திங்கள், 13 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி எட்டு


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WELL WISHERS ARE LIKE BEAUTIFUL STREET LAMPS, THEY CANNOT MAKE OUR DISTANCE SHORTER; BUT THEY CAN LIGHTEN OUR PATHS AND MAKE THE JOURNEY EASIER.

 

******

 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு



 

சென்ற பகுதியில் அவரிடமிருந்து முதன்முதலாக நான் வாங்கிக் கொண்ட பரிசு பற்றியும், டெல்லியில் ஆரம்பிக்கப் போகும் என் வாழ்வைப் பற்றியும் எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில்  புது குடித்தனத்தில் நான் செய்தது என்னென்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

 

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எனக்காக வாங்கி வைத்த சுடிதார் பற்றி சொன்னது நினைவிருக்கலாம். அந்த சுடிதாரை நான் டெல்லிக்குச் சென்ற அன்று தான்  என்னிடம் கொடுத்தார். Navy blue நிறத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்டு மிகவும் அழகாக இருந்தது. நான் என் ஃப்ரெண்ட் கிட்ட குடுத்தனுப்பலாம்னு தான் இருந்தேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி வாங்கிக் குடுக்கறதைப் பத்தி நம்ம ரெண்டு பேர் வீட்டுலயும் என்ன சொல்வான்னு தெரியாது! என்றார்..🙂

 

உங்க ஊர்ல Official tour கூட ஒண்ணு வரும் வேலை இருந்தது. 'வெளில போகலாம்னு நா வந்து கூப்பிட்டா நீ வருவியான்னு தெரியல!' உங்கப்பா அனுப்புவாரான்னு தெரியல! அதனால அவாய்ட் பண்ணிட்டேன்! என்றார்..🙂 வாஸ்தவம் தான்! அப்படியே போயிருந்தாலும் நான் என்ன பேசியிருப்பேன்!!..🙂

 

பாலைக் காய்ச்சி என் வாழ்வை துவக்கினேன். அன்று மாலையே கீழ் வீட்டில் இருந்த நண்பர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் வீட்டு கிச்சனை பார்த்து விட்டு உனக்கு வேணுங்கிற மாதிரி செட் பண்ணிக்கோ என்றார். அதன் பிறகு கடைக்குச் சென்று  தேவையானவற்றை வாங்கி வந்தோம்.

 

திருமணத்தின் போது 'மல்லிகா பத்ரிநாத்' அவர்களின் சமையல் புத்தகம் ஒன்றை அப்பாவிடம் வாங்கித் தரும்படி சொல்லியிருந்தேன். அதை வைத்துக் கொண்டு ஆஃபீஸுக்கு எனக்கு தெரிந்த விதத்தில் சப்பாத்தியுடன் பேக் செய்து கொடுத்து விடுவேன். அவரும் காலைநேரத்தில் காய்கறி நறுக்கித் தருவது, பாத்திரங்களை சுத்தம் செய்வது என்று எனக்கு உதவி செய்து தருவார்.

 

நான் அவர் குளிப்பதற்குள் பேண்ட், ஷர்ட், பர்ஸ், ஐடி கார்டு என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்து, லஞ்ச் பேக் செய்து வைத்து, ஷூவுக்கு பாலீஷ் போடுவது வரை செய்து விடுவேன். காலை உணவை சாப்பிட்டு விட்டு, நீயும் நேரத்தோடு சாப்பிடு! அப்புறம் வேலையெல்லாம் பண்ணிக்கலாம் என்று சொல்லி கிளம்பி விடுவார். 

 

வாசலில் 'பை' சொன்ன பிறகு, அவர் கீழே இறங்கி ரோடு திருப்பத்திற்குச் செல்வதற்குள் பால்கனிக்கு ஓடிச் சென்று அங்கிருந்து 'பை' சொல்வதில் இருவருக்குமே ஒரு 'த்ரில்' இருந்தது...🙂 இதை எழுதும் போது அன்று போல் இன்றும் புன்னகைத்துக் கொள்கிறேன்..🙂

 

