புதன், 3 மார்ச், 2021

தில்லி உலா - ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் - ஹுனர் ஹாட்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.



******




ஆங்காங்கே இருந்த அலங்காரங்களில் ஒன்று!

இந்த வார தில்லி உலாவில் நாம் பார்க்கப் போவது லோதி காலனி பகுதியில் இருக்கும் ஜவஹர் லால் ஸ்டேடியம்!  அட அங்கே என்னங்க இருக்கப் போகிறது?  விளையாட்டு மைதானத்தைப் பார்த்து என்ன ஆகப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம்!  இந்த தில்லி உலாவில், இந்த இடத்திற்கு உங்களை அழைத்துப் போவதற்கு ஒரு காரணம் உண்டு!  அந்த காரணம் - அங்கே நடந்த ஒரு கண்காட்சி.  கண்காட்சி குறித்து பார்ப்பதற்கு முன்னர் அது நடந்த இடமான ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் குறித்தும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை!  



நுழைவாயில் அலங்காரம்!


விளக்குகளான கலைப்பொருட்கள்...


ஸ்டேடியம் குறித்த தகவல்கள்:  சுமார் 43500 சதுர மீட்டர் பரப்பளவில் 60000 இருக்கைகள் கொண்ட விளையாட்டு அரங்கம்.  இங்கே பொதுவாக Athletics, Weightlifting, Football, Volleyball, Archery, badminton, basketball, Cricket, Lawn Tennis, Table Tennis போன்ற விளையாட்டுகள் நடைபெற வசதிகள் இருக்கின்றன.  Fitness Centre ஒன்றும் இங்கே உண்டு.  சில சமயங்களில் கிரிக்கெட் போட்டிகளும் நடந்ததுண்டு என்றாலும் கிரிக்கெட் போட்டிகளுக்கான வசதிகள் குறைவே.  மேலே குறிப்பிட்ட விளையாட்டுகள் தவிர, எடை தூக்கும் போட்டிக்கான ஒரு உள் விளையாட்டு அரங்கமும் உண்டு. 2010-ஆம் ஆண்டு தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளின் போது புதுப்பிக்கப்பட்டது. இந்த விளையாட்டு அரங்கின் நிர்வாகம் Sports Authority of India வசம் இருக்கிறது.



உலோகம் மற்றும் கண்ணாடிப் பொருட்கள்!


மரத்தினாலான பொம்மைகள் - விலை ரூபாய் 250/- 

திறந்தவெளியும் நிகழ்வுகளும்: விளையாட்டு அரங்கின் வெளியேயும் திறந்த வெளியில் நிறைய இடம் இருக்கிறது. அந்த இடத்தினை அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்த - குறிப்பாக மேளா நடத்த நிர்வாகம் வழங்குகிறது.  சி.ஆர்.பி.எஃப். மேளா நடந்த போது ஒரு முறை அங்கே சென்றிருக்கிறேன்.  கடந்த வார இறுதியில் ஹுனர் ஹாட் என்ற நிகழ்வு நடந்தது தெரிய, அங்கே சென்று வந்தேன்.  வருடா வருடம் ஃபிப்ரவரி மாதத்தில் இந்த ஹுனர் ஹாட் நிகழ்ச்சியை இந்திய அரசாங்கத்தின் Ministry of Minority Affairs நடத்துகிறது.  இந்த வருடம் 20 ஃபிப்ரவரி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை நடந்தது.  இந்த வருடத்தின் Theme - Vocal for Local!  வருடா வருடம் குளிர் முடியும் நாட்களில் தில்லியில் பல நிகழ்ச்சிகளை தில்லி அரசும், மத்திய அரசும் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. 



மரம் மற்றும் துணியாலான பொம்மைகள் - ராஜஸ்தானிலிருந்து...


மணிகளும் சரங்களும் - பித்தளையில்...

ஹுனர் ஹாட்-2021:  இந்த வருட ஹுனர் ஹாட் நிகழ்வில் நிறைய மாநிலங்களிலிருந்து கடைகளை நடத்தினார்கள் - வழக்கமாக கனாட் ப்ளேஸ் பகுதியில் இந்த நிகழ்வு நடக்கும் - இடப் பற்றாக்குறை காரணமாக, குறைவான கடைகளே இருக்கும்.  இந்த முறை இடம் அதிகம் என்பதால், கடைகளும் அதிகம் - கூடவே பல மாநிலங்களிலிருந்து சிறப்பு உணவுக் கூடங்களும் இருந்தன.  தமிழகத்திலிருந்து உணவுக் கடைகள் இல்லை என்றாலும், ஒரே ஒரு கடை - நாகப்பட்டினத்திலிருந்து ஒரு ஆணும், ஒரு பெண்மணியும் வந்திருந்தார்கள்.  தவிர, பாண்டிச்சேரியிலிருந்து ஒரு கடை/கூடாரம்.  நாகப்பட்டிணத்திலிருந்து வந்திருந்தவர்கள் கோரப்புல் கொண்டு தயாரிக்கப்படும் பல வித பொருட்களை - பாய், ஜன்னலுக்கான மறைப்பு, சிறு பெட்டிகள், கைப் பைகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  பாண்டிச்சேரி கடையில் மர பொம்மைகள் இருந்தன.  



