வியாழன், 27 ஜூலை, 2017

மூங்கில் சிக்கன் - சாலைத் தடைகள் – அரக்கு பள்ளத்தாக்கு


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 11

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


தயாராகிறது Bamboo Chicken!
அரக்கு பள்ளத்தாக்கில்....

பத்மாபுரம் தோட்டத்தின் வாயிலுக்கு வந்தால் ஏதோ எரிகிற வாசம்… சாலையோரக் கடைகளில் ஒன்றரை அடி மூங்கில் குழாய்களை நெருப்பில் வைத்து எரித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றில் எதை வைத்து எரிக்கிறார்கள்…. என்ற சந்தேகம் எனக்குள். மூங்கில் குழாயின் ஒரு முனையில் சில இலைகள் வேறு திணிக்கப்பட்டிருக்கிறது? என்னவாக இருக்கும் என்ற நினைவு எனக்குள். என் சந்தேகத்தினைத் தீர்த்து வைப்பதற்காகவே ஒரு பெண்மணி எங்கள் பேருந்திற்குள் வந்தார். அரக்கு பள்ளத்தாக்கில் வசிக்கும் பழங்குடிப் பெண்மணி அவர். எங்கள் வழிகாட்டி அவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்! 



உன்னோடு நானும் சேர்ந்து எரிவேன்...
காத்திருக்கும் மூங்கில்கள்
அரக்கு பள்ளத்தாக்கில்....

இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையை செய்து தருபவர் இவர். உங்களுக்கு வேண்டுமெனில் நீங்கள் இவரிடம் சொன்னால், நீங்கள் அடுத்த இடத்தினைப் பார்த்து வருவதற்குள் உங்களுக்கு அந்த உணவைச் சமைத்துத் தருவார் என்றும் அதற்கான விலை இவ்வளவு என்றும் சொன்னார். அந்த உணவு Bamboo Chicken! இங்கே வசிக்கும் பழங்குடி மக்களின் பாரம்பரிய உணவு இந்த Bamboo Chicken. சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிய சிக்கனில் மிளகாய்த் தூள், மசாலாக்கள், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் என பலவற்றையும் தடவி, அதை ஒரு மூங்கிலுக்குள் அடைத்து, மேல் பாகத்தில் சால் என வடக்கே அழைக்கப்படும் குங்கிலிய மரத்தின் இலைகளை வைத்து மூடி, மூங்கிலோடு அடுப்பில் வைக்கிறார்கள்.

அவ்வப்போது மூங்கிலைத் திருப்பி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்! இத்தனையும் பேருந்திற்காகக் காத்திருந்தபோது பார்த்துக் கொண்டது! என்ன நமக்கு அதன் வாசம் தான் பிடிக்கவில்லை. எண்ணை சேர்ப்பதில்லை என்று சொல்லும் அந்தப் பழங்குடிப் பெண்மணி அதற்கான காரணமும் சொல்கிறார்! மூங்கிலுக்குள் இருக்கும் மரச்சாறு தேவையான எண்ணைப்பதத்தினைத் தருமாம்! நானோ சாப்பிடுவதில்லை. எனக்கு எதற்கு இத்தனை விவரங்கள் என்றால் உங்களுக்குப் பகிர்ந்து கொள்ளவே! கிலோ ரூபாய் 300/- முதல் ரூபாய் 600/- வரை கூட விற்பார்களாம். நாட்டுக் கோழியாக இருந்தால் ரூபாய் 800/- கூட விற்கலாம் என்கிறார் அந்தப் பெண்மணி.

