வெள்ளி, 30 அக்டோபர், 2020

விடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்

இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நிம்மதி எப்போதும் மனம் சார்ந்ததே.

&&&&&&& 


கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் இருக்கிறேன். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு பிறகு தமிழகப் பயணம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓய்வு எடுக்கவும், நினைத்ததை, நினைத்த போது செய்யவும் ஒரு வாய்ப்பு. இந்த நேரத்தில் இதைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் ஏதுமின்றி எந்த நேரத்திலும் எந்த வேலையும் செய்யலாம் என்று இருக்க ஒரு வாய்ப்பு. நாட்கள் இனிமையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. வீட்டினருடனும், உறவினர்களுடனும் இருக்க, அளவளாவி மகிழ கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு சுகமானது. இருக்கவே இருக்கிறது வேலையும், ஓட்டமும்! இன்னமும் இரண்டு வாரம் இந்த இனிமையை மகிழ்ச்சியுடன் இருந்து உடம்பிலும் மனதிலும் புத்துணர்வை ஏற்றிக் கொண்டு மீண்டும் ஓட்டத்தினைத் தொடங்க வேண்டும்! இந்த ஓய்வு அத்தியாவசியமான ஒன்று என்பதை உணர வைக்கும் இந்த நிமிடங்கள் அவ்வப்போது வாய்க்க வேண்டும்! தீநுண்மி நாட்கள் பலரையும் பலவற்றையும் இழக்க வைத்திருக்கிறது! இழந்தவற்றை மீட்டெடுக்க சில காலம் ஆகலாம்! 


தீநுண்மி காலத்தில் தலைநகர் மனிதர்கள் இருந்த நிலைக்கும் நம் தமிழக மக்கள் இருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம் கண்ணெதிரே தெரிகிறது. இன்னமும் கூட தலைநகரில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் நான் பார்த்த 100 பேரில் 80 பேர் முகக் கவசம் இல்லாமலேயே சுற்றுகிறார்கள். மீதி 20 பேரில் 10 பேர் பெயருக்கு காதில் அதை மாட்டிக் கொண்டு தாடையில் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் - அதன் தேவையை உணர்ந்து கொள்ளாமல் ஏதோ கடமைக்கு “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போவார்” கதையாக, போட்டுக் கொண்டிருக்க்கிறார்கள். மீதி 10 பேர் போட்டுக் கொண்டிருந்தாலும், மற்ற 90 பேர் அவர்களை ஏதோ வியாதியஸ்தர்கள் போல பார்ப்பதும் நடக்கிறது. தினம் தினம் காலையில் நடைப்பயணம் செய்யும்போது முகக் கவசத்துடன் நடக்கும் என்னைப் பார்த்தவுடன் கைகளாலோ, போட்டிருக்கும் துணியின் உதவியோடோ முகத்தினை மூடிக் கொள்பவர்களைக் கண்டால் எரிச்சல் வருகிறது! உடனேயே அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் என்ற எண்ணம் வர, எனக்குள் சிரித்தபடியே நடப்பதைத் தொடர்கிறேன். வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தீநுண்மியுடன் ”பழகலாம் வா…” என்று பழகிக் கொண்டு விட்டார்கள் நம் மக்கள் என்று தோன்றுகிறது. 


தலைநகர் தில்லியில் மீண்டும் மாசு அதிகரித்திருப்பதைப் பற்றி இணையத்தில் படித்தபோது, நல்லவேளை சில நாட்களாவது அந்த மாசிலிருந்து தப்பிக்க முடிந்ததே என்று தோன்றுகிறது. அங்கே இருந்தால் ஏதோ ஒரு வித அழுத்தம் இருக்கும் - தலைநகரிலிருந்து தமிழகம் வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே சீரான மூச்சுக்காற்று வருவதை உணர்ந்து கொள்ளமுடியும்! இது எல்லா பயணங்களிலும் உணர்ந்து கொள்ளும் விஷயம் - தலைநகரினை விட்டு வெளியேறிய சில மணித்துளிகளிலேயே மூச்சுக் காற்று சீராக வருவதை உணர்ந்திருக்கிறேன் - அந்த அளவிற்கு தலைநகரின் காற்று நச்சு மயமாக மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு வாகனங்கள், போறாத குறைக்கு பொன்னம்மா என்று அடுத்த மாநிலங்களில் இருப்பவர்கள் தங்கள் விளைநிலங்களில் எரித்துத் தள்ளும் வைக்கோல் போர்கள் - கோதுமை அறுவடை செய்த பிறகு காய்ந்த செடிகளை அப்படியே, அந்த நிலத்திலேயே கொளுத்தி விடுவார்கள் - அப்போது தான் அடுத்த விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஒன்றும் சொல்வதற்கில்லை. 


