சனி, 3 ஜூலை, 2021

காஃபி வித் கிட்டு-117 - மூன்றாம் அலை - சேமிப்பு - பட்டு வண்ண ரோசா - ஓய்வும் சந்திப்பும் - சிந்தனை



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SUCCESS IN LIFE DEPENDS UPON TWO IMPORTANT THINGS… VISION OF SEEING THE INVISIBLE OPPORTUNITIES AND MISSION OF SOLVING THE IMPOSSIBLE THINGS. 


******




இந்த வாரத்தின் எண்ணம் - மூன்றாம் அலை



ஒன்றாம் அலை, இரண்டாம் அலை எனப் பார்த்த நமக்கு தீநுண்மியின் மூன்றாம் அலையும் இதோ வருகிறது, இப்போது வரப் போகிறது என்ற பயமுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.  மூன்றாம் அலை ஜூலை 15 முதல் வரலாம், செப்டமர் முதல் வாரத்தில் வரலாம் என பலரும் ஜோசியர்கள் கணிப்பது போல கருத்துக் கணிப்புகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.  கடலலைகள் போல இந்த தீநுண்மித் தொற்றும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் மனிதர்களின் வாழ்க்கை என்னாவது? எத்தனை அலைகள் வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது,”எவ்வளவு சரக்கடித்தாலும், நான் ஸ்டடியா இருப்பேன்… என்னை ஒண்ணும் அசைக்க முடியாது” என்று சூனா பானா  வடிவேலு மாதிரி சொல்லிக் கொண்டு திரியும் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். கடந்த சில நாட்களாக அலுவலகம் செல்லும்போது பலரை இப்படிப் பார்க்க முடிகிறது! ”இதெல்லாம் பணம் சம்பாதிக்க வழி வேறொன்றும் இல்லை” என்று சொல்லிக் கொண்டு அசால்ட் ஆறுமுகம் மாதிரி திரிகிறார்கள் சிலர்! என்னதான் நடக்கப் போகிறதோ… நடப்பதை நம்மால் தடுக்கவா முடியும்…  இப்படி இங்கே புலம்பத் தான் முடிகிறது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வதைத் தவிர வேறென்ன செய்ய!


******


இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத் தகவல்  - சேமிப்பு





அவ்வப்போது சில வாட்ஸப் நிலைத் தகவல்கள் சிறப்பாக இருக்கும். அப்படி ஒரு நிலைத் தகவல் உங்கள்  பார்வைக்கு!


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல்   - பட்டு வண்ன ரோசாவாம்


கன்னிப் பருவத்திலே படத்திலிருந்து பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் எனும் பாடல் இந்த வாரத்தின் ரசித்த பாடலாக…  படம், பாடல் குறித்த மேலதிகத் தகவல்கள் நான் சொல்லப் போவதில்லை! நண்பர் ஸ்ரீராம் சொல்லலாம்! :)



******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - ஓய்வும் சந்திப்பும்:


2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! – பதிவர் சந்திப்பு – அடுத்த பயணத்தொடர்…


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவுலகம் பக்கம் வருகிறேன். வருடத்தின் ஆரம்பத்திலும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் தினம் தினம் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். மே மாதம் ஏழே ஏழு பதிவுகள், ஜூன் மாதத்தில் மூன்று பதிவுகள் என கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை! நடுவில் ஒரு மாதம் குடும்பத்தினருடன் முழுக்க முழுக்க நேரம் செலவு செய்ய வேண்டும் என ஒதுங்கி இருக்க, தலைநகர் வந்த பிறகு அலுவலகப் பணி எழுத விடாது தடுத்தது! பிறகு இணையத்தொடர்பில் சில சிக்கல்கள் – அது பற்றி தனியாக பதிவே எழுதலாம்! பதிவுகள் எழுதுகிறேனோ இல்லையோ, மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க இயலாத நிலை! இதோ இப்போது மீண்டும் வந்தாயிற்று!

 

என்னதான் ”ஜியோ மேரே லால்” என்று வடக்கத்தியர்கள் வாழ்த்துவது போல, ஜியோ மூலம் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் பார்க்க முடிந்தாலும், அலைபேசி மூலம் பதிவுகள் எழுதுவதோ, அல்லது மற்றவர்களின் பதிவுகளைப் படித்து கருத்துகள் எழுதுவதோ எனக்கு ஒத்து வரவில்லை! ஒரு லைன் அதில் தட்டச்சு செய்வதற்குள் விரல்கள் “ப்ளீஸ் என்னை ஏன் படுத்தற!” என்று கதறுகின்றன! இக்கால இளைஞர்கள் இரண்டு விரல்கள் கொண்டு அந்த அலைபேசிகளில் எப்படித் தான் நடனமாடுகிறார்களோ! பதிவுகள் எழுதாத இந்த நாட்களில் நிறைய படிக்க முடிந்தது – கூடவே நிறைய ஓய்வு எடுக்கவும் முடிந்தது!


******


இந்த வாரத்தின் ரசித்த புகைப்படம்   - சிந்தனை:





எப்படியெல்லாம் புதிது புதிதாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு மேலே உள்ள  படம் ஒரு உதாரணம்!


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


20 கருத்துகள்:

  1. இந்தவாரம் சுருக்கமாக முடிந்துவிட்டதுபோல ஒரு எண்ணம். வழக்கம்போல் ரசித்தேன்.

