சனி, 10 ஜூலை, 2021

காஃபி வித் கிட்டு-118 - ஒரு பெண் பல கணவர்கள் - தப்பில்ல - சாரு நிவேதிதா - கடலும் சூரியனும் - ஓட்ஸ் முட்டியா - கருப்பு ஆடு



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Mesmerising Meghalaya பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LUCK IS WHAT HAPPENS WHEN PREPARATION MEETS OPPORTUNITY.


******


இந்த வாரத்தின் செய்தி - ஒரு பெண் பல கணவர்கள்



படம்: நன்றி தினமலர்


ஜோஹனஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில், பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து உள்ளது.


உலக அளவில் மிக தாராளமான அரசியலமைப்பு சட்டங்கள் உடைய நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. இங்கு ஓரின திருமணங்கள், ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.


'ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிப்பதை போல, ஒரு பெண், பல ஆண்களை மணக்க அனுமதிக்க வேண்டும்' என, பாலின உரிமை ஆர்வலர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து திருமண சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, இதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்தது.


இந்த புதிய சட்டம் குறித்து அந்நாட்டு பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த புதிய சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை அரசு கேட்டது. இதற்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.'இது ஆப்பிரிக்க கலாசாரத்தை அழித்துவிடும். பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆணின் இடத்தை பெண்ணுக்கு வழங்க முடியாது' என, பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.


நன்றி:  தினமலர்


ஒரு ஆண் பல பெண்களை மணக்கலாம் என்ற சட்டம் சரியென்றால், ஒரு பெண் பல ஆண்களை மணக்கலாம் என்ற சட்டமும் சரியே!  உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!


******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - உங்க மேல தப்பில்ல:


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஃப்ரூட் சாலட் – 137 – மருமகள் மெச்சிய மாமியார் – வீட்டு சாப்பாடு - மெட்ரோ


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


வாடகைக் கார் ஒன்றில் பயணிக்கும் போது ஏதோ கேட்பதற்காக ஓட்டுனரைத் தொட்டாராம் பயணி.  அவர் தொட்டவுடன், அலறிய ஓட்டுனர், தட்டுத்தடுமாறி, சாலையிலிருந்து விலகி நடை பாதையில் சென்று சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு கடையை கிட்டத்தட்ட மோதும் நிலைக்கு வந்து வண்டியை நிறுத்தினாராம்.


அடடா....  நான் சாதாரணமா தொட்டதுக்கே இப்படி ஆயிடுச்சே...  என்று பயணி, ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்க.....  அப்போது அந்த ஓட்டுனர் சொன்னாராம்......

....

....

....

....


உங்க மேல தப்பு ஒண்ணும் இல்ல! நேத்து வரைக்கும் நான் ”சவ ஊர்தி” ஓட்டிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் பயணிகள் வாகனம் ஓட்டறேன்! பழைய நினைப்புல பயந்துட்டேன்! 


யோசிக்கும் போதே டெரரா இருக்குல்லே!



******


இந்த வாரத்தில் படித்தது  - சாரு நிவேதிதா


இதுவரை சாரு நிவேதிதா அவர்களது எழுத்துகளை வாசித்ததே இல்லை.  இதைச் சொல்வதில் வருத்தமும் இல்லை! பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரு அறிமுகம் இல்லாமல் வாசிக்க முடிவதில்லை. இவரையும் ஏனோ இது வரை வாசிக்கவில்லை.  முந்தைய காஃபி வித் கிட்டு பதிவொன்றில் சொன்னது போல சமீப மாதங்களாக Bynge App வழி சில கதைகளை, தொடர்களை படித்து வருகிறேன். அந்த செயலியில் சாரு அவர்களின் கட்டுரைகளும் இருப்பதாக அவ்வப்போது அறிவிப்புகள் வந்த வண்ணமே இருக்கும்.  அப்படி பல முறை வந்த பிறகு அவரது ”அ-காலம்” கட்டுரைகளில் இரண்டு அத்தியாயங்களைப் படித்தேன்.  அதில் மும்பை மற்றும் தில்லி குறித்து இப்படி எழுதி இருக்கிறார்…


“மும்பையும் தில்லியும் சபிக்கப்பட்ட நகரங்கள். இந்தியாவில் மனித ரத்தத்தை மிக அதிக அளவில் குடித்த நகரங்கள் இவை.”  


