ஞாயிறு, 29 மே, 2016

சுகமான சுமைகள்! - படமும் கவிதையும்

[படம்-2 கவிதை-3]

படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் புகைப்படத்திற்கு வந்த மூன்றாம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள்.  படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....

புகைப்படம்-2:


எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.  நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-3:

சுகமான சுமைகள்!

பூந்தளிர்கள் சுமந்து செல்ல பெருமையுடன் நிற்கின்றேன்!
பூமியில் பிறந்ததற்கே பேருவகை கொள்கின்றேன்!

பூமரங்கள் தான் சுமக்க பூமகள்தான் வருந்துவரா!
பூமகளைத் தான் சுமக்க பெருமான்தான் வருந்துவரா!

தாமரையைத் தான் சுமக்க தண்ணீரும் வருந்திடுமா!
தண்ணீரைத் தான் சுமக்க கார்மேகம் வருந்திடுமா!

நன்னீரைத் தான் சுமக்க நெடும்புனல்தான் வருந்திடுமா!
நெடும்புனலைத் தான் சுமக்க நீள்மருதம் வருந்திடுமா!

நறுமலர்கள் சுமந்து நிற்க தருவினங்கள் வருந்திடுமா!
தருவினத்தை சுமந்து நிற்க முல்லைவனம் வருந்திடுமா!

கண்ணிமையைத் தான் சுமக்க நயனங்கள் வருந்திடுமா!
நயனங்கள் தான் சுமக்க மதிவதனம் வருந்திடுமா!

கருங்கூந்தல் தான் சுமக்க கன்னிகைக்கு வருத்தமுண்டா!
கன்னிகையைத் தான் சுமக்க காதலர்க்கு வருத்தமுண்டா!

தென்றலைச் சுமந்துதர பூமரங்கள் வருந்திடுமா!
பூமரத்தை சுமந்து நிற்க பூமகளா வருந்திடுவாள்!

கார்முகிலைச் சுமந்து நிற்க கருமலைக்கும் வருத்தமில்லை!
கருமலையை சுமந்து நிற்க கண்ணனுக்கும் வருத்தமில்லை!

பூந்தளிர்கள் சுமந்து செல்ல பெருமையுடன் நிற்கின்றேன்!
பூமியில் பிறந்ததற்கே பேருவகை கொள்கின்றேன்!

        -   பத்மநாபன்.....

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் படமும் நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? இதே படத்திற்கேற்ற கவிதையை நீங்களும் எழுத நினைத்தால் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு ( venkatnagaraj@gmail.com ) அனுப்பி வைத்தால் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன்.  வேறு படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் உங்களது மின்னஞ்சலிலிருந்து எனக்கு தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. ஒவ்வொரு கவிதையும் ரசிக்கும்படி உள்ளது. கவிஞர்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. பத்மநாபன் சார், படமும் அதற்கு பொருத்தமான கவிதையும். அட்டகாசம்.எதுகை மோனை உவமைகள் ரசித்துப் படித்தேன்.
    வெளியிட்ட வெங்கட் நாகராஜ் உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  4. அழகான கவிதை.. அருமை..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  6. பொதுவாக இம்மாதிரிப் பதிவுகளில் அவர்களின் படைப்புகளை அவரவர் தளத்தில் பதியுமாறு கேட்டுக் கொள்வதுதான் நடக்கிறதுவாசகர்களுக்கு சில புதிய தளங்களை அறிமுகப் படுத்தும் இப்படிச் செய்வது பதிவுக்கு உங்களுக்குச் சிரமம்/ பஞ்சம் இருக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் வெளியிடுவதில் எனக்கு சிரமம்/பஞ்சம் இல்லை ஐயா. அப்படி பஞ்சம் ஏற்படும் போது பதிவு எழுதுவதை நிறுத்தி விடுவேன். எழுத வேண்டிய பதிவுகளும், பயணக் கட்டுரைகளும் நிறையவே இருக்கிறது. படக் கவிதைகளுக்காகவே தனியே வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கிறது. இல்லை என்றால் என் மற்ற வலைப்பூவான ரசித்த பாடலில் வெளியிடலாம் என்ற யோசனையும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

      நீக்கு
  8. மிக அழகாக எழுதியிருக்கிறார் ஜி!! அருமை மிகவும் ரசித்தோம்...

    கீதா:வெங்கட்ஜி இந்தப் பதிவும் சரி இதன் முன் பதிவும் சரி இங்கு கணினியில் பதிவு மட்டுமே வருகின்றது. பின்னூட்டங்கள் எதுவுமே வரவில்லை அதனால் பார்க்க முடியவில்லை. இப்பொது வரை முயன்றும் பின்னூட்டங்கள் எங்களது உட்பட இங்கு பார்க்க முடியவில்லை.

    ஒரு சில தளங்களுக்கு மட்டுமே பின்னூட்டம் அளிக்க முடிகின்றது. இணையம் வந்து கொண்டிருக்கின்றது எதனால் என்று தெரியவில்லை...ஒரு வேளை செர்வர் பிரச்சனையா என்று தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாட்களாக இணையத்தில் உலவ இயலவில்லை. அதனால் வெளியிடவில்லை. இன்று தான் கருத்துகளை வெளியிட முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. எனது கவிதையை பதிவிட்டமைக்கும் படித்து கருத்துரையிட்டோர்க்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....