புதன், 28 ஆகஸ்ட், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயணம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு சிறப்பான வாழ்க்கைத் தத்துவத்துடன் ஆரம்பிக்கலாம்.

காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால் எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல…!



படம்-1: போக்குவரத்து நெரிசலில் எங்கள் பேருந்து நின்ற போது எடுத்த படம்...


இந்த வாரத்தின் திங்கள் அன்று ”எங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்” என்ற பதிவில் தலைநகர் தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் நோக்கி பயணித்தது பற்றி எழுதி இருந்தேன். இந்த முறை ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் சில கிராமங்களை நோக்கியே எங்கள் பயணத்தினை திட்டமிட்டோம். இந்திய திபெத் எல்லையில் இருக்கும் சில கிராமங்களை நோக்கி பயணிப்பது தான் எங்கள் எண்ணமாக இருந்தது. தலைநகர் தில்லியிலிருந்து கிட்டத்தட்ட 15 முதல் 20 மணி நேரத்திற்கும் மேலாக சாலை வழிப் பயணம் செய்தால் தான் இந்த கிராமங்களை அடைய முடியும். சண்டிகட் நகரைத் தாண்டிவிட்டால் முற்றிலும் மலைப்பாங்கான பகுதிகள் என்பதால் சில கிலோமீட்டர்களைக் கடக்கவே நீண்ட நேரம் எடுக்கும். பாதையும் சரியான பாதைகள் அல்ல!


படம்-2: மலைகளில் தவழும் மேகம்...


படம்-3: சாலையிலிருந்து கீழே ப்ரவாகமாக ஓடும் நதி...

நாங்கள் இரண்டு பேர் மட்டுமே பயணிப்பது என முடிவு செய்திருந்ததால் தனியார் வாகனத்தினை அமர்த்திக் கொண்டு செல்வது என்பது அதிக பணம் செலவு வைக்கும் ஒரு வழி. அதனால் அரசுப் பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தோம். இந்திய திபெத் எல்லையில் இருக்கும் chசித்குல் என்ற கிராமத்திற்குத் தான் நாங்கள் செல்ல முடிவு செய்திருந்தோம். இந்தக் கிராமத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்டால் – ஒன்றுமே இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். வழக்கமாக சுற்றுலா தலம் என்ற நம்பிக்கையோடு அங்கே செல்ல நினைப்பவர்கள் செல்லாமல் இருப்பது நலம். இந்தக் கிராமத்தில் மொத்தமாக சில வீடுகள், சில தங்குமிடங்கள், ஒன்றிரண்டு உணவகங்கள் தவிர வேறு எதுவும் இல்லை. சுற்றிலும் ஹிமாலய மலை, நடுவே Bபாஸ்Pபா நதி, மற்றும் நதிப்புற சமவெளியான Bபாஸ்Pபா சமவெளியின் முதல் கிராமம் தான் chசித்குல்!


படம்-4: மலைகள், மேகங்கள் சூழ ஒரு சிறு கிராமமும் அதில் சில வீடுகளும்...


படம்-5: புத்த மத வழிபாட்டுத் தலம் ஒன்றின் கூரை... பின்புலத்தில் பனி படர்ந்த ஹிமாலயாஸ்...

கூடுதல் தகவல் ஒன்றையும் இங்கே சொல்லி விடுகிறேன். BSNL தவிர வேறு எந்த அலைபேசியும் இங்கே எடுக்காது. BSNL DATA நிச்சயம் கிடைக்காது. அதனால் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக நதிக்கரை ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி இருக்க நினைப்பவர்கள் மட்டுமே chசித்குல் போன்ற கிராமங்களுக்குச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஷிம்லா, மணாலி போன்ற இடங்கள்.  இந்த மாதிரி ஒரு கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்க வேண்டும் என்பது எனது ஆசைகளில் ஒன்று – அதுவும் நினைத்த இடத்தில் இறங்கி, நடந்து, உண்டு, முதுகுச் சுமையோடு ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது என்ற உடனேயே அந்தப் பயணத்திற்கான காத்திருப்பில் நான் இருந்தேன்.


படம்-6: பனிபடர்ந்த மலையுச்சி - ஒரு கிட்டப் பார்வை...