ஏன் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு என்பதையும் எழுதி இருக்கிறார்!  முழு கட்டுரை படிக்க நினைத்தால் செயலி வழி படிக்கலாம்! 


******


இந்த வாரத்தின் ரசித்த புகைப்படம்   - கடலும் சூரியனும்:





அழகழகாய் இயற்கைக் காட்சிகளை தனது வாட்ஸப் நிலைத் தகவலாக வைப்பார். தினம் தினம் நான்கு ஐந்து படங்களாவது இப்படி வைத்து விடுவது வழக்கம்.  அப்படி அவர் வைத்திருந்த நிலைத்தகவல் ஒன்று உங்கள் பார்வைக்கு.  படம் எடுத்தவருக்கு வாழ்த்துகள். ஃபோட்டோஷாப் செய்த படமாகவும் இருக்கலாம்! சொல்வதற்கில்லை!


******


இந்த வாரத்தின் உணவு   - ஓட்ஸ் முட்டியா (Oats Muthiya)





இந்த வாரத்தின் உணவாக ஒரு ஸ்டார்ட்டர்! பொதுவாக வட இந்திய திருமணங்களில் இந்த ஸ்டாட்டர் விதம் விதமாக கொடுப்பதுண்டு. இப்போதைய தென்னிந்திய திருமணங்களிலும் இந்த வழக்கங்கள் வந்து விட்டன. என்றாலும் இங்கே இருக்கும் வகைகள் அங்கே இல்லை என்றே சொல்ல வேண்டும்! அப்படி ஒரு ஸ்டாட்டர் ஓட்ஸ் முட்டியா - ஆங்கிலத்தில் Oats Muthiya! எப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் - சமைத்துப் பார்க்க விரும்பினால் இந்தத் தளத்தின் வழி தெரிந்து கொண்டு சமைக்கலாம்! ருசிக்கலாம்! 


******


இந்த வாரத்தின் தகவல் - வித்தியாசமான பெயர் கொண்ட இரயில் நிலையம்/ஊர்: 





எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எந்தச் சமயத்தில் பயணம் செய்தாலும், அது இரயில் பயணமாக இருந்தாலும், சாலை வழி பயணமாக இருந்தாலும் சரி வழியில் வரும் சின்னச் சின்ன ஊர்களின் பெயர்களை பார்த்து அதில் வித்தியாசமான பெயர்கள் இருந்தால் அவற்றை சேமித்துக் கொள்வேன் - படமாகவோ இல்லை தகவலாகவோ! அப்படி வித்தியாசமான சில ஊர்களின் பெயர்கள், இரயில் நிலையங்களின் பெயர்கள் இணையத்திலும் கிடைக்கின்றன.  காலா பக்ரா என்று ஜலந்தர் மாவட்டத்தில் ஒரு ஊர் - அதாவது கருப்பு ஆடு!   அங்கே மனிதர்களுக்குள்ளும் கருப்பாடுகள் அதிகமோ? வித்தியாசமான பெயர்தானே! இன்னும் சில பெயர்கள் வேறு மொழிகளில் வேறு சங்கடமான அர்த்தம் தரக்கூடிய வார்த்தைகளாகவும் அமைந்து விடுகின்றன! 


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


28 கருத்துகள்:

  1. முதலிரண்டு விஷயங்கள்தான் படித்தேன். சவ ஊர்தி.... களேபரம்தான். ஒரு பெண் பல ஆண்... (ஒரு ஆண் பல பெண் போலவே) - இது என்ன விபரீதம் என்று தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பெண் பல ஆண்/ஒரு ஆண் பல பெண் - விபரீதம் தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    சுவையான காஃபி வித் கிட்டு.
    இன்னாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள்.
    நல்ல கருத்துள்ள வாசகம். உண்மையும் கூட.

