கண்ணனுக்கும்
ராதைக்கும் இருந்த காதல் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமா? காதல் என்று வந்து விட்டாலே ஊடலும் வரத்தானே
செய்யும். அப்படி ஒரு சமயம் ஊடல் வந்து ராதையும் கண்ணனும் பார்த்துக் கொள்ளாமல்
இருக்கிறார்கள். ராதை சோகமே உருவாக
இருக்கிறாள். ”கண்ணனோடு தானே ஊடல். கண்ணனின் சிகையில்
சூடிக்கொள்ளும் மயிலிறகு கொண்ட மயில்களோடு எனக்கு என்ன ஊடல்?“ என்று நினைக்கிறாள் ராதை. அழகிய மயிலின் நடனத்தைக் கண்டு கொஞ்சம் மனதைத்
தேற்றிக்கொள்ள நினைக்கிறாள் ராதை.
மயில்கள் நடனமாடுவதைப் பார்க்கலாமே என தனது வீட்டை
விட்டு வெளியே வருகிறாள். எல்லாம் உணர்ந்தவன் ஆயிற்றே அந்தப் பொல்லாத கண்ணன் –
ராதை மயில் நடனமாடுவதைப் பார்க்கவா போகிறாள்? என்று சிரித்துக் கொண்டே, ஊரில் உள்ள
அத்தனை மயில்களையும் மறைந்து போகச் செய்கிறான். ராதை வெளியே வந்து பார்க்க, ஊரில்
ஒரு மயிலும் இல்லை. அனைத்துமே மாயமாக மறைந்து போயிருந்தன. என்ன கொடுமை இது –
கண்ணனைக் காணாத சோகத்தை மயில் நடனம் பார்த்தாவது போக்கிக்கொள்ள நினைத்தால் அதுவும்
முடியவில்லையே.....
சோகத்துடன் தோட்டத்து மரத்தடியில் அமர்ந்து கொள்கிறாள்
ராதை. ராதைக்கு இத்தனை வருத்தமா? தாங்கவில்லை கண்ணனுக்கு..... தானே மயில் போல வேடமிட்டு ராதையின் முன்
வருகிறான் – அழகிய மயூர் நிருத்ய – அதாவது மயில் நடனம் ஆரம்பிக்கிறது. கண்ணனே
மயிலாக வந்த பிறகு மறைந்த மயில்களும் வந்து விடுகின்றன. அங்கே அற்புதமாக ஒரு நடனம் அரங்கேறுகிறது. ராதையின் மனமும் மகிழ்ச்சி கொள்கிறது. வந்திருப்பது கண்ணன் தான் என்று தெரிந்த பிறகு
அவளுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஊடலும் வெட்கம் கொண்டு விட்டு விலகுகிறது.
[வ்]ப்ரஜ் பூமி என அழைக்கப்படும் மதுராவில்
இந்நிகழ்ச்சி நடந்ததாக சொல்லப்படுகிறது.
இன்றைக்கும் இந்த நிகழ்ச்சியை ஒரு நாட்டிய நாடகமாக மதுரா நகரின் சில
நாட்டிய குழுக்கள் நடத்தி வருகிறார்கள்.
அப்படி ஒரு குழு சமீபத்தில் தில்லியில் Indira Gandhi National Centre for the Arts நடத்திய National Cultural Festival of India இந்த மயூர் நிருத்யத்தினை ஆடி காண்போர் அனைவரையும் மகிழ்ச்சி
கொள்ளச் செய்தார்கள். இந்த நடனம் போலவே
வேறு ஒரு நடனமும் இப்பகுதியில் உண்டு. அந்நடனத்திற்குப் பெயர் சக்ர
நிருத்ய....
விஷ்ணுவின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரம் கையில் வைத்து
ஆடும் நடனம். சக்கரத்திற்குப் பதிலாக
இவர்கள் பயன்படுத்துவது ஒரு பெரிய தாம்பாளம் – ஹிந்தியில் தாம்பாளத்தினை ‘பராத்’ என அழைப்பார்கள். அந்த தாம்பாளத்தை சுழற்றி விட்டு ஒரு விரலில் பிடித்துக்
கொண்டே நடனமாடுகிறார் கிருஷ்ணர். நடுநடுவே
தாம்பாளத்தை மேலே தூக்கிப் போட்டு மீண்டும் பிடித்து ஆடுகிறார். இப்போது இந்த மயூர் நிருத்ய மற்றும் சக்கர
நிருத்ய இரண்டுமே சேர்ந்தே ஆடுகிறார்கள்.
பின்னணியில் இசையோடு கூடிய பாடல் ஒலிக்க, நடுநடுவே மயிலின்
அகவல் ஓசையையும் நீங்கள் கேட்க முடியும். நடனத்தினைப் பார்க்கும் போது நாமும்
கண்ணனும் ராதையும் ஆடிய வ்[ப்]ரஜ் பூமிக்குச் சென்று விடுகிறோம்....
நடனத்தினை நான் ரசித்த போது எடுத்த சில படங்கள் இந்த
ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நடனம் நேரில் பார்க்க
முடியவில்லை என்றாலும் படங்களாவது உங்களால் பார்க்க முடியுமே என்ற எண்ணத்தில் தான்
இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நடனத்தின் சில
காணொளிகள் Youtube-ல் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள்
பார்க்கலாமே!
என்ன நண்பர்களே இந்த வாரத்தில் இங்கே பகிர்ந்து கொண்ட
படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.