படம்-7: ஆப்பிள் தோட்டம்... இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை...

chசித்குல் – கடல்மட்டத்திலிருந்து 11315 அடி உயரத்தில் ஒரு கிராமம். இந்திய திபெத் எல்லையில் கடைசி கிராமம் – அங்கிருந்து திபெத் கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் தொலைவு என்றாலும் இந்த கிராமத்திற்குப் பிறகு வேறு எந்த கிராமமும் இல்லை – மலைகள் மலைகள் அந்த மலைகளில் உள்ள எல்லையைப் பாதுகாக்கும் இந்தியாவின் ITBP Paramilitary Force! இந்த இடத்திற்குச் சென்று சேர்வது தான் எங்கள் திட்டம். தில்லியிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவு, எத்தனை நேரம் எடுக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்! தில்லியிலிருந்து சண்டிகட், ஷிம்லா வழியாக ராம்பூர் வரை சுமார் 14.30 மணி நேர பயணம். கிட்டத்தட்ட அரை நாளுக்கும் மேலாக பேருந்துப் பயணம். அதிலேயே உடம்பு உங்களிடம் கெஞ்ச ஆரம்பித்திருக்கும். நாங்கள் சென்றது இரவு நேரப் பயணம் என்பதால் கொஞ்சம் அதிக நேரம் எடுத்தது. தில்லியில் மாலை 07.30 மணிக்குப் புறப்பட்ட HIMGAURAV 2X2 AC பேருந்து ராம்பூர் Bபுஷர் சென்று சேர்ந்த போது அடுத்த நாள் காலை 10.00 மணி!

படம்-8: நாங்கள் தங்கிய விடுதி...


படம்-9: ஊரில் இப்படி நிறைய செல்லங்கள்... குலைப்பது கூட இல்லை! அனைத்தும் நட்பு பாராட்டுகின்றன வாலை ஆட்டியபடி...

ராம்பூர் Bபுஷர் சென்று சேர்ந்த பிறகு, அங்கே பேருந்து நிலையத்தின் அருகிலேயே ஒரு தங்குமிடத்தில் வேலைகளை முடித்து, குளித்து தயார் ஆனோம். அங்கிருந்து Reckong Peo அல்லது Kalpa ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இரவு தங்குவதாகத் திட்டம். ராம்பூர் Bபுஷர் நகரிலிருந்து எங்களுக்குக் கிடைத்த ஹிமாச்சல அரசுப் பேருந்து Reckong Peo வரை மட்டுமே செல்லும் எனச் சொல்ல, அந்தப் பேருந்தில் புறப்பட்டோம். ராம்பூரிலிருந்து பியோ வரையான தொலைவு கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர். முழுவதுமே மலைப்பாதை என்பதால் எங்களுக்கு ஐந்து மணி நேரம் ஆனது. தனியார் வாகனம்/மகிழ்வுந்து என்றால் இந்தத் தொலைவினை மூன்றரை முதல் நான்கு மணி நேரத்தில் கடக்கலாம். ஆனால் நாங்கள் சென்றது அரசுப்பேருந்து என்பதால் வழியில் பல சிற்றூர்களில் நின்றும், மலைப்பாதையில் பொறுமையாகவும் சென்று சேர்ந்தது.


படம்-10: வழிபாட்டுத் தலம் - சற்றே தொலைவிலிருந்து...


படம்-11: பாதையின் இரு மருங்கிலும் ஆப்பிள் தோட்டம்...




இந்தப் பாதைகள் முழுவதுமே ஆபத்தான பாதைகள். ஒரு பக்கம் மலை என்றால் இன்னொரு பக்கம் பெரிய பள்ளம் – பள்ளமான இடம் வழி ஓடும் சட்லஜ்/Bபாஸ்pபா ஆறுகள். கொஞ்சம் தவறினாலும் பேருந்து விபத்துக்குள்ளாக நேரிடலாம் என்பதால் ரொம்பவே ஜாக்கிரதையாக வாகனத்தினைச் செலுத்த வேண்டியிருக்கும். நாங்கள் பேருந்தில் பயணித்தபடியே ஒன்றிரண்டு காணொளிகளை எடுத்தேன் – வெளியே அலைபேசி விழுந்து விடுமோ என்ற பயத்துடனே – அத்தனை குலுக்கல்கள்! அந்தக் காணொளியில் ஒன்றினை இத்துடன் இணைத்திருக்கிறேன். காணொளி பார்த்தால் எத்தனை கடினமான பாதை என்பதை நீங்கள் உணர முடியும். ரெக்காங்க் பியோ கொஞ்சம் பெரிய ஊர் என்பதால் மக்கள் கூட்டமும் அதிகம். எங்களுக்குத் தேவை அமைதி என்பதால் அங்கிருந்து ஒரு வாகனத்தில் கல்பா என்ற சிறு கிராமத்தினைச் சென்றடைந்தோம்.