    தொட்ட பயணி. ஷாக் வாங்கிய ஓட்டுனர் ஹாஹாஹா.
    மிக ரசித்தேன் நன்றி.

    ஓட்ஸ் முத்தியா பார்த்தேன். செய்யலாம்.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவாரஸ்யமான தகவல்கள்.  வித்தியாசமான பெயர் கொண்ட ஊர்களின் சேமிப்பு மிகவும் சுவாரஸ்யம்.வாட்ஸாப் நிலைத்தகவல்கள் வித்தியாசமாய் அழகழகாய் வைப்பது யார் என்று சொல்லவில்லையே...

    ஒரு பெண் பல கணவர்கள்- சம உரிமை பல கதைகளுக்கு வழி வகுக்கும்..  திரௌபதியை மிஞ்சுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      ஒரு பெண் பல கணவர்கள் - சம உரிமை பல கதைகளுக்கு வழி வகுக்கும் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஒரு ஆண் பல பெண்களை விரும்புவதே ரசிக்க முடியாது. இதில் ஒரு பெண் பல ஆண்களை விரும்புவது அவ்வளவாக முறையில்லை.
    குழந்தைகள் கதி என்னாவது!!

    சாரு நிவேதிதா படிக்க விரும்பியதில்லை.
    வாங்கின ஒரே புத்தகத்தில் போர் அடித்து விட்டார்!!!
    எல்லோரும் மிகவும் ஒருவரைப் பாராட்டினால்

    அவர் மேலும் நம் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதை நம்புபவள்
    நான்.:)

    உங்கள் பயணங்கள் தொடர்ந்து இது போல
    ஸ்டேஷன் பெயர்கள் நிறையக் கிடைக்கட்டும்.

    அந்த அலை வெகு நாட்களாகச் சுற்றி வருகிறது.
    ஹவாய் கடற்கரையின் அலைகள் என்று
    பலவித அலைப் படங்கள் வந்தன.
    இதுவும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் கதி என்னாவது - எனக்கும் அப்படியே தோன்றியது. பல சிக்கல்களை உருவாக்கும் - ஒரு ஆண் பல பெண்/ஒரு பெண் பல ஆண் - இரண்டிலுமே.

      சாரு நிவேதிதா - நானும் இது வரை படித்ததில்லை மா.

      பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சுவையான காஃபி. ஓட்ஸ் முத்தியா போய்ப் பார்க்கிறேன். சாரு நிவேதிதா எனக்கும் அவ்வளாய்ப் பிடித்த எழுத்தாளர் இல்லை. பயணி தொடவும் ஓட்டுநர் பயந்ததும் சிரிப்பைத் தந்தாலும் அவர் சொன்னது மனதில் கொஞ்சம் கலவரத்தையே ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      ஓட்ஸ் முத்தியா - முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. //ஒரு பெண் பல கணவர்கள் - தப்பில்ல - சாரு நிவேதிதா//

    ஜி தலைப்பு இது சாரு நிவேதிதா சொன்ன, கருத்து போலவே இருக்கிறது.

    கருப்பு ஆடு ரசிக்க வைத்தது. என்னிடமும் இவ்வகை தொகுப்பு இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு - சாரு நிவேதிதா சொன்னது போல இருக்கிறது - ஹாஹா.... எனக்கும் இது தோன்றியது!

      கருப்பு ஆடு தொகுப்பு - முடிந்த போது பகிர்ந்து கொள்ளுங்கள் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. 2015ல் வெளியிடப்பட்ட பதிவை பின்னோக்கிச் சென்று பார்த்தேன். சிறப்பாக இருந்த‌து. அதுவும் ஒரு சோற்று பருக்கையைப்பற்றிய கவிதை ரசிக்க வைத்தது.
    இன்றைய பதிவில்‍-
    புகைப்படம் அழகு! ஆனால் இது புகைப்படம் போலத்தெரியவில்லை. பெயின்ட் செய்த மாதிரி தெரிகிறது!
    சாரு நிவேதிதா எழுத்து என்னை அதிகம் ஈர்த்ததில்லை.
    வித்தியாசமான பெயர்களை சேமித்து வைப்பது கூட ஒரு கலை!
    நம் ஊரிலும் அது மாதிரி கார‌ணப்பெயர்கள் நிறைய‌ இருக்கின்றன! உதாரணம் ' தங்கச்சி மடம்'!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னோக்கிச் சென்று முந்தைய பதிவினையும் வாசித்து, ரசித்தமைக்கு நன்றி மனோம்மா.

