சனி, 2 அக்டோபர், 2021

காஃபி வித் கிட்டு - 129 - காந்தி - கமர்கட் - வெங்காயம் - முதலைகள் - குறுக்குத்துறை முருகன் - இயற்கை - உறவும் நட்பும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட முகப்புத்தகத்திலிருந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மஹானைப் போல நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சியின் படி வாழ்ந்தாலே போதும். 


******


பழைய நினைப்புடா பேராண்டி: காந்தி


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - காந்தி



பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 


தில்லியில் இருக்கும் ராஜ்[G]காட் பகுதியிலிருந்து தான் நமது நாட்டின் நெடுஞ்சாலைத் துறையின் முதல் சாலை, அதாவது NH-1 என அழைக்கப்படும் நெடுஞ்சாலை துவங்குகிறது. தில்லியிலிருந்து பாகிஸ்தானில் இருக்கும் அட்டாரி எனும் இடம் வரை நீண்டிருக்கும் இந்த சாலையின் மொத்த தூரம் 456 கிலோ மீட்டர். சோனிபத், பானிபத், கர்னால், குருக்ஷேத்திரா, அம்பாலா, ராஜ்புரா, லுதியானா, பக்வாரா, ஜலந்தர், அம்ரிதஸரஸ், வாகா பார்டர் வழியாக பாகிஸ்தானில் உள்ள அட்டாரி வரை செல்கிறது. அது வழியாக நாம் செல்லப் போவதில்லை.


சரி நாம் ராஜ்[G]காட் உள்ளே நுழையும் நுழைவாயிலுக்குச் செல்வோமா?


******


இந்த வாரத்தின் ஒரு தின்பண்டம் - கமர்கட் :



சில நாட்களுக்கு முன்னர், என் முகநூல் பக்கத்தில் எழுதியது - இங்கேயும் ஒரு சேமிப்பாகவும், அங்கே படிக்காதவர்களின் வசதிக்காகவும்! :)


கமர்கட்.... உங்களில் எத்தனை பேர் இந்த கமர்கட், கல்கோனா போன்றவற்றை சுவைத்து இருக்கிறீர்கள்? நம்மில் பலருக்கும் மறக்க முடியாத ஒரு தின்பண்டமாக இந்த கல்கோனா/கமர்கட் இருந்திருக்கிறது. ஐந்தே ஐந்து பைசாவில் கிடைத்த ஆனந்தம் இன்றைக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து சாப்பிடும் சாக்லேட்டில் கூட கிடைப்பதில்லை என்று சொல்ல முடியும்.


சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது திருவரங்கம் அம்மா மண்டபம் அருகே இருக்கும் காவேரி சூப்பர் மார்க்கெட் வரை சென்று இருந்தேன். அங்கே கமர்கட் எனப் பார்த்த உடன் இரண்டு 100 கிராம் பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 100 கிராம், ரூபாய் முப்பது மட்டும். ஒன்றை தில்லிக்கு எடுத்து வந்தேன். நேற்று இரண்டும், இன்றைக்கு இரண்டும் சாப்பிட்டேன் - அதுவும் இதற்கு மேல் சாப்பிடக் கூடாது என என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு!  விரைவில்  தீர்ந்துவிட்டால்? என்ற எண்ணம் தான் காரணம்....


சரி அமேசானில் தான் ஏதேதோ கிடைக்கிறதே, கமர்கட் கிடைக்காதா என்ன என்று தேடியபோது கிடைப்பதாகக் காண்பித்தது! ஆஹா, பிறகென்ன என்று நினைத்தபடியே விலையைப் பார்த்தால் அதிர்ச்சி..... 250 கிராம் கமர்கட் 300 ரூபாய்..... தள்ளுபடியில் 199 ரூபாய்க்கு தருவார்களாம்! அனுப்பிவைக்க கட்டணம் 40/- உண்டு. ஆக மொத்தம் 239 ரூபாய்...... 


ஒரு உருண்டை ஐந்து பைசாவிற்கு சுவைத்த கமர்கட், இப்போது அதிக விலையில்.... இருக்கட்டும். வாங்கி வந்தது தீர்ந்து விட்டால், அடுத்த முறை தமிழகம் வரும்போது வாங்கிக் கொள்ளலாம்.... அமேசானில் வாங்கப் போவதில்லை.... சீச்சீ..... இந்தப் பழம் புளிக்கும் நரி கதைதான்...... :)


******


ராஜா காது கழுதை காது - மசாலாவுக்கு என்ன செய்ய?


சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் வேளையில்......


"மொத்தம் 38 கிலோ எடுத்துட்டுப் போகலாம்.... என் கிட்ட கேட்டு இருக்கலாம்ல..... வெள்ளைப்பூண்டு, வெங்காயம்னு மசாலாவுக்குத் தேவையானதெல்லாம் வாங்கி எடுத்துட்டுப் போயிருக்கலாம்.... அதெல்லாம் அங்க கிடைக்காதே..... மசாலா இல்லாம எப்படி நான் வெஜ் சாப்பிட முடியும்......"