    நேற்று காய்கறிக்கு ஊர் சுற்றினபோது முக ஷீல்டு இல்லாமல் மாஸ்க் மட்டும் அணிந்து சென்றேன். கொஞ்சம் எல்லோருக்கும் பயம் குறைந்துவிட்டதுபோல எண்ணம். இதுல வேற மகன் இரண்டு நாளாக நீண்ட தூரம் பயணித்து மெட்ரோ, ஆட்டோ.. ஆபீஸ் சென்றுவருகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரம் சுருக்கமாக முடிந்து விட்டது போல எண்ணம் - உண்மை. பொதுவாக ஏழு விஷயங்கள் இருக்கும். இந்தப் பதிவில் ஐந்து மட்டும்! :)

      பயம் குறைந்து விட்டது - ஆமாம். பலரும் அசிரத்தையாகவே இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இப்போது அந்த 'இதெல்லாம் சும்மாப்பா' குழுவினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்றே தோன்றுகிறது.  இரண்டாம் அலை அவர்களை ஒரு சுழற்று சுழற்றியுள்ளது என்று நினைக்கிறேன்.

    வாட்சாப் நிலைத்தகவல் ஓகே.

    பட்டு வண்ண ரோசாவா பாடல் எனக்கு ஆண்குரல்தான் பிடிக்கும்.  இசை இளையராஜா அல்ல சங்கர் கணேஷ்,   .பாடியிருப்பபது எஸ்பிபி அல்ல, மலேசியா வாசுதேவன்.  பாடல் உச்சி வகுந்தெடுத்து அல்ல, பட்டுவண்ண ரோசாவா, திரைக்கதை எழுதி வில்லனாக நடித்திருப்பர் பாக்யராஜ், ஆனால் அவர் இயக்கம் அல்ல!

    திரும்பி வந்த பதிவைப் படித்தேன் மீண்டும்.  கடைசி புகைப்படம் கலக்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’இதெல்லாம் சும்மாப்பா’ குழுவினரின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் - ஆனால் இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள் ஸ்ரீராம்.

      பாடல் குறித்த தகவல்கள் நன்று.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. கதம்ப செய்திகள் அருமை
    கடைசி படம் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கணிப்பு அலைகள் ஓய்வதில்லை...

    பாடலும் படமும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைகள் ஓய்வதில்லை - வேதனை.

      பாடலும் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. இந்த வாத்திய காஃபி வித் கிட்டு பதிவும் அருமை.

    மூன்றாவது அலை பற்றிய தகவல்கள் வந்து கொண்டேயுள்ளது.வதந்தியா எனத் தெரியவில்லை. இருந்தாலும் நாம் கொஞ்ச நாட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    வாட்ஸப் நிலை தகவல் உண்மை. அந்தப் பாடல் இனிமையாக இருக்கும். நானும் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.

    பின்னோக்கிச் பார்க்கலாம் பதிவையும் படித்தேன். சகோதரி கீதா ரெங்கன் அவர்களை சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    ரசித்த புகைப்படமும் நன்றாக புதுமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அலைகள் வரட்டும்
    கவனமாய் இருப்போம் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாக இருக்க வேண்டும். அது தான் அத்தியாவசியத் தேவை கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. மூன்றாம் அலை பாதிப்பு இல்லாமல் போகட்டும்.
    வாட்ஸப் செய்து அருமை.

    பாடல் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதிப்பு இல்லாமல் போகட்டும் - அப்படி நடந்தால் நல்லதே கோமதிம்மா.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. பின்னோக்கிப் பார்க்கலாம் அருமை.
    இப்பொழுது நிறையப் பதிவுகள் வருகிறது. குடும்பத்துக்காகச் செலவழித்த நேரம் இனிமை.

    வாசகமும் நன்று. பட்டு வண்ண ரோசாவாம். ராஜேஷ் ,வடிவுக்கரசி. மஹா சோகம்.

    தொற்று இங்கே வெகுவாகக் குறைந்து அனைவரும் வெளியே முகக் கவசம் இல்லாமல் தான்
    சுற்றுகிறார்கள். நாங்கள் தான் எக்சப்ஷன்:)

    பேரன் சொல்வது போல பெட்டெர் பி காஷியஸ்.
    இறைவன் அருள் செய்யட்டும்.

    நானும் இன்னும் ஒருவிரல் தான் மொபைலில்.
    பேரனைப் பார்க்கும் போது பொறாமை:)
    நல்ல பதிவுமா. இன்னும் தகவல்கள் எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

      மொபைலில் ஒரு விரல் - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் நன்பர்களே.
    மமூன்றாம் அலை குறைந்த பாதிப்புடன் சென்றால் நன்று.
    வாட்ஸ்ஸாப் நிலைச்செய்தி அருமை.
    சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த ஒரு அருமையான நூலை படித்துள்ளேன்.
    ஒரு மாதத்திற்குள் அந்நூலை இவ்வலைதளத்தில் எளிமையாக அறிமுகம் செய்யும் நோக்கம் உள்ளது.
    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாம் அலை - வராமல் இருந்தால் நல்லது. அப்படி வந்தாலும் அதிக பாதிப்பில்லாமல் இருக்கட்டும்.

      சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த நூல் அறிமுகம் - அனுப்புங்கள் அரவிந்த். வெளியிட்டு விடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மூன்றாம் அலை வராதிருக்கப் பிரார்த்திப்போம். அது மட்டுமே நம்மால் ஆனது.

    ரசித்த படத்தில் இருக்கும் சிந்தனையை ரசித்தேன்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....