செவ்வாய், 26 அக்டோபர், 2021

தலைநகரிலிருந்து 26102021 - சிங்காடா - கதை மாந்தர்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நம்மைப் பற்றி யார் என்ன நினைத்தால் நமக்கு என்ன… நம்மைப் பற்றி நாம் அறியாததையா, அவர்கள் அறிந்திடப் போகிறார்கள்.


******






சிங்காடா (Singhara) என ஹிந்தி மொழியில் அழைக்கப்படுவது, ஆங்கிலத்தில் Water Chestnut என்பது. தமிழகத்தில் இருந்தவரை இப்படி ஒரு விஷயம் இருப்பதை அறிந்ததில்லை. தில்லி வந்த புதிதில், குளிர் ஆரம்பித்தபோது எங்கே பார்த்தாலும் தள்ளுவண்டிகளில் இந்த சிங்காடாவை குவித்து வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே இது ஏதோ புதிதாக இருக்கிறதே, என்னவாக இருக்கும்? இதை என்ன செய்வார்கள்? என்றெல்லாம் மனதுக்குள் யோசனை ஓடும். 


அலுவலகத்திற்கு வந்த பின்பு இந்த ஊர்க்காரர்கள் இடம் கேட்கலாம் என்றால் இதன் பெயர் தெரியாமல், எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில், ஹரா ரங்க், பரா காடி, என்றெல்லாம் சொல்லி, விதம் விதமாய் சைகைகள் செய்து, அவர்களுக்கு புரிய வைத்து பதிலை தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதனை விற்பனை செய்யும் தள்ளுவண்டிக்காரர் இடம் கேட்கலாம் என்றால், அவர் பேசும் ஹிந்தி எனக்கு புரியாது, நான் பேசும் ஹிந்தி அவருக்கு புரியாது! 


ஒருவழியாக இதன் பெயர் சிங்காடா என்பதனையும், இதனை மேலே உள்ள பச்சை வண்ண தோலை உரித்தால், வெள்ளை வண்ணத்தில் இருப்பதை உண்ணலாம் என்பதையும் தெரிந்து கொண்டேன். கூடவே அந்த வெள்ளை நிற பகுதியை காயவைத்து, அரைத்து மாவாக்கி கோதுமை மாவுக்கு பதிலாக இந்த மாவினை வைத்து சப்பாத்தி செய்வார்கள் என்பதனையும் தெரிந்து கொண்டேன். அதுவும் குறிப்பாக விரத நாட்களில் இந்த சிங்காடா மாவு கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தி, பக்கோடா போன்றவற்றையே விரதத்தில் உணவாக எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.


ஒரு முறை ஒரு ஹிந்தி பேசும் நபர் சொன்ன விஷயத்தை கேட்டபிறகு இதை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.... சிங்காடா வளரும் நீர்நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ அவ்வளவு சுவையாக அந்த சிங்காடா இருக்கும் என்பது தான் அவர் சொன்ன விஷயம். அவர் என்னிடம் விளையாடுகிறார் என்று பிறகு தெரிந்து கொண்டாலும் இன்றுவரை ஏனோ இந்த சிங்காடாவை சுவைக்க மனம் வரவில்லை.. இதோ இன்னும் ஒரு குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது. சிங்காடாவும் நிறைய விற்பனைக்கு வருகிறது. இந்த வருடமாவது இதை சுவைப்பேனா..... ?


யாமறியேன் பராபரமே.....


******





தலைநகர் தில்லி..... எங்கு பார்த்தாலும் மால்கள் எனப்படும் பெரிய பெரிய பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதிலே இயங்கும் பெரிய கடைகள், உணவகங்கள் என பலதும் இருந்தாலும், இன்னமும் சின்னச் சின்ன கடைகளும், தள்ளுவண்டிகளில் அல்லது சைக்கிள்களில் விற்பனைக்கான பொருட்களை வைத்துக்கொண்டு வீதிவீதியாக உலாவரும் சிறு வியாபாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.




படம் ஒன்றில் அப்படி ஒரு வியாபாரி, விற்பனைக்கான பல பொருட்கள் உடன் - விளையாட்டுப் பொருட்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் என பலவற்றை தன்னுடைய சைக்கிளில் ஒரு மூங்கில் சட்டம் அடித்து, அதிலே பொருட்களை மாட்டிக்கொண்டு தள்ளிக் கொண்டே செல்கிறார். முதல் படம் பின்புறத்திலிருந்து எடுத்தேன் என்றால் இரண்டாவது படம் அவரை தாண்டிச் சென்று எடுத்த படம். இரண்டாவது படத்தில் அவர் முகமும் இருக்கிறது என்றாலும், அவர் முகத்தை காண, நீங்கள் படத்தினை zoom செய்ய வேண்டியிருக்கலாம்..... அவர் வைத்திருக்கும் பல பொருட்களின் நடுவே அவரது முகமும் மறைந்து இருக்கிறது..... 


காலையில் வீட்டை விட்டு புறப்பட்டால், மாலை வரை இப்படியே வீதிவீதியாக சைக்கிளை உருட்டிக்கொண்டு, தான் கொண்டுவந்த பொருட்களை கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அவரை படமாக எடுத்தேன் என்றாலும், அவரிடம் நின்று பேசி அவரது நேரத்தை வீணாக கூடாது என்று தோன்றியது எனக்கு. ஒவ்வொரு மணித்துளியும் அவருக்கு முக்கியமானது என்றும் தோன்றியது.... வீதிதோறும் இப்படியான உழைப்பாளிகளை பார்க்கும்போது, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் மனதுக்குள் ஓடுகிறது..... 


