சனி, 10 அக்டோபர், 2020

காஃபி வித் கிட்டு – தீநுண்மி நாட்கள் – ஹூக்கா – கனவு – ஹனிமூன் தேசம் – புதிர் - திருவாமாத்தூர்

காஃபி வித் கிட்டு – 87 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

முடியும் வரை முயற்சி செய்! உன்னால் முடியும் வரை அல்ல… நீ நினைத்தது முடியும் வரை… 

*****

இந்த வாரத்தின் எண்ணங்கள்: 

தீநுண்மி பற்றி எழுதக்கூடாது என்று தான் நினைக்கிறேன், ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை. கடந்த நாட்களின் சில நிகழ்வுகள் அப்படி. நெருங்கிய நண்பர் – பத்து-பதினைந்து நாட்களுக்கு முன்னர் அழைத்திருந்தார். தீநுண்மிக்கான பரிசோதனைகள் முடித்து வந்திருந்தார் – 24 மணி நேரம் கழித்தே அதன் முடிவு தெரியும் என்று சொன்னபோது, தைரியமாக இருங்கள், நல்லதே நடக்கும் என சொல்லி இருந்தேன். அடுத்த நாள் முடிவினைத் தெரிந்து கொள்ள அந்த மருத்துவமனையின் ஆன்லைன் வழி வசதியை அவரால் அலைபேசி வழி பயன்படுத்த முடியவில்லை என்று என் உதவியை நாடினார். கணினியிலும் அந்த நேரத்தில் ஏனோ முடிவினை தெரிந்து கொள்ள முடியவில்லை. மின்னஞ்சல் வழி தான் முடிவைப் பெற முடிந்தது – பாசிட்டிவ் எனும் நெகட்டிவ் செய்தி! சரி தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், உதவி தேவையெனில் சொல்லுங்கள் என மனதுக்கு இதம் தரும் விதமாக பேசினேன். அடுத்த நாள் மாநகராட்சியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார்கள் – விசாரித்து தனியாக இருப்பது தெரிந்ததால் தில்லியின் மிகப் பெரிய தனிமைப்படுத்தப்படும் வசதிக்கு – அது அவரது வீட்டிலிருந்து குறைந்தபட்சம் 20 கிலோமீட்டர் தொலைவில்! என் வீட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவு – அழைத்துச் சென்று விட்டார்கள். சில நாட்கள் முடிவில் தான் வீடு திரும்பினார். இது இப்படி இருக்க, இந்த வாரத்தின் ஒரு அதிர்ச்சியாக, எனது அலுவலகத்தில், எனது அடுத்த இருக்கையில் அமர்ந்து பணிபுரியும் நபர் கடந்த நான்கு நாட்களாக அலுவலகம் வரவில்லை. 

அவருக்கு உடல்நிலை சரியில்லை – ஜூரம், சளி, அசதி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபாதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். நேற்று முகரும் சக்தியும் குறைந்து விட்டது என்று சொல்ல, கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் – இன்று பரிசோதனை! நாளை தான் முடிவுகள் தெரியும்! நல்ல முடிவாக இருக்க வேண்டும்! என்னதான் நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும் எப்படி வரும், எங்கிருந்து வரும், யார் வழியாக நமக்கும் தொற்று ஏற்படும் என்று தெரியாத போது என்ன செய்ய முடியும்? இந்தக் குழப்பங்கள் இப்படி இருக்க, அலுவலகத்தில் ஆணிகள் தொல்லை – குறிப்பாக உயரதிகாரிகள் தரும் தொல்லை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. வீட்டிலிருந்தே அலுவலக பணிகளைச் செய்ய முடியும் என்றாலும் தினம் தினம் அலுவலகம் வந்தே தீர வேண்டும் என்று சொல்வதோடு, தினம் தினம் ஏதாவது ஒரு அலுவல் சம்பந்தமான கூட்டத்தினை ஏற்பாடு செய்து விடுகிறார் – சோசியல் டிஸ்டன்ஸ் எல்லாம் அவ்வளவாக பார்க்கமுடியாமல் போகிறது! நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்கிறது! நல்லதே நடக்கட்டும்… நல்லதே நடக்கும்! 