காதணிகள் - விலை 150/- ரூபாய் ஒரு ஜோடி...


மரத்தினால் உண்டியல் - விலை ரூபாய் 150/-.


உணவும் இருப்பிடமும் பிரச்சனை: நாகப்பட்டிணத்திலிருந்து வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  உணவும் இருப்பிடமும் தான் பெரிய பிரச்சனை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  நம் ஊரில் இருப்பவர்களுக்கு அரிசி சோறு நிச்சயம் தேவை.  இங்கே கிடைக்கும் பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் சாதம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். காலையில் வாங்கிக் கொண்டு வந்து மதியம் சாப்பிட்டால் பிடிக்கவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  கூடவே இருந்த பெண்மணி, ”நம் ஊர்ல மீன் நல்லா கிடைக்கும் - மீனும் சாதமும் இருந்தால் போதும்! இங்கே எப்பக் கேட்டாலும் ரொட்டியைக் கொடுத்துடறாங்க! எப்படா ஊருக்குப் போவோம்! கொஞ்சம் ரசம் சோறு சாப்பிடுவோம்!”  என்று சொன்ன போது அவர்களின் நிலை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது - தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு இது பிரதான பிரச்சனை தான்.  இருப்பிடமும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், நாள் வாடகை அதிகம்.  அதனால் இரயில்  நிலையம் அருகில் ஏதோ இடத்தில் தங்கி இருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருந்தார்.  




ஆங்காங்கே இருந்த அலங்காரங்களில் ஒன்று!


கோரைப்புல்லில் செய்யப்பட்ட சிறு பை - விலை ரூபாய் 200/-

விற்பனைக்கு - பொருட்களும் விலையும்: இந்த ஹுனர் ஹாட் சமயத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் கலைஞர்கள் வந்து தங்களது கைவண்ணத்தில் உருவான பலவித பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.  Scented Perfume, Brass பொருட்கள், Carpet, தோலில் செய்த பொருட்கள் என, பலவிதமான பொருட்கள், ஓவியங்கள்,  மரத்தினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், பீங்கானில் செய்யப்பட்ட பொருட்கள் என விதம் விதமான பொருட்களை இங்கே நீங்கள் வாங்க முடியும் - அதுவும் நேரடியாக, கலைஞர்களிடமிருந்து/அதைச் செய்யும் நபர்களிடமிருந்து!  விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.  உதாரணத்திற்கு, இந்தப் பதிவில் இணைத்த படங்களின் கீழே விலையையும் குறிப்பிட்டு இருக்கிறேன்.  மேலும் விவரங்கள் தேவையெனில் அவர்களது இணையதளம் மூலம் கிடைக்கும் பொருட்களின் பட்டியலையும் விலையையும் இங்கே பார்க்கலாம்!





பராட்டா ....



ஹல்வா பராட்டா! - 250 கிராம் - 120/- ரூபாய்


ஹல்வா...

சாப்பிடலாம் வாங்க:

பெரும்பாலும் அசைவ உணவு தான்.  ஒரு சில கடைகளில் மட்டுமே சைவம்!  சைவமும் வேறு வேறு மாநிலங்களிலிருந்து என்பதால் புதிய உணவு வகைகளை ருசிக்க ஒரு வாய்ப்பு.  நான் உத்திரப் பிரதேசத்தின் ஒரு உணவு வகையை ருசித்தேன்.  கூடவே தந்தூரி சாய்!  நான் சாப்பிட்டது ஹல்வா பராட்டா! இரண்டுமே இனிப்பு தான் - இரண்டும் சேர்த்து சாப்பிட வேண்டுமாம்!  நெய் தான் மிக அதிகம்!  சுவை நன்றாகவே இருந்தது.  உங்கள் வசதிக்காக ஒன்றிரண்டு படங்கள் இணைத்திருக்கிறேன். 



ஓவியம் ஒன்று...


