வியாழன், 15 டிசம்பர், 2022

சற்றே இடைவெளிக்குப் பிறகு…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

HEART IS THE ONLY MACHINE THAT WORKS WITHOUT ANY REST FOR YEARS. KEEP IT ALWAYS HAPPY, WHETHER IT IS YOURS OR OTHER’S!

 

******


 

அன்பின் நண்பர்களுக்கு, வணக்கம். சற்றேறக்குறைய ஐந்து மாதங்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த இடுகை வழி சந்திக்கிறேன். நலம் தானே? நான் இங்கே நலம். அலுவலக சூழல், பெற்றோர்களின் மூப்பு காரணமான பிரச்சனைகள், அதனால் மேற்கொண்ட திடீர் பயணங்கள் என நிறைய விஷயங்கள் என்னை எழுத்துப் பக்கம் வருவதில் சுணக்கம் கொள்ளச் செய்தது. நதிக்கரை நகரங்கள் பாதியில் நிற்கிறது என்பதைத் தவிர, எழுதுவதற்கான விஷயங்கள் நிறையவே இருந்தாலும் ஏனோ எழுதவே தோன்றவில்லை. 

 

கிட்டத்தட்ட 13 வருடங்களாக பதிவுகள் எழுதி வருகிறேன் என்றாலும் கடந்த வந்த பதிவுலகப் பயணத்தில்,  எனது ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இத்தனை இடைவெளி இருந்ததே இல்லை. இந்த முறை தான் இவ்வளவு பெரிய இடைவெளி. நான் எழுதாமல் போனால் யாருக்கும் ஒன்றும் நஷ்டமில்லை என்பது தெரிந்ததே என்றாலும் சில நண்பர்களும் வீட்டிலும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் விஷயம் - "நீங்க இப்படி எழுதாம ஒதுங்கி இருக்கறது நல்லாவே இல்லை" என்பது தான். 

 

நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் போலவே நாம் எழுதும் அனைத்தும் மற்றவர்களுக்கு பிடித்தே ஆகவேண்டிய அவசியமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் தான் என்றாலும், கடந்த சில மாதங்களாகவே "எழுதி என்ன சாதிக்கப் போகிறோம்?" என்ற எதிர்மறை எண்ணங்கள், கேள்விகள் வந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து நண்பர்கள் மட்டும் இன்றி வீட்டினரும் கேட்கிறார்கள் "ஏன் எழுதக் கூடாது?" என்று. 

 

இணைய வழி உங்கள் அனைவரையும் சந்தித்தாலும், சந்திக்காவிட்டாலும் யாரையும் மறக்கவில்லை. இங்கேயும் முகநூல் பக்கத்திலும் எழுத நினைத்தாலும், எழுத முடியாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடுவில்  தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு, அலுவலகம் தொடர்பான பயிற்சி நடந்ததால் இணையம் பக்கம் வருவதற்கு முடியாமல் இரவு நேரத்தில் மட்டுமே இணையம், அலைபேசி வழி கொஞ்சம் உலா வர முடிந்தது. 

 

தினமும் அதிகாலை எழுந்து, தயாராகி, 08.15 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் மாலை வீடு திரும்ப 07.00 மணிக்குமேல் ஆகிவிடுகிறது. அதன் பிறகு உணவு தயாரிப்பு, மற்ற வேலைகள், படிப்பு என நேரம் சரியாக இருக்கிறது. அதன் பிறகு வலைப்பூவில் எழுதவோ, நண்பர்களின் பதிவுகளை படிக்கவோ முடிவதில்லை.  இணையத்தில் உலா வருவது மிகக் குறைவு.  அப்படியே உலா வந்தாலும் WhatsApp வழி வரும் தகவல்களை பார்ப்பதோடு, அவற்றை பெரும்பாலும் படிக்காமலேயே அழித்து விடுவதோடு, உலா முடிந்து விடுகிறது. 

 

குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அடிக்கடி என்னிடம் தொடர்ந்து எழுதக் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். வலைப்பூவில் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் பாதியில் நிற்கிறது.  எழுத வேண்டிய விஷயங்கள், பகிர்ந்து கொள்ள நினைத்த தகவல்கள், நிழற்படங்கள் என நிறையவே இருந்தாலும் அதை எதுவுமே செய்யாமல் அசிரத்தையாகவே இருக்கிறேன். 

 

பயிற்சியின் ஒரு பகுதியாக பயணமும் மேற்கொண்டு திரும்பினேன். அந்த மாநிலத்திற்கு இதுவரை சென்றதில்லை. புதிய விஷயங்கள் பார்க்க முடிந்ததோடு, அது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புகள் நிறைய உண்டு என்பதில் சந்தேகமில்லை. விரிவாக எழுத முடியவில்லை என்றாலும் கூட, சில குறிப்புகளாக மட்டுமேனும் தர வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். இன்றிலிருந்து, முடிந்த போதெல்லாம் (தினம் எழுத வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல்) எழுத வேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு, இங்கே எழுதத் தொடங்குகிறேன். 