இந்த வாரத்தின் இசை: 

ஹரியானா மாநிலத்தில் ஹூக்கா மிகவும் பிரபலமான விஷயம். ஒவ்வொரு வீட்டின் வெளியிலும் ஹூக்காக்கள் இருக்க, வீட்டில் இருக்கும் ஆண்களும், சில வயதான பெண்மணிகளும் இந்த ஹூக்கா புகைப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு ஹூக்கா புகைக்க வசதி செய்து தருவது மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். ஹூக்கா புகைக்க தரவில்லை என்று கோபித்துக் கொள்ளும் உறவுகள் கூட உண்டு! ஹர்யான்வி மொழியில் இந்த ஹூக்கா பற்றி ஒரு பாடல், இந்த வாரத்தின் இசை பகிர்வாக!

   


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: 

இந்த வாரம் நாம் பார்க்கப் போவது ஒரு தாய்லாந்து விளம்பரம் – எதற்கான விளம்பரம் என்பதை நிச்சயம் உங்களால் யூகிக்க முடியாது – கடைசி சில விநாடிகளில் தான் உங்களுக்கு புரியும் அது எதற்கான விளம்பரம் என்று! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதை, விளம்பரம் பார்த்து நீங்களும் தெரிந்து கொள்ளலாமே! The Dream என்பது இந்த விளம்பரத்திற்கான தலைப்பு!

   


இந்த வாரத்தின் மின்னூல் தகவல் – ஹனிமூன் தேசம்: 


இந்திய நேரப்படி, வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை எனது மின்னூல் “ஹனிமூன் தேசம்”-ஐ அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முன்னரே ஒரு முறை தந்திருக்கிறேன் – இது இரண்டாம் முறை! விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே. 



பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – திருவாமாத்தூர் – கொம்பு பெற்ற ஆவினங்கள்! அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 

ஊரே கூடி நிற்க, நயவஞ்சக எண்ணம் கொண்ட அண்ணன், தனது தம்பியிடம் “தம்பி, இந்தத் தடியை நீ வைத்திரு, நான் சத்தியம் செய்துவிட்டு வந்து தடியை வாங்கிக்கொள்கிறேன்!” எனச் சொல்லி தங்கம் மறைத்து வைத்த தடியை தம்பியிடம் கொடுத்து விட்டு “என்னிடம் எந்த சொத்தும் இல்லை” என வட்டப்பாறையின் முன் சத்தியம் செய்தான். சத்தியம் செய்தபிறகு, அண்ணனுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது போகவே, ஊராரும் அண்ணன் உண்மை தான் சொல்கிறான் என விலகவே தம்பி மனமுடைந்து “இறைவா, நீயும் என்னைக் கைவிட்டுவிட்டாயே என்று அழுது புலம்பினான். 
முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே. 



இந்த வாரத்தின் புதிர்: 


மேலே இணைத்துள்ள நிழற்படம் என்ன என்று சொல்ல முடியுமா? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    செய்திகள் பதற வைக்கின்றன.
    அந்த நண்பர் மீண்டது போல இந்த நண்பரும் மீள
    வேண்டும்.
    நீங்கள் பாதுகாப்புடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      பாதுகாப்புடனேயே இருக்கிறேன். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம். அது மட்டுமே நம் கையில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படம் செல்களின் அமைப்போ.
    இல்லை திரைச்சீலையோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்களின் அமைப்பு, திரைச்சீலை - இரண்டுமே இல்லை வல்லிம்மா!

      இன்னும் யாராவது சொல்கிறார்களா என்று பார்த்த பிறகு பதில் சொல்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. புகைக்க வசதி செய்து தருவது மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை இப்போதுதான் அறிகிறேன். பிறருக்கு முன்னால் அதைச் செய்தால் அவமரியாதையோ என நினைத்துக்கொண்டிருந்தேன். (பெரியவர்கள் முன் சிகரெட் பிடிப்பதைப்போல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பெரியவர்கள், சிறியவர்கள் என பலரும் சேர்ந்தே புகைப்பது கூட உண்டு! பல பெரிய வீடுகளில், “ஆங்கன்” என்று சொல்லக்கூடிய வராண்டாவில் இரண்டு மூன்று ஹூக்கா வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. புதிய மின்னூலுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய மின்னூல் இல்லை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. ஏற்கனவே வெளியிட்ட நூல் தான் - இப்போது இரண்டாம் முறையாக இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தந்திருக்கிறேன். பதிவிலும் இதனை குறிப்பிட்டு இருக்கிறேன். வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வட்டப்பாறை, அபிராமேஸ்வரர் பதிவினையும் படித்தேன். அருமையான தல வரலாறு நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னோக்கிச் சென்று, வட்டப்பாறை பதிவினை படித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. தகவல்கள் பலன் தரும் சிலருக்காவது என்று நம்பிக்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. காணொளி பையன். ரொம்பப் பாவம்.வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைத் தொடும் விதமாக விளம்பரம் எடுக்கிறார்கள் இல்லையா வல்லிம்மா. அந்தச் சிறுவன் பாவம் தான். முதலில் வரும் குண்டுப் பையன் என்னைக் கவர்ந்தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தீ நுண்மி விஷயத்தில் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்த முன் எச்சரிக்கை விஷயங்களை விட இப்போதுதான், குறிப்பாக இந்த மூன்று மாதங்கள், வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  முன்னரே போதுமான கதைவடைப்புகள் செய்து விட்டதால் இப்போது கட்டாயத் திறப்பு.  பாதுகாப்புக்கு மறுப்பு.  தொல்லையாக அனுபவங்கள்.