இந்த ஓய்வு நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ந்திருக்கும் நேரம் போக, கிடைக்கும் நேரத்தில் கிண்டிலில் தரவிறக்கம் செய்து வைத்திருந்த பல நூல்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது - லாசாரா அவர்களின் கழுகு, கொற்கை, பாலகுமாரனின் கர்ணனின் கதை, நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் சில மின்னூல்கள், திரு ரா. ராஜசேகர் எழுதிய மென்பொறியாளன் கதைகள் பகுதி 1, உயிரோவியம் சிறுகதைத் தொகுப்பு, துவாரகையில் ஒரு நாள் என சில மின்னூல்களை இந்த நான்கு நாட்களில் படித்திருக்கிறேன். மற்ற தமிழகப் பயணங்கள் போல் அல்லாது, இந்தப் பயணத்தில் வீட்டினை விட்டு வெளியே செல்வது மிகவும் குறைவு என்பதால் கிடைத்த நேரத்தில் வாசிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். தீநுண்மி சமயமாக இருப்பதால் எந்த நண்பர்களையும் சந்திக்க நினைக்கவில்லை! நம்மால் மற்றவர்களுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணம் தான் காரணம்! முடிந்தால் அடுத்த பயணத்தில் நண்பர்களைச் சந்திக்கலாம்! இப்போதைக்கு சிலருடன் அலைபேசி வழி உரையாடிக் கொண்டிருக்கிறேன்! அவ்வளவு தான்! 




இன்றைக்கு இந்த சிந்தனைகளை, தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. தினம் தினம் பதிவுகள் வராவிட்டாலும் அவ்வப்போது இப்படி ஒன்றிரண்டு பதிவுகள் வரலாம்! தில்லி திரும்பிய பிறகு தொடர்ந்து சந்திக்கலாம் - வலை வழியே! இன்னும் ஒரு விஷயமும் சொல்லி விடுகிறேன்! இன்ஸ்டாக்ராமில் நானும் முன்பே இருந்தாலும், இதுவரை, எதுவுமே பகிர்ந்து கொண்டதில்லை. கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு நாளும், நான் எடுத்த ஏதோ ஒரு நிழற்படத்தினை பகிர ஆரம்பித்திருக்கிறேன். @venkat_nagaraj_blogger என்ற பெயரில் என்னைத் தேடினால் நீங்கள் என்னைத் தொடர முடியும்! தினம் ஒரு நிழற்படம் - நான் எடுத்தவற்றிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்! நீங்களும் பார்த்து ரசிக்கலாமே! 

இந்த நாளில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்


வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...