 

முன்பு தந்த ஆதரவினை நீங்கள் அனைவரும் தொடர்ந்து அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து சந்திப்போம் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

 

21 கருத்துகள்:

  1. உங்கள் மீள்வரவு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது.  நடுவில் காணாமல் போயிருந்த சகோதரர் மீண்டும் வந்த உணர்வு...  வாருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பிற்கு நன்றி ஸ்ரீராம். உங்கள் பதிவுகளும் படிக்க வேண்டும். முடிந்தபோது படித்து விடுவேன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நலமாக இருக்கிறீர்களா? ? வாருங்கள். நீங்கள் மறுபடி வலைத்தளத்திற்கு வருகை தந்தது மகிழ்வாக உள்ளது. உங்கள் அருமையான எழுத்துக்களை படிக்க ஆவலாக காத்திருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி. உங்கள் பதிவுகளும் படிக்க வேண்டும். முடிந்த போது படித்து விடுவேன்.

      நீக்கு
  3. முடிந்தவரை எழுதுங்கள். தொடர காத்திருக்கிறேன்.
    என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் ஆய்வு நூல் வெளியீட்டுப்பணி காரணமாக நானும் பல மாதங்களாக வலைப்பூவில் அதிகம் எழுதுவதில்லை. அண்மையில் நூல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பதிவுகள் வழி சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் முனைவர் ஐயா. தொடர்ந்து எழுதவே ஆசை.

      நீக்கு
  4. திரும்பவும் வலைத்தளம் வந்து முன்பு போல எழுத முனைந்துள்ளது மகிழ்வைத்தருகிறது. மீண்டும் நிறைய தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பிற்கு நன்றி மனோம்மா. முடிந்தபோது, முடிந்தவரை எழுதவே ஆசை. தங்கள் பதிவுகளும் படிக்க வேண்டும்.

      நீக்கு
  5. வாங்க வாங்க... இடையில் பலமாதங்கள் காணாமல்போன உணர்வு.

    //"எழுதி என்ன சாதிக்கப் போகிறோம்?"// - வாழ்க்கையில் எதைச் செய்தும் எதையும் சாதிக்கப் போவதில்லை. எழுதினால், பிறர் படிக்கவோ அல்லது அதிலிருந்து ஏதேனும் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள ஹேதுவாக இருக்கும். ஆரோக்கியமான பொழுதுபோக்காக இருக்கும். அவ்ளோதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து மாதம் - நீண்ட இடைவெளி தான் நெல்லைத் தமிழன். தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் அன்பிற்கு நன்றி தனபாலன். முடிந்த வரை எழுதுவேன் நண்பரே.

      நீக்கு
  7. உங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்வில் இதுபோன்ற திடீர் திருப்பங்கள் நம் தினசரி நடவடிக்கைகளை பாதிப்பதுண்டு சார்.
    மீண்டும் எழுதத் தொடங்குவது மிகவும் மகிழ்ச்சி.
    குறிப்பாக, தங்களின் பயணக் கட்டுறைகளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் கட்டுரைகள் - தொடரும். விரைவில் மின்னூலாக வெளியிட வேண்டும் என்பதும் ஆவல். தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  9. வெங்கட்ஜி வருக வருக. உங்கள் வரவு சந்தோஷம்.....

    இதோ எனக்கும் இதே எண்ணம் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. கமிட்மென்ட்ஸ், எழுதி என்னத்த சாதிக்கப் போகிறோம் இவை எனக்கும் இடையிடையே இதோ எழுத முடியாத சூழல்.....பதிவுத் தொடர்களின் இடையே இடைவெளி. சேம் போட் வெங்கட்ஜி....

    தினமும் எழுத முடியவில்லை என்றாலும் மனம் ஒத்துழைக்கும் போது எழுதுங்கள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவுகளும் வெளிவருவதில் மகிழ்ச்சி. நானும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்த பிறகு விடுபட்ட பதிவுகளையும் படித்து விடுவேன் கீதா ஜி.

      தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் வெங்கட் சார் ,

    நான் எழுதாமல் போனால் யாருக்கும் ஒன்றும் நஷ்டமில்லை என தாங்கள் கூறினாலும் பயன் அடைவோர் என்னை போல சிலர் உண்டே .... அதனால் தொடர்ந்து பயணங்கள் செய்யுங்கள்... அவற்றை பதிவிடுங்கள் என்றும் அதனை வசிக்கும் ஆவல் இங்கு தீராது ...

    போன மாதம் காசி பயணம் சென்ற பொழுது தங்களின் அலகாபாத் குறிப்புகளை இங்கும் கிண்டலிலும் வாசித்து குறிப்புகளுடனே சென்றோம் ...அதுவும் சங்கமத்தில் தங்களின் படங்கள் பார்த்து அது போல எடுக்க ஆசை வந்து ...சிறிது முயன்று படங்களும் எடுத்தேன் ...

    எங்களின் பயணங்களுக்கு தங்களின் குறிப்புகள் ஒரு கையேடு போல உள்ளது ...

    நேரம் அமையும் போது தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பயணங்களும் தகவல்களும் உங்களுக்கும் உதவியது அறிந்து மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி. முடிந்த வரை பயணம் செய்து பதிவுகள் எழுதவே ஆவல். பார்க்கலாம்.

      தங்களது ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....