******


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. சிங்காடா.... வாழ்க்கையில் கேள்விப்படாத வஸ்து... இதை சுட்டுச் சாப்பிடுவார்களோ?

    தள்ளுவண்டி... நானும் இங்கு பார்க்கிறேன். இந்தப் பொருட்களை வாங்கவும் ஆட்கள் இருக்குமா? என யோசிப்பேன். அதுபோல ரோஸ் நிற பஞ்சுமிட்டாயை பாக்கெட்டில் அடைத்து ஏராளமாக்க் குச்சியில் கொண்டுபோகும்போதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்காடா குறித்து நீங்களும் கேள்விப்பட்டதில்லையா.... சுட வேண்டிய அவசியமில்லை. பச்சை தோலை உரித்து அப்படியே சாப்பிடுவார்கள். சிலர் சப்ஜி செய்தும் சாப்பிடுவதுண்டு.

      பஞ்சுமிட்டாய் இங்கேயும் நிறைய விற்பனையாளர்கள் உண்டு நெல்லைத் தமிழன். நாள் முழுக்க சுற்றி விற்பனை செய்தால் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் பிழைப்பு ஓடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சிங்காடா உங்களுக்குத் பிடிக்காமல் போன காரணம் போல எனக்கு பசலைக்கீரை.  அது ஏன் எனக்குப் பிடிக்காமல் போனது என்று இங்கே சொன்னால் மற்றவர்களும் வெறுத்து விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசலைக் கீரை உங்களுக்குப் பிடிக்காத காரணம் - :) பொதுவில் சொல்ல வேண்டாம் ஸ்ரீராம். ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இந்த ஶ்ரீராமை இதை யாரு எழுதச் சொன்னா... இப்போ கீரையை நினைத்தாலே ஶ்ரீராம் எழுதினதுதான் நினைவுக்கு வரும். ஹாஹா

      நீக்கு
    3. ஹாஹா... பசலைக் கீரை பார்த்தாலே இனிமேல் ஸ்ரீராம் சொன்னது நினைவுக்கு வந்தே தீரும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எனக்கு சிங்காடா பிடிக்கும். தெருவில் என்ன விற்றாலும் சாப்பிட்டுப் பார்த்து விடுவது என் கெட்ட பழக்கம். :D பலப்பல நினைவலைகள். I love reading your posts, especially the ones about Delhi for the nostalgia value. Keep them coming. I do miss delhi dearly.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு சிங்காடா பிடிக்கும் என அறிந்து மகிழ்ச்சி சு(ஜாதா?) பதிவுகள், குறிப்பாக தில்லி குறித்த பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சிறு வியாபாரிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் தங்கள் உள்ளம் பாராட்டிற்கு உரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. உழைப்பாளி பற்றிய எண்ணங்களை மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்கள் கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சிங்காடாவின் மூலம் தெரிந்தபின் சாப்பிட மனம் வருமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே தான் ரமணி ஜி. இதுவரை மனம் வரவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படங்களோடு விவரித்த அனுபவங்கள் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாசகமும் சிங்காடா குறித்த தகவல்களும் எனக்கு புதுசு சார்.
    டில்லி வரும்போது சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வரும்போது சொல்லுங்கள் - நானே அழைத்துச் செல்கிறேன் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. //அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் மனதுக்குள் ஓடுகிறது..... // சிறுவியாபாரிகள் என்று வாசித்தவுடன் என் மனதில் பிரார்த்தனை தான் தோன்றியது.

    சிங்காடா மாவு இங்கும் கடைகளில் கிடைக்கிறது , எந்த ஊரிலிருந்து வருகிறதென்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்காடா - அங்கேயும் மாவாக கிடைப்பது அறிந்தேன். வட இந்தியர்கள் இதனை பயன்படுத்துவதால் கிடைக்கலாம் கிரேஸ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சிங்காடா நானும் டெல்லி வந்த போது பார்த்து இருக்கிறேன். வாங்கியது இல்லை.

    நீங்கள் சொல்வதை பார்த்தால் சாப்பிட பிடிக்காது. காய்ந்த யமுனை நதியில் கீரை வளர்த்த முறையைப் பற்றி செய்தி படித்தபின் அதை சாப்பிட பிடிக்கவில்லை.

    தமிழ் நாட்டில் கிராம பக்கம் இந்த மாதிரி வண்டிகளில் பொருட்கள் கொண்டு வருவார்கள், நல்ல விற்பனை ஆகும் அவர்களுக்கு. கொண்டு வரும் போது கஷ்டம் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் குளிர் சமயத்தில் நீங்களும் பார்த்திருக்கலாம் கோமதிம்மா.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. சிக்காடா கேள்விபட்ட பின் சாப்பிடுவது சிரமம்தான்.
    பசளை கீரை நான் தொட்டியில்தான் வளர்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொட்டியில் வளர்க்கும் பசலைக் கீரை - மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. சிங்காடா பருப்புகள் யுனானி மருத்துவ முறைகளில் உடலுக்கு வலுவூட்டும் டானிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்காடா குறித்த மேலதிகத் தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி நாஞ்சில் சிவா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....