சனி, 31 ஜூலை, 2021

காஃபி வித் கிட்டு-121 - மோனலிசா - ரஸ்கதம் - தாஜ்மஹால் - புதிய Blog - காசு யமன் - அம்மா - மழை வெள்ளம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Mesmerising Meghalaya பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


MISMANAGED SUCCESS IS THE LEADING CAUSE OF FAILURE; WELL MANAGED FAILURE IS THE LEADING CAUSE OF SUCCESS. 


******


இந்த வாரத்தின் WhatsApp நிலைத்தகவல் - மோனலிசா




பஞ்சாபி மோனலிசா - அதுவும் அவள் உண்ண விரும்பிய CHசோலே Bபட்டூரே தர மறுத்த பிறகு எப்படி இருப்பாள் என்று மேலே உள்ள படத்தினை ஒரு நண்பர் தனது WhatsApp நிலைத்தகவலாக வைத்திருந்தார். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! 


******


இந்த வாரத்தின் உணவு - ரஸ்கதம்: 



ரஸ்கதம் என்ற ஒரு இனிப்பு வட இந்தியாவில் உண்டு.  மேற்கு வங்காளத்திலும் இந்த இனிப்பு உண்டு.  சமீபத்தில் தனது மாநிலத்திற்குச் சென்று வந்த பீஹாரி நண்பர் ஒருவர் ஊரில் இருந்து இந்த இனிப்பினை வாங்கி வந்தார்.  மிகவும் சுவையாக இருந்தது. அவர் ஊரில் இது மிகவும் பிரபலம் எனச் சொல்லி அலுவலக நண்பர்கள் .அனைவருக்கும் கொடுத்தார்.  இந்த இனிப்பு எப்படிச் செய்வது என்ற தகவலை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைப்பின் வழி தெரிந்து கொள்ளலாம். 


******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - இடிக்கப்படும் தாஜ்மஹால்:


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஃப்ரூட் சாலட் – 140 – இடிக்கப்படும் தாஜ்மஹால் – [BH]புட்டா - கலாம்


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


கீழ் வீட்டில் கல்யாணம்.... இரவு 09.30க்கு மேல் தான் மாப்பிள்ளை ஊர்வலம் [bharaat] புறப்பாடு..... வாத்யக் கோஷ்டி நான்கரை மணிக்கே வந்து சேர்ந்தாயிற்று.... ஒரே மெட்டில் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்....... காது “எப்படியாவது இந்த சத்தத்திலிருந்து எனக்கு விடுதலை கொடேன்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது.... இந்த மாதிரி நேரங்களில் மட்டுமாவது காது கேட்காமல் இருந்தால் பரவாயில்லை! கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக தலைக்கு மேல் உட்கார்ந்து வேகவேகமாய் கொட்டுவது போல உணர்வு எனக்கு..... ஏதோ படத்தில் வடிவேலுவை நிற்க வைத்து வரிசையாக பலர் வந்து கொட்டுவார்களே அப்படி இருக்கிறது எனக்கு! ம்ம்ம்..... என்ன செய்யலாம்!


******


இந்த வாரத்தின் புதிய Blog தகவல்  - ஆங்கிலத்தில்!


எனது வலைப்பூவில் Mesmerising Meghalaya தொடரை எழுதி வரும் நண்பர் சுப்ரமணியன் அவர்களின் மகள் தனக்கென்று புதியதாக ஒரு வலைப்பூவினை தொடங்கி இருக்கிறார்.  அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். முடிந்தால் அவரது வலைப்பூவினை தொடர்ந்து வாசிக்கவும், அவருக்கு மேலும் எழுத உற்சாகம் தரவும் வேண்டுகிறேன். ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார் என்றாலும் தொடர்ந்து வாசிக்க முடிந்தவர்கள் வாசிக்கலாமே!  அவரது வலைப்பூவின் சுட்டி கீழே!


