செவ்வாய், 20 மார்ச், 2012

சாதனை மனிதர்கள்.....

இவர்கள் அனைவரும் சாதனை மனிதர்கள்.....  


அப்படி என்ன சாதனை படைத்தார்கள் இந்த மனிதர்கள்.... 


உலகிலேயே நீண்ட காதுகளை உடையவர் இவர்.....  

[இப்படி ஒவ்வொரு காதுலயும் கிலோ கணக்கில் வளையம் போட்டால், 
காது கால் வரை வந்தால் கூட ஆச்சரியம் இல்லை!]


உலகிலேயே நீண்ட காது முடிக்குச் சொந்தக்காரர் இவர்.....

[காதுக்குள்ள உரம் போட்டு முடி வளர்த்திருப்பாரோ!]

உலகிலேயே பெரிய மூக்கு இவருடையது தானாம்......

[”பத்தாவது தெருல இருக்கற பரந்தாமன் வீட்டுல சாம்பார் தீயுது.....  
அடுப்பை அணைக்கச் சொல்லு” எனச் சொல்லுவாரோ!] 

உலகிலேயே நீண்ட கூந்தலை உடையவர்......

[கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தான்....  
இவர் கார்கூந்தலோடு பிறந்தாரோ!]

உலகத்திலேயே பெரிய தலை இவருடையது தான்.....

[நீர் தான் மண்டை பெருத்த மஹாதேவனோ............]

உலகத்திலேயே நீண்ட மீசை இவருடையது தான்..... 

[இந்த சிங்கம் எப்பவும் சிங்கிளா வராது....   
கூடவே இரண்டு பேரு வருவாங்க...  
மீசை தூக்க தான்!]

உலகத்திலேயே நீண்ட புருவ முடி இவருடையது தான்.....  

[எங்க ஆத்தா கோழி வளர்த்தா, மாடு வளர்த்தா.....
நான் கண் புருவ முடி வளர்க்கிறேன்!......]

உலகிலேயே நீண்ட தாடி இவருடையது தான்....

[இவர் போற வழியெல்லாம் சுத்தமா ஆயிடும்....  
தாடியே பெருக்கிடும்.....]


மீண்டும் சந்திப்போம்....


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 16 மார்ச், 2012

பெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:


[பட உதவி: கூகிள்]

கதைவழி நடந்தேன் மற்றும் உடைந்த சாவி பகிர்வுகளில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் தில்லி நிகழ்ச்சி பற்றி எழுதினேன்.  அந்த நிகழ்ச்சியின் போது எஸ். ரா. சொன்ன கதைகளில் ஒன்று தான் இந்தப் பகிர்வு..

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுநாரி கவாபாட்டா [1899] அவர்களின் ஒரு சிறுகதையை இந்த நிகழ்ச்சியில் சொன்னார்.  அது:

ஒரு ஜப்பானியர் தன் மனைவி – குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றாராம்.  சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததாம் மனைவிக்கு.  கடிதத்தில் எழுதி இருந்தது இது தான் – “நான் வீட்டை விட்டு வெளியூர் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன.  எனினும் நமது சமையலறையிலிருந்து சுவையான உணவு பதார்த்தங்கள் சமைக்கும் வாசனை வருகிறதே. நான் இல்லையென்றாலும் எல்லாம் நன்கு சமைத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் போல…”.  படித்துப் பார்த்த மனைவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.  அன்றிலிருந்து சமையல் செய்வதை விட்டாள்.  தானும் குழந்தைகளும் இருக்கும் ஏதாவது பழைய உணவினை, பழங்களை சாப்பிட்டு பசியாறினார்களாம்.
 
இன்னும் சில நாட்கள் கழித்து ஒரு கடிதம்.
  “நான் அங்கில்லாவிட்டாலும், நீயும் குழந்தைகளும், சூப் குடிப்பதற்கு விலை உயர்ந்த வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறீர்களாமே?” என்று எழுதி இருந்ததாம். அன்றிலிருந்து வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் உள்ளே வைத்து விட்டு மரக்கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்தாளாம் அப் பெண்.
 
ஐந்தாறு நாட்கள் சென்றது.
  அடுத்த கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நம்மிடமும். 
 
