ஞாயிறு, 18 டிசம்பர், 2022

தலைநகர் தில்லி - சுற்றுச் சூழல் - பராலி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TO BE SUCCESSFUL IN LIFE, ALWAYS FORGET THE PROBLEMS THAT YOU FACED IN LIFE, BUT NEVER FORGET THE LESSONS THAT THOSE PROBLEMS TAUGHT YOU.

 

******



 

பராலி எனும் ஹிந்தி வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Stubble என்று சொல்லலாம். அறுவடை முடிந்த பிறகு விளை நிலங்களில் இருக்கும் மீதி தான் இந்த பராலி என்பது. ஒரு போகம் அறுவடை முடிந்தபிறகு அடுத்த போகம் பயிர் செய்வதற்கு முன்னர் இவற்றை நிலத்திலே விட்டு வைக்காமல் எடுத்து, மீண்டும் உழவு செய்து பயிரிடுவார்கள். பஞ்சாப் மாநிலத்தில் வருடத்தில் மூன்று போகம் பயிரிடுகிறார்கள். ஒரு போகத்திற்கும் அடுத்த போகத்திற்குமான இடைவெளி மிகவும் குறைவு. 

 

அந்த நாட்களுக்குள் பராலியை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் நிலத்தினை அடுத்த போகம் பயிர் செய்ய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் செய்யும் செயல் அந்த பராலியை கொளுத்திவிடுவது தான். அதிக பட்சமாக பயிர் செய்யும் நிலங்களைக் கொண்ட இந்த மாநிலத்தவர்கள் இப்படி மொத்தமாக கொளுத்திவிடுவதால் புகை அதிகமாகி அனைத்து வட மாநிலங்களிலும் பரவி சுற்றுப்புறச்சூழல் மாசுபடுகிறது. கடந்த சில வாரங்களாகவே Air Quality Index எனப்படும்  காற்றுத் தரக் குறியீடு மிகவும் மோசமாக உள்ளது. 

 

0 முதல் 100 வரையிலான AQI நல்லதாகக் கருதப்படுகிறது, அதே சமயம் 100 முதல் 200 வரை மிதமானது, 200 முதல் 300 வரை மோசமானது, 300 முதல் 400 வரை இது மிகவும் மோசமானது என்றும் 400 முதல் 500 வரை அல்லது மேலே அது கடுமையானதாக கருதப்படுகிறது. தொடர்ந்து 300க்கும் மேலாகவே இந்த குறியீடு இருப்பதால் மூச்சு பிரச்சனைகள், கன் எரிச்சல், சளி, இருமல், மற்ற தொல்லைகள் என பலரும் அவதிப்படுகிறார்கள். 

 

இந்த மாசு பிரச்சனைக்கு பராலியை கொளுத்திவிடுவது மட்டுமே காரணம் இல்லை என்று சொன்னாலும் இதுவே பிரதான காரணமாக இருக்கிறது. அரசியல் காரணமாகவும் இந்த பிரச்சனையை வைத்துக்கொண்டு லாபம் பார்க்கும் அரசியல்வாதிகளை இந்தச் சமயத்தில் பார்க்க முடிகிறது. பிரச்சனையை சரி செய்ய முன்வரவேண்டும் அதை விட்டு விட்டு "வீடு பற்றி எரியும்போது குளிர்காய" நினைக்கும் விதத்திலேயே பலரும் நடந்து கொள்கிறார்கள். 

 

தலைநகர் தில்லியில் இருக்கும் Pusa Agriculture Institute இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு வித இரசாயனத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பராலியை ஓர் இடத்தில் சேமித்து அவற்றின் மீது அந்த இரசாயனத்தை தெளித்து விட்டால் சில நாட்களில் அவை பயிர்களுக்கு இடும் உரமாக மாறிவிடும். ஆனால் இதையும் பயன்படுத்த விவசாயிகள் தயாராக இல்லை. கொளுத்தி விடுவதே அவர்களுக்கு சுலபமான வழியாக இருக்கிறது.

 

வருடா வருடம் மூன்று நான்கு மாதங்கள் இவற்றை குறித்த விவாதங்களும் தகவல்களும் பறந்து கொண்டே இருக்கும். பிறகு அனைத்தையும் மறந்து விடுவார்கள் - அடுத்த வருடம் இதற்கு தீர்வு கண்டுவிடுவோம் என்ற வாக்குறுதி தருவார்கள். இந்த வருடமும் இதையே சொல்கிறார்கள். தலைநகர் தில்லிவாசிகளும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்கள் - அடுத்த வருடமாவது இந்த பிரச்சனை தீர வேண்டும். பார்க்கலாம். 

 

சரி இன்றைய Air Quality Index என்ன? 175 - மிதமானது - இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே போகாதே என்கிறது அலைபேசியில் இருக்கும் செயலி! தினம் தினம் இப்படியே இருந்தால் வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியாதே! நடுநடுவே பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து விடுகிறார்கள். தில்லி அரசின் அலுவலகங்களில் பாதி பேர் அலுவலகத்தில் வேலை செய்யவும் மீதி பேர் வீட்டிலிருந்தே பணிபுரியும்படியும் அவ்வப்போது சொல்கிறார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு இந்த வசதி இல்லை. 