******


இந்த வாரத்தின் காணொளி : பூஜிக்கப்படும் முதலைகள்:


முதலைகள்!  கூரிய பற்களோடு, வாயைத் திறந்தபடி, வாலைச் சுழற்றிக் கொண்டு வெளியே வரும் முதலைகள் கண்டு பயப்படாதவர்கள் யார்?  இப்படியான முதலைகளை சில நாடுகளில் பூஜிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?  ஆஃப்ரிக்காவின் சில பகுதிகளில் முதலைகளை பூஜிக்கிறார்களாம்!  பன்னிரெண்டு நிமிட காணொளி தான். அந்த காணொளி, இந்த வாரத்தின் காணொளியாக உங்கள் பார்வைக்கு!  முடிந்தால், விருப்பம் இருந்தால், பாருங்களேன்.


******


இந்த வாரத்தின் வாசிப்பு - குறுக்குத்துறை முருகன் கோவில் - மின்கைத்தடி:



மின்கைத்தடி தளம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.  நண்பர் பால கணேஷ் அவர்களும் இந்தத் தளத்தில் இணைந்திருக்கிறார் என்று அறிகிறேன்.  காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் பத்துமலை பந்தம் என்ற தொடரும் அதிலே வந்து கொண்டிருக்கிறது.  அந்தத் தளத்தில் சமீபத்தில் படித்த ஒரு தகவல் தாமிரபரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்டிருக்கும் குறுக்குத்துறை முருகன் கோவில் பற்றியது.  எத்தனை எத்தனை இடங்கள் இப்படி - அந்தக் காலத்திலேயே வியப்பான விஷயங்களை நம் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள் என்று படிக்கும்போது தோன்றியது.  கட்டுரையை விரும்பினால் நீங்களும் படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் நிழற்படம் - இயற்கை எழில்:



திருவரங்கத்திலிருந்து புறப்படும் போது திருவரங்கம் இரயில் நிலையம் சென்றபோது அங்கே பின்புறம் இருந்த ஒரு வீதி இயற்கை எழிலுடன் இருந்தது.  அங்கே எடுத்த நிழற்படம் இதோ உங்கள் பார்வைக்கு! 


******


இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - உறவும் நட்பும் :





இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவலாக ஒரு படம்!  நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கிறார்கள். பாருங்களேன்!


******


நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


26 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பத்தை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நான் கமர்கட்டின் ரசிகன். நீங்கள் சொல்லும் கமர்கட், கொஞ்ச நாளாகிவிட்டால் சவுக் சவுக்னு ஆயிடும். விரைவில் தீர்த்துவிடுங்கள். அதனை எபிக்கு விரைவில் அனுப்புவேன்.

    குறுக்குத்துறை... நெல்லை நினைவுகளை வரவழைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் நாளாகி விட்டால் சவுக் சவுக்னு ஆயிடும் - அது வரை விட்டு வைக்கவில்லை நெல்லைத் தமிழன்.

      நெல்லை நினைவுகள் - ஆஹா... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கமர்கட் - இரவில் கண்டிப்பா பல் துலக்கணும். பல் இல்லைனா கெட்டுப் போயிடும் (எனக்கு அதனால்தான் முதல்முறை ரிப்பேர் ஆனது)

    73ல் கமர்கட் ஒன்று ஒரு பைசா

    மின்கைத்தடி... பிஞ்ஜ் தளம் போலவா?

    கழுதைக்காது- பஹ்ரைனுக்காக இங்கிருந்து கொண்டுபோன பொருட்கள் நினைவுக்கு வருகிறது... 93ல் துபாய்க்குச் சென்றபோது, பேஸ்ட், சோப் முதற்கொண்டு மூட்டை கட்டியது நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 73-இல் கமர்கட் ஒன்று ஒரு பைசா! ஆஹா.... பித்தளையில் இருந்ததோ?

      கழுதைக்காது - உங்கள் நினைவுகளை தூண்டியதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சுவாரஸ்யமான கதம்பம். மின்கைத்தடி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்கைத்தடி நன்றாகவே இருக்கிறது ஸ்ரீராம். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //ஐந்தே ஐந்து பைசாவில் கிடைத்த ஆனந்தம் இன்றைக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து சாப்பிடும் சாக்லேட்டில் கூட கிடைப்பதில்லை என்று சொல்ல முடியும்//

    நிதர்சனமான உண்மை ஜி

    காணொளி பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதர்சனம் - சரி தான் கில்லர்ஜி. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கதம்பம் அருமை... சர்வ சாதாரணமாக முதலை மேல் அமர்ந்து போவதெல்லாம் - காணொளி திகைக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கமர்கட் பள்ளிகூடம் போகும்போது ஒருநாள் கூட மிஸ் பண்ணியதில்லை. பூஜிக்கப்படும் முதலைகள் காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் சாப்பிட்ட கமர்கட் - ஆஹா... மகிழ்ச்சி இராமசாமி ஜி. எங்களுக்கெல்லாம் எப்போதாவது தான் கிடைத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. காந்தி பற்றி உங்கள் பதிவைப் பார்க்கிறேன் வெங்கட்ஜி

    ஆஹா நானும் கமர்க்கட்/கல்கோனாவுக்கு ரசிகை. ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்வதும் உண்டு. இப்போது செய்வதில்லை ஏனென்றால் வீட்டில் உள்ளவர்களின் பல்லு முக்கியமல்லோ? நானும் இனிப்பானவள்!! பிடித்தாலும் சாப்பிட முடிவதில்லையே.

