சனி, 2 பிப்ரவரி, 2019

வண்ட்டூ மாமா – ஆதி வெங்கட்



வண்ட்டூ மாமாவை பற்றி சில விஷயங்கள் எழுதலாம் என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு...

 
”வண்ட்டூ” என்றால் வேறொன்றுமில்லை. ”வந்து” அல்லது ”வந்துட்டு” என்று பேச்சுக்கிடையில் எப்போதாவது சொல்வோமே. மாமா அதை எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார். வந்துட்டு தான் மருவி வண்ட்டூ ஆகி விட்டது. மாமா ஒரு அலாதியான மனுஷர். எங்கள் வீட்டுக்கு அருகில் தான் அவர் வீடு இருந்தது. கைக்கெட்டும் உயரத்தில் உள்ள பல்ப் மாற்றுவது முதல் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் செட் செய்வது வரை எல்லாவற்றிற்குமே அடுத்தவரின் உதவி அவருக்கு தேவை.

அவருக்கு இன்னுமொரு பிரச்சனையும் உண்டு.  கண்ணில் ஏதோ கோளாறு.  அதனால் அடிக்கடி கண்ணடித்துக் கொண்டே இருப்பார்.  புதிதாய் அவரைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ தம்மைப் பார்த்து தான் கண்ணடிப்பது போல இருக்கும்!   கீழ் வீட்டில் புதிதாய் வந்த ஒரு ஹிந்திக்கார பெண்மணி சண்டைக்கே வந்து விட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!  இதில் இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் நம்ம வண்ட்டூ மாமா ஹிந்தியில ரொம்பவே வீக்!  இவர் ஏதோ சொல்ல, அந்த பெண்மணி ஏதோ சொல்ல, அப்புறம் என்னவர் சென்று மத்யஸ்தம் செய்து பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.  அதன் பிறகு வண்ட்டூ மாமா அந்த பெண்மணி வீடு தாண்டும் வரை எதுக்கு வம்பு என கண்ணை மூடிக்கொண்டே படிக்கட்டு இறங்கினார்!

அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது பெரும் அவஸ்தையாக போய் விட்டது. எப்போதும் ஏதாவது உதவிக்கு அழைத்துக் கொண்டே இருப்பார். காலையில் எழுந்திருப்பதே அவரின் ஸ்லோகங்கள் சொல்லும் சத்தத்தில் தான். பின்பு மாமாவுக்கும், மாமிக்கும் இடையே பெரும் வாய்ச் சண்டை ஆரம்பமாகும். ஒருவழியாக மாமா அலுவலகம் கிளம்பிச் செல்வார். மாலையும் இதே போல் ஸ்லோகங்களும், சண்டையும் என தொடரும்.

இன்னுமொரு சம்பவம்:

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் நான், என் தோழி, அந்த மாமி ஆக மூவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றோம். ஸ்வாமியை தரிசித்து விட்டு வீடு வந்தடைந்தோம். மாமி தன் பர்ஸில் கையை விட்டு நெடுநேரம் துழாவிக் கொண்டிருந்தார். என்ன என்று கேட்டால் சாவியைக் காணோம் என்றார். சரி பரவாயில்லை எங்கள் வீட்டில் வந்து அமருங்கள் என்றேன். மாலை மாமா வந்து விடுவார். அவரிடம் ஒரு செட் சாவி இருக்கின்றதே அதனால் அவர் வரும் வரை இங்கேயே இருந்து சாப்பிடலாம் என்றேன். மாமி டென்ஷன் ஆகி இல்லை அவர் வந்து கதவைத் திறக்கட்டும். நான் அவருக்கு போன் செய்கிறேன் என்று கால் செய்ய ஆரம்பித்து விட்டார். மாமாவின் அலுவலகம் வீட்டிலிருந்து ஒன்றரை மணிநேர பிரயாணத்தில்.