CONFESSIONS OF A TRAVEL FREAK


******


இந்த வாரத்தின் பொக்கிஷம் - காசு யமன் :



திருவரங்கத்தில் பழைய புத்தகங்கள் கடை ஒன்றில் தி. ஜானகிராமன் அவர்களின் கதையான உயிர்த்தேன் எனும் புத்தகம் ஒன்றினை வாங்கி   இருந்தேன்.  ஆனந்த விகடன் பத்திரிகையில் 1964-65-ஆம் ஆண்டுகளில் தொடர்கதையாக வந்ததை கத்தரித்து, பைண்ட் செய்த புத்தகம்.  அந்தச் சமயத்தில் வந்த துணுக்குகள், நகைச்சுவை, விளம்பரம் என அதிலே விஷயங்கள் உண்டு. கதை ஒரு முறை படித்தாலும், கடைசி பக்கங்கள் இல்லாததால் முடிவை தெரிந்து கொள்ள முடியவில்லை. கதை பற்றி அதனால் இங்கே எதுவும் சொல்லப்  போவதில்லை. ஆனால்  அந்தப் புத்தகத்திலிருந்து முடிந்த போது சில விஷயங்களை, துணுக்குகளை பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.  22 மே 1965 தேதியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்த துணுக்கொன்றின் படம் இங்கே!


******


இந்த வாரத்தின் விளம்பரம் - அம்மா


மகளிர் தினம் சமயத்தில் வெளிவந்த ஒரு விளம்பரம் - நம் நாட்டு விளம்பரம் அல்ல! நன்றாக இருக்கிறது - பாருங்களேன்.

 

******


இந்த வாரத்தின் தில்லி தகவல் - மழையும் வெள்ளமும்: 




கடந்த 19-ஆம் தேதி தலைநகர் தில்லியில் காலை 04.00 மணியிலிருந்தே தொடர் மழை.  தலைநகர் தில்லியில் ஒரு சில மணி நேரம் மழை பெய்தாலே வெள்ளக்காடு போல தோற்றம் அளிக்கும். நாள் முழுவதும் மழை பெய்தால்... எல்லா இடங்களிலும், மழை நீர் போகும் வழி தெரியாமல் திகைக்க, ஆங்காங்கே நீர் நிலைகள்! நீச்சல் அடித்து செல்ல வேண்டிய சூழல் - குறிப்பாக பழைய தில்லியில்! நண்பர்கள் அனுப்பி வைத்த காணொளிகள், படங்கள் எல்லாம் பார்க்கும் போது வேதனையாக இருந்தது.  சரியான நேரத்தில் சாலை ஓரங்களில் இருக்கும் குப்பைகளை அள்ளுவதில்லை, மழை நீர் சேமிப்பு என்பது காகிதங்களில் மட்டுமே இருக்கும் விஷயமாக இருக்கிறது.  மழை நீர் தேங்க, வாகன நெரிசல், புகை, கொசு தொல்லைகள் அதிகரித்து   விட்டது.  ஒவ்வொரு வருடமும் மழை வருகிறது என்றாலும் ஒவ்வொரு வருடமும் தேவையான வேலைகளை செய்வதே இல்லை என்பது வேதனையான உண்மை.  


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


24 கருத்துகள்:

  1. இதுபோன்ற புகழ்பெற்ற ஆனால் மற்ற பகுதிகளில் அறிமுகமில்லாத இனிப்பு மற்றும் கார வகைகளை ஆங்காங்கேயிருந்து வாங்கி தமிழகத்தில் விற்பனை செய்தால் நல்ல விற்பனை நடக்குமோ!

    ஸ்வேதா சுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
    விளம்பரம் அருமை.

    வெள்ளம் - காய்ந்தால் கரு; பெய்தால் பெரு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் இந்த இனிப்புகள் விற்பனை செய்யலாம்! வரவேற்பு இருக்குமா என்பதை விற்பனை செய்தால் தானே தெரிந்து கொள்ள முடியும்! :)

      காய்ந்தால் கரு, பெய்தால் பெரு! - ஆஹா! வார்த்தை விளையாட்டு சிறப்பு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பல்சுவைப் பதிவு அருமை.

    உங்களைப்போல உங்கள் நண்பர்களும் பயணக் காதலர்கள்தாம் போலிருக்கு. வாழ்த்துகள்.

    ரஸ்கதம் பார்க்கச் சுவையாக இருக்கு. உள்ள என்ன பூரணம், மேலே என்ன தூவியிருக்காங்கன்னு பார்க்கிறேன்.