படம்-12: ஆப்பிள் தோட்டத்திற்கு நடுவே இப்படி சில செடிகள்... இவையும் பயனுள்ளவையே..



படம்-13: மலைப்பிரதேசத்தில் இப்படி ஒரு வீடு அமைந்து விட்டால் மகிழ்ச்சி...


கல்பா ஒரு அழகான சிறு கிராமம். சுற்றிலும் ஹிமாலயாஸ், ஊரெங்கும் அழகான ஆப்பிள் தோட்டங்கள், ஒரு கோவில், ஒரு புத்த மத வழிபாட்டுத் தலம் ஒரு சிறு கோட்டை என ரொம்பவே அழகான இடம். இங்கேயும் அலைபேசி தொல்லைகள் இருக்காது – ஏனெனில் பெரும்பாலான அலைபேசிகள் இங்கே முழுமையான அமைதி மார்க்கத்தினை கடைபிடிக்கின்றன! No Signal! அதனால் நிம்மதியாக இயற்கையை ரசித்தபடி இருக்கலாம். கல்பா கிராமத்தில் என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.


படம்-14: மேலே மேலே செல்லும் பாதை...


படம்-15: ஆகஸ்ட் மாதத்தில் கூட மலை உச்சியில் பனி... குளிர் நாட்களில் முழுமையாக பனிச் சிகரமாகவே இருக்கும்...

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

44 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    இடுக்கண் வருங்கால் நகுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      இடுக்கண் வருங்கால்... நகுவோம்! அதுவே சிறந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. போக்குவரத்து நெரிசல். முன்னால் இவ்வளவு பெரிய இடைவெளி இருந்தும் அதில் ஆட்டோ, டூ வீலர்ஸ் நுழையாதிருப்பது ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பிரதேசம் என்பதால் இங்கே ஆட்டோ, ரிக்‌ஷா போன்றவை இல்லை. டூ வீலர்ஸ் கூட குறைவு தான். மலைப்பிரதேசத்திற்கு பைக்குகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பாதைகளும் இடங்களும் அருமை. முதல் படம் புத்தமத வழிபாட்டுத்தலம் மேலே ஹிமாலயாஸ் படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தமத வழிபாட்டுத் தலம் மேலே ஹிமாலயாஸ் படம் எனக்கும் பிடித்த படங்களில் ஒன்று. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. செல்லங்களின் கண்களிலேயே நட்பு தெரிகிறது! வசதியான பெரிய இடத்து செல்லங்கள் போல இருக்கிறது. அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்களிலேயே நட்பு - உண்மை. தெருவில் சுற்றி வரும் செல்லங்கள் தான் இவை அனைத்துமே! வீடுகளில் வளர்க்கப்படும் செல்லங்களும் பார்க்க முடிந்தது. கட்டிப் போட்டிருந்ததால் குரைத்துக் கொண்டிருந்தது - அதனால் படம் எடுக்கவில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அந்த இயற்கைக் சூழலில் வீடு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் - கொஞ்ச நாட்களுக்கு! நம்மை மாதிரி ஜனங்களுக்கு சீக்கிரமே போர் அடித்துவிடும். அந்த ஏர்டெல் விளம்பரப்பெண் மலையில் எல்லாம் உட்கார்ந்துகொண்டு அவர்கள் சிக்னல் அங்கு கிடைப்பதாக அலட்டுவதெல்லாம் பொய்யா கோப்பால்....!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச நாளில் போர் அடித்து விடும். உண்மை தான். அந்த மாதிரி இடங்களில் இருப்பது கொஞ்சம் சவாலான விஷயம்! வருடத்தின் மூன்று மாதங்கள் கடும் பனிப்பொழிவு உண்டு.

