக்கும் இங்கே கொஞ்சம் பிரச்சனை இருந்தது. நேற்று அழைத்துச் சொல்ல, இன்றைக்கு வந்து சரி செய்து சென்றார்கள்.

      பாட்டில்கள் - என்னிடமும் தில்லியில் சில உண்டு! பயன்படுத்துகிறேன்.

      பழைய பதிவுகள் - முடிந்த போது வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  11. கண்ணாடி பாட்டில்களில் இருக்கும் லேபிள்களை நீக்கும் முறை அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பு தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் ப்ரகாசம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....