ஞாயிறு, 20 ஜூன், 2021

கடந்து வந்த பாதை - பகுதி மூன்று - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WAVES ARE INSPIRING, NOT BECAUSE THEY RISE AND FALL.... BUT BECAUSE THEY NEVER FAIL TO RISE AGAIN… SO, BE POSITIVE. HARD TIMES WILL GO SOON!


******




தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முதல் இரண்டு பகுதிகளை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன்.  அதனை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக அந்த இரண்டு பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று


கடந்து வந்த பாதை - பகுதி இரண்டு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்





அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


கடந்து வந்த பாதை தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப் படித்து ஊக்கம் தந்த கருத்துரைகளை அளித்த நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.  சென்ற பகுதியில் உறவினர் வீட்டிலிருந்து படித்த PUC முடிந்த பிறகு உறவினர் வீட்டிற்குப் போகவே கூடாது என நினைத்து வீடு திரும்பிய நான் மீண்டும் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உறவினர் வீட்டு வாசம் தான் என்று தெரியாமல் இருந்தேன் என முடித்திருந்தேன்.   


PUC முடிவுகள் வந்தவுடன் கல்லூரி நுழைய அடுத்த போராட்டம். முன்பு போலவே ஒரு நாள் எங்கே போகிறோம் என்றே தெரியாமல் அப்பாவின் பின்னே பலியாடு போலவே சென்று கோவை நகரை அடைந்தேன். உறவினர் வீட்டில் தங்கி மறுநாள் காலை கோவையின் பிரசித்தி பெற்ற 1C வழித்தடத்தில் வடவள்ளியில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் சென்றோம். இயற்கை அறிவியலில் PUC-இல் 120 மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பமே தருவோம் என்றார்கள். நான் பெற்றிருந்ததோ 119 மதிப்பெண்கள் மட்டுமே - ஒரு மதிப்பெண் மட்டுமே குறைவு!  தொடர்ந்த தமிழகக் கட்சிகளின் ஆட்சியின் பலனாக, ஒரு மதிப்பெண் மட்டுமே குறைவென்றாலும், என்னால் அங்கே சேர முடியவில்லை.  என்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் அங்கே சேர்ந்து படிக்க முடிந்தது எனக்கு நெருடலான விஷயம் தான்.   


இப்படி இருந்த தமிழகத்தில் என்னை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனது தந்தைக்கு இருந்தது! சென்னை நோக்கி பயணப்பட்டோம்.  அங்கும் பெப்பே! PCN/PCM - Physics/Chemistry/Natural Science or Maths இவற்றில் ஒவ்வொன்றிலும் 180 இருந்தால் மட்டுமே விண்ணப்பம் என்ற நிலையில் அப்பாவின் அடாவடித்தனத்தால், ஒரு மாலைப் பொழுதில், சிதம்பரம் நகரிலிருந்த ஒரு உறவினர் வீட்டில் புகுந்தேன். அந்த வீடு மிகப் பழமையான வீடு! வாசலுக்கும் கொல்லை புறத்திற்கும் நடந்தாலே நடைப்பயிற்சி முடித்து விடலாம். நடுவில் முற்றம், மூன்று பக்க தாழ்வாரம், ஊஞ்சல், பின்னால் கிணறு என “ஆஹா அற்புதம்” என்று சொல்லக்கூடிய வீடு. மாலை தில்லைக் காளி கோவிலுக்கும், நடராஜர் கோவிலுக்கும் சென்றோம். மறுநாள்….


மறுநாள், என்னை படிப்பிலிருந்து பல காததூரம் துரத்தியடிக்கும்படி அங்கே புகவுள்ளேன் என்பதை அறியாமல் அறிவுப் பாசரையாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீனிவாச சாஸ்த்ரி ஹால் சென்றேன். அது தான் பிரம்மாண்ட கட்டிடம். சேர்க்கை, நேர்முகத் தேர்வு, அனைத்து எழுத்துத் தேர்வுகள், விழாக்கள், பட்டமளிப்புகள் என அனைத்தும் நடக்குமிடம்.  3000 பேர் அங்கே அமரலாம். அனைத்து பல்கலைக்கழக எழுத்துத் தேர்வுகளும் அங்கே தான் நடக்கும். நேர்முகத் தேர்வு என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு! என்னதான் PUC முடித்திருந்தாலும், அப்போதும் பள்ளி நினைவிலேயே இருந்தேன். அப்படி இருந்த என்னிடம் அங்கே நேர்முகத் தேர்வில் கேட்ட முதல் கேள்வி - “நீ ஏன் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தாய்?” - எனக்கு வேறெங்கும் இடம் கிடைக்காததால் என்றேன்!  (என்ன திமிர் பார் என் முன்னே அமர்ந்த மூவரில் ஒருவர். எனக்கு ஒன்றும் புரியவில்லை!).  