      //அந்த ஏர்டெல் விளம்பரப்பெண் மலையில் எல்லாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் சிக்னல் அங்கு கிடைப்பதாக அலட்டுவதெல்லாம் பொய்யா கோப்பால்....!!// ஹாஹா... விளம்பரத்தில் வரும் பல விஷயங்கள் பொய் தானே ஸ்ரீராம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. எனக்கும் இந்த மாதிரி இடத்திள் ஓரளவு வசதியுடன் (சிறிய ஆனால் நமக்கு ஏற்ற வசதியோட வெஸ்டர்ன், நல்ல பாத்ரூம், ஹால் மற்றும் பயிரிட 1/2 கிரவுண்ட் நிலம்) இருந்தா சொர்க்கம்னு தோணுது (தண்ணீர் இருக்கணும்). போர் அடிக்கும்னு தோணலை. நம்ம உள்ளூர்லயே போரடிப்பதனால்தானே இணையத்துக்கே வர்றோம். இல்லைனா சொந்தம் பந்தமோட நல்லா பேசி வாழ்க்கை கழியுமே.

      கடும் பனிப்பொழிவு - இது என்னவோ பெரிய சங்கடம் மாதிரிச் சொல்றீங்களே... நினைத்தாலே இனிக்குது. இருந்தால்? தெரியலை..ஹா ஹா

      நீக்கு
    3. பனியில் தொடர்ந்து இருந்தால் அதன் சிரமம் புரியும். அதை அனுபவிக்காதவரை சுகமாகவும் சொர்க்கமாகவும் தெரியும். குளிரில் உடலே நடுங்கும். தண்ணீர் சுட வைத்து எடுத்துத் தம்பளரில் விடுவதற்குள் ஆறி விடும்.

      நீக்கு
    4. //போர் அடிக்கும்னு தோணல!// :) இந்த இடங்களில் வசதிகள் குறைவு. எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தால் இந்த இடம் நன்றாக இருக்கும்.

      அதிக குளிர்/பனிப்பொழிவு கொஞ்சம் கஷ்டம்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    5. இந்தியாவின் சீன எல்லைக்குச் சென்றபோது முழுவதும் உரைந்து கிடந்த நீர்நிலையில் நடந்து கொஞ்சம் ஐஸ்கட்டியை உடைத்து உள்ளே இருந்து தண்ணீர் எடுத்து குடிக்க நேர்ந்ததைப் பார்த்தோம். கொஞ்சம் கஷ்டம் தான். அங்கே சுடுநீர் கொதித்த பாத்திரத்தில் இருந்து எடுத்த உடனேயே குளிர்ந்து விடும் நிலை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. காணொளி - வளைவில் திரும்பும் நேரம்தான் பாதையின் அபாயம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளைவில் திரும்பும் நேரம் தான் பாதையின் அபாயம் தெரிகிறது - உண்மை தான் ஸ்ரீராம். இப்படி நிறைய இடங்களில் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    வாழ்க்கைத் தத்துவம் நன்றாக உள்ளது.
    ஆம்! காயங்களை சிரிப்புடன் ஏற்றுக் கொள்ள தனி மனது வேண்டும். சிறந்த தத்துவம்.

    தங்கள் பயணம் அழகான ஆனால், உண்மையிலேயே ஆபத்தான பயணமும் கூட. சென்ற பாதைகளின் வளைவுகளை பார்க்க பயமாகத்தான் உள்ளது.

    அழகான படங்கள். மலைகளும். மலைகளை தழுவிய பனி படர்ந்த மேக மூட்டங்களும், பார்க்க மிகவும் ரம்மியமாக உள்ளது. ஆப்பிள் காய்த்து குலுங்கும் ஆப்பிள் தோட்டம் கண்ணுக்கு விருந்து.