மூன்றாவது கடிதமும் வந்தது.
  “என்ன இது, நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே உங்களுக்கு இல்லையோ?  இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில்?”  அடடா என்ன இது சோதனை. விளக்குகளையும் அணைத்து விட்டு இருட்டிலே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்தனர் அந்தப் பெண்ணும் அவர் குழந்தைகளும்.  இன்னும் என்ன சோதனை வரப் போகிறதோ அந்தப் பெண்ணுக்கு. 

அடுத்து வந்த கடிதம் தான், சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி போல, கடைசிக் கடிதம்.  ”நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே இல்லாது நீங்கள் நன்கு உறங்குகிறீர்களே.  ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள் விடும் மூச்சுச் சத்தம் இங்கு வரை கேட்கிறது.  நான் இல்லாத போது கூட இந்த மூச்சு வருகிறதே உங்களுக்கு?” 
 
இந்தக் கடிதம் கண்ட உடனேயே அந்தப்பெண், தன் குழந்தைகளையும் மாய்த்து, தன்னையும் மாய்த்துக் கொண்டதுடன் முடிகிறது கதை.

என்ன ஒரு சோகம் கதையில்.  பாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல. 

மேலும் கதைகள் தொடரும்...

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட் 
புது தில்லி. 

புதன், 14 மார்ச், 2012

அழகிகளின் அணிவகுப்பு...



சென்ற புதனன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அர்ஜூன் அரங்கில் ஒரு நிகழ்ச்சி – வரிசையாக அழகிகள் வந்து செல்லும் அணிவகுப்பு நடைபெற்றது.  மிகவும் விமரிசையாக நடந்த இந்த விழாவில், ஹரியானா மாநில முதல்வர் திரு பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் இந்திய அரசின் விவசாயத் துறை அமைச்சர் திரு ஷரத் பவார் ஆகியோர் பங்கேற்று விழாவிற்கு தலைமை தாங்கினர்.

விழாவில் நடந்த ஒவ்வொரு அழகியும் கறுப்பாக இருந்தாலும், கண்ணைப் பறிக்கும் அழகு…  ”கறுப்பே அழகு காந்தலே ருசி” என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன? 

விழாவினைப் பற்றிப் பேசிய திரு ஹூடா,  அணிவகுப்பில் கலந்து கொண்ட அழகிகளை அவர்களின் மேனி அழகில் மயங்கி “கறுப்புத் தங்கம்” என வர்ணித்தார். 

ஒரு அழகி நடந்தாலே மனதைப் பறிகொடுக்கும் ஆண்கள், எழுபது அழகிகள் தொடர்ந்து நடை பழகினால் சும்மாவா இருப்பார்கள்…  ஒரே விசில் சத்தம் தான் போங்க.  அம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த  அழகிகள் கலந்து கொண்டனர்.  பரிசுத் தொகையாக மொத்தம் ரூபாய் எட்டு கோடியே இருபத்தி இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.

என்ன ஒரே அழகி, அழகி எனச் சொல்லிட்டே இருக்கீங்க, ஆனா ஒரு புகைப்படம் கண்ல காட்டமாட்டேன்னு அடம் பிடிக்கிறேன்னு கேட்கும் நண்பர்களுக்காக  கீழே ஒரு புகைப்படம்…

..

..

..

..

..

.. 

..



என்ன அவசரம்…
..

..

..

..


..

...


[பட உதவி: கூகிள்]

என்ன பார்த்தீங்களா? எவ்வளவு அழகு இல்லையா?

அட அடிக்க வராதீங்க நண்பர்களே... ஹரியானாவில் முரா இன எருமைமாடுகளின் அணிவகுப்பு நடந்தது. அதில் தான் இத்தனை அமர்க்களமும்.  ஒரு நாளைக்கு இருபது முதல் இருபத்தி ஏழு லிட்டர் வரை பால் கொடுக்கும் இந்த வகை எருமை மாடுகளை பிரபலப் படுத்தும் நோக்கத்துடன் இந்த அழகிகள் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இப்பல்லாம் எல்லாத்துக்கும் இப்படி ஃபேஷன் ஷோ நடத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு எல்லோரும் தெரிஞ்சுக்கத் தான் இந்தப் பதிவு.   