    சோளே பட்டூரா கொடுக்காத்தற்கா இல்லை அதைப் பண்ணச் சொன்னதற்கா... என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      ரஸ்கதம் - மேலே தூவி இருப்பது எள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எனக்கு சென்னா பட்டூரா ரொம்பவே பிடிக்கும். சோளே தான் உடலுக்கு நல்லது. பட்டூரா எண்ணெயில்லாமல் சோளேயுடன் (இரண்டு பட்டூரா ஒரு ப்ளேட்டில்) தில்லி ஹால்திராமில் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே சோளே பட்டூரே மிகவும் பிரபலம். எண்ணெய் அதிகம் என்பதால் பொதுவாக உண்பதில்லை - எப்போதாவது, வேறு வழியில்லாமல் சாப்பிட்டால் உண்டு. சமீபத்தில் அப்படி ஒரு நாள் சாப்பிட்டேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் வழக்கம்போல சிறப்பு. மோனலிசாவை அதிகம் ரசித்தேன். நண்பர் மகளின் வலைப்பூவிற்கு வாழ்த்துகள். அவரை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஐயா. புதிய வலைப்பூவில் தங்களது கருத்துரை கண்டேன். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மோனலிசாவின் கோபம் இரசிக்க வைத்தது.
    பிலிப்பைன்ஸ் விளம்பரப்படம் பார்த்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் சில பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பஞ்சாபி மோனோலிஸா ஓவியம் மிக‌ அழகாய் இருக்கிறது! என்ன ஒரு Bபாவம் முகத்தில்!
    ரஸ் கதம் பற்றி படிக்கும்போதே இனிப்பாக இருகிறது!
    அந்த விளம்பரம் அழகு அந்த சிறுவன் முகம் ஏக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி வித் கிட்டு பதிவு நன்றாக உள்ளது.

    வாட்சப் நிலைத்தகவலில் வந்த மோனாலிசாவின் கோபப் புன்னகை மறக்க முடியாதது.

    இந்த வாரத்தின் இனிப்பு உணவின் பெயர் வித்தியாசமாக ரசிக்கும்படி (உணவுந்தான்) உள்ளது.

    பழைய பதிவுக்கும் சென்று மேள தாளங்களின் விவரிப்பை ரசித்து வந்தேன்.

    விளம்பரம் அம்மா பாசத்தை உணர வைத்தது.

    புதிதாக வலைத்தளம் துவக்கும் உங்கள் நண்பரின் மகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    மழை அவதிதான். ஆனால் அது தன் கடமையை செய்கிறது. நாம்தான் அதை உணராமல் அவதிபடுகிறோம். கதம்பம் அருமை. அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பின் வெங்கட்,
    கிட்டு கார்னர் சுவை எப்போதும் போல்.
    ரஸ்கதம் பார்க்கவும் இனிமை . செய்முறையும்
    அருமை.
    உயிர்த்தேன் நான் படித்த முதல் ஜானகிராமன்
    கதி. செங்கம்மா வும் அந்த சென்னையிலிருந்து வரும் தோழியும் சூப்பர்
    பாத்திரங்கள்.
    செங்கம்மாவுக்காக உருகும் பாத்திரமும்
    எப்படித்தான் படைத்தாரோ தி.ஜா.!!!!!!
    அருமையான நாவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிர்த்தேன் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு நன்றி வல்லிம்மா.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தங்கள் தோழரின் மகள் ஆரம்பித்திருக்கும் வலைத்தளம் பல்கிப் பெருகட்டும்.
    குறும்படம் மிக மிகச் சிறப்பு. எப்படித்தான் இத்தனை அருமையாக
    நடிக்க வைக்கிறார்களோ!!!

    தில்லி வெள்ளம் கல்ங்க வைக்கிறது. தலை நகருக்கே
    இந்த கதியா என்ற யோசனைதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகருக்கே இந்த கதியா? சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. சரியான நேரத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை என்றால் எந்த இடமாக இருந்தாலும் இப்படியான நிலை தான் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. பல்சுவைப் பதிவு அருமை. உங்களது நண்பரின் மகளின் தளத்திற்கும் சென்று படித்து மகிழ்ந்து கருத்துக்களை பதிந்து இருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நண்பரின் மகள் தளத்தில் தங்கள் கருத்துரை கண்டேன் மதுரைத் தமிழன். மகிழ்ச்சியும் நன்றியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....