 

தற்காலிக தீர்வுகள் தருவதை விட்டு நிரந்தர தீர்வுகளை தரும் நாள் எந்நாளோ என்று மற்ற தில்லிவாசிகளை போலவே நானும் காத்திருக்கிறேன். 

 

******

 

இந்த வாரத்தின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

23 கருத்துகள்:

  1. இந்தக் குறியீடை காலநிலை போல அன்றன்றைக்குத் தெரிவித்துவிடுகிறார்களா?

    திருப்பூர் சாயப்பட்டறைகள் நீரை முழுமையாக மாசுபடுத்துவதும், கோகுலம் யமுனை ஆற்றில் நுரைகள் ஆற்றை முழுமையாக மூடிச் செல்வதும் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் குறியீடை காலநிலை போல அன்றன்றைக்குத் தெரிவித்துவிடுகிறார்களா?//

      ஆமாம் நெல்லை இங்க பங்களூரிலும் கூட தினமும், அதுவும் காலைம் மாலை, இரவு கூட வருமே, எனக்கு கணினியில் கீழே...மொபைலிலும் வரும். வெளியே செல்ல வேண்டாம் அப்படின்னு...இல்லை நல்லாருக்கு காத்துன்னு. காலனிலை, மாசு, வெயில் பத்தி எல்லாம் வருகிறது.

      கீதா

      நீக்கு
    2. அன்றன்றைக்கு மட்டுமல்ல வரும் நாட்களில் இந்த அளவில் இருக்கலாம் என்றும் தெரிவிப்பது உண்டு. கோகுலம் யமுனை ஆறு - தில்லியிலும் இதே நிலை தான் நெல்லைத் தமிழன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
    3. ஆம் கீதா ஜி. அலைபேசியிலும் கூட இதற்கான சில செயலிகள் உண்டு. தெரிந்து கொண்டால் நல்லது தானே! தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. முன்னரே இந்தப் பிரச்னை பற்றி எழுதி இருக்கிறீர்கள்.  பொதுமக்களுக்கு நன்மை செய்யும் எதையும் அரசியல்வியாதிகள் செய்ய மாட்டார்கள்.  அவர்கள் பிழைப்பே அதில்தானே இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். முன்னரே கூட எழுதி இருக்கிறேன் ஸ்ரீராம் - இங்கேயும், முகநூலிலும். தங்கள் கருத்திற்கு நன்றி. அரசியல்வியாதிகள் செய்ய மாட்டார்கள் - அதே அதே!

      நீக்கு
  3. வேதனைதான். விவசாயிகளுக்கு விரையில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனை தான். தங்கள் கருத்திற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. காலையில் முதல் கருத்தாக என்னோடது இருந்ததே.. எங்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... ஸ்பேம் பக்கத்தில் இருந்தது - மீண்டும் இங்கே கொண்டு வந்து விட்டேன் நெல்லைத் தமிழன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. எல்லா பிரச்சனைகளுமே அரசியல்வாதிகளுக்கு பயன் தரப்படுகிறது மக்களுக்கு ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு நன்றி கில்லர்ஜி. மக்களுக்கு பயன் தருவது குறைவான விஷயங்களே.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமும். தங்கள் கருத்திற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. வெங்கட்ஜி ஏற்கனவே தில்லியில் மாசு பிரச்சனை அதிகம்....புகை, நீங்களும் எழுதியிருக்கீங்க இப்போது பராலி.

    தென்னகத்திலும் கூட வயலில் எரிப்பது உண்டு என்றாலும் அதிகம் இருக்காது.

    காற்றுத் தரக்கட்டுப்பாடு இங்கும் பங்களூரிலும் தினமும் சொல்லப்படுகிறது. கணினியில் அது காட்டும். இன்று வெளியில் செல்லல்லாம் செல்லாதே மோசமாக இருக்கு என்றும் அதுவும் ஆஸ்துமா பிரச்சனை மூச்சுமுட்டல் பிரச்சனை உள்ளவங்க வெளில போகாதீங்கன்னும் சொல்லும்.
    வெயில் என்றால் அல்ட்ராவயலட் ஜாஸ்தி வெளியில் வெயிலில் செல்லாதேன்னும் வரும்...

    அரசியல்வாதிகள் எதற்குத்தான் தீர்வு கண்டுபிடித்து செயல்படுத்தறாங்க?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடா வருடம் வரும் பிரச்சனை தான் கீதா ஜி. ஆனாலும் தீர்வு இல்லை என்பதே வேதனையான உண்மை. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  8. இப்ப Pusa Agriculture Institute கண்டுபிடிச்சு தீர்வு சொன்னாலும் விவசாயிகள் ஏற்காதது மோசம்...விழிப்புணர்வு வேண்டும்...என்ன சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுலபமான வழியை மட்டுமே தேர்ந்தெடுப்பது வழக்கமாகிவிட்டது - அது கெடுதலாக இருந்தாலும்! தங்களது கருத்திற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. இந்த விஷயத்திற்க்கு விரைவில் தீர்வு கிடைத்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  10. டில்லியில் கடல் இல்லாததும் இப்பிரச்சனைக்கான பெரிய காரணம் சார்.
    தீர்வு மிக விரைவில் வரும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல் இல்லாததும் ஒரு காரணம் - இருக்கலாம் அரவிந்த். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. விவசாயிகள் இலகு வழியை கடைப்பிடிக்கிறார்கள் அதன் தீங்கை அறியாமல். '

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....