புதன், 25 ஜனவரி, 2017

சங்கு கழுத்து தெரியும் சங்கு வளையல்?



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 93

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தக்ஷிணேஸ்வர் காளி கோவில்....

தக்ஷிணேஸ்வர் காளி கோவிலில் சில நிமிடங்கள் இருந்து காளியுடன் கொஞ்சம் அளவளாவிய பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  கங்கையின் கரைக்கருகே இருக்கும் குறுகிய சந்துகள் வழியே எங்களை அழைத்துக் கொண்டு சென்றார் எனது தில்லி நண்பர் – இவரை சென்ற பகுதியில் பார்த்தோம். வழியில் ஒரு சிறிய நடைபாதைக் கடை – தள்ளு வண்டியில் வைத்து தேநீர் விற்பனை! அங்கே சில யுவன்களும் யுவதிகளும் அமர்ந்து ஒரு கையில் சிகரெட் புகைய மற்ற கையில் ”குல்லட்” தேநீர். ஆண் பெண் வித்தியாசமில்லாது “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என்ற விளம்பரத்தினை மீண்டும் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

”குல்லட்” எனும் மண் கோப்பையில் தேநீர் 

எங்களுக்கும் தேநீர் அருந்த அவசியம் இருக்கவே பக்கத்தில் நின்று மூன்று லால் சாய், மூன்று தூத் சாய் சொன்னோம். எங்களுடன் இருந்த மலையாளி ஒருவர் அந்த யுவதிகள் சிகரெட் புகைப்பதை படம் எடுக்க புகைப்படக் கருவியை எடுக்க பாய்ந்து தடுத்தேன்! இருப்பதோ வெகு அருகில், எதற்கு வம்பு என்று அவர்களைத் தடுத்தது நல்லதாகப் போயிற்று! என்னதான் பெங்காலி மொழி பேசும் நண்பர் உடன் இருந்தாலும், இந்த மாதிரி சமயங்களில் பிரச்சனை வந்தால் அதைத் தடுக்க முடியாது – அதுவும் மேற்கு வங்கத்தில்! யார் என்ன பேசுகிறார் என்பதே புரியாத போது என்ன செய்ய முடியும்! பெரும்பாலும் இந்த மாதிரி பயணங்களில் அடுத்தவர்களை படம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.


கங்கையில் ஒரு குளியல் போடலாமா?


மீன் வாங்கிட்டு, இப்படியே இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகுச் சவாரி செய்யலாம்!


கரையில் அமர்ந்து சிலர் அரட்டை அடிக்க, சிலர் சிந்தனையில் இருக்க, சிலர் கடலை வறுக்கிறார்கள்!

தேநீர் அருந்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். எங்களை அவர் அழைத்துச் சென்றது பழைய கொல்கத்தாவின் சந்துகள் வழியாக. ஏழு சகோதரிகள் மாநிலப் பயணத்தில் எங்கேயும் Shopping என்று பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை. மொத்தம் பதினைந்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே இருந்த நாங்கள், வீடு திரும்பும்போது ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என கேரள நண்பர்கள் சொல்லி இருந்தார்கள்! அதனை dhதாdhதாவிடம் சொல்லி இருந்ததால் அவர் எங்களை ஒரு ஸ்பெஷல் கடைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருந்தார்.  அந்த கடையை நோக்கி தான் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். 


 சந்து சந்தாக இருக்கும் இடங்களில் நடந்து....

பெண்களின் கழுத்திற்கு சங்கை உவமையாக சொல்வது கவிஞர்கள் வழக்கம். இராமயணத்தில் கூட இந்த உவமைகள் உண்டு என்பதை பார்த்திருக்கிறேன். இணையத்தில் சங்கு கழுத்து எனத் தேடிய போது கிடைத்த ஒரு கவிதை கீழே…


சந்தனமும் சவ்வாதும்
சண்டையிட்டுக் கொண்டன
மணப்பதில்
யார் உசத்தி?
அவள் இருப்பதை
மறந்துவிட்டீர்களே!
சாந்தப்படுத்தியது
காற்று!


முகவரித் தேடி
அலைந்து கொண்டிருந்தேன்
காற்று
கைப்பிடித்துச் சென்று
காட்டியது
மொட்டை மாடியில்
நீ கூந்தல்
உலர்த்திக் கொண்டிருந்தாய்!

