அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - தடங்கலுக்கு வருந்துகிறேன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் அவர்கள் சென்ற வாரத்தில் சென்று வந்த ஒரு ஆலயம் குறித்தும், அவரது அனுபவங்கள் குறித்தும் இந்தப் பதிவின் வழி நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
ஶ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர் கோயில் தரிசனம் - 10.04.2026:
கோவை வந்ததிலிருந்தே இரண்டு வருடங்களாக இந்தக் கோவிலுக்குப் போகவேண்டும் என்கிற தாகம் இருந்தது. அதற்குக் காரணம் எங்கள் வீட்டில் மாட்டப்பட்டிருந்த அந்த காலண்டர். ஒவ்வொரு மாதமும் வித விதமான அலங்காரத்தில் ஜொலிக்கும் அந்த சுந்தரனைப் பார்க்கப் பார்க்க இந்த எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இவரிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். எனக்கு ஆஞ்சநேயர் மிகப் பிடித்த செல்ல இஷ்ட தெய்வம். கூப்பிட்ட குரலுக்கு வந்து, நின்று பேசும்🙏🏻. சிரஞ்சீவியல்லவா! எங்கள் திருமண நாளன்று (10.04.2026) அந்த விருப்பம் நிறைவேறியது.
எனக்குத் தெரியாமல் வழக்கமான எங்கள் ஆட்டோ சாரதி கிருஷ்ணாவைக் கூப்பிட்டு இவர் ஏற்பாடு செய்துவிட்டு என்னை இன்று காலை சீக்கிரம் கிளம்பு 10 மணிக்கு auto வரும் கோவிலுக்குப் போகிறோம் என்று சொன்னார். சரி இங்கு RS புரத்திலிருக்கும் காமாக்ஷி கோவிலாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினேன். பிறகுதான் தெரிந்தது இங்கு என்று. எனக்கு pleasant surprise கொடுப்பதற்காக! (இவரிடமிருந்து எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த wedding day gift! நன்றிகள் பல மணாளா🙏🏻)
வீட்டிலிருந்து கிளம்பி சுமார் முக்கால் மணி நேரத்தில் கோவிலை அடைந்தோம். சாலையிலிருந்தே அவரை தரிசிக்கும்படியாக அமைப்பு. அந்த நேரத்தில் கற்பூர ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. அந்த மணியோசையும் கற்பூர ஒளியில் ஜகஜோதியாக ஆஞ்சநேயரும் மிக மிக அற்புதமான காட்சி. புளகாங்கிதமடைந்து கண்களில் நம்மை அறியாமல் நீர் திரண்டது.
நன்றியுணர்ச்சியும் மன நெகிழ்ச்சியும் சேர்ந்து அழுத்தமாக இவர் கரத்தைப் பற்றி வார்த்தை வராமல் கண்ணீருடன் நன்றி சொன்னேன்...🙏🏻😢
அன்று மயில்கழுத்து பச்சை கலரில் சிவப்பு பார்டர் போட்ட புடவை (அதையே பஞ்சகச்சமாக) அணிவிக்கப்பட்டு வெள்ளி கிரீடம், கவசம், (G)கதை மற்றும் பலவித கற்கள் பதித்த ஆபரணங்கள் தங்க கொலுசு போன்றவற்றுடன் அற்புதமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தார். நம்மை அருளோடும் கருணையோடும் நோக்கும் கண்கள்! பார்த்துக் கொண்டே இருக்கவேண்டுமென்று தோன்றியது. அவ்வளவு அழகு.
அஷ்டாம்சம் கொண்ட உருமமென்பதால் இந்தப் பெயர். (அந்த அஷ்ட அம்சங்கள் என்னவென்று அங்குள்ள ஒரு போர்டில் போட்டிருக்கிறார்கள் - photo). ஒவ்வொரு மாதமும் மூல நக்ஷத்திரத்தில் (ஆஞ்சநேயரின் ஜென்ம நக்ஷத்திரம்) 18 மூலிகைகளால் சிறப்பான திருமஞ்சன சேவை நடை பெறுகிறது. எந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்றும் ஒரு board சொல்கிறது.. (எல்லாமே செய்யவேண்டும் என்றுதான் தோன்றுகிறது நமக்கு இருக்கும் பிரார்த்தனைப் பட்டியலை யோசித்தால்!😕)
பூஜை முடிந்து அர்ச்சகர் மைக்கில் வருகின்ற ஏப்ரல் 14 புது வருடப் பிறப்பிற்கு என்னென்ன சிறப்பு அலங்காரம் பூஜை என்பதை விளக்கிக்கொண்டிருந்தார் (கொஞ்சம் நீண்ட பிரசங்கம்தான் - கையில் மைக் கிடைத்ததாலோ?🤔). 10008 பழங்களால் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப் படுவார், மேலும் அந்த சன்னதியை சுற்றிலும் பழங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டு அழகாக காட்சியளிக்குமாம்!