”ஒரு பொறுப்பு வேண்டாம், அது எப்படி என் கிட்ட சாவி இருக்கா இல்லையான்னு கூட தெரியாம, வீட்டை பூட்டிட்டு போவீங்க. நீங்க உடனே கிளம்பி வாங்க… அதுவரை உட்காரக் கூட மாட்டேன்” என்று “உட்காரா விரதம்” பூண்டார்.  

என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வேறென்ன ஒரு ஆட்டோவில் மாமா வீட்டிற்கு வந்து விட்டார். வரும்போதே கையில் ஒரு லிட்டர் மிரிண்டாவுடன் வந்து இறங்குகிறார். கதவைத் திறந்து உள்ளே சென்ற பின் மாமி தன் பர்ஸை மீண்டும் ஒரு முறை துழாவிப்பார்த்தால் சில்லறைகளுடன் வீட்டுச்சாவி பல்லை இளித்தது! மாமா பாவம் ஒன்றுமே சொல்லாமல் அலுவலகம் கிளம்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் வெறும் சாம்பிள் தான், இது போல் இன்னும் நிறைய கூத்துகள் நடந்தது உண்டு.

இதே மாதிரி நிலை இன்னுமொருத்தருக்கும் நடந்தது. ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு செல்போன் எல்லோரிடமும் இல்லாத வேளையில் காலையில் கீழ் வீட்டிலிருக்கும் தன் நண்பனுடன் அலுவலகம் செல்வதற்காக சென்ற கணவனுடன் தானும் வழியனுப்ப கீழே இறங்கி சென்றாள் ஒருத்தி. பேச்சு வாக்கில் வீட்டைப் பூட்டி சாவியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போய்விட்டார் கணவன் (திருமணத்துக்கு முன் இருந்த ஞாபகம்). கணவன் சென்ற பின் வீட்டுக்கு வந்து பார்த்தால் வீடு பூட்டியிருக்கிறது. சாவி கணவனிடம். பாவம் அவள் என்ன செய்வாள்? கீழ் வீட்டுக்கு சென்று அமர்ந்திருந்தாள். கணவனின் அலுவலகம் வீட்டிலிருந்து இரண்டு மணிநேரப் பிரயாணத்தில். தகவல் சொல்லி பாதி வழியிலிருந்து வரச் சொல்லவும் வழியில்லை.

இரண்டு மணி நேரம் கழித்து அலுவலக எண்ணிற்கு அழைத்தாள். நடந்தைச் சொன்னாள். கணவன் ”பூட்டுக் காரனை அழைத்து வந்து பூட்டை உடைத்துக் கொள் அல்லது தோழி வீட்டிலேயே இரு” என்று சொல்லி விடவே, அந்த அப்பாவி ஜீவன் மாலை கணவன் வரும்வரை அந்த தோழி வீட்டிலேயே இருந்து நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்.

சரி இந்த சம்பவம் இப்ப எனக்கு ஏன் ஞாபகத்துக்கு வருது? ஏன்னா அந்த ஜீவன் வேறு யாருமில்லை - நாந்தேன்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

குறிப்பு: இந்தப் பதிவும் கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிய பதிவு தான். படிக்காதவர்கள் வசதிக்காகவும், இங்கே ஒரு சேமிப்பாகவும் மீள் பதிவாக…

38 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி, வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நான் முதல்ல நினைத்தது வாண்டு மாமா காமிக்ஸ் உண்டே புத்தகங்கள் அது பற்றியோய்னு நினைச்சுட்டேன்...

