அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் - பகுதி ஒன்று - ஜெயலக்ஷ்மி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
எங்கள் பக்கத்தில் விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதும் பதிவுகள் பற்றி அறிவீர்கள். அவரது இல்ல வளாகத்தில், பக்கத்து வீட்டில் இருக்கும் திருமதி ஜெயலக்ஷ்மி அவர்கள் தனது வெள்ளியங்கிரி மலையேற்றம் குறித்த அனுபவங்களை ஒலி வடிவில் கொடுக்க, அதனை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுத்து வடிவத்தில் நமக்காகத் தந்து இருக்கிறார். வாருங்கள் இந்தப் பதிவு வழி நாமும் வெள்ளியங்கிரி மலையேற்றம் செய்யலாம் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு ஜெயலக்ஷ்மி/விஜி வெங்கடேஷ்.
******
*வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் - 20.4.2026* - பகுதி இரண்டு
பிறகு திருநீர்மலை என்னும் மலையை அடைந்தோம். அது இன்னும் மிக மிக கடினமான பாதை. வழ வழவென்று திருநீறு போலவே எங்கும் வெள்ளையாக மணல்கள் கொட்டிக் கிடக்கும். ஒரு அடி முன்னால் வைத்தால் இரண்டு அடி பின்னால் சறுக்கும். ஒரு பக்கம் அதள பாதாளம். காலில் செருப்பு வேறு வழிக்குகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் நடந்தோம். என் மகன் அம்மா பாத்து பாத்து அங்க பள்ளம் என்று கூறிக்கொண்டே வந்தான். ஒரு வழியாக ஏழு மலைகளையும் கடந்து நிமிர்ந்து பார்க்கும் போது அந்த வெள்ளியங்கிரி சிவனின், மகேஸ்வரனின் கோவில் கோபுரம் கண்களுக்கு தரிசனம் ஆயிற்று. பார்த்தவுடன் உடலில் ஒரு சிலிர்ப்பு கண்களில் நீர். ஆஹா வந்து சேர்ந்து விட்டோம். ஈஸ்வரனை கண்ணார காண்பது தான் பாக்கி.
இதில் ஒரு சின்ன விஷயம், நாங்கள் கோவிலின் பின்பக்கமாகப் போய்விட்டோம். பின்னர் சுற்றி வந்து கோவிலிலினுள்ளே சென்றோம். சிவனுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு மூங்கில் தடுப்பு. அங்கிருந்தவர்களில் நான் மட்டுமே பெண். என்னை அங்கிருந்த பூசாரி மூங்கில் தடுப்புக்குள் கூப்பிட்டு தரிசனம் செய்து கொள்ளச் சொன்னார். ஆனந்தக் கண்ணீர் வழிய நெருக்கமாக நின்று அந்த ஈசனை, கருணைக் கடலை, போக்கும் வரவும் புணர்வுமில்லாப் புண்ணியனை கண்ணார, மனதார தரிசித்துக்கொண்டோம். பூஜாரி என்னைப் பார்த்து, சாப்பிட்டீர்களா என்று கேட்டார். நான் வெறும் பழங்கள் மட்டும்தான் கொண்டு வந்தேன் என்று சொன்னேன். அவர் இவ்வளவு தூரம் மலை ஏறி வந்திருக்கீங்க சாப்பிடறதுக்கு சாப்பாடு கட்டி எடுத்துட்டு வந்து இருக்க வேண்டியதுதானே என்று சொன்னார். பின்னர் எனக்கு கை நிறைய குங்குமம் பின்னர் அபிஷேக விபூதி, பூமாலை, ஷால் போல ஒரு துணியையும் அணிவித்தார். பக்தி பரவசத்தில் பேச்சே வரவில்லை.
என் மகன் ருத்ராட்சம் கொண்டு வந்திருந்தான். அதை அந்த பூஜாரியிடம் கொடுத்து ஈஸ்வரனின் பாதத்தில் வைத்து கொடுக்கச் சொன்னான். அவரும் வைத்து கொண்டு வந்து கொடுத்தார். என்னுடைய மோதிரத்தை கழட்டி அவரிடம் கொடுத்து ஈஸ்வரனின் பாதத்தில் வைத்து கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் நான் சுடுகாட்டில் இருப்பவன், தங்கத்தை தொட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பின்னர் அவசரத்தில் என் கையில் கயிற்றில் கோர்த்து கொண்டு வந்திருந்த ஒரு ருத்ராட்சக் கோட்டையை அவரிடம் கொடுத்து ஈஸ்வரனின் பாதத்தில் வைத்து கொடுக்குமாறு கேட்டேன். ஏன் இப்படி போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். பதில் சொல்ல முடியவில்லை.
பின்னர் இன்னும் சிறிது நேரம் கண்ணார அந்த பரப்பிரமத்தை தரிசித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்தோம். பின்னர் ஈஸ்வரனைப் பிரிய மனமில்லாமல் மெதுவாக கீழே இறங்க ஆரம்பித்தோம்.
