செவ்வாய், 10 மே, 2022

பிரார்த்தனை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ANYTHING THAT COSTS YOU YOUR PEACE IS TOO EXPENSIVE… LEARN TO LET IT GO!

 

******



 

வாசலில் அழைப்பு மணியின் ஒலி!!

 

கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தி யோசனையுடன் கைகளை துடைத்துக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள்!

 

இந்த நேரத்தில யாரா இருக்கும்??

 

இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான் வாசலில் நின்று கொண்டிருந்தாள். அழுக்கான கசங்கிய நிலையில் இருந்த உடை அவளின் ஏழ்மை நிலையை சொல்லாமல் சொல்லியது! இடுப்பில் ஒரு அடுக்குப் பாத்திரத்தை சுமந்து வந்திருந்தாள்.

 

என்ன வேணும்ப்பா?? கீர்த்தி கேள்வி எழுப்பினாள்.

 

சமயபுரம் பூச்சொரிதலுக்கு பொங்கல் வைக்கப் போறோம்க்கா! உங்களால முடிஞ்ச அரிசியும், காணிக்கையும் மாரியாயிக்கு குடுங்க!! என்றாள் அந்தப் பெண்!

 

சொல்லி விட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

 

சற்றே யோசித்தாள் கீர்த்தி. 

 

சில மாதங்கள் முன்பு கூட இப்படித்தான் ஒரு பெண் கையில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு, தான் ஒரு அனாதை ஆசிரமத்திலிருந்து வருவதாகவும் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு சாப்பாட்டிற்கு பணம் தருமாறும் கேட்டுக் கொண்டு வந்தாள்.

 

அவள் கேட்பது உண்மையாகவா! இல்லை ஏமாற்றுகிறாளா! என்பதெல்லாம் கீர்த்தியால் யோசிக்கக் கூட முடியலை! 

 

அந்தக் குழந்தையின் புகைப்படம் அவளை யோசிக்க விடவில்லை! பார்வை அங்கேயே நிலை கொண்டு நின்றது. பாவம்! இந்தக் குழந்தை என்று நினைத்தவாறே பணத்தை கொடுத்து விட்டாள்.

 

உனக்குன்னு வர்றாங்க பாரு! இந்த மாதிரிலாம் கூட ஃப்ராடு பண்றாங்க! அது புரிய மாட்டேங்குது உனக்கு! 

 

அவ உண்மையா இருந்தா நீ குடுத்த காசுக்கு ரசீது போட்டுக் குடுத்தாளா! சொல்லு!

 

நீ பணம் எடுக்கப் போகும் போதே உள்ள வந்திருந்தான்னா!

 

இதெல்லாம் எப்ப தான் தெரிஞ்சுக்கப் போறியோ! இந்த உலகம் இப்ப இருக்கிற இருப்புல இன்னும் வெகுளியாவே இருந்தா என்னம்மா அர்த்தம்! 

 

கணவன் சூர்யா தான் கீர்த்தியிடம் அட்வைஸ் செய்து கொண்டிருந்தான்..! 

 

அவள் அட்வைஸ் வாங்காத நாளில்லை..🙂 அவளால் வேறு ஒரு கோணத்தில் யோசித்துப் பார்க்கவே முடிவதில்லை! சொல்வதெல்லாம் உண்மையென நினைத்து விடுகிறாள்..🙂

 

மனக்கண்ணில் ஒரு நிமிடம் போல கடந்த கால நிகழ்வுகள் காட்சிகளாக ஓட

 

யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்! நாம நல்லதையே நினைப்போம்! என்று முடிவெடுத்தவளாக

 

கிச்சனுக்கு சென்று அரிசிப் பாத்திரத்திலிருந்து ஒரு டம்ளர் நிறைய அரிசியும் கொஞ்சம் பணமும் எடுத்து வந்து அந்தப் பெண் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் சேர்த்தாள்.

 

'சமயபுரம் மாரியம்மா' இந்த உலகத்துல இருக்கிற எல்லாரையும் நல்லபடியாக வைத்திரும்மா! வெயிலின் உக்கிரத்தை குறைத்து மழை பேஞ்சு பூமி குளிரணும்மா! இந்தப் பொண்ணையும் நல்லா வெச்சிரும்மா! அவளோட பிரார்த்தனையும் நிறைவேறட்டும்!

 

மனதில் பிரார்த்தித்துக் கொண்டே உள்ளே வந்து கதவை சாத்தினாள் கீர்த்தி!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

  1. நல்லவேளை, இந்த யாசகரும் நல்லவளாக இருந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.
    பிரார்த்தனை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும். பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. நல்லவர்கள் மனம் நல்லதையே நினைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மனம் வாழ்க! பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்லவர்களின் மனதுக்கு அனைவரும் நல்லவர்களாகவே அமைவார்கள். அந்த வந்த பெண் யாசகரும் உண்மையான காரணத்தை சொல்லியிருப்பார் என நம்புவோம். உங்களுடன் என் பிரார்த்தனையும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வெயிலின் உக்கிரம்  குறையணும்.. மழை பேஞ்சு பூமி குளிரணும்மா! இந்தப் பொண்ணையும் நல்லா வெச்சிரும்மா!..

    நல்ல பிரார்த்தனை..
    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. கதை நன்றாக வந்திருக்கு ஆதி! வாழ்த்துகள்! இன்னும் நிறைய முயற்சி செய்யுங்கள். கடைசியில் நேர்மறையாக பிரார்த்தனை. முடித்திருப்பது நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. உங்களுக்குக் கதை எழுதுவதும் நன்றாக வருகிறது சகோதரி. நல்ல சிறு கதை. சுருக்கமாகவும் ஒரு பக்கக்கதையாகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். பிரார்த்தனை அருமை. வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது முயற்சியை பாராட்டி கருத்துரைத்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  9. என்றும் நல்லதையே நினைக்கும் கீர்த்தியின் மனம் போல நன்மையே நடக்கட்டும். படிக்கும்போது கீர்த்தியில் ஆதியைதான் கண்டோம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீர்த்தியில் ஆதியைக் கண்டோம் - :) தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  10. தொடக்க வாசகம் சிந்திக்க வைத்தது. கதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் கதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....