காற்று
உன்   கழுத்தில் பட்டதும்
அழகிய ஓசையாய்
மாறிற்று
உனக்குத் தான்
சங்கு கழுத்தாயிற்றே!

- இராதே [தலைப்பில் சுட்டினால் இவரது வலைப்பூவுக்குச் செல்லலாம்!]


இதுல ட்ரயின் வருமா? கண்டிப்பா வரும்! சர்க்குலர் ட்ரயின்!
நிறைய பேர் நடுவுல உட்கார்ந்து சாவகாசமா  பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள்!


சங்கு கழுத்து என்று மட்டும் உவமை சொன்னால் போதாது என மேற்கு வங்கத்தவர்கள் இந்த சங்கை வைத்து பெண்களின் கைகளுக்கு வளையலும் செய்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.  உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்! பலருக்கு என்னைப் போல தெரியாமல் இருக்கலாம்! சங்கு கொண்டு வளையல் செய்யும் ஒரு இடத்திற்கு தான் எங்களை அழைத்துச் சென்றார் பெங்காலி நண்பர். எங்களை அழைத்துச் சென்ற குறுகிய வீதியில் சங்கு வளையல் செய்யும் நிறைய வீடுகள் இருந்தன.  அப்படி இருந்த வீடுகளில் அவருக்குத் தெரிந்த ஒரு இடத்திற்குச் சென்று பார்த்தோம்.


எது சரியாக இருக்கும்?  தேர்ந்தெடுக்கும் நண்பர்.....


சங்குகளை சின்னச் சின்ன வளையமாக வெட்டி, அதை ஒரு மெஷின் கொண்டு நேர்த்தியாக கை வளையல்களாகச் செய்து தருகிறார்கள்.  மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளோடு பார்க்கவே அழகாய் இருக்கிறது இந்த சங்கு வளையல்கள்.  சங்கு வளையல்கள் பார்க்க மிகவும் அழகாய் இருந்தாலும், இதை பராமரிப்பது கொஞ்சம் கடினமான வேலை – மிகச் சுலபமாக உடைந்து விடும் தன்மையுடையது – கீழே விழுந்தால் உடைந்து விடும். பத்திரமாக வைத்துக் கொள்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்! எனது நண்பர்கள் வாங்கிக் கொள்ள, நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அளவினையும், அதில் இருக்கும் வேலைப்பாடுகளையும் பொருத்து விலை – ஒரு ஜோடி வளையல் 250 ரூபாய் முதல் கிடைக்கிறது.


வளையல் செய்ய நான் தயார் நீங்க தயாரா?



தயாராகும் சங்கு வளையல்....


சங்குகளை முன்னரே வட்ட வடிவில் வெட்டி வைத்திருக்கிறார்கள். நமக்குத் தேவையான மாடலைச் சொன்னால், நம் கண் எதிரேயே அழகாய் செய்து தருகிறார்கள். என்ன பிரச்சனை என்றால் அந்த மெஷினில் வளையலைச் செய்யும் போது நிறைய தூசி பறக்கிறது! மிக லாவகமாக வளையல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.  தேவையான வளையல்களை செய்து முடிக்க அவர் உழைப்புக்கான ஊதியத்தினைக் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டோம்.  பெரும்பாலும் குறுக்குச் சந்துகள் தான் எங்கும். இதில் வாகனங்களில் செல்வது வேலைக்கு உதவாது என்பதால் வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். 


சின்னச் சின்ன சந்துகளில்  நடைப்பயணம் தொடர்ந்தது.... 


சங்கு வளையல்கள் வாங்கியாயிற்று – அடுத்ததாய் எங்கே சென்றோம்? இதுவும் கொல்கத்தாவின் ஒரு பாரம்பரியமான விஷயம் நடக்கும் இடத்திற்கு தான்.  அந்த இடம் எந்த இடம் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

வெற்றி நமதே…..



ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டுமே அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான். “குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது!

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள். போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்.

“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே“ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.  இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே!  உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!”

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. 

