செவ்வாய், 31 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி இரண்டு – அப்பாவும் இவளும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அப்பா எனும் ஆலமர நிழலில் இருக்கும் வரை வாழ்க்கை எனும் வெய்யில் பெண்களை சுட்டதே இல்லை.  


******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

யாரிவள்! பகுதி முப்பத்தி இரண்டு - அப்பாவும் இவளும்



 

சுட்டிப்பெண் இப்போது எட்டாம் வகுப்புக்குச் சென்றிருந்தாள். வெள்ளை நிறச் சட்டையும், முழங்கால் வரையிலான அடர்பச்சை நிற ஸ்கர்ட்டும் தான் இவளுடைய பள்ளிச் சீருடையாக இருந்தது. அப்போது இவளுடைய பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் இவளுக்கு மதியநேர ஷிப்ட் முறை ஒதுக்கப்பட்டது. மதிய சாப்பாட்டை வீட்டில் முடித்துக் கொண்டு பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பினாள்.

 

ஆறு மாதத்திற்கு ஒரு பரீட்சை என ஹிந்தியில் ஆகஸ்ட்டும், ஃபிப்ரவரியும் இவளுக்கான தேர்வு மாதங்களாக இருந்தது. ஆறாம் வகுப்பில் துவங்கிய ஹிந்தி கற்றல் தொடர்ந்து கொண்டிருந்தது. நான்காம் தேர்வான பிரவேசிகாவில் தோற்று, அப்பாவின் அறிவுறுத்தலால் மீண்டும் அடுத்த முறை எழுதி தேர்ச்சி பெற்றாள். 

 

பரீட்சைக்கு ஒரு வாரம் முன்னர் ஹிந்தி பிரச்சார சபாவின் சார்பில் ஏதோ ஒரு பள்ளியில் செமினார் நடைபெறும். அப்பா அவளை அழைத்துச் சென்று விட்டுவிட்டு அருகில் வசிக்கும் தன் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கச் செல்வார். மீண்டும் மாலை அந்தப் பள்ளிக்கு வந்து இவளை அழைத்துச் செல்வார். இதே போன்று பரீட்சைக்கும்!  

 

இவள் நான்கு தேர்வுகளை முடிக்கும் வரை மேல் வீட்டில் வசித்த ஹிந்தி டீச்சரிடம் தான் கற்றுக் கொண்டாள். அதன் பின்பு அந்த டீச்சரும் வீட்டை காலி செய்து கொண்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார்!! இனி! இவளின் ஹிந்தி கற்றல் தொடருமா! என்று கேள்விக்குறியாக இருந்தது.

 

சில நாட்களுக்குப் பின்னர் அப்பா தன் அலுவலகத்துக்கு அருகில் ஒரு ஹிந்தி செண்டரில் இவளை அடுத்த தேர்வான விஷாரத்தின் முதல் நிலையான பூர்வார்த்துக்கு சேர்த்து விட்டார். இன்னொரு மொழியைத் தெரிந்து கொள்வது என்பது  வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயமாக உதவும் என்று அப்பா நினைத்தார். இவளே சுணங்கினாலும் அப்பா விட வில்லை! செல்லமாக தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவார். குழந்தைகளிடம் நேரம் செலவிடுதலை அப்பா எப்போதுமே விரும்புவார். பொறுமையுடன் காத்திருத்தலும் அவருக்கு இயல்பாகவே இருந்த பழக்கமாக இருந்தது.

 

'அஞ்சு முக்கு' என்று சொல்லப்படும் இந்த இடம் கோவையின் அடையாளங்களில் ஒன்றாகும். தேங்காய் எண்ணெயில் சூடாக பொரித்தெடுக்கும் நேந்திரங்கா சிப்ஸின் மணம் அந்த சூழலையே ரம்மியமாக்கும்! கையில் ஒரு புத்தகம் மட்டும் இருந்தால் ஜன்னலோரத்தில் அமர்ந்து வாசிப்பில் ஆழ்ந்து போகலாம் என்று நினைப்பவள் இவள்! அப்படி புத்தகங்களை வாங்க விஜயா பதிப்பகமும் இன்னும் பிற விஷயங்களைக் கொண்ட இடம் தான் அஞ்சு முக்கு!

 

அந்த ஹிந்தி செண்டர் அனுபவங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேனே! இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்தச் சுட்டிப்பெண்! தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. மத்யமா பாஸானதும் எனக்கு வேலை கிடைத்து விட்டதாலும் வேறு சில அனுபவங்களாலும் என்னால் ஹிந்தி பரீட்சைகளைத் தொடர முடியவில்லை! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நெய்வேலியில் இருந்தவரை ஹிந்தி கற்றுக்கொள்ளவில்லை. பணி நிமித்தமாக தில்லி சென்ற பிறகே பேச, எழுத படிக்கக் கற்றுக் கொண்டேன் ஶ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும் தொடர்ந்து விறுவிறுப்பாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துகள். தாயின் அன்புடன் தந்தையின் அக்கறையான அன்பும் இணைந்து கிடைத்தால் அது ஒரு வரப்பிரசாதம். தங்களது வருங்காலத்திற்கு அது உதவுமென அப்பா கணித்திருக்கிறார் போலும்.... தொடர்ந்து ஹிந்தி பயின்று இருப்பீர்கள் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவு வழி பகிர்ந்த விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. கூடுதலாக மொழிகள் பழகியது உங்களுக்கு பின்நாளில் பலனாகிறது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய் மொழி மற்றும் ஆங்கிலம் தவிர வேற்று மொழிகளை கற்றுக் கொள்வது மிகவும் நல்லது தான் கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. சூப்பர் ஆதி! விஷாரத் என்னாச்சு என்று தெரிந்து கொள்ள ஆசை. ஆஹா அஞ்சுமுக்கு....சிப்ஸ் வாசம் இங்கு வரை. கோயம்புத்தூரில் இருந்த வருடங்களின் நினைவுகள் வருகின்றது.

    நானும் ராஷ்டிரபாஷா வரை படித்தேன் பிரவேசிகா தேர்ச்சி பெறவில்லை அதன் பின் நின்றுவிட்டது. நாங்களும் நாகர்கோவில் வரை நடந்து சென்று நாகராஜா கோயில் கிராமத்தில் இருந்த ஹிந்தி ஆசிரியை ஒருவரிடம் கற்றுக் கொண்டோம். குழுவாக வயல் வழி நடந்து செல்வோம். அது ஒரு காலம். உங்கள் பதிவுகள் பல நினைவுகளை எழுப்புகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. உங்கள் அனுபவங்களும் நன்று.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நினைவுகள் அருமை.
    கோயம்புத்தூரில் "அஞ்சுமுக்கு" பஸ் நிறுத்தம் நினைவுக்கு வருது.

    இந்தி கற்றுக் கொண்டது பின் நாளில் உங்களுக்கு உதவி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சு முக்கு பிரபல நிறுத்தம் ஆயிற்றே! ஹிந்தி படித்தது உதவியாகவும் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. நினைவுகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  8. பெண் குழந்தைகள் அப்பாவின் செல்லப் பிள்ளைகள்தான். தொடர்கிறேன்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி. தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....