    இணைத்துள்ள படம் கீழே தரையில் உள்ள டைல்ஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு, மக்கள் அனைவருமே தீநுண்மியை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. பலரது நடவடிக்கைகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. நேற்று ஒரு தோழியிடம் பேசிக் கொண்டிருந்த போது அழுக்குப் படிந்த முகக் கவசத்துடன் வீட்டிற்கு வந்தவரைப் பற்றிச் சொல்லி, முகக் கவசம் போடுவதை, அதன் சுத்தம் பற்றிய சிந்தனையே பலருக்கும் இல்லாமல் இருப்பதைச் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டார்.

      டைல்ஸ் படம் - இல்லை ஸ்ரீராம். இது வேறு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. காணொளி முடிவை எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இப்படி ஒரு முடிவு இருக்கும் என நினைத்தீர்களா? நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. புதிருக்கான விடை. கடற்கரையில் அலை அடித்து சென்ற பின் நுரை அடங்கும் காட்சி

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிலில் ஒரு பாதி சரி - மறு பாதி தவறு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  10. இந்த வாரம் நாம் பார்க்கப் போவது ஒரு தாய்லாந்து விளம்பரம் – எதற்கான விளம்பரம் என்பதை நிச்சயம் உங்களால் யூகிக்க முடியாது – கடைசி சில விநாடிகளில் தான் உங்களுக்கு புரியும் அது எதற்கான விளம்பரம் என்று! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதை, விளம்பரம் பார்த்து நீங்களும் தெரிந்து கொள்ளலாமே! The Dream என்பது இந்த விளம்பரத்திற்கான தலைப்பு!

    மகள்களும் பார்த்தார்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகள்களும் பார்த்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. தீ நுண்மி விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மிகவும் எச்சரிக்கை தேவை// உண்மை தான் நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. தங்களின் புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள்

    மேலதிகாரிகளுக்கு வேலை மட்டுமே முக்கியம்,
    கீழ் இருப்பவர்கள் எல்லாம் இரண்டாம் இடம்தான்
    கவனமாக இருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய மின்னூல் அல்ல! ஏற்கனவே பதிவில் குறிப்பிட்ட மாதிரி - இரண்டாம் முறையாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி தந்திருக்கிறேன் - அவ்வளவே. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      வேலை மட்டுமே முக்கியம் - அதே தான். கவனமாகவே இருக்கிறேன். நன்றி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. தீநுண்மி கவனமாக இருங்கள் ஜி
    கதம்பச் செய்திகள் அருமை.
    காணொளிகள் பிறகு காண்பேன்.
    மின்நூலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன் கில்லர்ஜி. நன்றி.

      கதம்பச் செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. காணொளிகள் முடிந்த போது பாருங்கள்.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. கவனமாக இருங்கள் சார்.
    நேற்று என் அலுவலகத்திலும் ஒரு ஃபேர்வெல் ஃபம்ஶனில் ஒரு இடைவெளியும் இல்லை.
    மேலும் புகைப்படத்தில் முகம் தெரியவில்லை என என்னை முக கவசத்தை நீக்கவும் வைத்துவிட்டார்கள்.
    கடந்த ஒரு மாதத்திலேயே மூன்று அலுவலக நன்பர்களுக்கு பாசிட்டிவ், அவர்களோடு தான் வேலை செய்தாலும் ஏதோ தங்களைப்போல் இதுவரை தப்பித்து வருகிறேன்.
    உடலில் எதிர்ப்புச்சக்தியை வளர்ப்பதே முடிந்த தடுப்பு முறையோ என தோன்றுகிறது.
    அரசாங்கம் சொல்லும் வழிமுறையை கடைபிடிப்பது நூறு சதவிகிதம் அணைவராலும் முடிவதில்லை.
    சிலருக்கு வேறு பிரச்சனைகளால் கவசம் போட்டால் மூச்சு முட்டுகிறது.
    பலர் பலரோடு இணைந்து வேலை பார்த்து பழகியவர்கள்.
    முடிந்தவரை நல்லதே நடக்கும் என நம்பி அணைவரையும் நேசித்து வாழ்வதே செய்யக்கூடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன் அரவிந்த்.