      இன்றைய காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சுவாரசியமான தகவல்கள்...

    சட்டப்படி எல்லாம் சரிதான்... ஆனால் தேவையே இல்லாதவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      சட்டப்படி சரியானதாக இருந்தாலும் தேவையில்லாதவை - அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு அருமை. முதல் செய்தி தென் ஆப்பிரிக்கா சட்ட சலுகை சரியில்லை. இதனால் நிறைய வீபரீதங்கள் ஏற்படும்.

    "உங்க மேல் தப்பில்லை..." வாடகை கார் ஓட்டுனர் சம்பவம் சிரிப்பை உண்டாக்கியது அந்த முழு பதிவில் சென்று வாசித்த போது, மருமகளுக்காக மாமியார் தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக தந்த செய்தி மனதை நெகிழ்த்தியது.

    ரசித்த புகைப்படம் அமர்க்களமாக உள்ளது.
    மிகவும் ரசித்தேன்.

    ஓட்ஸ் உணவும் எப்படி செய்வது எனப்போய் பார்க்கிறேன்.

    கருப்பு ஆடு என்ற ரயில் நிலைய பெயர் வித்தியாசமாக உள்ளது. நானும் பேருந்திலோ, ரயிலிலோ நம்மூர் பக்கம் பிராயாணிக்கும் போது இந்த மாதிரி விதவிதமான ஊர் பெயர்களை படித்து ரசித்துக் கொண்டே செல்வேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      விபரீதங்கள் ஏற்படும் விஷயம் தான் தென் ஆப்பிரிகா சட்ட சலுகை.

      பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இன்றைய கதம்பம் ரசித்தேன். நான் வித்தியாசமான காட்சிகள் பார்த்தால் புகைப்படம் எடுப்பேன். ஒருமுறை லண்டன் ஹீத்ரூவில் ஒரு இளைஞன் (20 இருக்கலாம்) இன்னொருவனை வழி அனுப்ப வந்தவன், செய்த காரியம், லண்டன் பாலத்தில் நம்மூரைப்போல மூணு சீட்டு போன்று வேறு தேசத்தைச் சேர்ந்தவன் நடத்திய சூதாட்டம் போன்று...

    சாருநிவேதிதாவின் கட்டுரைகள் நன்றாக இருக்கும். அவரின் நாவல்கள் படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான காட்சிகளை படம் எடுப்பதும் சரி தான் - சில சிக்கல்களும் உண்டு! படம் பிடிக்கப்பட்டது மனிதராக இருந்தால் அவர் ஆட்சேபிக்கக் கூடும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை கொண்டிருப்பது இங்கு கேரளத்தில் சிறிது வருடங்கள் முன்பு வரை இருந்தது. இதன் அடிப்படையில் வெங்கலம் என்ற சினிமா கூட வந்தது. 

    ஆனால் தற்போது எல்லா வழக்கங்களும் மறைந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொது வழக்கமே (முஸ்லிம்கள் உள்பட) நிலவில் உள்ளது

    இந்தியாவில் பொது சிவில் சட்டம் வர காலம் பிடிக்கும். அதுவரை தற்போதுள்ள மதப்பிரகாரம் உள்ள சட்டங்கள் தான் செயல்படும். தற்போதைய மதச்சட்டங்கள் ஒரு பெண் பல கணவர் என்பதை ஆதரிக்கவில்லை. ஆகவே ஒரு பெண் பல கணவர் என்பது இயலாதது. 