அடுத்தது ”என்ன படிக்க விரும்புகிறாய்?  ஏன்?”  எனக்கு இரசாயனம் (வேதியியல்) மிகவும் பிடித்த ஒன்று. அதில் தான் நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளேன் என்றேன். பின் வேதியியலில் கேட்கப்பட்ட நான்கு கேள்விகளுக்கும் விடையளித்தேன்.  சரி உனக்கு இளங்கலை அறிவியல் - தாவர இயல் ஒதுக்கப்பட்டது. வாழ்த்துகள் என்றார்.  அதை இன்றுவரை நான் வசவுகளாகவே கருதுகிறேன். 


கல்லூரிக் காலம் அப்படி ஒன்றும் சிலாகிக்கும் விதத்தில் அமையவில்லை. காரணத்தினை பின்வரும் வாக்கியங்களில் தெரிந்து கொள்வீர்கள்! 


  1. அந்த வருடம் (1978) முதல், அரைப் பருவமுறை அதாங்க செமஸ்டர் துவங்கியது. 6 மாத காலத்தில் நடத்தப்படுவதாக நம்பப்படும் பாடங்களில் கேள்விகள். பதிலளித்து பாஸ் செய்தால் தாரளமாய் மறந்து விடலாம்! மறக்க மட்டுமே முடியும்! 

  2. பெயர் தான் 6 மாதமே தவிர, நாளொரு போராட்டம், பொழுதொரு ஆர்ப்பாட்டம் என எப்போதாவது தான் வகுப்புகள் நடக்கும். 

  3. நான்காம் பருவம் கடுமையான போராட்டங்கள் - காவல்துறை வரவழைக்கப்பட்டு, மொத்தம் 17-ஏ நாட்கள் மட்டுமே கல்லூரி நடைபெற்றது. காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டு, முழு காவல் கண்காணிப்புடன் நேரடியாய் தேர்வுகள் நடத்தப்பட்டன. எந்தப் பாடமும் நடத்தப்படாததால், தேர்வு எழுதியிருந்தாலே 40 மதிப்பெண் என தேர்வு செய்யப்பட்டோம். இந்தக் காலத்து All Pass-ஐ அன்றே நிறைவேற்றியவர்கள் நாங்கள்! 

  4. தாவரவியலில் ஒரு விரிவுரையாளர் - பெயர் சொல்ல விரும்பவில்லை - என்னையும், சக மாணவன் அரங்கநாதனையும் கண்டால் அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு!  முதல் பருவத்திலேயே அனைத்து மாணவர்களும் வகுப்பில் இருக்கையில், ”நீங்க ரெண்டு பேரும் XXXXX… fail ஆகாம B.Sc pass பண்ண முடியாது….  Mind it!” என்றார்.  


அந்த நாட்களில் அறிவுப் பாசறையில் ஒரு விதி. ஏதாவது ஒரு பருவத்தில் ஏதாவது ஒரு தேர்வில் தேறவில்லை என்றால், மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு பெற்றாலும் முதல் வகுப்பு தரப்படமாட்டாது. அவ்விதியின் (அவ்விதி என்ன, என் விதி - ஹாஹா!) கீழ் நாங்கள் இருவருமே அவதிப்பட்டோம். 


இப்படியிருக்க, நான் B.Sc காகித அளவில் மட்டுமே முடித்தேன். பலவிதமான இடையூறுகளால், மனதை ஒருமுகப்படுத்த இயலாமல் Botony என்ற பெயரளவுக்குக் கூட நினைவின்றி முடிதேன்.  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பர். ஆனால் என் விஷயத்தில் அதுவும் புஸ்! 


தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


30 கருத்துகள்:

  1. தொடர் சுவாரஸாயமாக செல்கிறது... நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அனுபவம் எனேகமாக எல்லோருக்கும் ஓரளவு அதேபோலத்தான் இருந்திருக்கும். எங்கள் கல்லூரியில் ஸ்ட்ரைக் வெகு வெகு அபூர்வம். ஆசையால் படித்து மதிப்பெண் பெற்றோம். படிப்பினால் வாழ்க்கைக்கு உபயோகம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரியில் ஸ்ட்ரைக் - சில கல்லூரிகளில் எப்போதுமே அதிகமாக இருக்கும் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பச்சையப்பாஸ் போல!

