வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ட்ரிங்க்ஸ் சாப்பிடாதீங்க ப்ளீஸ்.... – இரண்டாம் காதல்



முன் குறிப்பு: நேற்று “அழ வைத்த அன்பு” பற்றி சொல்லும்போது, வேறு ஒரு காதல் கதையுடன் மீண்டும் விரைவில் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன். இதோ அதிக இடைவெளி விடாமல் அடுத்த நாளே வந்து விட்டேன். இன்றைய தினம் இரண்டாம் காதல் பற்றி பார்க்கலாம்! இதுவும் பேருந்துப் பயணத்தில் கேட்ட காதல் கதை தான்!
 
“ஹலோ...  நீங்க நேத்து எனக்கு  ஃபோன் பண்ணீங்களா?” பின் பக்க இருக்கையிலிருந்து ஒரு பெண்குரல்! “நான் யாருக்கும் ஃபோன் பண்ணலையே” என்று என் மனதிலிருந்து எழுந்த குரல் நல்ல வேளை வெளியே கேட்கவில்லை.

இல்லை என் பையன் எப்ப பார்த்தாலும், என் ஃபோன் வச்சு விளையாடுவான். ஏதாவது நம்பருக்கு ஃபோன் கால் போயிடும். சில சமயம் மிஸ்ட் கால் பார்த்து அவங்க கூப்பிடுவாங்க..... நீங்களும் ஒரு வேளை நேத்து கூப்பிட்டீங்களோன்னு தான் கேட்டேன். உங்க நம்பர் கால் ஹிஸ்டரில இருந்ததால தான் கூப்பிட்டேன்.... எப்படி இருக்கீங்க....

இப்படியான அலைபேசி சம்பாஷணைகளைக் கேட்கும்போது ஒரு பிரச்சனை – ஒரு பக்கப் பேச்சு மட்டுமே நம்மால் கேட்க முடியும் – மறுபக்கத்திலிருந்து என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது [ஸ்பீக்கர் மோடில் வைக்காமல் இருந்தால்!] என்றாலும், கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு எல்லையில்லாமல் யோசிக்கமுடியும். இந்தக் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போடுவது என்பது குதிரைக் கொம்பு போல.... ஆனாலும் கொஞ்சம் குதிரையை இழுத்துப் பிடிப்போம். ஒரு பக்கக் குரலை மட்டும் கேட்போம்....

‘நானா... நான் நல்லா இருக்கேன். ஒரு பையன். செம வாலு... அடக்க முடியாத சேட்டை, அப்படியே அவங்க அப்பா மாதிரி! ஹாஹா.... அவங்க அப்பாவும் நல்லா இருக்காரு.... வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்குங்க... நீங்க எப்படி இருக்கீங்க.... உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா....?

“என்னது உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? நான் கல்யாணத்துக்கு அப்புறம் ஊருக்கு வரவே இல்லை. எங்க அம்மா-அப்பாவும் அண்ணனோட ஊருக்குப் போயிட்டாங்க.... அங்கே ஒருத்தரும் இல்லையேன்னு நானும் வரல....”

“அது சரி தான் நீங்க அங்க தான் இருக்கீங்க.... ஆனாலும் எங்க வீட்டு மனுஷங்க யாரும் அங்கே இல்லைன்னு சொன்னேன். உங்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க? அவங்க உங்களுக்கு பொண்ணு பார்க்கலையா? பார்க்காம இருக்க மாட்டாங்களே....”

“என்னது உங்களை கண்டுக்கவே இல்லையா.... வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்றாங்களா?  அப்படியெல்லாமா சொல்றாங்க.... பாவங்க நீங்க.... ஏன் அப்படிச் சொல்லிட்டாங்க?”

என்னது நீங்க ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்களா?  எனக்குத் தெரியவே தெரியாதே.....  நம்ம பழகினபோது கூட எனக்கு அப்படித் தெரியலையே? 

“ஓ... அப்ப அவ்வளவு ட்ரிங்க்ஸ் பழக்கம் உங்களுக்கு இல்லையா? அப்புறம் தான் அதிகமாச்சா இந்த பழக்கம்?”

“அடடா.... எனக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆனபிறகு தான் இப்படி நிறைய குடிக்க ஆரம்பிச்சீங்களா நீங்க..... நான் தான் நம்ம பழகும்போதே சொன்னேனே... நம்ம காதல் கல்யாணத்துல முடியறது சந்தேகம்னு.... நம்ம பழகினாலும் ஒரு லிமிட்டோட தானே இருந்தோம். அதைக் காதல்னு சொல்றத விட, ஒரு வித ஈர்ப்புன்னு தான் சொல்லணும். அது அந்த வயதில் வருகிற, ஒரு வித உணர்வு. நம்ம பழகினது கொஞ்சம் நாள் தான். அதனால இவ்வளவு மனசு கஷ்டப்பட்டு நிறைய குடிக்க ஆரம்பிச்சு, உங்க வீட்டில் யாருமே கண்டுக்காம இருக்க அளவுக்குப் போயிட்டீங்களே...”