      பல அலுவலகங்களின் நிலை இது தான். சிலர் மட்டுமே சோசியல் டிஸ்டன்ஸ், மாஸ்க் பயன்பாடு போன்றவற்றை சரியாக செய்கிறார்கள்.

      நல்லதே நடக்கட்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்வோம் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. மிகவும் கவனமாக இருங்கள் ஜி..

    விளம்பரத்தின் முடிவை எதிர்ப்பார்க்கவில்லை...

    (4/1) ஒரு இடத்தில் மட்டும் சற்றே பெரிதாக வெள்ளை வெளேர் என்று பால் போல் நுரையாக... பின்புறம் ஒரு முகம் வேறு தெரிவதாக + தங்க நிற டீ மேசை...

    ஏதேனும் டிஷ்...? ஓவியமா...? இல்லை காவியமா...? முடியல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன் தனபாலன். நன்றி.

      விளம்பரத்தின் முடிவு - எதிர்பார்க்காத முடிவு தான்.

      நுரை என்பது சரி தான். ஆனால் கடல் நுரை அல்ல! விடை சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. விளம்பரம் என்னை மிகவும் நெகிழ செய்தது ... காரணம் அதில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் என் வாழ்வோடு மிகவும் ஒத்து போகிறது. அப்புறம் அந்த நிழற்படத்திற்கான புதிர் வெரி சிம்பிள் ... "சோப்பு நுரை " சோப்பினை நீரில் கரைத்து கண்ணாடியை சுத்தம் செய்கிறார்கள். அந்த சோப்புநுரை கண்ணாடியின் மறுபக்கத்தில் வர்ணஜாலம் காட்டி நிற்கிறது. என்னுடைய கணிப்பு சரிதானே தோழரே ? ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்வுடன் ஒத்துப் போன விளம்பரம் - நெகிழ்ச்சி சிவா.

      சோப்பு நுரை - சரி - ஆனால் கண்ணாடியை சுத்தம் செய்யவில்லை! :) விடை சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. இந்தக் கொரோனா பாதிப்புள்ளவர்களைப் பற்றிய செய்திகள் பதற அடிக்கின்றன. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கூப்பிடும் அதிகாரிக்குக் கொரோனா பயம் இல்லை போல! தனியாக வேறே இருக்கிறீர்கள் கவனமாக இருக்கவும். விளம்பரம் பார்க்கணும்.

    சோப்பு நுரை அல்லது அலைகளின் நுரை! இரண்டில் எது சரி? சிவா சொல்லி இருப்பது போல் கண்ணாடியைச் சுத்தம் செய்யும்போதும் ஏற்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன் கீதாம்மா. நன்றி.

      விளம்பரம் முடிந்த போது பாருங்கள்.

      சோப்பு நுரை - சரி ஆனால் கண்ணாடியைச் சுத்தம் செய்யும்போது ஏற்பட்டதல்ல.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. கவனமாக இருங்கள். மேலதிகாரிகளின் தொல்லை சகிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன் மாதேவி. நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. கவனமாய் இருங்கள். அலுவலத்தில் உள்ளவருக்கு சாதாரண ஜலதோஷமாக இருக்கட்டும்.நல்லதே நடக்க நானும் வேண்டிக் கொள்கிறேன்..
    ஹரியானா பாடல், அடுத்த காணொளி கஷ்ட பட்டு பணம் சேர்த்து வாங்க முடியவில்லையா? விலை ஏறி விட்டதே!

    புதிர் காப்பி, அல்லது டீயின் நுரை அடங்கும் காட்சி நுரையில் முகம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாகவே இருக்கிறேன் கோமதிம்மா. அலுவலகத்தில் உள்ளவர் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையும். பார்க்கலாம்.