      படிப்பினால் வாழ்க்கைக்கு உபயோகம் இல்லை - ஹாஹா. பலருக்கும் இதே நிலை தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. என்னைக் கண்டாலும் வெறுத்த ஒரு ஆசிரியர் இருந்தார்.  அவர் பெயர் அமல்ராஜா. வேதியியல் ஆசிரியர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ சில ஆசிரியர்களுக்கு சில மாணவர்களைப் பிடிக்காமல் போய்விடுகிறது. எங்கள் கல்லூரியில் பௌதீக புரொஃபசருக்கு ராஜன் என்ற மாணவனைப் பிடிக்காமல் போய்விட்டது. அவன் என்ன செய்தாலும் திட்டுவார். அதே செயலை நான் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.

      நீக்கு
    2. எனக்குப் பள்ளியிலேயே கணக்கு டீச்சர்! :(

      நீக்கு
    3. எனக்கும் பள்ளியில் அப்படி சில ஆசிரியர்கள் அமைந்தார்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. ஒரு வித வெறுப்பு ஒரு மாணவன் மீது ஏற்பட்டு விட்டால் அதனை அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை! என்னதான் ஆசிரியர்களுக்கு அனைத்து மாணவர்களும் சரிசமம் என்று சொன்னாலும் அப்படி இல்லை என்பதே நிதர்சனம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. கல்லூரிக் காலம் பெரும்பாலும் அனைவருக்கும் இப்படித்தான்
    எனக்கும் இப்படித்தான் அமைந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள்... ம்ம்ம்.. பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    தங்கள் நண்பரின் கல்லூரி தொடர் நன்றாக செல்கிறது. சிலருக்கு சிலரை பிடிக்காமல் போவது இயல்புதான். ஆனால் பள்ளி, கல்லூரிகளில் சில ஆசிரியருக்கு குறிப்பிட்ட சில மாணவ மாணவிகளை பிடிக்காமல் போவது ஏனென்று தெரியவில்லை. இதனால் பாதிக்கப்படுவது அவர்களிடம் கற்கும் மாணவ,மாணவிகள் என்பதை அவர்கள் உணர்வார்களா? பதிவு இறுதியில் உண்மை நிலையுடன் இருக்கிறது. மேலும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பாதிப்பு குறித்து அந்த ஆசிரியர்கள் உணர்ந்து கொள்வதில்லை என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நான் பெற்றிருந்ததோ 119 மதிப்பெண்கள் மட்டுமே - ஒரு மதிப்பெண் மட்டுமே குறைவு! தொடர்ந்த தமிழகக் கட்சிகளின் ஆட்சியின் பலனாக, ஒரு மதிப்பெண் மட்டுமே குறைவென்றாலும், என்னால் அங்கே சேர முடியவில்லை. என்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் அங்கே சேர்ந்து படிக்க முடிந்தது எனக்கு நெருடலான விஷயம் தான். //

    உங்களுக்கு எவ்வளவு மனம் வருந்தியிருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    இதனால் ஆவது என்னவென்றால்...ஹிஹிஹிஹி....நான் சொல்லமாட்டேனாக்கும். நீங்க நாசுக்காக இடையில் சொல்லிட்டீங்க. நான் அதை நேரடியாகச் சொல்லி ஹையோ வேண்டாம்..ஆளை விடுங்கப்பா ன்னு

    என் மகனுக்கும் இதே தான். வெயிட் லிஸ்ட் 1...அவனை விட மிகமிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குச் சென்னையில் கிடைக்க மகன் வேறு ஊரில் படிக்க வேண்டியதாயிற்று. அதே போல பிஜி பண்ண இந்திய அளவில் தேர்வு எழுதி அவன் நல்ல ரேங்கில் இருந்தும் அவனுக்குக் கிடைக்காமல் அவனை விடக் குறைவான ரேங்கில் இருந்தவர்களுக்குக் கிடைத்ததும்....என்ன சொல்ல? அவன் அழுத அழுகை அன்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு. வேதனை தரும் விஷயம் தான். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நேர்முகத் தேர்வில் கேட்ட முதல் கேள்வி - “நீ ஏன் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தாய்?” - எனக்கு வேறெங்கும் இடம் கிடைக்காததால் என்றேன்! //

