வியாழன், 11 மார்ச், 2021

தீநுண்மி 2.0 - தடுப்பூசி - ஒண்ணுமே புரியலே உலகத்திலே


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DIFFICULTIES IN LIFE DO NOT COME TO DESTROY YOU BUT TO REALISE YOUR HIDDEN POTENTIAL. LET DIFFICULTIES KNOW THAT YOU ARE MORE DIFFICULT!


******







எந்திரன் 2.0 மட்டும் தான் பிரபலமாக முடியுமா என்ன?  தீநுண்மி 2.0 கூட மக்களை அது குறித்துப் பேசவும், பயப்படவும் செய்ய முடியும்.  தீநுண்மி 2.0 கொஞ்சம் கொஞ்சமாக தன் கோர முகத்தினைக் காண்பிக்கத் துவங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமாக மீண்டும் தடைகளையும் தளைகளையும் பிறப்பிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழகமும் விதிவிலக்கல்ல! சில வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் இ-பாஸ் வாங்க வேண்டும், வீட்டில் தனிமைப்படுத்தப் பட வேண்டும் போன்ற விதிகளை வெளியிட்டு இருக்கிறது.  தலைநகரில் கடந்த ஒரு நாளில் மட்டும் தீநுண்மியால் மூன்று பேர் இறந்திருக்கிறார்கள் போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.  என்ன தான் நடக்கிறது என்பதனை புரிந்து கொள்ள அனைவருமே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  “ஒண்ணுமே புரியல உலகத்திலே!” என்று சந்திரபாபு மாதிரி பாட வேண்டுமோ?


காலையில் மருத்துவமனையில் சேர்க்கை - மாலையில் இறந்து போன செய்தி என இரண்டு நாட்கள் முன்னர் தெரிந்தவர் ஒருவர் சொல்ல, என்ன சொல்லி அவரைத் தேற்றுவது என்று தெரியவில்லை.  அவர் வீட்டில் இருக்கும் நான்கு பேரில் மூன்று பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அவரது தந்தை இறந்து விட, இன்னும் இரண்டு பேர் - நண்பரையும் சேர்த்து, தீநுண்மி பாதிப்பிலிருந்து விலகி இருக்கிறார்கள் - ஆனாலும் அவருக்கு இருக்கும் பிரச்சனைகள் குறையவில்லை.  நுரையீரலின் செயல்பாடு குறித்த சோதனையில் அவரது நுரையீரல் செயல்பாடு தீநுண்மியால் பாதிக்கப்பட்ட பிறகு நிறையவே பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் - அவரும் அவரது வீட்டினரும்.  


அவருக்கு தீநுண்மி தாக்கம் வருவதற்கு முன்னர் அவர் கடைபிடித்த பாதுகாப்பு விஷயங்களை அனைவருமே சொல்லி சிரித்ததுண்டு! அலுவலகத்தில் பெரிய பதவியில் இருப்பதால் விதம் விதமாக பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தினார் - ஒரு பழைய குளிர்சாதனப் பெட்டியை வாங்கி, அதில் கொஞ்சம் மாறுதல்கள் செய்து உள்ளே Ultraviolet Rays தரும் கருவிகளைப் பொருத்தி, அவருக்கு வரும் கோப்புகளை எல்லாம் அதன் உள்ளே வைத்து அரை மணி நேரம் கதிர்களைப் பாய்ச்சிய பிறகு அதனை வெளியே எடுத்து, ஒரு மின்சார Iron Box கொண்டு எல்லா கோப்புகளையும் சூடாக்குவது, மூன்று முகக் கவசங்களை அணிவது, அதற்கு மேல் Face Shield, தலைப்பாகை அணிவது என்று, தீநுண்மி தாக்கத்திலிருந்து தப்பிக்க அவர் செய்த விஷயங்களைக் குறித்துத் தகவல் தெரிந்த ஒவ்வொருவரும் அவருக்கு எதிரே சிரிக்கவில்லை என்றாலும், வெளியே அவரை நினைத்து, அவர் குறித்துப் பேசி சிரிக்காமல் இருந்ததில்லை! 





இது இப்படி இருக்க, எந்த வித பாதுகாப்புகளையும் கடைபிடிக்காத சிலரை இந்த தீநுண்மி இது வரை பாதிக்கவில்லை! எப்போதும் போல அசால்டாக சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் “என்னை என்ன செய்து விட முடியும் இந்த தீநுண்மி 2.0-யால்? என்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  அறுபது வயதுக்கு மேலான சில நண்பர்கள் இந்த மார்ச் ஒன்றாம் தேதிக்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்று முதலாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு வந்தார்கள்.  தலைநகரில் தற்போது அறுபது வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுகிறார்கள்.  தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்த நண்பர்களுக்கு எந்த வித எதிர்வினையும் இதுவரை இல்லை.  28-நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை அதே தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த சிலர், தமிழகத்திலும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் வாய்ப்பிருக்கும் அனைவரும் போட்டுக் கொள்வது நல்லது.