    //அதன் பிறகு வண்ட்டூ மாமா அந்த பெண்மணி வீடு தாண்டும் வரை எதுக்கு வம்பு என கண்ணை மூடிக்கொண்டே படிக்கட்டு இறங்கினார்!//

    ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் லீலைகள் இன்னும் நிறைய உண்டு. அப்போது எழுதியது கொஞ்சமே. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. காலையில் எழுந்திருப்பதே அவரின் ஸ்லோகங்கள் சொல்லும் சத்தத்தில் தான்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா....பாட்டி கரோ ஒரு புறம் ஸ்லோகம் மறுபுறம்ன்னு கலந்து கட்டி எழுப்பிச்சோ?!! ஹா ஹா ஹ

    சாவி தேடல் ....இதுக்கு முன்ன உங்களுக்கும் அப்படி ஆச்சுனு எழுதிய நினைவு வருது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பக்கத்தில் இருந்து ஒவ்வொரு சப்தம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. ஹா ஹா ஹா அந்த நாந்தேன் சம்பவும் நீங்க முன்ன சொன்ன நினைவு இருக்கு....வெங்கட்ஜி க்கு பேச்சுலர் வாழ்க்கை நினைவுல சாவிய கொண்டு போய்ட்டு...நல்லா நினைவுவிருக்கு..ஹா ஹா ஹ இது போல மீக்கும் நிறைய உண்டு அனுபவங்கள்...ஆனால் மறப்பது நானாகத்தான் இருக்கும் ஹிஹிஹி அதனால நிறைய திட்டுகள் எல்லாம் கேட்டதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறதி ஒரு வரம் - பல சமயங்களில்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    2. ஹையோ வெங்க்ட்ஜி ஹைஃபைவ்....யெஸ்யெஸ் மறாதி மிகப் பெரிய வரம் பல சமயங்களில்!!! நான் இப்படித்தான் வீட்டில் சொல்லி நன்றாகத் திட்டு வாங்குவேன்...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. 🙌

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. ஹாஹா, இந்தச் சாவியை மறப்பது எல்லாம் நடந்ததே இல்லை. அதிலும் நான் தான் முதலில் அலுவலகம் கிளம்புவேன் என்பதால் நான் ஒரு சாவியை எடுத்துட்டுப் போயிடுவேன். ::)))) என் அம்மா ஒரு தரம் தனியா இருந்தப்போ, (நாங்க ரெண்டு பேரும் வெளியே போயிருந்தோம்.) சாவியைக் கையில் வைத்துக் கொள்ளாமல் பக்கத்தில் உள்ள ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டுக் கீழே தண்ணீர் எடுக்கப் போயிருந்தார். திரும்ப வந்து திறக்கச் சாவியை எடுக்கும்போது அது உள்ளே விழுந்து! பாவம், அம்மா நாங்க வரும்வரை மாடிப்படியிலேயே நின்று கொண்டிருந்தார். நல்லவேளையா ஒரு மணி நேரத்துக்குள் நாங்களும் வந்துட்டோம், சாவியும் எங்களிடம் மாற்று இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்கள் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. குட்மார்னிங். சுவாரஸ்யமான சம்பவங்கள். இதுவும் மறதி வகையில் சேர்ந்துவிடும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      மறதிதான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. இந்த சாவிப்பிரச்னை எல்லோருக்கும் ஒருமுறையாவது நடக்கும் சம்பவம்! அசடு வழியும் அனுபவமும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசடு வழிந்த அனுபவங்கள்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. அந்த கண்ணாடிக்கும் மாமா ஆபிஸில் எப்படி சமாளிப்பார்? உதவிக்கும், கண்ணடிப்பதற்கும் அங்கே பிரச்னைகள் வராதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது அலுவலகத்தில் எனக்குத் தெரிந்த தமிழ் பெண்மணி மூலம் சில அலுவலக சம்பவங்கள் கேட்டு வயிறு வலிக்க சிரித்தது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. எங்க ஊருக்கு வாங்க ஜி... எந்த பூட்டிற்கும் மாற்று சாவி, எத்தனை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD! மாற்று சாவி, அது இருந்தும்தானே அங்கே பிரச்னை!!!

      நீக்கு
    2. ஹாஹா... தலைநகரில் பூட்டு சாவி செய்வது ரொம்ப சுலபம். நிறைய சர்தார்ஜிக்கள் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. வண்டு மாமா மறக்க முடியாத ஒரு நபர். சாவி சம்பவம் சிரிப்பை கொண்டு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    தங்களின் அருமையான எழுத்தாற்றலை கண்டு வியக்கிறேன்.