ஜே.கே குழுமமும், ஹரியானா மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையும் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்ததாம் ஜிண்ட் மாநகரத்தில். அணிவகுத்த மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனராம்…

இது எப்படி இருக்கு?

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

திங்கள், 12 மார்ச், 2012

என்னைக் கண்டுபிடிங்களேன்….

Liu Bolin – சீனாவில் 1973 - ஆம் வருடம் பிறந்த இவர் The Invisible Man என்று அழைக்கப்படுகிறார்.  ஏன் எனக் கேட்பவர்களுக்கு, கீழே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்களேன்.  “Hiding in the City” என்று இவர் செய்த விஷயங்கள் மிக மிக அருமை.  நான் ரசித்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





[என்ன, அவரைக் கண்டு பிடிச்சீங்களா?]



[வாழ்க்கையில் படிக்கட்டு ரொம்ப முக்கியம்!]

[பார்த்துங்க.....  தண்ணி வந்துடப் போகுது....]

[காலு காட்டிக் கொடுத்துடுச்சோ....]

[இயற்கையோடு இயற்கையாக.....]

[பார்த்து, அவரைக் கண்டுபிடிக்கறேன்னு, தண்ணில விழுந்துடாதீங்க...]

[இது தான் சீனப் பெருஞ்சுவரா?]

[ஆஹா....  அருமை]

[பூவோடு பூவாய்...]

[இந்தப் படத்திலே எங்க இருக்காருன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....]


மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்
புது தில்லி.

வெள்ளி, 9 மார்ச், 2012

மனிதக் கடத்தல்…

[பட உதவி:  கூகிள்]

ஒரு மாதப் பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் ஐந்து குழுக்களாகப் பிரித்து ஏதோவொரு விஷயத்தில் ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் [இதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று யாராவது சொல்லுங்களேன்!]தயாரித்து பயிற்சியாளர்களுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தனர். 

நான்காவது வாரத்தில் முதல் நாள் தேர்வு. அதன் பிறகு பயிற்சியின் கடைசி நாள் காலை இந்த Presentation செய்ய வேண்டும்.  ஒவ்வொரு குழுவிலும் ஏழு நபர்கள்.  என் குழு தேர்ந்தெடுத்த விஷயம் Human Trafficking.  இந்த விஷயத்தில் கட்டுரை தயாரிப்பதற்காக கூகிளில் தேடும்போது பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் கிடைத்தன.  அதை வைத்து ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் தயாரித்து சமர்ப்பித்தோம். 

[பட உதவி:  கூகிள்]


அப்படி தேடும்போது ஒரு காணொளி கூகிளில் கிடைத்தது.  அதைப் பார்த்தால் Human Trafficking என்பதன் விளக்கமும் அதன் கொடுமையும் நமக்குப் புரியும்.

ராதா – 12 வயது – ஐந்தாவதாகப் பிறந்த மகள் – தந்தை தற்கொலை செய்து கொண்டுவிட, ஊரில் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரின் சிபாரிசில் மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அப்படி கல்யாணம் செய்து வந்த ராதாவினை சில நாட்களிலேயே மும்பையின் சிகப்பு விளக்குப் பகுதியில் விற்று விட்டான் அந்தக் கண()வன் .  இது போல், ஜோதி, டினா, ராகுல், ராஜீவ், அன்னமோள், பீனா என்று காணொளியில் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது.



தினம் தினம் எத்தனை எத்தனை ராதாக்களும், ஜோதிகளும், ராகுல்-ராஜீவ் போன்ற சிறுவர்களும் இப்படிக் கடத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை நினைக்கும்போது மனதில் கீறல் ஏற்படுவது போல ஒரு உணர்வு.   அரசாங்கமும் மனிதர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  இன்னும்  நிறையவே இருக்கின்றன   என்று தோன்றுகிறது. 

இந்த தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும் இது போன்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  நிச்சயம் ஏதாவது செய்வோம் என்ற முடிவுடன்தான் பயிற்சியை முடித்தோம்.

மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.