50 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டில் கொரோனா பயம் இல்லாமல்தான் வாழ்கிறார்கள்... தமிழக அரசு தரும் புள்ளிவிபரங்களுக்கும் உண்மையான நிலவரங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது போல... சில நாட்களுக்கு முன்னால் நெருங்கிய உறவினரிடம் பேசிய போத் அப்லரும் அலட்சியமாக இருப்பதாக சொன்னார்கள் என் உறவினர்களில் பலருக்கும் கொரோனாவாம் ஆனால் அதில் யாரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவில்லை.. அனைவரும் நல்ல வசதியானவர்கள் அவர்கள் குடும்ப டாக்டரகளிடம் ஆலோசனை பெற்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டிலே இருந்து வருகிறார்கள் இவர்களி சிலர் சென்னையிலும் சிலர் மதுரையிலும் சிலர் திருநெல்வேலியிலும் வசிக்கிறார்கள் நண்பரின் பெற்றோர்கள் இருவரும் வாரம் ஒவ்வொருவராக இறந்துவிட்டார்கள் எனது உறவினரில் இரன்டு பேர் இறந்து பொய் இருக்கிறார்கள் இந்த தகவல்கள் 2 நபரிடம் பேசிய போதுமட்டும் கிடைத்தது இன்னும் அதிக பேரிடம் பேசினால் எண்ணிக்கை அதிகமாகும் போலத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் உறவு வட்டத்திலும், அலுவலக வட்டத்திலும் இப்போது பலருக்கும் கொரோனா பரவி வருகிறது.  செய்திகளில் குறைகிறது என்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலும் மீண்டு வரும் அளவு பாதிப்புதான்.  மிகச்சிலருக்கு, குறிப்பாக சர்க்கரை, ரத்தக்கொதிப்பு அதிகம் இருப்பவர்களுக்கு, கிட்னி பாதிப்பு இருப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.  அவர்கள்தான் மருத்துவமனை சென்று பார்க்க வேண்டும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம்... 'எனக்கு ப்ரெஷர் இருக்கு', 'எனக்கு BP உண்டு' என்று சொல்லும்போது வராத பயமோ சோகமோ, 'ரத்தக்கொதிப்பு' என்ற வார்த்தையைப் பார்த்ததும் வருகிறதே.. அதன் காரணம் என்ன?

      நீக்கு
    3. கொரானா சிக்கல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது வேதனையான விஷயம் தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. பலருக்கும் இப்போது தொற்று ஏற்பட்டு இருக்கிறது. எனது உறவினர்களில் சிலரும் தொற்று பீடித்து உடல்நலம் அடைந்து விட்டார்கள். நல்லது நடக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. ரத்தக் கொதிப்பு என்று சொல்லும்போது வரும் பயம் அதிகம்! இருக்கலாம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பண்டிகை நாடுகளும் நெருங்கி வருகின்றன்.. கொரோனா பாதித்து தப்பித்தாலும் அதன் பிறகு அதனால் பல பின் விளைவுகளால் பல விதமாக உடல் நலம் பாதிப்பிற்குள்ளாகி கொண்டிருக்கிறது அது பலருக்கும் புரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்டிகை நாட்களில் வெளியே வரும் மக்கள் கூட்டம் தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்பாக இருக்கிறது. நல்லதே நடக்கட்டும் மதுரைத் தமிழன்.

      பாதிப்பு முடிந்து வந்தாலும் உடல் நலத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. நண்பரைக் கவனித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பெரும்பாலான பெண்கள் புடவைத்தலைப்பையும் ஆண்கள் கர்சீப்பையும் வைத்து முகமூடிக் கொள்ளையர்கள் போல கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  மாஸ்க் போவது என்றால் என்ன என்று இவர்கள் அறிவதே இல்லை.  அதுவும் மூக்கின் கீழே, தாடையில் தொங்கிக்கொண்டு என்றுதான் இருக்கிறது.  ஒரே ஒரு மாஸ்க் வாங்கி - அதுவும் தனி மாஸ்க் - அதையே ஐந்து மாதங்கள் ஆறு மாதங்கள் என்று உபயோகித்து வருகிறார்கள்...  இவர்களை என்ன செய்ய!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி மாஸ்க் இல்லை துணி மாஸ்க்!

      //மாஸ்க் போவது என்றால் என்ன என்று //

      மாஸ்க் போடுவது என்றால்...

      நீக்கு
    2. May be non washed mask for 6 months keep people and covid at distance !!!

      நீக்கு
    3. ஒரே மாஸ்க் - பல மாதங்களுக்கு! கொடுமை தான். ஒரு நபரைப் பார்த்தேன் - அவரது மாஸ்கில் அத்தனை அழுக்கு! மார்ச் மாதத்திலிருந்து ஒரே மாஸ்க் பயன்படுத்துகிறாரோ என்று சம்சயம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. தட்டச்சு தகறாறுகள்! :) புரிந்து கொள்ள முடிந்தது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. ஹாஹா... கொரானோ பயந்து வராமல் இருக்கலாம் இப்படி அழுக்காக மாஸ்க் அணி்ந்து கொள்வதால்!