நமக்குள்ள திறமையைப் பயன்படுத்தி தோல்வியைப் பற்றி அஞ்சாது தொடர்ந்து முன்னேறுவோம்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

திங்கள், 23 ஜனவரி, 2017

கொல்கத்தா எனும் கல்கத்தா


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 92

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.



மஞ்சளழகி....

திரிபுராவின் தலைநகர் அகர்தலாவிலிருந்து விமானம் மூலமாக நாங்கள் சென்று சேர்ந்த இடம் கொல்கத்தா எனும் கல்கத்தா நகரம். ஏற்கனவே அலுவலக விஷயமாக கொல்கத்தா சென்றிருந்தாலும், எங்கேயும் சுற்றிப் பார்க்கவில்லை! வேலை முடிந்து உடனே தில்லிக்கு திரும்பிவிட்டேன். இம்முறை கொல்கத்தாவில் இரண்டு நாட்கள் இருப்பதாகத் திட்டம். அதனால் என்னன்ன இடங்கள் பார்க்க வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்திருந்தோம்.  அங்கே எங்களுக்குத் தங்க வேண்டிய இடம் தேட வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது!


வலது கோடியில் பெங்காலி நண்பர்....

தில்லியில் பணிபுரியும் என்னுடைய பெங்காலி நண்பர் அந்த சமயத்தில் சொந்த விஷயமாக கொல்கத்தா சென்றிருந்தார். அவரிடம் முன்னரே நாங்கள் வரும் தேதியையும், எந்த விமானத்தில் வருவோம் என்பதையும் சொல்லி வைத்திருந்தோம். அவர் தனது தெரிந்தவர் மூலமாக விமான நிலையத்தின் அருகிலேயே ஒரு தங்குமிடத்தினை எங்களுக்காக முன்பதிவு செய்திருந்தார். அது மட்டுமல்லாது எங்கள் விமானம் தரையிரங்கும் சமயத்தில் விமான நிலையத்திற்கு வந்து கொல்கத்தாவின் பிரபல மஞ்சள் வண்ண Taxi ஏற்பாடு செய்து தங்குமிடம் வரை வந்து, நாங்கள் ஓய்வெடுக்கும் வரை காத்திருந்து, எங்களுடைய திட்டங்களையும் கேட்டுக் கொண்டபின் தனது இல்லத்திற்குச் சென்றார். செல்வதற்கு முன்னர் அன்றைய தினம் எங்களுக்குத் தேவையான வாகனமும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.


ட்ராம்....

அறையில் சற்றே ஓய்வெடுத்து, மதிய உணவினை தங்குமிடத்திற்கு அருகில் இருந்த ஒரு உணவகத்தில் முடித்துக் கொண்ட பிறகு தான் நாங்கள் அன்றைய சுற்றுலாவினைத் தொடங்கினோம்.  வழியில் நண்பரின் வீட்டிற்கு அருகே அவரையும் அழைத்துக் கொள்வதாகத் திட்டம்.


மீன்பிடி படகு......

கொல்கத்தா நகரம் – முந்தைய கல்கத்தா நகரம் – இன்னமும் அப்படியே இருக்கிறது. மனிதர்களை அமர வைத்து, மனிதர்களே இழுக்கும் வாகனங்கள், ரிக்‌ஷாக்கள், ட்ராம், அதே மஞ்சள் வண்ண டாக்சிக்கள், சர்க்குலர் ட்ரையின், எங்கு பார்த்தாலும் மனிதர்களின் எண்ணிலடங்கா கூட்டம், ஆங்காங்கே “சொல்பே நா, கர்போ நா” முழக்கங்கள் என அப்படியே இருக்கிறது – மாற்றங்களை விரும்புவதே இல்லை என்று நினைத்தாலும், புதிய நகராக நிர்மாணம் செய்திருக்கும் New Kolkatta வானளாவிய கட்டடங்களும், அகன்ற சாலைகளும், அழகிய பூங்காக்களும் கொண்டு இருந்தது. 


மீன் வாங்கலையோ மீனு....

