செவ்வாய், 16 மார்ச், 2021

கதம்பம் - சம்மர் ஸ்பெஷல் - ஆட்டோ - பதிவர் சந்திப்பு - வடாம் கச்சேரி - நோன்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Once you make a decision to move on, don’t look back. Your destiny will never be found in the rear view mirror.


******



சம்மர் ஸ்பெஷல் - விமர்சனம் - புவனா சந்திரசேகரன் - 8 மார்ச் 2021:





எனது சமீபத்திய சம்மர் ஸ்பெஷல் மின்னூலுக்கு புவனா சந்திரசேகரன் அவர்கள் முகநூலில் பகிர்ந்து கொண்ட விமர்சனம் கீழே.  அவருக்கு மனம் நிறைந்த நன்றி.


சமையல் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கும் ஏற்கனவே சமையலை இரசித்து செய்பவர்களுக்குமான புத்தகம் இது.


எளிய முறையில் சரியான அளவுகளுடன் விளக்கமாக எழுதியிருக்கிறார். 

சாதாரண ரவாகேசரியில் ரோஸ்மில்க் சேர்த்துப் புதுமையான முயற்சி; ஜில் ஜில் ஜிகிர்தண்டா ஜில்லென்று இருந்தது பார்க்கவே. எங்கள் ஊர் மதுரை ஸ்பெஷல். 


ஸ்ரீ கண்ட் எனக்கு மிகவும் பிடித்த மஹாராஷ்டிரா வகை இனிப்பு. இதன் செய்முறை எளிதாக விளக்கியிருக்கிறார். இன்றே செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். அதே போல் திடீர் பால்கோவாவும் விரைவாக செய்து முடிக்க ஒரு ரெஸிபி தந்திருக்கிறார். 


ஊறுகாய் வகைகளில் பாரம்பரிய மாங்காய்த் தொக்கு, வடு மாங்காய் , பச்சை மிளகு ஊறுகாய், பச்சை மஞ்சள் ஊறுகாய் இவற்றோடு வட இந்திய வகைகளான ஆம் கா சுண்டா, கட்டா மீட்டா நிம்பு ஊறுகாய் இவையும் சிறப்பு. புளி இஞ்சி எங்கள் வீட்டில் ஃபேவரைட்டான ஐட்டம். 


அரிநெல்லிக்காய் ஊறுகாய் எனக்குப் புதிது. இந்த,' ஆம் கா பன்னா' வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது மாங்காய் சீசன் ஆரம்பமாகி விட்டது. எல்லோரும் தவறாமல் செய்து பாருங்கள். இது உடலுக்கும் குளிர்ச்சி தரும்; வெயிலுக்கு நல்லது என்று இங்கு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.


சமையலில் ரசனை உள்ளவர்கள் தவறாமல் படித்துப் பாருங்கள். பயனுள்ள நூல். கையேடாக வைத்துக் கொள்ளலாம்.


ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். 


புவனா சந்திரசேகரன்,

08/03/2021.


******


அவல் வடாம் - 11 மார்ச் 2021:


நேற்று மாலை திடீரென மழை!! வெயில் ஆரம்பித்து விட்டது! வியர்வை ஆரம்பித்து விட்டதென நினைத்து 'அவல் வடாம்' செய்து காய வைத்திருந்தேன்..🙂 மாலை அதை எடுத்து வந்த சில நிமிடங்களில் மழை..🙂 தப்பித்தது!!  இன்றும் சரியான வெயில் இல்லை! காய வைத்திருக்கிறேன். பார்ப்போம்! தப்பிக்கிறதா என்று! 


******


ஊபர் ஆட்டோ - 11 மார்ச் 2021:





நேற்று மாலை சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு செல்லும் வேலை இருக்கவே, ஊபர் ஆட்டோவை புக் செய்தோம். ஆட்டோ வந்ததும் நாங்கள் ஏறி அமர்ந்ததும், எங்கள் குடியிருப்பின் வெளியே ஆட்டோவுக்காக நின்றிருந்த பெண்மணி ஒருவர் 'போற வழியில இறங்கிக்கறேன்' என்றார்.


நாங்கள் பதில் சொல்வதற்கு முன் ஆட்டோ ஓட்டுனர் அவரிடம், '30 ரூபா குடுத்துடுங்க' என்று சொல்லி ஏற்றிக் கொண்டார்! நாங்கள் போகும் வழியில் முக்கால்வாசி தூரம் அந்தப் பெண்மணியும் வந்து இறங்கிக் கொண்டார்.