நடுவில் கொஞ்சம் ப்ரேக்.... வேற ஒண்ணும் இல்லை – என் மன ஓட்டங்களைச் சொல்லத்தான் இந்த ப்ரேக். எனக்குக் கொஞ்சம் பயம் கூட... இந்தப் பொண்ணு பாட்டுக்கு முன்னாள் காதலன் கிட்ட இப்படி பேசிட்டு வருதே, அதுவும் ஓடற பஸ்சுல இப்படி மத்தவங்களுக்குக் கேட்கற மாதிரி பேசுதே, பஸ்சுல அந்தப் பெண்ணோட புருஷனோ, இல்லை அவங்க வீட்டைச் சேர்ந்தவர்களோ இல்லை நண்பர்களோ, யாராவது பார்த்து விஷயம் கணவன் வரை போனா, இப்ப கிடைத்த வாழ்க்கை வீணாப் போயிடப் போகுதே என்ற பயம். பின்பக்க இருக்கையிலிருந்து தொடர்ந்து குரல் வந்த வண்ணமே இருந்தது. சரி மீண்டும் அப்பெண்ணின் சுவாரஸ்யமான பேச்சைக் கவனிப்போம் வாங்க.....

“அடடா.... என்னால ஒருத்தர் வாழ்க்கையில கஷ்டப்படறதக் கேட்க மனசுக்குக் கஷ்டமா இருக்குங்க. நீங்க ட்ரிங்க்ஸ் சாப்பிடறத கொஞ்சம் கொஞ்சமா விட்டுடுங்க ப்ளீஸ்.... உங்களுக்காக இல்லைன்னாலும் உங்க அம்மா அப்பாவுக்காக, எனக்காக, உங்க பழக்கத்த விடுங்க. நீங்க அப்படி விட்டுட்டா, நானே கூட உங்க அம்மா அப்பா கிட்ட பேசறேன். நீங்க திருந்திட்டீங்கன்னு தெரிஞ்சா, உங்க அம்மா அப்பா சந்தோஷப் படுவாங்க. அவங்களே உங்களுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைப்பாங்க.... பெரியவங்க என்னிக்குமே நமக்கு நல்லது தான் செய்வாங்கன்னு நம்பிக்கை வைங்க....”

கொஞ்சம் நேரம் பெண்ணின் பேச்சுக் குரலே இல்லை. எதிர்பக்கத்திலிருந்து என்ன பேசுகிறார் என்பதை இவரது பதில் வைத்து தான் கற்பனை செய்ய வேண்டும்.

சரிங்க.... கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தில இருந்து வெளியே வாங்க. ப்ளிஸ்... உங்களுக்கு அப்படி என்ன வயசாச்சு.... பொண்ணு கிடைக்காம போகாது.  என்னை விட நல்ல பொண்ணே உங்களுக்குக் கிடைக்கும்.... அதனால சீக்கிரமா ஒரு நல்ல நியூஸ் நீங்க சொல்லணும் சரியா. நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு. உங்க வாழ்க்கை நல்லா இருக்க எனது வாழ்த்துகள்.....

அந்தப் பெண் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். எதிர்பக்கத்தில் பேசிய அந்த மனிதரின் வாழ்க்கையென்னும் பேருந்திலிருந்தும் இறங்கி விடுவார் என்ற நம்பிக்கை எனக்குள்.  பெயர் தெரியாத அந்த மனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு திருமணம் புரிந்து வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் அடையட்டும் என்ற எண்ணத்துடன் எனது பயணத்தினைத் தொடர்ந்தேன். நல்லதே நடக்கும் என நம்புவோம்.... நம்பிக்கை தானே வாழ்க்கை!

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....

என்றென்றும் அன்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பரவால்ல ஜி பொண்ணு வேண்டாததை பேசலை...ப்ராக்டிக்கலா பேசியிருக்கிறார். ஆனா என்ன இப்படி சத்தமா பேசுறதுதான்....அதுவும் தன் முன்னாள் காதலன்? காதலனோடு...

    எப்படியோ அவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டால் நல்லதுதான்...

    இதுலயும் கதை இருக்கே...நேற்றைய அன்பு காலிங்கையும், ட்ரின்க்ஸ் சாப்பிடாதீங்க ப்ளீஸையும் இணைத்தே சொல்லிடலாம் போல ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - இப்படி சொந்த விஷயங்களை, சென்சிடிவ் விஷயங்களை பொது இடத்தில் அனைவருக்கும் கேட்கும்படி பேசுவது சரியல்ல.