திரையிடப்பட்டு நைவேத்யம் முடிந்து மறுபடி திரை விலகி தரிசனம் செய்து திருப்தியாக அவரைக் கண்களால் பருகி பிரதிக்ஷிணம் செய்து விட்டு ஒருவர் துளசி இலையைப் பிரசாதமாக வழங்க அதை வாங்கிக் கொண்டு நடந்தோம்.
பிராகாரத்தைச் சுற்றி வரும்போது அருகில் open space இல் கழுத்தில் மாலையுடன் சிறியதாக பிள்ளையார் சிலை, நெற்றியில் நாமத்தோடு! - (தும்பிக்கை ஆழ்வார் - வைணவத்தில்) இரு மச்சத்தின் (மீன்) மேல் ஒரு குழலூதும் கண்ணனின் அழகான உருவம்.
அதைத்தாண்டி நடந்தால் ஒரு ஹால் போன்ற இடத்தில், donations என்று board வைத்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அங்குதான் நம் பிரார்த்தனைக்காக பணம் கட்டவேண்டும். ஒரு நீண்ட டேபிள் போடப்பட்டு அதன் மேல் சிந்தூர் வைக்கப் பட்டிருக்கிறது, அருகிலேயே விரலில் பட்ட சிந்தூரைத் துடைத்துக்கொள்ள சிறு துணி, பின் சற்று தள்ளி அருகில் வரிசையாக தொன்னையில் நிரப்பப்பட்ட பிரசாதம் (வெண்ணைபோல் குழைவாகப் பிசைந்த கருவேப்பிலை பச்சைமிளகாய் வாசனையுடன் கூடிய தயிர் சாதம் - ஆஹா😋) நாமே அதை எடுத்துக்கொண்டு ஓரமாக நின்று சாப்பிட்டுவிட்டு சற்றுத் தள்ளி போட்டிருக்கும் பிளாஸ்டிக் 🗑️ trash இல் அதைப் போட்டுவிட்டு அதன் பின்னாலிருக்கும் குழாய் வரிசையில் போய் கை கழுவிக் கொண்டு வரவேண்டும்.
பிரசாதம் நல்ல ருசி. நல்ல பசி வேறு! இன்னொரு தொன்னையை எடுக்கலாமா என்று மனமும் அதன் மணமும் ஆசை மூட்ட, புத்தி அதை அடக்கியது.... (தொன்னை அளவு சிறியதா எங்கள் பசியளவு பெரியதா என்று தெரியவில்லை..😟)
எங்கும் சுத்தம்,சுகாதாரம்,ஒழுங்கு, நேர்த்தி👌🏻. யாரும் கசமுசவென்று பேசிக் கொள்வதில்லை. அமைதியாக வரிசையில் நின்று (அதற்கு இன்னொரு காரணம் ஸ்பீக்கரில் உன்னி கிருஷ்ணன் நாராயண நாமம் சொல்லி இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தார்) பிரசாதம் பெற்றுக் கொள்கிறார்கள். யாரும் குப்பை போடுவதில்லை.. (போட விடுவதில்லை).
சுற்றி வந்து மறுபடி மாருதி முன்னர் போய் நின்றோம். இப்போது யாரோ பிரார்த்தனை செய்துகொண்ட வடை மாலை சாற்றப் பட்டு காட்சி! எத்தனை விதமாய் காட்சி கொடுத்தாலும் திகட்டவில்லை சுந்தர(ன்) உருவம்🙏🏻
சன்னதி முன் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து சிறிது நேரம் அவன் உருவத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.
பின் நேரமாகிவிட்டதால் வடை பிரசாதத்திற்காக காத்திருக்காமல், (மனமில்லாமல் - வட போச்சே...😒) நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினோம்.
வீடு நோக்கி வரும் வழியெங்கும் மனக்கண் முன் அந்த எழில் உருவமே....
ஜெய் ஶ்ரீ ராம்🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயா🙏🏻🙏🏻🙏🏻
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
அனைவருக்கும் மனம் நிறைந்த தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துகள். இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
14 ஏப்ரல் 2026



.jpeg)


.jpeg)



சஸ்பென்சாக அழைத்துச் சென்றதில் அவருக்கு உங்கள் மீதிருக்கும் காதலும், அக்கறையும், பாசமும் தெரிகிறது. நெகிழ்ச்சி.
பதிலளிநீக்குகாலையில் அழகிய ஆஞ்சநேயர் தரிசனம். நன்றி. அழகிய படங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி. அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்களுக்கு இனிய திருமணநாள் (10/4) வாழ்த்துகள்.