    நான் தங்களது சென்ற பதிவை படிக்கவில்லை.அதையும் படித்து விட்டு, காணொளியும் கண்டு விட்டு பின் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்து கொண்ட படங்களும் சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      முந்தைய பதிவு - முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். காணொளி பார்த்தால் பாதையின் கடுமை தெரியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  8. படங்கள் நல்லா இருக்கு. பயணம் நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க. பனிச் சிகரங்களில் செல்ல முடிந்ததா என்று அறிய ஆவல் (ஏற்கனவே இந்த மாதிரி பனி புதையும் இடங்களில் நடந்திருக்கீங்க இல்லை? முடிந்தா சுட்டி தாங்க)

    நீங்க இரண்டுபேரும் ஹிந்திலதான் கம்யூனிகேட் பண்ணிப்பீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பயணத்தில் பனிப்பொழிவு ஹிமாலயாஸ் மேல் பகுதியில் தான் மீதி இருந்தது. அதனால் அங்கே செல்லவில்லை. பார்த்தது மட்டுமே. சென்ற பயணங்களில் குல்லு மணாலியில் பனிபுதையும் இடங்களில் நடந்திருக்கிறேன். என் வலைப்பக்கத்தில் வலப்புறத்தில் ”ஹனிமூன் தேசம்” என்ற தலைப்பில் தொடரின் அனைத்து பகுதிகளுக்குமான ட்ராப் டவுன் மெனு உண்டு. அங்கே முழு தொடரும் வாசிக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. ஆப்பிள் தோட்டங்கள் ..... என்ன என்னவோ ஆசையைக் கிளப்பிவிடுகிறீங்க நீங்க. துளசி டீச்சரும் சொல்லியிருந்தாங்க... முக்திநாத் போகும் வழில நிறைய ஆப்பிள் வாங்கினாங்கன்னு (நாங்க போனபோது சாளக்ராமம் விக்கிற கடை தவிர வேற பார்க்கலை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிள் தோட்டங்கள் - குலூ மணாலி பயணத்திலும் பார்த்தேன். அப்போது பூ விடும் காலம். இப்போது காய்த்துக் குலுங்குகிறது. நாங்கள் சென்றது Higher Ranges என்பதால் அறுவடைக்கு நாள் இருக்கிறது. கீழேயுள்ள நார்க்கண்டா பகுதிகளில் அறுவடை முடிந்து விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. சுவையான ஆப்பிள்களை ஃப்ரெஷ்-ஆக மரத்திலிருந்து பறித்து சாப்பிட முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. இயற்கை தான் எவ்வளவு அழகு...!

    தேர்ந்தெடுத்த இடமே யாரும் செய்யாதது... & பேருந்து பயணம்...

    பாதையை காணொளி சொல்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் அழகுக்குக் குறைவே இல்லை. மனிதர்கள் அலங்கோலப்படுத்தும் வரை அழகுக்குக் குறைவில்லை தனபாலன்.

      பேருந்துப் பயணம் - இப்படியான Backpackers Trip செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. இப்படியும் பயணிக்க ரசனை வேண்டும் ஜி அது உங்கள் இருவரிடமும் உள்ளது வாழ்த்துகள்.

    காணொளி கண்டேன்.
    பொன்மொழியின் கருத்து பிரமிக்க வைத்தது ஆனால் இது சாத்தியமா ? என்பது அதைவிட பிரமிப்பு.

    தொடர்கிறேன் கல்பாவுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி பயணிக்க ரசனை வேண்டும் - உண்மை. சிலருக்கு இது பிடிப்பதில்லை.

      பொன்மொழி - முயன்றால் முடியாதது இல்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  12. பனிபடர்ந்த மலையுச்சி - ஒரு கிட்டப் பார்வை...வாவ் ..அட்டகாசமான காட்சிகள் ..


    வழிபாட்டுத் தலம் உள்ள காட்சிகளும் மனதை கவர்கின்றன ..

    எங்களுக்கு எல்லாம் இப்படி செல்ல வாய்ப்பே இல்ல ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்களுக்கு எல்லாம் இப்படிச் செல்ல வாய்ப்பே இல்ல...// கொஞ்சம் கடினமான பயணம் தான்.