மாலை அவர் ஆஃபீஸிலிருந்து வந்த பிறகு இருவருமாக பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டே தேநீரை சுவைப்போம். 'எனக்கு ஆஃபீஸ்ல நிறைய 'ச்சாய்' வந்துடும்! எனக்காக வெயிட் பண்ணாம சாயந்திரம் நீ போட்டு குடி! நா வந்தப்புறம் தான் குடிக்கணும்னு என்ன அவசியம்!' என்பார்..🙂 பின்பு அருகே இருக்கும் நண்பர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மாலை அவர் வருவதற்குள் சமைத்து விடுவேன். அதனால் அதை இரவு வெளியிலிருந்து வந்த பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். சாதத்தை பிசைந்து என் கையில் கொடுப்பார். அப்படி நிறைய நாள் சாப்பிட்டிருக்கிறேன்...🙂

 

சரி! உனக்கு இந்த 'ம்ம்ம்! ம்ம்ஹூம்! இதத் தவிர ஏதானும் பேசத் தெரியுமா! ஆஃபீஸ்ல இருந்து ஒரு மனுஷன் வரானே! இன்னிக்கு வேலை ஜாஸ்தியா! என்ன பண்ணினீங்கன்னு ஏதாவது கேட்கலாம் இல்ல! நா சொல்றதுக்கு பூம் பூம் மாடு மாதிரி மண்டய மண்டய மட்டும் ஆட்டற! என்பார்...🙂 காலத்தின் ஓட்டத்தில் இது அப்படியே மாறிப் போகும்! என்று அப்போது அவருக்குத் தெரியாதது தான் இல்லறத்தின் தாத்பரியம் போல..🙂

 

காலையில் அம்மா என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாலும் துடைத்து விட்டு தூங்குபவள் நான்!! புதுக் குடித்தனத்தில்  இப்போது என்னை  எழுப்ப யாரும் இல்லை! தூங்குபவர்களை எழுப்பி உபத்திரவம் செய்யத் தெரியாத அப்பாவி மனிதர் இவர்..🙂 நானாக முழித்த போது 'என்ன! நடுராத்திரில எல்லாம் உங்க  ஆஃபீஸுல கூப்பிடுவாளா!’ என்று கேட்ட நாட்களும் உண்டு..🙂

 

இன்னும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கதைகள் நிறைய உண்டு.. அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

  1. முதன் முதலில் வாங்கிய பரிசுகளை இன்னமும் பத்திரமாக வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  மறக்க முடியாத தருணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலவற்றை பொக்கிஷமாக பாதுகாத்தது நினைவில். அது குறித்தும் சில பதிவுகள் எழுதியிருக்கிறார்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. 'பல்கனிக்கு ஓடிச்சென்று பை சொல்வதில் இருவருக்குமே த்ரில் ' ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  4. நான் அவர் குளிப்பதற்குள் பேண்ட், ஷர்ட், பர்ஸ், ஐடி கார்டு என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்து, லஞ்ச் பேக் செய்து வைத்து, ஷூவுக்கு பாலீஷ் போடுவது வரை செய்து விடுவேன். //

    //வாசலில் 'பை' சொன்ன பிறகு, அவர் கீழே இறங்கி ரோடு திருப்பத்திற்குச் செல்வதற்குள் பால்கனிக்கு ஓடிச் சென்று அங்கிருந்து 'பை' சொல்வதில் இருவருக்குமே ஒரு 'த்ரில்' இருந்தது...�� இதை எழுதும் போது அன்று போல் இன்றும் புன்னகைத்துக் கொள்கிறேன்..��//

    ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. அதனால் அதை இரவு வெளியிலிருந்து வந்த பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். சாதத்தை பிசைந்து என் கையில் கொடுப்பார். அப்படி நிறைய நாள் சாப்பிட்டிருக்கிறேன்...��

    ஹை!! அருமை

    நானாக முழித்த போது 'என்ன! நடுராத்திரில எல்லாம் உங்க ஆஃபீஸுல கூப்பிடுவாளா!’ என்று கேட்ட நாட்களும் உண்டு..��//

    ஹாஹாஹா..

    எல்லாமே மிகவும் அருமை. ஆதி

    தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  6. ரசனையான வாழ்க்கைத் தொடக்கம். நிகழ்வுகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. கல்யான சமயத்தில் சமயல் புத்தகத்தை வாங்கிய நீங்கள், தற்போது பல சமயல் நூல்களை வெளியிட்டதோடு யூட்டியூபிலும் கலக்கியிருக்கிறீர்கள்.
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....