பழைய கொல்கத்தா அதே குறுகிய சாலைகள், நீக்கமற நிறைந்திருக்கும் சாக்கடைகள், எங்கு பார்த்தாலும் துப்பி இருக்கும் பான் கறைகள் – சிவப்பு பிடிக்கும் என்பதற்காக இப்படி துப்பி வைக்க வேண்டாம்! – கங்கைக் கரை, அதில் ஓடும் ஜெட்டி என அப்படியே இருக்கிறது.  சாலையின் ஓரங்களில் கங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் பைப்புகள் மூடப்படாமல் கொட்டிக்கொண்டே இருக்க, அவை விழும் கால்வாய்களில் ஓடும் தண்ணீர் கங்கைக்கே செல்கிறது! தண்ணீர் குழாய்களை யாராவது மூடி வைத்தால் தண்ணீர் மிச்சமாகுமே என்றால் யார் அதைச் செய்வது என்று கேட்க ஆரம்பிக்கிறார்கள்.


தக்ஷிணேஸ்வர் காளி கோவில்..... 


தக்ஷிணேஸ்வர் காளி கோவில்..... 


முறத்தில் காளி...... 


கொல்கத்தா நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நிறைய இருந்தாலும், நாங்கள் முதலில் சென்றது தக்ஷிணேஸ்வர் காளி கோவில். கங்கைக் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக்கோவிலைக் கட்டியது ராணி ராஷ்மோணி – கட்டிய வருடம் 1855! அதாவது 162 வருடங்கள் ஆகிவிட்டது இக்கோவில் கட்டப்பட்டு! தனது கணவரின் ஆசையான இக்கோவில் கட்டமுடியாது கணவர் இறந்து விட, அவர் விட்டுச் சென்ற சொத்துகளைக் கொண்டு, இந்தக் கோவிலை மிகச் சிறப்பான முறையில் கட்டிய ராணி ராஷ்மோணி, கோவில் கட்டிய பிறகு ஐந்து வருடஙகள் ஒன்பது மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். தனது சொத்து முழுவதும் கோவிலை நிர்வாகம் செய்யும் Trust வசம் ஒப்படைத்த பிறகு தான் இறந்தார் ராணி ராஷ்மோணி.


ராணி ராஷ்மோணி நினைவிடம்/கோவில்...

இக்கோவிலின் முதல் பூஜாரி திரு ராம்குமார் சட்டோபாத்யாய் – இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மூத்த சகோதரர். கோவில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு வருடத்திற்குள் திரு ராம்குமார் சட்டோபாத்யாய் அமரர் பதவி அடைய கோவிலின் முழுப் பொறுப்பும் ராமகிருஷ்ண பரமஹம்சர் வசம் வந்தது. அதற்குப் பிறகு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை சிறப்பாக நிர்வாகித்து, பல சமுதாய முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார் ராம கிருஷ்ண பரமஹம்சர்.


கோவில் வளாகக்கடைகள் - கடைகளில் விற்கப்படும் பழங்கள்....

கோவில் வளாகத்தில் நவரத்னா கோவில் [லக்ஷ்மிநாராயணர்], ஜ்யோதிர்லிங்கங்களான பன்னிரெண்டு லிங்கங்களுக்கும் தனிக்கோவில், விஷ்ணு கோவில் என தனிக்கோவில்கள் உண்டு.  மிகச் சிறப்பான இக்கோவில் பார்த்து கோவிலின் அழகிய கலை வடிவத்தினைக் கண்டு ரசித்த பின் அங்கிருந்து புறப்பட்டோம்….. அடுத்ததாய்ச் சென்ற இடம், அங்கே கிடைத்த அனுபவங்கள் வரும் பகுதியில்….

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

சிங்கத்தின் இருப்பிடத்தில் – புகைப்பட உலா…..


குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது எடுத்த சில புகைப்படங்கள் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிர் என்ற பெயரில் பிரபலமாக இருந்தாலும், இந்த கிர் இருக்கும் கிராமத்தின் பெயர் சாசன் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இதோ சாசன் கிர் பகுதியில் எடுத்த சில புகைப்படங்கள்…..


படம்-1: ஒண்டிக்கு ஒண்டி வரியா? தீர்ப்பு சொன்ன நீதிபதியைப் பார்த்துக் கேட்கிறதோ?


படம்-2:  இலைகளின் வண்ணத்தோடு ஒத்துப் போகும் சிங்கத்தின் வண்ணம்…..