    வாசகம் - அதே அதே..

    ஐந்தே ஐந்து பைசாவில் கிடைத்த ஆனந்தம் இன்றைக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து சாப்பிடும் சாக்லேட்டில் கூட கிடைப்பதில்லை என்று சொல்ல முடியும்.//

    டிட்டோ.

    250 கிராம் கமர்கட் 300 ரூபாய்..... தள்ளுபடியில் 199 ரூபாய்க்கு தருவார்களாம்! அனுப்பிவைக்க கட்டணம் 40/- உண்டு. ஆக மொத்தம் 239 ரூபாய்...... //

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(தலைசுத்தல் மயங்கிட்டேன்!!!!!!)

    அமேசானில் வாங்கப் போவதில்லை.... சீச்சீ..... இந்தப் பழம் புளிக்கும் நரி கதைதான்...... :)//

    ஹஹஹஹஹஹஹ்ஹ சிரித்துவிட்டேன் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ரா கா க கா - ஹாஹாஹாஹாஹா

    அந்த மனிதர் முதலைக்கு உணவு கொடுக்கும் வீடியோ பார்த்திருக்கிறேன். இது போன்ற ஆஃப்ரிக்க காணொளிகள் பார்க்கும் போது மனம் கொஞ்சம் வேதனைப்படும். அவர்களின் இருப்பிடம், வாழ்க்கை முறை எல்லாம் காணும் போது, கற்காலம் என்று நாம் பாடத்தில் படித்தவை எல்லாம் நினைவுக்கு வரும்.

    குறுக்குத்துறை முருகன் கோவில் பலவருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். படத்தில் உள்ளது போல் தண்ணீர் அதிகமாக இருந்த சமயத்தில். அருமையாக இருக்கும். மின்கைத்தடி தளம் அறிந்திருக்கிறேன். காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் தொடர்வருவதும் தெரியும். கொஞ்சம் வாசித்தேன். தொடர வேண்டும். எங்கள் தளத்தில் அந்தச் சுட்டியைச் சேர்க்க நினைத்து இன்னும் சேர்க்கவில்லை. அப்டேட் ஆவதும் தெரியுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலைக்கு உணவு கொடுக்கும் காணொளி - பல விஷயங்கள் இப்படி நடக்கின்றன. இவையெல்லாம் புதிதாக பார்க்கும்போது வியப்பு தானே கீதாஜி.

      குறுக்குத்துறை முருகன் - இது வரை சென்று வாய்ப்பு கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே சென்றிருக்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம்பம் மிகவும் ரசித்தேன்.

    தமிழ்நாட்டில் இருந்த போது கமர்கட் நிறைய சுவைத்திருக்கிறேன். மிகவும் பிடிக்கும்.

    காணொளி பார்த்தேன். பயங்கர தைரியம் அவருக்கு. ஒரு வேளை அவருக்குப் பழக்கமாக இருக்கலாம். அவர் அழைத்ததும் முதலைகள் வருகிறது உணவு கொடுப்பார் என்று தெரியும் போல.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கதம்பம் அருமை
    காணொலி வியக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்பின் வெங்கட்,
    மிக மிக சுவாரஸ்யமான பதிவு.

    எத்தனை விவரங்களைப் பதிந்திருக்கிறீர்கள்!!
    'மின் கைத்தடி" பற்றி எனக்குத் தெரியாது. பணம் கட்டிப் படிக்க வேண்டுமா?

    முதலை காணொளி மிக அருமை.
    இப்படி எல்லாம் இருக்கிறது என்று அறிய
    ஆச்சரியமாக இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      மின்கைத்தடி இணையதளம் தான் மா. பணம் கட்டி எல்லாம் படிக்க வேண்டாம்.

      காணொளி பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ஸ்ரீரங்கம் தோப்புப் பாதையின் படம் பசுமையுடன்.

    இருக்கிறது. கமர்கட், புண்ணாக்கு மிட்டாய் எல்லாம்
    70 களில் சாப்பிட்ட நினைவு,
    பல் உறுதியாக இருந்த காலம்.:)

    மஹாத்மா காந்தி பிறந்த நாளில் ராஜ்GHat பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல் உறுதியாக இருந்த காலம் - ஹாஹா... அம்மாவின் அத்தைக்கு எல்லா பல்களும் கொட்டிப் போய்விட, பல தின்பண்டங்களை அம்மியில் இடித்துச் சாப்பிடுவார் - அது நினைவுக்கு வந்தது வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....