எங்கள் இடம் வந்ததும் ஓட்டுனரிடம் எவ்வளவு கொடுக்கணும் என்று கேட்டேன். புக் செய்யும் போது எங்களுக்கு காண்பித்த தொகையான 44 ரூபாயைத் தான் கேட்டார்! 'ஏங்க! அவங்க கிட்ட வேற வாங்கினீங்களே' அவங்களுக்காக நாங்க அட்ஜஸ் பண்ணி வேற உட்கார்ந்து வந்தோம்! என்று சொன்னதும், 'ப்ச்ச்' என்று  எரிச்சலானார்! 


அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை! வைத்துக் கொள்ளட்டும்! என்று எனக்கான தொகையை கொடுத்து விட்டு இறங்கினேன். ஏற்று முன்பு எங்களிடம் கேட்க வேண்டும்! அல்லது தொகையில் குறைத்தாவது வாங்கணும்! இப்படியும் மனிதர்கள்!!


******


இனிய பதிவர் சந்திப்பு - 11 மார்ச் 2021:


இன்று திடீர் சந்திப்பாக Bhanumathy Venkateswaran அம்மா எங்கள் இல்லம் வந்திருந்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பி விட்டார். இப்போதெல்லாம் முகநூல், பதிவுலக நட்புகளை சந்திக்க நேர்ந்தால் அது குடும்ப சந்திப்பு போல தான் தோன்றுகிறது..🙂 புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூட தோன்றாத அளவு பேச்சில் சுவாரஸ்யம்..🙂


******


இந்த வாரத்தின் காணொளி - 13 மார்ச் 2021:





இந்த வருட கச்சேரியை ஆரம்பிச்சாச்சு!..அதாங்க! வெயில் வந்திடுச்சில்ல..! ஸ்கூல் இருக்கும் நாட்களில் அடுப்பு காலியாக இருப்பதில்லை..மகளுக்கு தலைவாரி விட்டு, லஞ்ச் பாக்ஸ் பேக் பண்ணி ஒன்பது மணியாகி விடுகிறது. அதற்குப் பிறகு மாவு கிளறி ஆற வைப்பதெல்லாம் நடக்காது..🙂

அதனால் சென்ற ஞாயிறும், இன்றும் கொஞ்சம் செய்திருக்கேன்.. நடுவில் எளிதான 'அவல் வடாம்' மட்டும் கொஞ்சம் போல செய்தேன்.


யாருக்கும் இப்போது இந்த வேலைக்காக மெனக்கெட நேரமும் இருப்பதில்லை.. அப்படியே இருந்தாலும் ஆர்வம் இருப்பதில்லை..🙂 பல வருடங்கள் அம்மா செய்து நான் பார்த்திருக்கிறேன். இப்போது  என்னுடைய விருப்பத்தில் தான்  வருடாவருடம் செய்து கொண்டிருக்கிறேன்...🙂 


வீட்டிலேயே செய்வதால் சுகாதாரமாகவும், கணிசமாகவும் இருக்கும்.. வருடங்களுக்கும் சேமித்து வைக்கலாம், வைட்டமின் 'டி' கொஞ்சம் இலவசமாக வாங்கிக்கலாம்...🙂 கைகளுக்கு உடற்பயிற்சியாகவும் இருக்கும்! 


இந்த வாரம் Adhi's kitchen சேனலில் ஜவ்வரிசி வடாம் செய்முறை தான் பகிர்ந்து கொண்டுள்ளேன்..செய்முறை எளிது.


ஜவ்வரிசி வடாம்


******


காரடையான் நோன்பு - 14 மார்ச் 2021:





உருகாத வெண்ணெயும் ஓர் அடையும் நான் நோற்றேன் . ஒருநாளும் என் கணவர் எனை விட்டு பிரியாதிருக்க வரமருள வேண்டும்!


இன்று காலை குடியிருப்பில் office bearersக்கு கமிட்டி மீட்டிங் வேறு இருந்தது.. அதை அட்டெண்ட் செய்து விட்டு வந்து, வீட்டு வேலைகள் முடித்த பின் நோன்பு வேலைகள்.. 


காலை முதல் விரதமிருந்து இன்று இந்த நோன்பு கடைபிடிக்க வாய்ப்பு தந்த கடவுளுக்கு நன்றி. 


*******


நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. ஆட்டோ கம்பெனி சரியாக நடந்தாலும் சில ஓட்டுனர்கள் இடையில் தவறு செய்கிறார்கள்.