    ஹாஹாஹாஹா உலகம் மாறவேஏஏஏஏஏஏஏஏ இல்லை. உங்க காலத்திலிருந்து என் மகன் காலம் வரை இதே கேள்விதான் போல!!! அதுவும் எல்லா நாடுகளிலும்!!! உங்களைப் போல என் மகனும் பதில் கொடுத்திருக்கிறான். இதே கேள்விக்கு என் மகன் அளித்த பதில், "நான் அயல்நாட்டவன். அந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட எனக்கான சாய்ஸ்கள் மிகவும் குறைவு அதில் உங்கள் பல்கலைக்கழகமும் இருந்ததால் தேர்ந்தெடுத்தேன்" என்றான்!!! அவர்கள் எதிர்ப்பார்ப்பது "உங்கள் பல்கலைக்கழகம் தான் உலகிலேயே பெஸ்ட், முதல் தரம், இங்கு நான் படிப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன் ப்ளா ப்ளா ப்ளா...அவங்க நினைச்சிருப்பாங்க இந்தப் பையன் வேற நாட்டவனா இருந்துகொண்டு இன்னா தகிரியமா வசனம் பேசுறான்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் வரும் காலத்திலும் இப்படியான கேள்விகள் கேட்கப்படலாம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சரி உனக்கு இளங்கலை அறிவியல் - தாவர இயல் ஒதுக்கப்பட்டது. வாழ்த்துகள் என்றார். அதை இன்றுவரை நான் வசவுகளாகவே கருதுகிறேன். //

    ரொம்ப வருத்தமான விஷயம். நாம் விரும்புவது கிடைக்கவில்லை என்றால் கஷ்டம்தான்.

    இந்தக் காலத்து All Pass-ஐ அன்றே நிறைவேற்றியவர்கள் நாங்கள்! // ஹாஹாஹா

    கிட்டத்தட்ட இதே போல அனுபவங்கள்தான் பலருக்கும் போலும்.

    ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பலவகையில் உண்மை. படிக்கும் படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை பலருக்கும். ப்ரொஃபஷனல் கோர்ஸ் படித்தாலும்.


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்புவது கிடைப்பதில்லை - எனக்கும் கல்லூரியில் Computer Science படிக்க விருப்பமிருந்தது. ஆனால் கிடைக்கவில்லை கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. படிக்கும்போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடினம் தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கல்லூரி வாழ்க்கை அனுபதொடர் அப்போது கஷ்டம்.
    (அவ்விதி என்ன, என் விதி - ஹாஹா!)
    பட்ட கஷ்டங்களை நகைச்சுவையாக அனுபவ தொடரில் சொல்லமுடிகிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்ட கஷ்டங்களை இப்போது நகைச்சுவையாக சொல்ல முடிகிறது - உண்மை தான் கோமதிம்மா. அந்த நேரத்தில் இப்படி இருந்திருக்காது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அனுபவம் எல்லோருக்கும் இது போல இருந்திருக்கும்.
    எங்கள் மக்கள் மூவருக்கும் அவர்கள் இஷ்டப்படாத
    க்ரூப் தான் கிடைத்தது.

    ஏதோ சட்டங்கள். யாரையோ உயர்த்த யாரையோ
    தாழ்த்தல். எல்லாம் அப்படியே தான் இருக்கிறது.

    திரு சுப்பு அவர்களின் பயணம் பலரின் அனுபவங்களை
    தன்னுள் கொண்டு இருக்கிறது.
    கல்லும் முள்ளுமாகக் கடந்த பாதையை
    நிதானமாகப் பதிகிறார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஷ்டப்படாத க்ரூப் தான் - எனக்கும் அப்படியே! என்னைக் கேட்டு சேர்க்கவும் இல்லை! அப்பா விரும்பியதில் சேர்க்க, கஷ்டப்பட்டு தான் படிக்க முடிந்தது.

      கல்லும் முள்ளுமாகக் கடந்த பாதை - உண்மை வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. எழுபதுகளுக்குப் பின்னர் படித்தவர்கள் இம்மாதிரியான கஷ்டங்களை நிறையவே அனுபவித்திருப்பார்கள். ஆசிரியர்களும் அப்போது இருந்தவர்கள் இம்மாதிரி மாணாக்கர்களைக் கேலியே செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாணவர்களை கேலி செய்யும் ஆசிரியர்கள் - வேதனையான விஷயம் இது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....