    காலா பக்ரா : பக்ரா என்றால் ஆடு மட்டும் தானா? பக்ரா நங்கல் என்றால் என்ன அர்த்தம். 

    போட்டோ கோணம் அருமை. அதனால் தான் அது சிறப்பு பெற்றது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவனுக்கு ஒருத்தி - இதுவே நல்லதும் என்பதே பலருக்கும் தோன்றுகிறது.

      Bakhra Nangal Dam - பக்ரா எனும் ஊரிலும் நங்கல் என்ற ஊரிலும் இரண்டு அணைகள் உண்டு. அதே ஆற்றின் (சட்லெஜ்) பாதையில் இன்னும் சில அணைகளும் இருக்கிறது. இரண்டு ஊர்களின் பெயரை இணைத்தே இந்த பெயர் சொல்லப் படுகிறது. அணையினை பார்க்க அனுமதி பெற வேண்டியிருக்கும். அந்த வழியே சில முறை சென்றதுண்டு ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அணைவருக்கும் வணக்கம்.
    சாருவின் கட்டுறைகள், படிக்க சுவாரசியமாக இருக்கும்.
    அவருடைய டிரான்ஸ்கேரசிவ் எழுத்துகளால் ஆன நூல்களை படிக்க நிறைய பொருமையும் அற்பணிப்பும் தேவை.
    உலகில் எக்காலத்துக்கும் பொருந்தும் நியாயமோ அறமோ இல்லை.
    இன்றைய சமூகத்திற்கு, சந்ததியை உருவாக்கி வளர்த்து சமூகத்தை உயர்த்த குடும்பமும் அதன் ஆணிவேறாய் நிலையாக இருக்கும் பெண்களும் தேவை.
    தற்போது குடும்பத்தில் செய்யப்படும் வேலைகள் நிறுவனமயமாகிக்கொண்டே வருகின்றன.
    சமையல் வேலையை உணவகமும் ஸ்விகி சொமேட்டோ பஓன்றவையும் ஈடுகட்ட முயல்கின்றன.
    அறிவியல் முன்னேற்றத்தால் திறமையான குழந்தைகளை செயர்க்கையாக மறபணு மாற்றம் செய்து உருவாக்கி வளர்க்கும் முறையும் ஒரு தொழிலாக மாறிவிடும்.
    இப்படியே குடும்பத்தின் வேலைகள் தொழில்மயமாக மாற மாற, பெண்களின் கோரிக்கைகளுக்கு பலம் சேரும்.
    பொருளியல் சுதந்திரமும் இக்கோரிக்கையின் பலத்தை உயர்த்தும்.
    இப்போதே திருமண வயது கூடிவிட்டது.
    மாற்றங்கள் நிறைய மிகழும்.
    மற்ற அணைத்து பதிவுகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. //உங்க மேல தப்பு ஒண்ணும் இல்ல! நேத்து வரைக்கும் நான் ”சவ ஊர்தி” ஓட்டிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் பயணிகள் வாகனம் ஓட்டறேன்! பழைய நினைப்புல பயந்துட்டேன்! //

    நான் நினைத்தேன், கவனமாக ஓட்டிக் கொண்டு இருக்கும் போது தொட்டதால் இப்படி ஆகி விட்டது என்று ஓட்டுனர் சொன்னதை படித்ததும் தான் தெரிந்தது பீதியில் இப்படி நிலைதடுமாறி விட்டார் என்று.
    பதிவில் ஓட்ஸ் உணவு, கருப்பு ஆடு பேர் விவரம் எல்லாம் அருமை.

    இப்போது பெண் கிடைப்பது இல்லை மணமகனுக்கு . வட மாநிலத்தில் ஐந்து பேரை மணந்த பெண் பற்றி படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட மாநிலங்களில் ஒரு பெண் சில ஆண்கள் என்ற நிலை இருக்கலாம் - ஆனால் பெரும்பாலும் முதல் கணவன் இறந்த பிறகு, கணவனது தம்பியைக் கூட திருமணம் செய்து கொள்வார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....