    உங்களிடமும் முப்பது ரூபாய் வாங்கி இருந்திருந்தால் சற்று நியாயமே...

    கதம்பச் செய்திகள் எல்லாமே சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஓட்டுனர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஊபர்/ஓலாவில் புகார் அளிக்கலாம் - பல சமயங்களில் அவர்களும் புகார்களைக் கவனிப்பதில்லை.

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்லதொரு விமர்சனம்.  வாழ்த்துகள்.  

    நான் ஊபரில்தான் சென்று வருகிறேன்.  இந்த ஊரில் அப்படி யாரும் ஏற்றுக்கொள்வதில்லை, நல்லவேளை!

    நேற்று செய்தித்தாளில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு என்று பார்த்தேன்.  சென்னையில் இல்லை.

    காரடையான் நோன்பு கொழுக்கட்டை - நாக்கில் வெள்ளம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      ஊபர் - சில இடங்களில் இப்படிப் பிரச்சனை செய்கிறார்கள் - ஓட்டுனர்களைப் பொறுத்தே இருக்கிறது!

      மழை வாய்ப்பு - இங்கே கோடை ஆரம்பித்து சக்கப் போடு போடுகிறது.

      காரடையான் நோம்பு அடை - நாக்கில் வெள்ளம் - :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஊபர்்ஆட்டோ செய்தது பெரிய தவறு. நீங்க கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கணும். ஊபர் என்பது புக் பண்ணியவருக்கு மட்டுமீன சவாரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊபர் தவறு தான் - புகார் அளித்திருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    கதம்பம் அருமை. திருமதி புவனா சந்திரசேகரன் அவர்களின் விமர்சனம் நன்றாக இருந்தது.

    ஆட்டோகாரர் செய்தது நியாயமில்லை. இப்படித்தான் பல வகைகளிலும் மக்கள் நியாயமின்றி நடந்து கொள்கிறார்கள்.

    பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள். திருமதி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் பதிவிலும் படித்தேன்.

    அவல் வாடம் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. காரடையான் நோன்பிற்கு வாழ்த்துகள். படங்களில் நோன்பு அடைகள் நன்றாக உள்ளன. தங்கள் பன்முக திறமைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      கதம்பம் பதிவின் பகுதிகள் உங்ளுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நான் ஆட்டோக்காரருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம். கடந்த ஒரு வருடமாக சேவைத்துறை குறிப்பாக ஓட்டல், ஆட்டோ, டாக்ஸி, போன்ற துறைகள் வருமானம் இன்றி தவிக்கின்றன. முன்பெல்லாம் ஆட்டோவைத் தொட்டால் 50 ரூபாய், டாக்ஸி என்றால் 150 ரூபாய் என்று இருந்தவர்கள் இன்று பெட்ரோல் 2 மடங்கு விலை ஆகியிருந்தும் 30 ரூபாய்க்கும் 040 ரூபாய்க்கும் வருவது மிகவும் நன்று. அவர்களும் பிழைக்கட்டும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றுக் கருத்துகள் இருப்பது இயல்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. அருமையான விமர்சனம்...

    தெரிந்த பெண்மணி என்றால், சேர்ந்து பேசினபின் சென்று இருக்கலாம்...

    இந்த வருடம் வடாம் செய்முறை எளிது... வீட்டிற்குள் வைத்தாலே போதும் போல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. Your destiny will never be found in the rear view mirror- True.
    Enjoy your summer here it is still cold /rain just started Spring, summer starts in June.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  9. //சமையல் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கும் ஏற்கனவே சமையலை இரசித்து செய்பவர்களுக்குமான புத்தகம் இது.//
    விமர்சனம் அருமை.
    மற்றவைகள் முகநூலில் படித்து இருக்கிறேன்.
    திருவெண்காட்டில் இருக்கும் போது பக்கத்து வீடுகளிலிருந்து (குருக்கள் வீடுகளிலிருந்து) இனிப்பு, கார அடைகள் வந்து விடும். தோன்பு கயிறு பசு மஞ்சளை வட்டமாய் கட்டியது கிடைத்து விடும். இனிமையான காலங்களை நினைவு படுத்தியது காரடையான் நோன்பு படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. இந்தக் கொரோனா கால கட்டத்தில் ஆட்டோவில் வெளி ஆட்கள் கூட ஏறினால் கடுமையாக ஆக்ஷேபிக்க வேண்டும். இதை முகநூலிலும் பார்த்தேன்/படித்தேன்/ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்திற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....