இன்று
[07.05.2013] திருவரங்கம் அரங்கநாதன் ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரைத் தேர் திருவிழா. இச்சமயத்தில் நான் திருவரங்கத்தில் இருப்பதால்,
தேர் திருவிழாவினை நேரடியாகக் காண முடியாத வலையுலக நண்பர்களும் கண்டுகளிக்கவே சுடச்சுட
இப்பகிர்வு.
கடந்த
29.04.2013 அன்று ஆரம்பித்த இந்தச் சித்திரைத் தேர் திருவிழாவிற்கு இன்னுமொரு பெயர்
உண்டு. அது விருப்பன் திருநாள். உல்லூக்கான் படையெடுப்பின் போது திருவரங்கத்தினை விட்டுச்
சென்ற நம்பெருமாளும், உபயநாச்சியார்களும் பாதுகாப்பிற்காகப் பல இடங்களுக்குச் சென்று
திருமலைக்காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு விஜயநகர மன்னர்களின் உதவியால் 48 ஆண்டுகளுக்குப்
பிறகு கி.பி. 1371-ஆம் ஆண்டு திருவரங்கம் வந்தடைந்தது வரலாறு.
விஜயநகரப் பேரரசின்
சங்கமசூல மன்னன் இரண்டாம் ஹரிஹரன். அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி.
1383-ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திருவிழா தான் இந்த சித்திரைத் தேர் திருவிழா. அவர் பெயராலேயே
விருப்பன் திருநாள் என்றும் வழங்கப்பெறும் இந்தத் திருநாள், இவ்வருடம் இன்று தேருக்குப்
பிறகு பதினோறாம் நாளான 09.05.2013 அன்று முடிவடையும்.
எட்டாம் திருநாளான
நேற்று நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் நான்கிலும்
உலா வந்து வையாளி கண்டருளி கண்ணாடி அறை சேர்ந்த வைபவமும் நடைபெற்றது.
இன்று காலையிலேயே
ஆறு மணிக்கு முன்னரே தேர் வைபவம் தொடங்கிற்று. கையில் கேமராவுடன் சென்று வளைத்து வளைத்து
பல காட்சிகளை படம் பிடித்து வந்தேன். திருவரங்கம் முழுவதுமே அலையலையாக மக்கள் வெள்ளம்
திரண்டு வந்தபடியே இருந்தார்கள். இன்று திருச்சி நகரத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டதால்
மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது. சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து
கிராமங்களிலிருந்தும் மக்கள் நேற்று மாலையிலிருந்தே வரத் தொடங்கி கிடைக்கும் இடத்தில்
தங்கி தேரில் பவனி வரும் நம்பெருமாளைக் கண்ணாரக் கண்டு களிக்க தயாராக இருந்தனர்.
கோவில் யானையான
ஆண்டாள் முன்னே வர, ஆண்டாளின் பின்னே தீயணைப்புத் துறையினரின் ஒரு வண்டியும், பெருந்திரளான
மக்களை வழிப்படுத்த காவல் துறையினரும், வேத கோஷங்கள் முழங்குபவர்களும், கோலாட்டம் ஆடியபடி,
அரங்கனின் பெருமைகளைப் பாடியபடியே வரும் பொதுமக்களும், அவர்களுக்குப் பின்னே வெள்ளைக்
குதிரையும், அவர்களுக்குப் பின்னர் சித்திரைத் தேர் அசைந்து அசைந்து ஓடி வந்ததைக் காண
முடிந்தது.
அடிக்கும் சித்திரை
வெயிலில் தேர் இழுப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேர்வைக் குளியல். அவர்களுக்கு
சேவை செய்ய, நிறைய பேர் பெரிய பதாகைகளைக் கொண்டும், பனையோலை விசிறிகள் கொண்டும் விசிறிக்கொண்டு
இருந்தார்கள். தேர் பிடித்து இழுக்கும் மக்களுக்கு தம்மால் ஆன தொண்டு செய்வதில் அவர்களுக்கும்
மகிழ்ச்சி. வேர்வைக்குளியலில் இருக்கும் அவர்களுக்கும் தென்றலாய் காற்று வீசுவதில்
மகிழ்ச்சி.
தேர் வடம் பிடித்து
இழுக்கிறோமோ இல்லையோ, அந்த வடத்தினைப் பிடித்தாலே போதும் என பலர் அதற்கு முண்டியடித்துக்
கொண்டிருந்தார்கள். ஒரு 98 வயது தாத்தாவும் வடம் பிடித்து விட்டதாக மனம் நிறைவோடு சொன்னார்.
வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருக்க தேரினைத் திருப்புமுன் அவர் வீட்டு வாயில்
வரையில் தேர் வடம் பிடித்து எடுத்துக் கொண்டு வந்ததை அவரும் தொட்டு விட்டாரே!