சீசன் இல்லாத சமயம் என்பதால் அரைகிலோ Bamboo chicken ரூபாய் 150/- எனப் பேசி எங்கள் பேருந்தில் இருந்த சிலரிடம் காசு வாங்கிக் கொண்டு இறங்கினார் அந்தப் பெண்மணி. நாங்கள் அடுத்த இடம் பார்த்து வருவதற்குள் அந்தப் பெண்மணி தயார் செய்து, பேருந்திற்கே வந்து தருவார் என்பதையும் வழிகாட்டி சொல்லி விட்டார். இது அத்தனையும் பேருந்து அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே நடந்தது. அடுத்த இலக்கு என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்று சொல்வதற்கு முன்னர் சாலையில் இருந்த தடைகள் பற்றிப் பார்க்கலாம். அரக்கு கிராமத்திலுள்ள சாலைகளில் பல இடங்களில் இப்படி தடைகள் – மூங்கில் கழிகளைப் பிடித்தபடி சாலையின் இருமருங்கிலும் பெண்கள்! அவர்களைத் தாண்டி ஒருவரும் சென்று விட முடியாது! எதற்காக இப்படி?

காசு கொடுத்தால் கதவு திறக்கும்!


காசு கொடுத்தா கதவு திறக்கும்!
அரக்கு பள்ளத்தாக்கில்....


எல்லா சாலைகளிலும் பத்து இருபது அடிக்கு ஒன்றாக சாலையை மறித்து மூங்கில்களைப் பிடித்து நிற்கும் பெண்கள்! எதற்காக இந்த சாலைத்தடை! என்பதை எங்கள் வழிகாட்டி சொன்னார். நாங்கள் சென்ற சமயத்தில் தான் அவர்களது நிலங்களில் அறுவடை முடிந்து அடுத்த முறை பயிரிட வேண்டும். அதற்கு முன்னர் இந்தப் பகுதியில் இருக்கும் பழங்குடியினர் அவர்களது கடவுள்களுக்கு திருவிழா எடுப்பார்களாம். அந்தத் திருவிழா முழுவதும் பெண்கள் ஏற்பாடு செய்வது! வீட்டுக்கு வீடு திருவிழா தான். கிராமமே திருவிழா கோலம் பூண்டிருக்கும். திருவிழா என்றால் செலவு உண்டல்லவா? அந்தச் செலவை கிராமத்தினர் மட்டுமே எப்படிச் செய்வது? திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்பிருந்தே அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் வரும் வாகனங்களை மடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்!


எங்களைத் தாண்டி நீ போயிடுவியா!
அரக்கு பள்ளத்தாக்கில்....
இப்படிச் செய்வதை அடாவடி என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்களுக்குத் தேவை அதிகமில்லை! வாகனம் ஒன்றிற்கு ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ தான். அந்த நாணயத்தினைக் கொடுத்தால் கதவு திறக்கும்! கதவு என்பது இங்கே மூங்கில் கழி! பல இடங்களில் இப்படி என்பதால் ஒவ்வொரு வாகனமும் அந்தப் பகுதியில் இருக்கும் எல்லாத் தடைகளிலும் கொடுப்பதே ஐம்பது-நூறு ரூபாய்க்கு மேல் ஆகிவிடும்! இத்தனையும் அரசாங்கப் பேருந்தின் ஓட்டுனரோ, வழிகாட்டியோ எப்படித் தர முடியும். அதனால் வழிகாட்டி, பேருந்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சில்லரைக் காசுகளை வாங்கி ஓட்டுனரிடம் கொடுக்க ஒவ்வொரு மூங்கில் தடைகளிலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எனக் கொடுத்தபடியே வந்தார்.



அலங்கரிக்கப்பட்ட தடைகள்!
அரக்கு பள்ளத்தாக்கில்....
சிலர் மூங்கில் கழிகளை சாதாரணமாகப் பிடித்திருக்க, ஒரு சிலரோ கொஞ்சம் Advanced! மூங்கில்களை பூக்களும், இலைகளும் கொண்டு அலங்கரித்திருக்கிறார்கள். நாணயம் கொடுக்க நேரமானால், அவர்களது பாரம்பரிய நடனத்தினை ஆடத் தயாராகிவிடுகிறார்கள்! பெரும்பாலான இடங்களில் பெண்கள் தான் – அங்கே ஒன்றோ இரண்டோ ரூபாய் கொடுத்து தடைகளைத் தாண்ட முடிந்தது! ஒரே இடத்தில் மட்டும் பெண்களுடன் ஒரு ஆணும் இருந்தார் – அந்த இடத்தில் பத்து ரூபாய் கொடுத்தால் தான் கேட் திறக்கும் என்றார் அந்த அடாவடி ஆண்மகன். எல்லா இடத்திலும் ஒரு ரூபாய் தானே வாங்கிக் கொண்டார்கள் என்று கேட்க, “இங்கே பத்து ரூபாய் தான்! கொடுத்தா போலாம்…. இல்லாட்டி கேட் திறக்காது!” என்று கராறாகப் பேசினார்! வேறு வழியில்லை! பத்து ரூபாய் நோட்டு கை மாற, கேட் திறந்தது. அன்றைய நாள் முழுவதும், இப்படி பல இடங்களில் சில்லரைக் காசுகளைக் கொடுத்தபடியே இருந்தோம்!  அதுவும் எங்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவே அமைந்தது!