      நுரை தான் - டீயின் நுரை அல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. வட்டப்பாறை, அபிராமேஸ்வரர் கோயிலை தரிசனம் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னோக்கிச் சென்று முந்தைய பதிவினையும் வாசித்ததற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. இன்றைய காஃபி வித் கிட்டு பகிர்வுகள் நன்றாக உள்ளது.
    நீங்கள் இந்தத் தொற்றைப் பற்றிய எண்ணங்களை பகிர்ந்தது கலக்கமாக உள்ளது மிக கவனமாக இருங்கள்.

    ஹூக்கா பற்றிய பாடல் நன்றாக இருக்கிறது. அது கெடுதல் வகையில் ஒன்று எனத் தெரிந்தும் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது தப்புதான். திருத்தும் மனைவியின் பாடல் கேட்டாவது திருந்தினால் நன்று.

    விளம்பரம் மிகவும் பாவமாக உள்ளது. அந்தப் பையன் மறுபடி தன் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டு சேமிக்க வேண்டும். பையனின் நடிப்பு ரொம்ப உருக்கமானதாக இருந்தது.

    தங்களது மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.எனது கைப்பேசியில் நிறைய தரவிறக்கம் செய்து கொள்ள முடியவில்லை. அதனால் மன்னிக்கவும்.

    பின்னோக்கிச் பார்க்கலாம் சென்று வந்தேன். அதுவும் அருமையான பதிவு. அந்த கோவிலின் தல வரலாறும், வட்டப்பாறை, அண்ணன் தம்பி கதைகளையும் தெரிந்து கொண்டேன்.

    அது துணிகளுக்கு போடும் ஸர்ப் நுரை பக்கெட்டில் இருப்பது மாதிரி உள்ளது. காலையிலேயே அதை மட்டும் பார்த்து விட்டேன். பதிவை படித்த பின் அனைத்திற்கும் சேர்த்து கருத்திடலாம் என இருந்தேன். ஆனால் இங்கு இன்று மாலை வரை கரண்ட் பிரச்சனை, நெட் படுத்தல் என இருக்கவே பதிலிட இயலவில்லை. பதிவில் அனைத்தும் நன்றாக இருந்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும், காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகளும் உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      காணொளிகள் - நன்றி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      பின்னோக்கி பதிவையும் படித்து வந்ததற்கு நன்றி.

      நுரை தான். ஆனால் எங்கே என்று யாரும் சொல்லவில்லை இது வரை. நானே பதில் சொல்லி விடுகிறேன். வாஷிங் மெஷின் போட்டு சில நிமிடங்கள் நின்ற போது உண்டான நுரை தான் இந்தப் படத்தில் இருப்பது. சற்றே கூர்ந்து கவனித்தால் துணிகள் இருப்பது தெரியலாம்! ஹாஹா...

      முடிந்த போது வாருங்கள். அவசரம் இல்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அடடே...! (உங்களின்) கேமிரா கண்ணோட்டமே தனி தான்...

      நீக்கு
    3. நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. //சோசியல் டிஸ்டன்ஸ் எல்லாம் அவ்வளவாக பார்க்கமுடியாமல் போகிறது!// - வருத்தமான செய்திதான். தங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நலமாக இருக்கணுமே என்ற அக்கறை இவங்களுக்கு இருக்கக்கூடாதா? எத்தனை பேர் துயருறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோசியல் டிஸ்டன்ஸ் - பல அலுவலகங்களில் இதே நிலை தான் நெல்லைத் தமிழன். இரயில் பெட்டி மாதிரி வரிசையாக உட்கார்ந்து இருக்கிறார்கள்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. வெங்கட் பாதுகாப்பாக இருங்கள். இம்யுனிட்டி பவரை அதிகரித்து கொள்ளுங்கள். அது ஒன்றே நமக்கு ( நானும் டில்லியில் இருப்பதால்) இந்த தீநுண்மி பாதுகாத்து கொள்ள வழி.
    ஹனிமூன் தேசம் தரவிறக்கம் செய்து விட்டேன். நேரம் கிடைத்தவுடன் படிக்க வேண்டும்.
    அந்த நிழற் படம் பெட்ஷீட் டிசைன் மாதிரி இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதுகாப்பாகவே இருக்கிறேன் புதுகை ரவி. நீங்களும் பாதுகாப்பாகவே இருங்கள் ரவி.

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொண்டமைக்கு நன்றி. படித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

      நிழற்படம் - நுரை. மேலே பதில் சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....