வரும் வழியெல்லாம்
நீர்மோர், பானகம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் என தேர்
பார்க்க வந்த மக்களுக்கு பலர் விநியோகம் செய்ததைக் காண முடிந்தது. கூடவே, சாப்பிட்ட
பின் இலைகளையும், பாக்கு மட்டை தட்டுகளையும், பிளாஸ்டிக் குப்பிகளையும், ஆங்காங்கே
குப்பைக்கூடைகள் வைத்திருந்தாலும் தெருவில் வீசியபடி சென்றனர் மக்கள். சுத்தம் என்பது
வீட்டு வரையில் தான் என்பது நம் இந்தியர்களுக்கு பால பாடமாயிற்றே……
ஹனுமார் வேஷம் கட்டிய
பலரைப் பார்க்க முடிந்தது. ஹனுமார் வேஷம் போட்டு ராம நாமம் சொல்லியபடியே வீடுவீடாக
கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள்! ஒவ்வொரு மூலையிலும் தேர் திரும்ப கொஞ்சம் பிரயத்தனப்
பட வேண்டியிருந்தது. அப்படி ஓர் மூலையில் நான் நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தபோது
பின்னாலிருந்து ஒருவர் எனக்கு ஆணைகள் பிறப்பித்தபடியே இருந்தார் – “நேரா வரும்போது
நல்லா Zoom பண்ணி எடுங்க, அப்பதான் பெருமாளை புகைப்படம் பிடிக்க முடியும்!, இந்தாப்பா
பலூன் விற்கிறவரே, தள்ளி நில்லு, நீங்க படம் எடுங்க, ம்ம்ம்… அப்படித்தான், என்ன ஒழுங்கா
வந்ததா?”.
கிழக்குச் சித்திரை
வீதியில் தொடங்கிய தேர் ஓட்டத்தினை ஆரம்பித்திலிருந்து பார்க்கவில்லை. தெற்குச் சித்திரை
வீதி தொடக்கத்திலிருந்து பார்த்து படங்கள் எடுத்தபடியே வந்து பிறகு ரங்கா ரங்கா கோபுரம்
வழியே உத்திர வீதி மூலம் வந்து மேற்குச் சித்திரை வீதிக்கு வந்து விட்டேன். தேரின்
முன்னேயும் பின்னேயும் மக்கள் கூட்டம் – கால் வைக்க இடமில்லாத அளவுக்குக் கூட்டம்.
தேருக்கு முன் தெருவிலேயே பலர் தேங்காய் உடைத்தும், சூடம், ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தியும்,
பழங்களை நிவேதனம் செய்தும் கொண்டிருந்தார்கள்.
தெருவிலேயே சூடங்களைக் கொளுத்தி வைப்பதால் தேரின் கூட வரும் மக்கள் காலில் பட்டுச்
சுட்டுவிடக் கூடும் அபாயம் இருக்கிறது. அதனால் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வேப்பிலைகளால்
சூடத்தினை அணைத்துக் கொண்டே இருந்தார்! தேரின் பின்னால் வந்த ஒருவர் “செருப்புப் போட்டுக்கொண்டு
தேரின் பின்னாலே வரக்கூடாது என என்னைத் திட்டினார்.
திருவிழாவினைக்
காண வந்திருக்கும் கிராமத்து மக்கள் தங்களது விளைநிலங்களில் விளைந்த தானியங்களையும்,
பசுமாடு, கன்றுகளையும் நம்பெருமாளுக்குக் காணிக்கையாக கோவில் கொட்டாரத்தில் சேர்க்கிறார்கள்.
போலவே தேரடியிலும் கோவில் கொடிமரத்திற்கு அருகிலும் பலர் தனது தலையிலேயே தேங்காய்களை
உடைத்துக் கொள்வதையும் பார்க்க முடிந்தது.
தேரோடிய இன்று நான்கு
சித்திரை வீதிகளையும் சுற்றி வந்தால் கைசிக ஏகாதசி அன்று சுற்றி வந்தால் எப்படி மோக்ஷம்
கிடைக்குமோ அதே பலன் இன்றும் கிடைக்கும் என இந்நாளிலும் மக்கள் நான்கு சித்திரை வீதிகளையும்
சுற்றி வருகிறார்கள்.
காற்றாடிகள், பலூன்கள்,
சூடம், தேங்காய், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பஞ்சு மிட்டாய், என பல வகையான
விஷயங்களை விற்கும் வியாபாரிகள் பலரைப் பார்க்க முடிந்தது. சிலரைப் பார்த்தால், இன்று
மட்டுமே வியாபாரி ஆனது போலத் தெரிந்தது….
சென்ற வருடம் கூட
தேர் தனது நிலைக்குத் திரும்ப வெகு நேரம் ஆனதென்றும், இந்த வருடம் மிகச் சீக்கிரமாகவே
தேர் நிலைக்குத் திரும்பி விட்டதென்றும் மக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை
தலைநகரமே திருவரங்கத்திற்கு வந்துவிட்டதாலோ?
என்ன நண்பர்களே
திருவரங்கம் தேரினை நீங்களும் கண்டு களித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச்
சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து……