      நேற்றைய பதிவும், இன்றைய பதிவும் இணைத்து ஒரு கதை - நீங்க முயற்சி செய்யலாமே கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங். பொது இடங்களில் இப்படி சொந்த விஷயங்கள் பேசுவதே தப்பு. சில ஆண்கள் கத்திப்பேசுவார்கள் பாருங்கள்.. அருகில் கடக்கும் பஸ்ஸில் செல்பவர்களுக்க்க் கூட கேட்கும் அது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பொது இடங்களில் இப்படி பேசுவது தவறு தான். சிலர் பேசுவது அடுத்த பஸ்ஸில் இருப்பவர்களுக்கும் கேட்கும்! ஹாஹா.... வேறு ஒரு பேருந்து - வேறு ஒரு அலைபேசி அனுபவம் - அந்த அனுபவமும் பிறகு எழுதுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஆனால் சில ஆண்களுக்கு தான் பழகிய பெண்களிடம் இப்படிக்கு கதைவிடுவது வாடிக்கை! சென்று பார்த்தால் அவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை விடுவது வாடிக்கை.... ஹாஹா... அப்படியும் இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இவ்வளவு விலாவாரியா ஒரு பெண் பேசுமா.
    ஏதோ நல்லது நடந்தால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணோ, ஆணோ.... சிலர் இப்படி பொது இடங்களில் பேசுவதுண்டு வல்லிம்மா...

      நல்லது நடந்தால் சரி - அதே தான். நல்லதே நடக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  6. பொண்ணுங்க எப்பவுமே உசார்தான்னு சொல்லுறதுக்கு ஏத்தமாதிரிதான் இந்த பொண்ணும் இருக்கு. வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சா லவ்வாம இருந்திருக்கனும். அதைவிட்டு லிமிட்டா பழகுனாங்களாம். பின்ன அவன் குடிக்காம என்ன செய்வான்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் குடிக்காம என்ன செய்வான்..... :( குடி மட்டுமே தீர்வு அல்ல ராஜி.....

      வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சா லவ்வாம இருந்திருக்கணும் - அதானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  7. இப்படி விபரமாகப் பேசி இருக்கவேண்டாமோ? இருந்தாலும் அந்தப் பெண் தன் கல்யாணத்தின் போதே அந்தப் பையரிடம் இன்னும் சற்று வெளிப்படையாகப் பேசி அவரையும் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைச்சிருக்கலாமோ! ஆனாலும் கல்யாணம் ஆனப்புறமும் அவரைக் கூப்பிட்டுக் கேட்பவருக்கு இத்தனை நாட்கள் அவரோட நிலைமை தெரியாமல் போனதிலும் ஆச்சரியமாத் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசி இருக்க வேண்டாம் என்பது தான் எனது எண்ணமும்.

      சில விஷயங்கள் இப்படித்தான் - தேவையில்லாமல் இழுத்து விட்டுக் கொள்கிற விஷயங்கள்!

      இத்தனை நாட்கள் அவரோட நிலைமை தெரியாமல் போனதிலும் ஆச்சரியம் - ஆமாம் - எனக்குள்ளும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. அட! இதை கதைக்கான ஒரு யுக்தியாக வைத்து ஒரு கதை எழுதி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்களே எழுதலாமே முரளிதரன்... முயற்சி செய்து, கதை எழுதி வெளியிடுங்கள். படிக்க நாங்க ரெடி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. தொலைபேசியின் மறு முனையில் என்ன பேசினார்கள் என்று தெரிய ஒரு போட்டியே வைக்கலாம் தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுமுனையில் என்ன பேசினார் என்பது தெரிய ஒரு போட்டி வைக்கலாம்! ஹாஹா... நல்ல ஐடியா.... போட்டியை நீங்களே ஆரம்பித்து வைக்கலாமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. தமிழ்நாடு ரொம்ப முன்னேற்றம் அடைந்துள்ளது தெரிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  12. பேருந்தில் வெளிப்படையா உரையாடிய அந்த பெண் உண்மையில் தைரியசாலிதான் .ஆனாலும் சுவற்றுக்கும் காது உண்டே .
    அவரது நம்பரை போனில் வைத்திருப்பாதல்தான் குழந்தை தெரியாமல் மிஸ்ட் கால்ல கொடுத்திருக்கு ..
    //வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்குங்க//
    அந்த முன்னாள் இனியாவது தனக்கென வாழ்க்கையை துவங்கட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த முன்னாள் இனியாவது தனக்கென வாழ்க்கையை துவங்கட்டும்..... அதே அதே... நல்லது நடக்கட்டும் என்பதே பலருடைய அவா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....