அப்போது கோவில் முன்னால் ஒரு இளைஞன் அமர்ந்து கண்மூடி தியானம் செய்து கொண்டிருந்தான். நாங்கள் இறங்க ஆரம்பித்தவுடன் அவனும் எங்களுடன் இறங்க ஆரம்பித்தான். என் மகன், அம்மா போறவங்களுக்கு வழி விடு என்று சொல்லி நாங்கள் மெதுவாக ஒரு ஓரமாக இறங்க ஆரம்பித்தோம். என்னால் சுத்தமாக முடியவில்லை. கால்கள் தடதடவென்று ஆட ஆரம்பித்து விட்டன. அப்போது நான் சொன்னேன், இருக்கட்டும் பா யாராவது நம்மளோட வந்தா நல்லது தானே என்று. அப்போது அந்த இளைஞன் என் அருகில் வந்து மெதுவாக இறங்க ஆரம்பித்தான். எனக்கு என்ன தோன்றிற்று என்று தெரியவில்லை. அவனுடைய கைகளை பிடித்துக் கொண்டேன். அவனும் என் கையை இறுக பிடித்தவாறு பல விஷயங்களை, என்னை உற்சாகப்படுத்தும் தொனியில் பேசிக்கொண்டே எனக்கு சிறிது கூட உடல் சிரமம் தெரியாதவாறு என்னை கீழே இறக்கி கூட்டிக்கொண்டு போனான்.
அப்போது எனக்குத் தோன்றிய ஒரே எண்ணம் - இல்லை நிதர்சனம் - அந்த ஈஸ்வரன் தான் இந்த இளைஞன் ரூபத்தில் வந்து என்னை மிக ஜாக்கிரதையாக அழகாக கீழே இறக்கி கூட்டிக்கொண்டு செல்கிறார் என்று. வியர்வையால் ஈரமான என் கையால் அந்தப் பையனின் கையைப் பற்றி கொண்டு கீழே இறங்கினேன். ஒரு முறை கூட அந்தப் பையன் அருவருப்போ எரிச்சலோ படாமல் மிக அழகாக பாந்தமாக தன் சொந்தத் தாயைக் கூட்டிச் செல்வதுபோல் என்னை இறக்கிக் கூட்டிக்கொண்டு போனான். போகும் வழியில் இருக்கும் இயற்கை எழில்களைக் கண்டு களித்துக்கொண்டே என்னிடமும் பேசிக்கொண்டே எந்த பயமும் இல்லாமல் சாதாரணமாக இறங்கினான்... எனக்குத்தான் பயம் கலந்த நடுக்கம்.... எதையும் பார்க்கவில்லை, படிகளைத் தவிர...
அந்த இளைஞன், வெள்ளியங்கிரி மலைக்கு நான்கு மாதங்கள் அதாவது ஒவ்வொரு பிப்ரவரி மார்ச், ஏப்ரல், மே இந்த நான்கு மாதங்களும் தவறாமல் மலையேறி விட்டு செல்கிறான். இந்த மலையில் இந்த நான்கு மாதங்கள் மட்டுமே ஏறுவதற்கு அனுமதி. ஏனென்றால் அதற்குப் பிறகு மழை ஆரம்பித்து விட்டால் பாதை பயங்கரமாக சறுக்கும், ஆபத்து என்பதற்காக அனுமதி இல்லை.
அந்த இளைஞன் தன் பெயர் மகிழவன் என்று சொன்னான். என்ன சந்தேகம்? அந்த மகேஸ்வரன் என்னை இத்தனைக் கடுமையான ஏழு மலைகளையும் ஏறிக் கடக்க வைத்து, கண்ணாரச் சிறப்பு தரிசனம் கொடுத்து, இந்த இளைஞன் மகிழவனாகத் தோன்றி என்னைக் கீழே பத்திரமாக இறக்கி என் மனதை பக்தியிலும் ஆனந்தத்திலும் திளைக்க, மகிழச் செய்திருக்கிறான் அல்லவா! இதைவிட பொருத்தமான பெயர் எப்படி இருக்க முடியும்! வேறு என்ன வேண்டும் எனக்கு? பிறவிப் பயனை அடைந்தது போல தோன்றிற்று.
அந்த இளைஞன் எங்களை விட்டு விட்டு விடைபெற்று தன் வழியாக சென்றான். அவனுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் ஆசிகளையும் வழங்கிவிட்டு அவனை எங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். வருவதாகச் சொல்லி இருக்கிறான். ஈரோட்டில் வசிக்கிறானாம்.இவ்வளவு இளம் வயதில் அதுவும் இந்தக் காலத்தில் இளைஞர்கள் எப்படியெல்லாமோ வழி தவறி போகும்போது, இந்தப் பிள்ளை எப்படி இப்படி ஆன்மீக வழியில் போய்க்கொண்டிருக்கிறது நல்ல வளர்ப்பு என்று நினைத்து வியந்து கொண்டே
மெதுவாக காரை நோக்கி நடந்து வீடு நோக்கிப் பயணமானோம்.