தீநுண்மி 2.0 அதன் கோர முகத்தினைக் காண்பிக்கத் துவங்கினாலும் முயன்ற அளவு பாதுகாப்புடன் இருப்போம்! எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனோதிடத்தினை வளர்த்துக் கொள்வோம்.  இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையினை பழகிக் கொண்டால் நல்லது!  


*****


நண்பர்களே, இன்றைய நாளின் பதிவு குறித்த உங்கள் கருத்துகளைப் பின்னூட்டமாகப் பதிவு செய்யுங்கள்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. அலுவலகத்தில் அவர் செய்த செயல்கள்...! என்னவொரு பாதுகாப்பு...!

    மீண்டும் ஊரடங்கு வந்து விடுமோ என்றே தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னவொரு பாதுகாப்பு?// - அதே தான் - ஆனாலும் அவரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டார் தனபாலன்.

      ஊரடங்கு - வந்து விடுமோ? பார்க்கலாம் - சூழலைப் பொறுத்தே முடிவு இருக்க வேண்டும்! பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உண்மை.  மறுபடியும் மெல்ல மெல்ல தலை தூக்குகிறது அந்த பிசாசு.  இங்கும் அதே நிலைதான்.  சமீபத்தில் எனக்குத் தெரிந்த சிலரும் இதேபோலதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெல்ல மெல்ல தலை தூக்கும் பிசாசு - ம்ம்ம். வேதனையான சூழல் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கைவலியும் கொஞ்சம் சோர்வும் இருக்கு.

    அதுக்குள்ள அடுத்த வெர்ஷனா? இங்க பெரும்பாலும் எல்லோரும் மாஸ்கை தொங்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம்... பிரச்சனை இன்னும் தீவிரமாகிறதா இல்லையா என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடுப்பூசி - நலமே விளையட்டும் நெல்லைத் தமிழன்.

      பார்க்கலாம் - என்ன நடக்கிறது என.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் வெங்கட்.
    இங்கு எல்லோருமே அவரவர் வயது, தொழில் பாதுகாப்பு
    இதைப் பொறுத்தே தடுப்பூசி பெறுகிறார்கள்.
    நானும் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
    நலம் விளையட்டும்.

    தமிழ் நாட்டிலிருந்து வரும் செய்திகள்
    சரியாக இல்லை.
    தேர்தல் மும்முரம் வேறு.
    எங்கே யாரைக் கட்டுப் படுத்த முடியும்:(

    நமக்கு நாமே அரண்.
    வேலைக்குச் செல்பவர்கள் பாடுதான் சிரமம்.
    இங்கே இருக்கும் முட்டாள்கள் சிலர் இது போலக் கிருமியே கிடையாது
    என்று முகக் கவசத்தை எரித்துக்
    கொண்டிருக்கிறார்கள்.
    நம் ஊர் எவ்வளவோ தேவலை.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடுப்பூசி - நீங்களும் பதிவு செய்தது நல்லது.

      தமிழக செய்திகள் - சரியாக இல்லை - உண்மை தான் மா. வேதனையான நிகழ்வுகள்.

      முகக் கவசத்தை எரித்துக் கொண்டிருக்கிறார்கள் - :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இன்னொரு ஊரடங்கு இந்தியாவில் வந்தால் மிகப் பெரிய பாதிப்புதான் அதில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல இங்கே எண்ணிக்கை குறைந்து வருகிறது ஆனால் சம்மர் வர ஆர்ம்பித்தால்தான் தெரியும் வெதர் இன்று நன்றாக ஆகியதும் மக்கள் நடமாட்டம் இன்று மட்டும்மிக அதிகம் அதில் இந்த சம்மபர் வந்தால் சொல்லவே வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னுமொரு ஊரடங்கு - தாங்காது! என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய கட்டாயம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. //“ஒண்ணுமே புரியல உலகத்திலே!” என்று சந்திரபாபு மாதிரி பாட வேண்டுமோ?//

    நானும் என் பேரனும் அடிக்கடி பாடும் பாடல்.
    ஒண்ணும் புரியவில்லைதான் நாட்டு நடப்பு.
    இங்கு அடுத்த வாரம் எனக்கு ஊசி போட அழைத்து போவதாய் சொல்லி இருக்கிறான் மகன்.

    //எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனோதிடத்தினை வளர்த்துக் கொள்வோம். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையினை பழகிக் கொண்டால் நல்லது! //

    நீங்கள் சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீணுன்மி குறித்த செய்திகள் எதுவும் சரியாக இல்லை. இன்னும் எத்தனை இன்னல்களை தரப்போகிறதோ என்ற எண்ணம் மனதில் வந்து கொண்டிருக்கிறது கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....