திங்கள், 30 மே, 2022

வாசிப்பனுபவம் - காதல் வேரில் பூத்த துரோகப் பூக்கள் - திக்ஷிதா லட்சுமி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கல்ல. ஒரு தவம்! ஒரு முறை நாம் வாசிப்பின் சுவையை உணர்ந்துவிடடால் அது நம்மை விடாது. 

 

******

 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூலை மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் திக்ஷிதா லட்சுமி அவர்கள் எழுதிய “காதல் வேரில் பூத்த துரோகப் பூக்கள்” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 116

விலை: ரூபாய் 150/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

காதல் வேரில் பூத்த துரோகப் பூக்கள்.: Kadhal veril pottà thoraga pokkal. (Tamil Edition) eBook : Dikshita Lakshmi , திக்ஷிதா லட்சுமி: Amazon.in: Kindle Store

 

******* 



 

சஹானா இணைய இதழ் நடத்திய ஜூலை மாத வாசிப்புப் போட்டியில் இருந்த பதினான்கு நூல்களில் திக்ஷிதா லட்சுமி அவர்கள் எழுதிய ”காதல் வேரில் பூத்த துரோகப் பூக்கள்” எனும் நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. காதல், நட்பு, துரோகம் ஆகியவற்றைச் சொல்லும் ஒரு நாவல் இது. 

 

இரண்டு பெண்கள் -  அதில் ஒருவர் தாய், தந்தை இல்லாத அனாதை.  மற்ற பெண் தனது தோழிக்காகவே, தனது தோழியிடம் இருக்கும் ஆழமான நட்புக்காகவே,  தனது தாய் தந்தையரை விட்டு விலகி இருப்பவள். இருவரும் ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம், ஒரே வீடு என இருக்கிறார்கள்.  அந்த நடிப்பின் இடையில் மெதுவாக நுழைகிறது காதல் - இரு தோழிகளில் ஒருவருக்கு அலுவலகத்தில் வேலை புரியும் நபருடன் காதல்.  இணைபிரியாத தோழியிடம் கூடச் சொல்லாமல் காதலை ஒப்புக் கொள்வதோடு தானும் காதலிப்பதை காதலனிடம் சொல்லிவிடுகிறார் அந்தத் தோழி. அந்தக் கசப்பில் தோழி விட்டு விலகிச் செல்கிறார் - அதுவும் தோழிக்கு காதலினால் வலி உண்டாகக்  கூடும் என்ற எண்ணத்தையும் சொன்ன பிறகு.  

 

நட்பு விலகினாலும், காதல் தொடர்கிறது. ஒரு சமயத்தில் காதலன் தன வீட்டுக்குத் தெரியாமல்  காதலியை கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொள்கிறான்.  வீட்டில் சொல்லி எல்லாம் சரி செய்து விடலாம் என்ற எண்ணம்.  முதல் திருமண நாள் வரை எல்லாம் சரியாகவே இருக்கிறது. அன்றைக்கு காதலன் வீட்டினருக்கு விஷயம் தெரிய, ஆரம்பிக்கிறது பிரச்சனை.  அதன் பின்னர் என்ன நடந்தது, தோழி என்ன ஆனாள்? பிரச்சனைகள் முடிந்ததா? இல்லை சோகத்தில் ஆழ்த்தியதா என்பதை எல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.

 

கதை சொல்லும் பாங்கு, ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் அடுத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வாசிப்பவருக்கு உண்டாக்கும் ஆர்வம் என எல்லாம் சரியாகவே இருக்கிறது.  ஆனால் மிகப் பெரிய பிரச்சனை ஒன்று உண்டு.  

 

ஆணத்துவம், வேஷத்தாரி, துவங்கள், சாய்ந்தப்படி, பொண்ணயை…..

 

மேலே உள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள். இப்படி எண்ணிலடங்கா வார்த்தைகளை மேற்கோள் காட்டலாம்! என்ன சொல்ல வருகிறாரோ அதை வாசகருக்குக் கடத்த  வேண்டியது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் வாசிப்பவரை குழப்பாமல் இருப்பது.  என்ன சொல்ல வருகிறார் என்பதை இது போன்ற எழுத்துப் பிழைகள் மிகவும் குழப்பி விடும்.  தட்டச்சு செய்த பிறகு படித்துப் பார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.  அவர்கள் தவறு அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.  வாணி, பிழை திருத்தி போன்றவை பலன் தரும். அப்படி இல்லை என்றால், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஒரு முறை படித்துப் பார்க்கச் சொல்லலாம்.  பிழை திருத்தி மின்னூலாக வெளியிடுவது மிகவும் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து கொண்டால் நல்லது. 

 

மேலும் மேலும் கதைகள் எழுதி, மின்னூலாக வெளியிட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து… 

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. அறிமுகம் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. வாணி, நாவி பயன்படுத்துவதே இல்லை போல... ஒருவேளை அவை தெரியாதோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வாணி மற்றும் நாவி குறித்து தெரியவில்லை என்றே தெரிகிறது.

      நீக்கு
  4. கதை வித்தியாசமாக இருக்கிறது அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஜி.

    ஆமாம் ஜி, புத்தகங்களில் பிழைகள் நிறைய இருப்பதைப் பார்க்கிறேன். அதேதான் ஏன் வாணி, நாவி இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை போலும். சமீபத்தில் நட்பு ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார் தான் எழுதுவதில் நிறைய பிழைகள் வருவதாக அதாவது தட்டச்சுப் பிழைகள் அதுவும் அலைபேசியில் அடிப்பதால். நான் அவருக்குப் பரிந்துரைத்த சுட்டிகள் வாணி, நாவி

    ஸ்ரீராம் வாணியில் குரல் பதிவும் இருக்கு என்று சொல்லி சுட்டியும் அனுப்பியிருந்தார். ஆனால் அச்சுட்டி இன்னும் சரியாக வடிவமைக்கபப்டவில்லையா என்று தெரியவில்லை. ஸ்ரீராமுக்கும் அது வேலை செய்யவில்லை, எனக்கும். மீண்டும் போய் முயற்சி செய்ய வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. வாணி மற்றும் நாவி பயன்படுத்தி தவறுகளை தவிர்க்கலாம். ஆனால் பலரும் செய்வதில்லை.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....