படம்-3: சாலையில் படுத்துக் கொண்டு எங்களைப் பார்த்த சிங்கம் ஒன்று…..

உனக்கு அவசரம்னா ஒதுங்கிப் போ! நான் எழுந்து வழிவிட முடியாது!


படம்-4: ஒரு தடவை சொன்னா புரியாதா? ஒதுங்கிப் போ! சற்றே முறைப்புடன்….


படம்-5: வம்பு பண்ணா, நாங்களும் வருவோம், பார்த்துக்க….

பக்க வாட்டிலிருந்து மேலும் இரண்டு சிங்கங்கள்…..


படம்-6: எழுந்து வரவா, இல்லை நீயா ஓடிப் போயிடுறயா?


படம்-7: திரும்பவும் வார்னிங் தரேன்… ஓடிடு!


படம்-8: அட பயபுள்ள பயப்படாம ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கே!



படம்-9: ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கறதுன்னா ஓ.கே…  வம்பு கிம்பு பண்ணியோ மவனே… நீ காலி!





படம்-10: வேற வழியில்ல….  தாக்கத் தயாராக வேண்டியது தான்!





படம்-11: சிங்கத்தின் கால் அடிகள்…..



படம்-12: சிங்கக் கோட்டையில் மயிலுக்கு என்ன வேலை?


படம்-13: கருப்பு வெள்ளை க்கு இருக்கும் அழகு கலருக்கு இருப்பதில்லை!


படம்-14: 180 டிகிரி தலையைத் திருப்பிப் பார்க்க என்னால் முடியும் – உன்னால முடியுமா?


படம்-15: ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கேன்…  நீ யாரு? 


படம்-16: நான் தனியா இருக்கேன்னு சல்மான் கிட்ட யாரும் சொல்லிடாதீங்கப்பு…..


படம்-17: வனச்சாலையைக் கடக்க முடியாம வண்டி வருதே…..




படம்-18: ஐயா, சாலையைக் கடந்தாச்சு….  இப்ப ஃபோட்டோ புடிச்சுக்கோ…..



படம்-19:  எங்க சோடி நல்லாக்கீதா? சொல்லேன்….

 படம்-20: டாடா… அம்மா முன்னாடி போயிட்டாங்க…. நானும் போறேன்….



என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? சொல்லுங்களேன்…..

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

சனி, 21 ஜனவரி, 2017

சீறுவோர் சீறு…. – ஜல்லிக்கட்டு – அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம்



இன்றைக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய பதிவு தான்.  சமீபத்தில் புதுகை நண்பர்களும் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இணைந்து தமிழ் வலைப்பதிவகம் எனும் WhatsApp குழுவினைத் தொடங்கியது பற்றி எனது பதிவிலும் எழுதி இருக்கிறேன்.  அதன் மூலம் பல புதிய வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது எனக்கு. அப்படி புதிதாக படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு வலைப்பூ “தமிழ்ப்பூ”. நேற்று அந்த வலைப்பூவில் “வெள்ளையர் செய்த சூது” எனும் பதிவு படிக்க நேர்ந்தது.

அந்த பதிவினைப் படிக்க வசதியாக அப்பதிவின் இணைப்பு கீழே….


அந்தப் பதிவில் மிகச் சிறப்பான தகவல்களை கொடுத்திருக்கிறார்.  பதிவின் கடைசியில் கொடுத்த சுட்டி வழியாக பார்த்த ஒரு குறும்படம் “சீறுவோர் சீறு”.  மிகச் சிறப்பாக இருக்கிறது இந்த குறும்படம் – சென்ற வருடத்தில் வெளியிட்டு இருந்தாலும் நிறைய பேர் பார்க்கவில்லை என்பது தான் சோகம்.  இப்போதாவது பாருங்களேன்…. 


பாரதியாரின் பாடலோடு முடிந்த குறும்படம் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

YOUTUBE-ல் இந்த குறும்படத்தினை இணைத்திருக்கும் திரு ராமசுவாமி இந்த வருடமும் ஒரு காணொளியை இணைத்திருக்கிறார். அதையும் பாருங்கள். காணொளி கீழே….


நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்.  சிந்திப்போம்……

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.