பாரம்பரிய நடனமாட தயாராகும் பெண்கள்....
அரக்கு பள்ளத்தாக்கில்....


தொடர்ந்து, பல தடைகளைத் தாண்டி, நாங்கள் அடுத்ததாகச் சென்று சேர்ந்த இடம் என்ன, என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

44 கருத்துகள்:


  1. ​தடைகளுக்கான காரணமும், மூங்கில் ரகசியமும் தெரிந்தது. தம பின்னர் வந்துதான் வாக்களிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இதே மூங்கிலுக்குள் என்னென்ன சைவப் பொருட்களை வைத்துச் சமைக்கலாம்?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி... ஆனால் எனக்கு அப்போது தோன்றவில்லை என்பதால் கேட்கவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. கொழுக்கட்டை, புட்டு செய்வாங்களாம் சகோ. சமீபத்துல சுற்றலாம் சுவைக்கலாம்ல சொன்னாக்க. ஆனா பார்க்கல.

      நீக்கு
    3. கொழுக்கட்டை, புட்டு செய்யலாமா... அடுத்த முறை அப்பக்கம் போகும் வாய்ப்பிருந்தால் கேட்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
    4. ஸ்ரீராம் இது பார்பெக்யு போன்றுதானே இருக்கு. பநீர் செய்யலாம்...என்று எனக்குத் தோன்றியது அங்கு பார்த்த போது...அது போன்று சேனைக் கிழங்கைக் கூட கொஞ்சம் பெரிய துண்டாகக் கட் பண்ணி பநீரை க்ரில்லிங்கு மேரினேட் செய்வது போல் சேனையையும் , சேம்பு கூட எடுத்துக் கொள்ளலாம் அதையும் மேரினேட் செய்து இப்படிச் செய்யலாமோ என்று எனக்குத் தோன்றியது.

      கீதா

      நீக்கு
    5. கிழங்கு, பனீர் மூங்கிலில் வைத்து சமைப்பது நல்ல ஐடியாவாக இருக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பெண்களுக்கு இருக்கும் இரக்க குணம் ஆண்களுக்கு இல்லை போலத் தெரியுதே :-) சரியான தண்டல்காரரா இருக்காரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்களுக்கு இரக்க குணம் இல்லை போலத் தெரியுதே! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. டோல்கேட் நினைக்கும் போது, இது எவ்வளவோ பரவாயில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோல் கேட் - ஐ விட இது பரவாயில்லை! உண்மை. அங்கே கொடுப்பது பல மடங்காயிற்றே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. நானாக இருந்திருந்தால் மூங்கிலுக்குள் பலவித காய்கறிகளை (உருளை, வெங்காயம், வாழை, கீரை போன்று) பஜ்ஜி மாவில் தோய்த்து மூங்கிலுக்குள் வைத்து வெஜ் ஆப்ஷன் கொடுத்து கலெக்‌ஷன் பார்த்திருப்பேன். இன்னொரு ஆப்ஷன் மூங்கில் வெஜ் பிரியாணி வகைகள். த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெஜ் ஆப்ஷன் - நல்ல ஐடியா. ஒரு ஸ்டால் போட்டுட வேண்டியது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. அட நெல்லை....வெஜ் பிரியாணி! யெஸ் தம் வைப்பது...யோசித்தேன்...அடுத்து சொல்ல வந்தேன் உங்கள் கருத்தைப் பார்த்துவிட்டேன்...ஸோ வழி மொழிகிறேன்...