      படங்களும் காட்சிகளும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நீங்கள் எழுதியிருப்பதைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே மனம் நிறைந்தது. நம்மால் முடியாது என்றிருப்பதை இன்னொருத்தர் விவரிக்கும் போதே அந்த நிறைவு வந்து விடுகிறது. நீளமாக ஒரு பதிவையும் விவரமாக எழுதி புகைப்படங்களும் சேர்த்து பிறர் வாசிப்புக்கு தருவது என்பது பாராட்ட வேண்டிய விஷயம். உங்கள் சுற்றுலா ஆர்வம் சிறக்க!! மிக்க நன்றி, வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நாம் பார்த்து ரசித்த இடங்களைப் பற்றி அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி தானே... இது போன்ற இடங்களுக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்றாலும் படிக்கவாது படிக்கலாமே என்ற எண்ணம் தான் இங்கே பகிர்ந்து கொள்ள காரணம் ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. காணொளியையும் பார்த்து வியந்தேன். HISTORY சேனலில் லாரி டிரைவர்கள் இம்மாதிரி குறுகிய மலைப்பாதைகளில் லாரிகளை இயக்குவதைப் பார்த்து மலைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான பாதைகள் ஆபத்தானவை தான். நானும் யூவில் சில விபரீத பாதைகளைப் பார்த்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீ.வி. ஐயா.

      நீக்கு
  15. பத்ரிநாத் போகும்போது நிறைய ஆப்பிள் வாங்கினோம். ஆப்பிள் தோட்டங்களைப் பார்த்ததில்லை. இப்போத் தான் வெங்கட்டின் படங்கள் மூலம் பார்க்கிறேன். பார்க்க ஆசை தான்! இனிமேல் எல்லாம் ஹிமாலயப் பயணம் செய்ய முடியுமா சந்தேகமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷிம்லாவிற்கு மேலே செல்லச் செல்ல நிறைய ஆப்பிள் தோட்டங்கள் தான். அது போல குலூ-மணாலி பக்கங்களிலும் நிறைய ஆப்பிள் தோட்டங்கள் உண்டு. சீசனில் சென்றால் பார்க்க முடியும்.

      //இனிமேல் ஹிமாலயப் பயணம் செய்ய முடியுமா சந்தேகமே// அவன் நினைத்தால் முடியாதது உண்டோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  16. எல்லாப் படங்களும் அழகாக வந்திருக்கின்றன. கண்ணுக்கும் குளிர்ச்சி, மனதுக்கும் நிறைவு. மேலே செல்லும் பாதை அழகாக வந்திருக்கிறது. செல்லங்கள் எல்லாம் கொழுகொழுவெனக் காணப்படுகின்றன. திபேத்தியன் நாய்கள் இவற்றை விடப் பெரியவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      திபெத்தியன் நாய்கள் - :) இந்த பகுதியும் திபெத் எல்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. கயிலை யாத்திரையின் போது இம்மாதிரிக்குறுகிய மலைப்பாதைகளில் நிறையப் பயணம் செய்ததால் இந்தக் காணொளி ஆச்சரியம் ஊட்டவில்லை. அங்கே வைதரணி நதி. இங்கே சட்லெஜ்;Bபாஸ்Pஆ நதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை விட மோசமான பாதைகள் இங்கேயும் உண்டு! இருப்பதில் சுலபமாக எடுத்த காணொளி இது தான். மற்ற ஆபத்தான பாதைகளை காணொளியாக எடுக்க முடியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  18. இயற்கை பார்க்கப் பார்க்க ரசிக்க வைக்கிறது ஐயா
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் அழகுக்கு ஈடு ஏது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  19. அன்பு வெங்கட் அருமையான காணொளி.
    பத்ரினாத் செல்லும் வழியில் இது போலப் பாதைகளைக் கண்டு நடுக்கம் ஏற்பட்டதாக அம்மா சொல்வார்.

    நீங்கள் துணிந்து ஆவலுடன் பயணம் செய்வது
    மனதுக்கு மிக மகிழ்ச்சி.
    இமய மலைச் சிகரங்களைக் கண்டதும் மனம் நெகிழ்கிறது.
    நம் பாரதத்தைக் காக்கும் எல்லைகள். அதன் வீரர்கள்.

    இன்னும் நீங்கள் எழுதப் போகும் இடங்களை பற்றி அறிய மிகவும் ஆவல்.
    குளிர்ப்பிரதேச செல்லங்கள் புஷ்டியாக ,கண்ணில் வழியும் அன்போடு காத்திருக்கின்றன.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் பிடித்தமானது என்பதால் தான் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்கிறோம். பெரும்பாலானவர்கள் செல்வதில்லை.

      குளிர்பிரதேச செல்லங்கள் - ரொம்பவே அழகுதான். கூடவே வந்தன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  20. ஆபத்தான மலைப்பாதை பயணம் . இனிய காட்சிகள் மனதுக்கு இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....