    வண்ட்டூ மாமா கதை என்றதும், நானும் ஏதோ வாண்டு மாமா மாதிரி சிறுவர் கதை எனத்தான் நினைத்தேன். ஆனால் இவர் சுவாரஸ்யமானவர் போலும். அத்தனை தூரம் பயணித்து வந்தும்,மாற்றுச்சாவி தன் மனைவியிடம் இருப்பது தெரிந்ததும் மெளனமாய் அலுவலகம் திரும்பச் சென்ற மாமாவுக்கு என்ன ஒரு பொறுமை.. "பொறுமையின் சிகரம்" என்ற பட்டம் தரலாம்.(ஒரு வேளை அவரும் மாலை வந்து சண்டையை வைத்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் ஒத்திகையுடன் கிளம்பிச் சென்று விட்டாரோ.. என்னவோ? ஹா ஹா ஹா. ஹா. ) நிறைய இடங்கள் அவருடைய இயல்புகள் சிரிக்கும்படி இருந்தன.

    இன்னொரு சம்பவமும் படித்து கொண்டே வரும் போது"பாவம் அந்த பெண்" என்று நினைக்கும் சமயத்தில், "அது நாந்தேன்" என்று நீங்களே பரிதாபத்துக்குரியவராக காட்டும் போது சிரித்து விட்டேன். எதையும் ஜோக்காக எடுத்துக்கொள்ளும் தங்களின் மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.

    தாங்கள் குறிப்பிட்டிருந்த "பதிவிலும்" சென்று பார்வையிட்ட போது" ஒரு கேள்விக்கு மூன்று பதில்கள்" தொடர் பதிவையும் படித்து ரசித்தேன். நன்றாக எளிமையாக பதிலளித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல மறந்த விஷயம்.... எனக்கு வாண்டு மாமா நினைவுக்கு வந்தார்.

      நீக்கு
    2. வாண்டூ மாமா எனக்கும் பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. அதானே பார்த்தேன்.. முன்பே படித்திருக்கிறேனே என்றே தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. ஜீவன் முடிவில் சொன்னது ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  14. மறதியால், கண்பிரச்சனையால் அவதிகள் வாண்டு மாமா பாவம்தான்.

    கடைசி பத்தி படிக்கும் போது அது நீங்கள் தான் என்று தெரிந்து விட்டது.

    பழைய பதிவில் என்ன பின்னூட்டம் போட்டேன் என்று நினைவு இல்லை.

    கல்யாணம் ஆன புதிதில் திருவெண்காடுவீட்டுக்கு முதன் முதலில் போய் இறங்கியவுடன் என் கணவர் என்னிடம் சாவி கேட்டது அதிர்ச்சி.

    குடித்தனம் வைக்க வந்த என் மாமியார், மாமனார், மற்றும் என் அக்கா, சாரின் அண்ணன்மார்களுக்கு அதிர்ச்சி. இவள் இப்போதுதானே வருகிறாள் இவளிடம் சாவி எப்படி இருக்கும் என்று?

    என் கணவர் முன்பே இருந்த வீடு பூட்டி விட்டு சாவி அவர்கள்தானே வைத்து இருப்பார்கள். அப்புறம் ஒரு வழியாக பெட்டியிலிருந்து எடுத்து உள்ளே போனோம்.

    முதல் அனுபவம் மறக்கவே மறக்காது. இப்போதும் இப்படி உன்னிடம் இருக்கா? என்ற கேள்வி வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்கள் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  15. வித்தியாச மனிதர்கள். சுவாரசியமய் எழுதி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஜி.

      நீக்கு
  16. எனக்கும் சில சமயங்களில் மறதி ஏற்பட்டதுண்டு தான். ஆனால் அதிகம் இல்லை. பதிவு வித்தியாசமான பதிவு சகோதரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....