      கீதா

      நீக்கு
    3. வெஜ் அல்லது தம் பிரியாணி மூங்கிலில்.... நல்லா தான் இருக்கும். நிறைய ஐடியாக்கள் வருகிறதே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. புகைப்பட வசனங்களை இரசித்தேன்
    பச்சை மூங்கில் எரியுமா ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை மூங்கில் எரிகிறதே - படத்தில் பாருங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. தொடருங்கள் தொடர்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. பூக்கள் அலங்காரம் செய்த தடை பார்க்க நன்றாக இருக்கிறது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. பாம்புக்கு பாம்புஷ் சிக்கன் பரவாயில்லை ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  11. நம்மூர்ல வாழை இலைக்குள் வைத்து மீன், கொழுக்கட்டை சமைப்பதை பார்த்திருக்கேன். அதுப்போல அங்க மூங்கில்போல!

    தமிழ்மண ஓட்டு போட முடில . ஏற்கனவே போட்டாச்சு நான் பார்த்தேன்னு பிக்பாஸ் ஜூலி போல பொய் சொல்லுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த.ம. ஓட்டு :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி rஆஜி!

      நீக்கு
  12. சுவாரசியமாகத் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  13. புதிய செய்தி.. அழகான படங்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  14. அட! நாங்களும் பார்த்தோம் மூங்கிலுக்குள் சிக்கன் வைத்துச் சுடுவதை...கிட்டத்தட்ட பார்பெக்யூ தான் இல்லையா...

    நாங்கள் சென்ற போது வழி மறிப்பு இல்லையே! எல்லா சாலைகளும் ஃப்ரீயாக இருந்தன...நீங்கள் சென்ற சமயம்தான் அங்கு திருவிழா போலும்...

    தொடர்கிறோம் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட பார்பெக்யூ.... அதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  15. படத்திற்குக் கமென்ட்ஸ் சூப்பர் ஜி..

    மூங்கில் இப்படிக் கட் பண்ணி வைத்திருப்பதே பார்க்க அழகாக இருந்தது...மூங்கிலில் கப், ஜக் எல்லாம் செய்து விற்றார்கள் போரோ கேவ்ஸிற்கு ஏற்றத்தில் ஏறும் இடத்தில்..அதற்கு மேல் வண்டிகள் செல்லாதே...அந்த இடத்தில்...மிக மிக மிக அழகாக இருந்தன அந்தக் கைவினை. என் கேமரா உயிரை இழந்துவிட்டதால் எடுக்க முடியவில்லை...போரா கேவ்ஸ் எடுக்க வேண்டும்எ சார்ஜ் போயிடக் கூடாதே என்று போனால் எடுத்துத் தள்ளிவிட்டேன்...சார்ஜ் போனதால் அதைப் படம் எடுக்க முடியாமல் போனது....அங்கு மட்டும் தான் மூங்கிலில் கைவினைப் பொருட்கள் செய்வதைப் பார்க்க முடிந்தது...நீங்கள் நிச்சயமாக எடுத்திருப்பீர்கள்...அந்தப் பகுதி வரும் போது உங்கள் படங்களைக் காண ஆவல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூங்கில் பொருட்கள் நிறைய இருந்தாலும் புகைப்படம் எடுக்க முடியவில்லை. பழங்குடி மக்களின் அருங்காட்சியகத்தில் சில படங்கள் எடுத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. //Bamboo Chicken// என்ன, அசைவம் சாப்பிடாதவர்களுக்கு அந்த கோழியை நினைத்து கண்ணுல தண்ணி வரும். அசைவம் சாப்பிடுவர்களுக்கு அந்த கோழியை நினைத்து நாக்குல தண்ணி வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. கேரளா பக்கம் மூங்கில் குழலில் சணல் கயிறு சுற்றி ஆவியில் புட்டு வேகவைப்பார்கள்.
    நம் ஊர் பக்கம் திருவிழா சமயம் வரும் பாதையில் (நடு ரோட்டில் பாதையில்) நின்று காசு கேட்பார்கள். படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....