பீங்கான் பொருட்கள்....


மர பொம்மைகள் - இசைக் கலைஞர்கள் - விலை 250/- மட்டும்.



படங்கள்:  வழக்கம் போல நிறைய படங்கள் எடுத்தேன். இந்தப் பதிவில் இணைத்த படங்கள் தவிர வேறு சில படங்களை வரும் ஞாயிறுகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்!  இப்போதைக்கு இந்தப் பகிர்வில் இணைத்த படங்களை ரசிக்கலாமே!


****


நண்பர்களே, இந்த நாளின் தில்லி உலா பதிவு குறித்த உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை… 


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...





20 கருத்துகள்:

  1. மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்.  அழகிய படங்கள்.  இன்னமும் கூட அங்கு வந்து தங்குபவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்னை இருக்கிறது என்பது ஆச்சர்யம் - அதுவும் உள்நாட்டிலேயே!

    அங்கு சென்று வந்தால் செலவு செய்யாமல் வரமாட்டோம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      //சென்று வந்தால் செலவு செய்யாமல் வரமாட்டோம்// - உண்மை தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்ல தகவல்கள். ஹல்வா பரோட்டா...ஹாஹா... ஹல்வாவைப் பார்த்தால் வெங்காயம் கட் பண்ணினதுபோல இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் சரி.

      //ஹல்வாவைப் பார்த்தால் வெங்காயம் கட் பண்ணினது போல// - ஹாஹா. உலர் தேங்காய் வட்ட வடிவில் கட் செய்து வைத்திருக்கிறார்கள் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தகவல்கள் சுவாரஸ்யம் ஜி படங்கள் அழகாக இருக்கிறது மேலும் வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தக்வல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படங்கள் அதற்கான விளக்கமான தகவல்கள் என அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பார்க்கவேண்டிய இடத்திற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள சாப்பாட்டுப் பிரச்னை பெரும்பாலானோர் எதிர்கொள்வதே, வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாட்டுப் பிரச்சனை - பலருக்கும் இருக்கிறது. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் உணவை உண்பதே நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அன்பு வெங்கட் ,
    ஒரு கோலாஹலமான பதிவுக்கு நன்றி. கலைக் கண்காட்சிகள் எப்பொழுதுமே அருமை.

    கண்களால் கண்டு மகிழ வைத்தமைக்கு மிக மிக நன்றிமா.
    எத்தனை விதமான கைப்பொருட்கள்!!!
    அதுவும் அந்த ஹல்வா பரோட்டா.
    நெய் வடிய அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் போல இருக்கிறது.

    அந்தச் சாய் எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே.
    அடுத்த உலாவுக்குக் காத்திருக்கிறேன்.https://youtu.be/2DkAX0768Tk

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைக் கண்காட்சிகள் - மகிழ்ச்சி தருபவை தான் வல்லிம்மா. அவ்வப்போது இப்படிச் செல்வதும் ஒரு மாறுதலாக இருக்கிறது. ஹல்வா பராட்டா - நெய் சொட்டச் சொட்ட இருந்தது!

      தந்தூரி சாய் - நன்றாகவே இருந்தது வல்லிம்மா. காணொளியாகவும் எடுத்தேன் - விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மரத்தினாலான பொம்மைகள் ...மனதை கவர்கின்றன...


    நல்ல தகவல்களும் இனிய காட்சிகளும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொம்மைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ஹல்வா பராத்தா இப்போத் தான் கேள்விப் படுகிறேன்/பார்க்கிறேன். பொம்மைகள் எல்லாம் கண்களையும் மனதையும் கவர்கின்றன. நவராத்திரிக்கு வைக்கலாம். முன்னர் நாங்கள் உதயப்பூரில் இருந்து மர பொம்மைகள் வாங்கி வந்து நவராத்திரிக் கொலுவில் வைத்துக்கொண்டிருந்தோம். ஆங்காங்கே இடம் மாற்றியதில் அவை வீணாகிவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மர பொம்மைகள் நன்றாக இருந்தன கீதாம்மா. இப்போது பொம்மைகளுக்கான Toy Fair நடக்கிறது. செல்ல நினைத்தாலும் வாய்ப்பு அமையவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பாவம், அந்தத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள். தென்னிந்திய உணவு கிடைக்கும் இடம் தேடிப் போய்ச் சென்று வாங்கிச் சாப்பிடவும் கட்டுபடி ஆகி இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடினம் தான் - அடுத்த ஊருக்கு வந்து உணவுக்காக கஷ்டப்படுவது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....