நான் மலை ஏறும்போது நினைத்தேன், நல்லபடியாக ஏறி தரிசனம் பண்ணி விட்டு இறங்கிவிட்டால் போதும், இந்த ஆயுளுக்கு இந்த ஒரு முறை போதும் என்று.
ஆனால் என் மகன் திரும்பி வரும்போது அம்மா போதுமில்லையா பார்த்தது திருப்தியா என்று கேட்டபோது மனதிற்குள் சட்டென தோன்றியது, இன்னும் இரண்டு முறை வரவேண்டும் என்று.. அதுதான் அந்த வெள்ளியங்கிரி ஆண்டவனின் சக்தி. அது மகா பெரிய காந்த சக்தி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் போல.
*கற்பனை கடந்த சோதி;
கருணையே உருவமாகி;
அற்புத கோல நீடி; அருமறைச் சிரத்தின் மேலாம்; சிற்பரவியோமமாகும்; திருச்சிற்றம்பலத்துள் நின்று; பொற்புடன்
நடஞ்செய்கின்ற;
பூங்கழல் போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻*
- *ஜெயலஷ்மி*
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
17 ஜூலை 2026





விபூதி மலை என்று சொல்லப்படும் இடத்ததின் விவரங்கள் பயமுறுத்துகின்றன. மிகவும் ஜாக்கிரதையாக கடக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்த வயதிலும் பார்க்க வேண்டும் என்ற பக்தி சிந்தனையால் இவ்வளவு சிரமங்களை பொருட்படுத்தாது சென்று வணங்கி வந்தது சிலிர்ப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குமகிழவன்... வித்தியாசமான பெயர் மற்றவர்களுக்கு முகம் கோணாமல் உதவுவதில் மகிழ்ச்சி அடைபவர் போலும். நீங்கள் சொல்வது போல் அந்த சிவபெருமான் மகிழவனுக்கு 'இன்று உனக்கு ஒரு கடமை இருக்கிறது' என்று அனுப்பி இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும், பார்த்து விட்டு வந்த பிறகு மறுமுறையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் புரிந்து கொள்ள முடிகிறது்
பதிலளிநீக்குகடுமையான பயணம். நல்லபடியா முடிந்தது அவனது அருள்.
பதிலளிநீக்குவணக்கம்.இந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் செய்தது என் neighbour cum தோழி ஜெயலட்சுமி. போய்விட்டு வந்து அவள் என்னிடம் அதைப் பற்றி சொல்லச் சொல்ல, நான் அவளிடம் இதை எழுத்தில் வடிக்கச் சொன்னேன். அவள், எனக்கு எழுத வராது, நான் என் அனுபவத்தை மறுபடி வாய்ஸ் மெசேஜ் ஆக உங்களுக்கு அனுப்புகிறேன், அதை நீங்கள்.எழுத்தில் வடித்து அனுப்புங்கள் என்றாள். அதைத்தான் நான் செய்தேன். ஆனால் எழுதும்போது எனக்கு என்னமோ நானே அங்கு போய்விட்டு வந்தது போல் ஒரு உணர்வு.என்னால் நிச்சயமாக (ஏன், எந்தப் பெண்களாலேயுமே அதைச் சாதிப்பது வெகு கடினம்) என்னால் முடியாது. அதற்காகவே இந்த அனுபவத்தை எழுத என்னைக் கருவியாக அந்த பரப்பிரம்மம் உபயோகித்ததோ என்னவோ... அதுவும் அந்த மகேசனின் அருள் தான். ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻 ஹர ஹர மஹாதேவ்🙏🏻🙏🏻🙏🏻
பதிலளிநீக்குவிஜி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் வெள்ளியங்கிரி மலையேற்றம் நல்லபடியாக நிறைவேறி மனத் திருப்தியுடன் அவர்கள் இறை தரிசனத்தை பெற்றது மிகவும் மகிழ்வாக உள்ளது. இறைவன் அவர்களுக்கு வழித்துணையாக அனுப்பி வைத்த அந்த இளைஞனுக்கும் வாழ்த்துகள். அவர்கள் தங்கள் அனுபவத்தை சொல்லச் சொல்லக் கேட்டு பதிவை நன்கு எழுதி எங்களின் மனங்கவர்ந்த சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவரின் அநுபவம் இளைஞரின் உதவி என மலை தரிசனம் நன்று.
பதிலளிநீக்குமிக அருமையான மலைபயணக் கட்டுரை , பயண அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது . என் கணவருடன் சின்ன பசங்க வருவார்கள் ஒவ்வொரு ஆண்டும் . மகிழன் என் தங்கை பேரன் பெயர், இந்த பையன் பேர் மகிழ்வன் மற்றவர்களுக்கு. உதவி. செய்து மகிழ்வன் போலும். கோமதி அரசு
பதிலளிநீக்கு