      பட்டு & குட்டு - முதல் வருகையோ? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பழகலாம் வா! அதே தான். தமிழகப் பயணத்தில் நிறையவே பார்த்தேன் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்லா உடலையும் மனதையும் சார்ஜ் ஏத்திக்கோங்க சார்.
    இப்போது வந்த தங்களது இலவச நூல் 'அருவிகள் நகரம்' நூலை தறவிறக்கம் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை நலமாகவே கழிந்தது அரவிந்த்.

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தொற்று பற்றி பேசிப் பயனில்லை வெங்கட்ஜி. மக்களாக உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஊருக்கு வந்திருக்கும் இந்த நாட்களில் நன்றாக மகிழ்வாக உங்களை சார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஆம் நாம் நினைப்பதைச் செய்ய தருணம் கிடைப்பது அளவில்லா மகிழ்ச்சியைத் தரும். எஞ்சாய்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொற்று பற்றி பேசி பலனில்லை - உண்மை தான் கீதா ஜி.

      சார்ஜ் செய்து கொண்டு திரும்பியாயிற்று!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நிம்மதி எப்போதும் மனம் சார்ந்ததே.

    உண்மை.
    ஊருக்கு வந்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    //இன்னமும் இரண்டு வாரம் இந்த இனிமையை மகிழ்ச்சியுடன் இருந்து உடம்பிலும் மனதிலும் புத்துணர்வை ஏற்றிக் கொண்டு மீண்டும் ஓட்டத்தினைத் தொடங்க வேண்டும்!//
    குடும்பத்தினர்களுடன் நன்றாக நேரத்தை இனிமையாக களித்து மகிழ்ந்து இருங்கள், புத்தகங்கல் ஊரில் போய் படித்துக் கொள்ளலாம்.

    நம் ஊரில் வெளியில் போகாமல் இருப்பதே நல்லது. யாரும் கவலை படுவது இல்லை முக கவசம் அணிவதே இல்லை எங்களை கேலி செய்கிறார்கள் உறவினர்கள் நாங்கள் பயப்படுகிறோம் என்று முககவசம் அணிவதற்கு அவர்கள் வீடுகளுக்கு போகாமல் இருப்பதற்கும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வெங்கட்,
      தங்கள் வருகை நன்மை கொடுக்கும்.
      ரோஷ்ணிக்கும், ஆதிக்கும் மிக்க ஆதரவு.
      வெளியே செல்ல வேண்டாம்.
      முடிந்தால் மொட்டை மாடியில் நடக்கலாம்.

      அனேகருக்கு இந்த வைரஸ் பற்றிய பயம் போய் விட்டது.
      நீங்கள் உங்களை நிதானப் படுத்திக் கொண்டு உங்களுக்கு
      வேண்டியதை உண்டு,
      தூங்கி ,குடும்பத்துடன் நலமாக இருங்கள்.

      அன்பு வாழ்த்துகள்.

      நீக்கு
    2. விடுமுறை முடிந்து ஊர் திரும்பி அலுவலக வேலைகளில், வீட்டு வேலைகளில் மூழ்கியாயிற்று!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
    3. வணக்கம் வல்லிம்மா. விடுமுறை நாட்கள் நலமாகவே கழிந்தன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. லீவு இனிதாக இருக்க வாழ்த்துகள். குடும்பத்தினருடன் மகிழ்ந்திருங்கள்.

    இங்கு எங்கள் பகுதியிலும் கொரோனா பயமுறுத்துகிறது. பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை முடிந்து தில்லி திரும்பியாயிற்று. அனைத்தும் நலமாகவே முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தங்களது தமிழக பயணம் உங்களுக்கு மன தெம்பையும், ஆறுதலையும் தரட்டும். இத்தனை சோதனையாக காலகட்டங்களில் தலைநகரில் தனிமையில் இருந்து வந்த நீங்கள் இப்போது குடும்பத்தினருடன் கலந்து பேசி சந்தோஷமாக இருக்கும் செய்தி மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பதும் ஆரோக்கியமான விஷயந்தான்.

