திங்கள், 20 நவம்பர், 2017

எழில் கொஞ்சும் கிரிக்கெட் ஸ்டேடியம் - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 10

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6 7 8  9


பின்புலத்தில் பனிச்சிகரங்களும் அழகிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கும்...

நெய்வேலியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது. ரேடியோ – அதுவும் வால்வு ரேடியோ மட்டும் தான். அதில் தான் பாடல்கள், நாடகங்கள், திரைப்படங்களின் வசனங்களை ஒலி பரப்புவார்கள். கிரிக்கெட் போட்டிகள் என்றால் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் Running Commentary கேட்பதுண்டு. சென்னையில் போட்டிகள் நடக்கும் போது மட்டும் தமிழில் ஒலிபரப்புவார்கள். அப்படி தெரிந்து கொண்டது தான் கிரிக்கெட் விளையாட்டு. வெளியே சென்று விளையாடியது கிடையாது. பள்ளியில் Hand Cricket என வகுப்புக்குள்ளேயே விளையாடி இருக்கிறோம்.



இந்த விளையாட்டில் கொஞ்சம் ஆர்வம் வர, சில கிலோமீட்டர்கள் தள்ளி வட்டம்-26 இல் இருக்கும் நண்பரது வீட்டிற்குச் சென்று தொலைகாட்சி பெட்டியில் சில டெஸ்ட் போட்டிகளைப் பார்த்திருக்கிறேன். வெளிநாட்டு விளையாட்டுத் திடல்கள் பச்சைப் பசேலென புற்களால் அமைந்திருக்க, நம் ஊர் திடல்கள் ஆங்காங்கே திட்டுத் திட்டாக புற்களாக இருக்கும். நமது நாட்டிலும் இப்படி அழகிய திடல்கள் அமைக்க மாட்டார்களா என்ற எண்ணம் வந்ததுண்டு. சமீப வருடங்களில் தான் இப்படியான விளையாட்டுத் திடல்கள் நமது நாட்டிலும் ஆங்காங்கே அமைத்திருக்கிறார்கள்.  அப்படியான ஒரு கிரிக்கெட் விளையாட்டுத் திடல் தான் தரம்ஷாலாவில் அமைந்திருக்கும் ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் கிரிக்கெட் ஸ்டேடியம்.  கடல் மட்டத்திலிருந்து 1457 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த விளையாட்டுத் திடல் எழில் மிகு இடமாகும்.



மாதா குணால் பத்ரி மந்திர் என அழைக்கப்படும் கோவிலில் ஸ்ரீகபாலேஷ்வரி தேவியை தரிசனம் செய்த பிறகு நாங்கள் சென்ற இடம் அந்த கிரிக்கெட் ஸ்டேடியம். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஊரில் நடைபெறும்போது, வெளிநாட்டில் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு இணையாக, எழில் கொஞ்சும் ஸ்டேடியமாக, அமைந்திருப்பதை நாம் தொலைக்காட்சி வழியாக பார்த்திருக்கிறோம். ஹிமாச்சலப் பிரதேசம் ஒரு மலைப்பிரதேசம் என்பதால் இங்கே கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பது ஒரு சவாலான விஷயம் தான். மிகவும் அழகாக இங்கே அமைத்திருக்கிறார்கள் – சுற்றிலும் தௌலாதார் மலைத்தொடர் இருக்க, பச்சைப்பசேலென புல்வெளி அமைத்து தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த இடத்தினை நேரடியாகப் பார்த்தோம்.



2003-ஆம் ஆண்டே இந்த ஸ்டேடியம் அமைக்கப்பட்டாலும், சர்வதேச அளவில் முதல் போட்டி இங்கே நடத்தப்பட்டது 2013-ஆம் ஆண்டு தான்.  இது வரை 1 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 8 IPL போட்டிகள் இங்கே நடந்திருக்கிறதாம். தரம்ஷாலா செல்லும் அத்தனை சுற்றுலாப் பயணிகளும் இங்கே வந்து அழகினை ரசிக்க ஏதுவாய் எல்லா நாட்களிலும் இங்கே அவர்களுக்கு அனுமதி உண்டு. விளையாட்டு அரங்கிற்குச் செல்ல, சற்று தொலைவு நடக்க வேண்டியிருக்கிறது என்பதும், சுற்றுலாப் பயணிகள் பார்க்கும்போது, அத்தனை சுத்தமாக இல்லாததும் ஒரு குறை. போட்டிகள் இங்கே நடப்பது குறைவு என்பதால், அத்தனை பராமரிப்பு இல்லை. போட்டிகள் நடக்க இருக்கும் சமயத்தில் மட்டுமே கொஞ்சம் சுத்தமாக இருக்கும் போல! ஆனாலும் இங்கே வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவதே இல்லை என்கிறார் எங்கள் ஓட்டுனர். 



விளையாட்டு அரங்கத்தினுள் சென்ற போது சிலர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கடைசியாக நடந்த போட்டியில் யார் எவ்வளவு ரன் எடுத்தார்கள் என்பதை இன்னமும் ஸ்கோர்போர்ட் காண்பித்துக் கொண்டிருக்கிறது! நிறைய பேர் அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். நாங்களும் அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். சுற்றுலாப் பயணிகள் இங்கே வந்து இயற்கை எழிலை ரசிக்க எந்தக் கட்டணமும் இல்லை! ஆனால் போட்டி நடக்கும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இப்படி உள்ளே வர இயலாது! அனுமதிச் சீட்டு இல்லை என்றால் Strict No No தான்! விளையாட்டு அரங்கின் வெளிப்புறத்திலும் நிறைய பூஞ்செடிகள், தொட்டிகள் இருக்க அவற்றையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். 





இங்கே புல்வெளி அமைக்க மற்ற இடங்கள் போல இல்லாது ஒரு தனிப்பட்ட புல் வகையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் – மலைப் பிரதேசம் என்பதால் அதற்குத் தகுந்த புல்வகை கொண்டு அமைத்ததாகத் தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் சில மணித்துளிகள் இருந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் வந்து சேர்ந்த இடம் எங்கள் தங்குமிடம்! சிறிது ஓய்வு எடுத்த பிறகு என்ன செய்தோம், எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

18 கருத்துகள்:

  1. இங்கு விளையாடப்பட்ட மேட்ச்களை நானும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பூக்களும் புல்வெளிகளும் அருமை அழகு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. பளபளக்கும் மைதானம்....

    நாங்களும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  4. புகைப்படங்களும் பின்னணியும் அருமை. ஸ்கோர் போர்டையும் பெரிதாக்கிப் போட்டிருந்தால், கடைசியாக நடைபெற்ற மேட்ச் என்ன என்பது ஞாபத்துக்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கோர் போர்ட் பெரிதாக்கி போட்டிருக்கலாம்! பிக்ஸெல் உடைந்து தெளிவாகத் தெரியாமல் போகலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. புகைப்படங்கள் மிக மிக அழகு!! மைதானமும் தான்...அப்புறம் அந்தப் பூக்கள்!! ஆஹா போட வைக்கிறது. மைதானம் என்ன இயற்கை அழகினிடையில்!! கிரிக்கெட் நடந்தாலும் இயற்கை கட்டிப் போட்டுவிடும் போல விளையாட்டைவிட!! தொடர்கிறோம் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் எட்டா தூரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  7. எவ்வளவு அழகு ஆட்கள் இல்லாமல் காலியான கிரவுண்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  8. படங்கள் அழகு.
    செய்திகள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. தர்ம்ஷாலா என்றால் கிரிக்கட் தான் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....