    மக்கள் கொரோனாவுக்கு பயமில்லாமல், உலா வருவது நம்மால் மற்றவர்களுக்கும் கெடுதலைத் தரும் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்? அதை உணர்த்தும் கொரோனா கூட முக்கால்வாசி இரக்க குணம் கொண்டதாக இருக்கிறது. வடகிழக்கு மழைக்காலம் வேறு இனிதான் துவங்க உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் நல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. விடுமுறை முடிந்து தில்லி திரும்பியாயிற்று. இப்போது தான் முந்தைய பதிவுகளுக்கும் வந்திருக்கும் கருத்துகளைப் படித்து பதில் அளிக்க முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போவார்” ஹாஹஹா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  11. நல்ல விழிப்புணர்வு பதிவு .... பலருக்கு வாழ்வில் லட்சியத்தைவிட, அலட்சியமே மேலோங்கி நிற்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலோங்கி நிற்கும் அலட்சியம் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  12. வாசகம் அருமை. உங்களின் ஓய்வுநாட்கள் இனிதே அமைய வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா. விடுமுறை முடிந்து தில்லி திருமியாயிற்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறீர்கள். Happy holidays! உங்கள் வரவு உங்கள் மனைவிக்கும், மகளுக்கும்கூட புத்துணர்வை அளிக்கும். என்ஜாய் மாடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஞ்சாய் மாடி! :) விடுமுறை முடிந்து தலைநகர் திரும்பியாயிற்று பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அட? ஊருக்கு வந்திருக்கிறீர்களா? தெரியவே இல்லை. நல்லபடியாக எல்லோருடனும் இருந்துவிட்டு நல்லபடியாக மீண்டும் தில்லி செல்லப் பிரார்த்திக்கிறேன். இங்கே யாருமே முகக் கவசம் போடுவதில்லை. ஆதலால் வெளியே செல்லவும் பயம் தான். மாமா அவ்வப்போது செல்ல வேண்டிய கட்டாயத்தில் மனதில் இறைவனை வேண்டிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கு. நல்லபடியாகப் போய்விட்டு ஒண்ணும் இல்லாமல் வரணுமேனு! கூப்பிடலாமா வேண்டாமானு தெரியலை. ஆனால் நீங்க நண்பர்களைச் சந்திக்கப் போவதில்லை என்பதால் கூப்பிடலை. உங்கள் விடுமுறையை நல்லபடியாகக் கழிக்கவும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  15. ரொம்ப நாள் இடுகையே போடாதது போல ஒரு ஃபீலிங். 5 நாட்கள்தான் ஆயிருந்தபோதிலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று தான் ஒரு பதிவு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. இந்தத் தடவை சிறப்பான தீபாவளியாக, குடும்பத்துடன் குதூகலத்துடன் கொண்டாடுவதாக அமைவதற்கு வாழ்த்துகள். அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளியும் விடுமுறையும் நன்கு முடிந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தீபாவளி வாழ்த்துகள் - நன்றி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. இனிமையாக ஓய்வு எடுங்கள் கொர்னாவில் இதுவும் ஒரு நன்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான ஓய்வு - ஆமாம் தனிமரம் நேசன். தேவையான ஓய்வும் கூட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. மீண்டும் வருக. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வந்தாயிற்று நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. கடந்த 3 மாதங்களாக திருச்சி யில் இருந்து விட்டு இந்த வாரமே மீண்டும் இல்லம் திரும்பினோம் ....

    பல வித அனுபவங்கள் ....

    இனி தான் மற்ற பதிவுகளையும் வாசிக்க வேண்டும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சியில் இருந்தீர்களா? மகிழ்ச்சி. நானும் மூன்று வாரம் இருந்து விட்டு தலைநகர் திரும்பினேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....